தன்மீட்சி- கடிதம்

தன்மீட்சி வாங்க

அன்புள்ள ஜெ,

பல்வேறு வாழ்க்கைத்தளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை தொடர்பாக பல கோணங்களில் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடிதம் வாயிலாக அளித்த பதில்களைத் தொகுத்து வெளியான புத்தகம் “தன்மீட்சி”.

என்னைத் துளைத்துக் கொண்டிருந்த, விடை தெரியாத பல கேள்விகளுக்கு “தன்மீட்சி” யில் தெளிவு கிடைத்தது. இந்த சமுதாயமும் பள்ளிக்கல்வியும் சொல்லிக்கொடுத்த எளிய விளக்கங்கள் நம்முடைய அகக்கேள்விகளுக்கு, குழப்பங்களுக்கு பல நேரங்களில் பதில் சொல்லமுடிவதில்லை. அதற்கு நம்முடைய மரபில் இருந்து நடைமுறை சார்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

செயல்படாமல் பல செயல்களுக்கான சாத்தியங்களாக மட்டுமே வாழும் நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ள இந்தப் புத்தகம் ஒரு ஆரம்பம். வாழ்க்கையின் நோக்கம் நிறைவாக வாழ்தல் மட்டுமே. அந்த நிறைவை அளிக்கும் செயலை ஒவ்வொருவரும் கண்டடைய வேண்டும். அதுவே “தன்னறம்”.

“தன்மீட்சி” மிக முக்கியமான செயலூக்கப் புத்தகம். ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் நிறைவாகவும், தீவிரமாகவும், செயலூக்கத்துடனும் எப்படிக் கொண்டு செல்கிறார் என்பதை அறிந்ததன் மூலம் நேரத்தையும், சமநிலையையும் கவனமாகக் கையாள உறுதி எடுத்துக்கொண்டேன். நேரத்தைக் கவனமுடன் கையாண்டு, சமநிலையைப் பேணி நிறைவளிக்கும் செயலில் ஈடுபடும் இன்பத்தை அனுபவிக்கத் துவங்கி இருக்கிறேன். அதைத் தொடர்தல் மிகப்பெரிய சவால்.

வாசிப்பு மற்றும் அறிவுலக ஈடுபாடு அனைவருக்குமானது அல்ல. அறிவியக்கத்தில் இருப்பவர்கள் அதில் இல்லாதவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் பல நடைமுறை சிக்கல்கள் மற்றும் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். அதற்கான புரிதல் மற்றும் தயார்படுத்தல் வழிகள் “தன்மீட்சி” யில் உள்ளன.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

இந்தக் குறள் பெரிய செயல்களில் தீவிரமாக ஈடுபட ஒரு உந்துசக்தி.

மனச்சோர்வில் இருக்கும் போது “தன்மீட்சி” யின் அத்தியாயங்கள் பலமுறை என்னை வெளிக்கொண்டுவர உதவின.

அனைவருக்கும் தனக்கு நிறைவளிக்கும் செயலையே தொழிலாகக் கொண்டிருக்கும் பாக்கியம் அல்லது வாய்ப்பு அமையாது. தனக்கு நிறைவளிக்கும் செயல் முக்கியம் என நினைப்பவர்கள் வாழ்க்கை மற்றும் சமுதாயம் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மட்டுமே அந்தச் செயலில் வெற்றிகரமாக ஈடுபட்டு நிறைவடைய முடியும்.

பெற்றோருக்கான கடமை, சமுதாயத்திற்கான கடமை, பொருளீட்டுதலின் அவசியம், இவற்றை உதாசீனம் செய்வதால் வரும் நிர்த்தாட்சண்யமற்ற விளைவுகள் இவற்றை உணர்ந்தால் மட்டுமே சமநிலையுடன் அடிப்படைக் கடமைகளையும், நிறைவளிக்கும் செயல்களையும் ஆனந்தமாகச் செய்ய முடியும்.

சிந்திக்கும் திறனும், நுண்ணறிவும் அருளப்பெற்றவர்கள் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. அதற்காக சில தியாகங்களையும் செய்யக் கடன்பட்டவர்கள். அதை உணராமல் எளிய பொருளியல் வாழ்க்கை அல்லது சோம்பலால் நேரத்தைக் கடத்துபவர்கள் நம்மைப் படைத்த இந்த இயற்கைப் பேராற்றலுக்குச் செய்யும் நுண்ணிய அவமதிப்பு.

மனம் இயல்பாகவே சோம்பலையும், சோகத்தையும் நாடிச்செல்லும். தன்முயற்சியால் அதை வெல்ல முடியும். மகிழ்ச்சி என்பது நம்முடைய தேர்வு. விழிப்புடனிருந்தால் மகிழ்ச்சியான உளநிலையை நம்மால் உருவாக்க முடியும். ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான வழிகளைத் தேடிக்கண்டடைய வேண்டும்.

நேரத்தை பயனற்ற செயல்களில் வீணடிக்காமல், தீவிரமாகச் செயலாற்றி, நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஒவ்வொருவருக்கும் சாத்தியமும் கடமையும் உள்ளது.

சக்தி பிரகாஷ்

தன்மீட்சி – மைவிழிச்செல்வி

தன்மீட்சி, சாவு- ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைஷௌகத்தின் ஹிமாலயம்
அடுத்த கட்டுரைஒற்றன் வாசிப்பு- சௌந்தர்