
அன்புள்ள நண்பர்களுக்கு,
2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது கவிஞர் ஆனந்த்குமாருக்கு வழங்கப்படுகிறது. தன்னறம் வெளியீடாக வந்துள்ள ஆனந்த்குமாரின் டிப் டிப் டிப் தமிழின் முக்கியமான கவிதைநூல்களில் ஒன்று. முற்றிலும் ’அறிவற்ற’ நிலையில், குழந்தைமைக்கு மிக அருகில், நின்று எழுதப்பட்டுள்ள அக்கவிதைகள் ஐயமாக, குழப்பமாக, வஞ்சமாக, சூழ்ச்சியாக, பல்லாயிரம் பாவனைகளாக எங்கும் அறிவு ததும்பி வழியும் நம்சூழலில் கோடைப்புழுக்கத்தில் தென்றலென நம்மை தொடுபவை.

குமரகுருபரனின் பிறந்தநாள் ஜூன் 10. அதையொட்டிய சனிக்கிழமை (11.06.2019) ஒன்றில் பரிசளிப்பு விழா நிகழும். முந்தைய ஆண்டுகளில் பரிசளிக்கப்பட்ட வேணு வேட்ராயன், மதார் இருவருக்கும் கருத்தரங்க உரையாடலென ஏதும் நிகழவில்லை. ஆகவே அன்று பகலில் இரண்டு அமர்வுகள் அவர்களுக்கு நிகழும். மதியம் கடந்தபின் ஆனந்த்குமாருடன் ஓர் உரையாடல். மாலையில் பரிசளிப்பு விழா.
அன்புடன்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்