அரசியல் கட்டுரைகள் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

2009ல் சாட்சி மொழி வெளியானதிலிருந்து தற்போது வரை ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் நீங்கள் கட்டுரையாகவும், வாசகர் கேள்விக்கான பதில்களாகவும் இணையத்திலும் அச்சு ஊடகத்திலும் எழுதியவற்றைத் தொகுத்து தற்கால மற்றும் வருங்கால இளைஞர்களைக் கருதி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று கருதுகிறேன். உங்கள் கருத்தை அறிய ஆவல்.

அன்புடன்

நெல்சன்

***

அன்புள்ள நெல்சன்

ஆம், ஆவணப்படுத்தப்படவேண்டும்தான். மேலும் பல அரசியல் நூல்கள் வந்துள்ளன. தினமலர் வெளியீடான ஜனநாயகச் சோதனைச் சாலைகள் அதிலொன்று. வலசைப்பறவை இன்னொன்று.

என்ன சிக்கலென்றால் சீராக தொகுத்து நூலாக்கவேண்டும். திரும்பத்திரும்ப ஒரு விஷயம் வந்துகொண்டிருக்கும். அது ஒரு தரப்பை எடுத்து விவாதிக்கும் அரசியலுக்கும், எழுத்தாளனின் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்குவது.

எழுத்தாளனின் அரசியல் என்பது உறுதியான சார்புநிலை கொண்டதாக இருக்கமுடியாது. அது ஒருவகையில் பாமரர்களின் அரசியலுக்கு அணுக்கமானது. உள்ளுணர்வு, உணர்வுநிலைகள் சார்ந்தது. அது ‘சரியான’தாக இருக்கவேண்டுமென்பதில்லை. இயல்பானதாக, நேர்மையானதாக இருந்தால்போதும்.

அதை மீளமீள விளக்கிக்கொண்டே இருக்கிறேன். அவற்றை வெட்டி காலத்தில் நீடிக்கும் தன்மைகொண்ட விவாதங்களை மட்டும் எடுத்து தொகுக்கவேண்டும். பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைரம்யாவின் ‘நீலத்தாவணி’ கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூலக இதழ்கள்- கடிதம்