பத்துலட்சம் காலடிகள்- வாசிப்பு

ஜெயமோகன் எழுதிய இந்த சிறுகதை வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி இருந்த்து. ஒருபக்கம் பாராட்டுகளும் மறுபக்கம் சாதிபடிநிலையை கொண்டு கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அழகை குறை சொன்னதற்காக வசைகளுமாய் இச்சிறுகதை திரும்ப திரும்ப கண்களில் தென்பட்டது. அதனால்தான் முதலில் இச்சிறுகதையை அனைவரும் வாசித்து விவாதிக்க தேர்ந்தெடுத்தேன்.

கதைக்கரு:

நண்பர்களுடன் குடிக்கும் ஒரு போலிஸ் அதிகாரி தனது அனுபவத்தில் ஒரு கொலைவிசாரனை பற்றி பகிர்ந்து கொள்கிறார்

கதையோட்டம்:

எனக்கு நண்பர்கள் கேலியும் கிண்டலுமாக துவங்கவும் “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்” கதை நினைவுக்கு வந்தது. அதிலும் இப்படித்தான் நண்பர்கள் பேசி கொள்வது அருமையான கதையாக வந்திருக்கும். நான் வாசித்ததில் மிக முக்கியமானதொரு கொண்டாட்டமான சிறுகதை அது.

எப்போதும் போல கேரளத்து வாடை சற்று தூக்கலாகவே இருக்கும். ஜெமோ கதையில் அது எதிர்பார்த்ததுதான். நாகர்கோயில் பக்க எழுத்தாளர்களின் சிறப்பே அதுதான். முதலில் என்ன பேசுகிறார்கள், எதற்கு பேசுகிறார்கள் என்றே புரியாமல் வாசித்து கொஞ்ச நேரத்தில் தூக்கமே வந்து விட்டது, எழுந்து உட்கார்ந்து வாசிக்க வேண்டி இருந்தது.

கரையோரம் பிணம் ஒதுங்கியதில் இருந்து விறுவிறுப்பாக செல்ல துவங்கியது. மாப்பிள்ளாக்கள் பற்றி சுதந்திர போராட்ட வரலாறில் மிக குறைவாக படித்தது. அவர்கள் பற்றி குறிப்பாக அவர்களின் கட்டுப்பாடுகள் பற்றி சொன்னது சுவாரசியமாக இருந்தது.

அதிலும் அவர்களின் தனிச்சிறப்பான அந்த பத்தேமாரி கப்பல் படுசுவாரசியம்.

அப்படியே கதை ஒரு நடுத்தர குடும்பத்து பேரழகியிடம் வந்து நிற்கையில் ஓரளவு யூகிக்க முடிந்தது.

ஆனாலும் ஒரு இடம் அவ்வளவு துல்லியமாக இருந்த்து

அவள் கண்கள்! தோழர்களே, கதையெழுதும் பாதிமலையாளிப் பாண்டியே, ஒன்று தெரிந்துகொள். சிலசமயங்களில் மனித மனதை நேருக்குநேராகப் பார்த்து நாம் நடுங்கிவிடுவோம். 

திடிரென வெளிப்படும் மனித மனத்தின் நிர்வாணம் கொடுக்கும் அதிர்ச்சி இருக்கிறதே, எனக்கு அந்த அனுபவம் உண்டு.

இதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இறுதியாக ஒரு வரி வரும்

மச்சானே, அது ஒரு அபூர்வமான நாள். ஒருபோதும் வாழ்க்கையை அறிந்துகொள்ள முயலக்கூடாது என்று நமக்குத் தோன்றுமே அப்படிப்பட்ட ஒரு நாள் அது. 

இந்த இரண்டு இடங்களுக்கு நடுவே கொலை வழக்கே விசாரித்து முடிந்து விடும். ஆனால் கதையின் மையச்சரடாக, என்னை டப்பென்று கழுத்தை பிடித்தது இந்த இரண்டு இடம்தான். கிட்டத்தட்ட இரண்டும் ஒரே விசயத்தைத்தான் சொல்லும்.

நாம் மனிதர்கள், மனிதர்களை பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்று, ஆனால் நமக்கு யாரையுமே முழுதாய் தெரியாது, இந்த உலகில் நீங்கள் 100% நம்பும் நபர்களை கூட உங்களுக்கு முழுதாய் தெரியாது, அவரிடமும் உங்களுக்கான ஏதேனும் ஒரு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கும். அதை எதிர்கொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது.

அப்படியே வந்து கதையின் இறுதியாக 1000 x 1000 = 10 லட்சம் காலடிகளில் வந்து தலைப்பில் நிறுத்தியது அட்டகாசம்.

கதையில் அனைவருக்கும் விமர்சிக்கும் பகுதி

சாதிப்படிநிலையின் கீழே செல்ல செல்ல கலப்பு குறைந்து அழகு குறையும்.

இக்கதையில் ஜெமோ சொல்ல வருவது, அரேபியர்களும் போர்ச்சுகீசியர்ரகளும் அரபி கடலோர பெண்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் வழியாக வம்சாவழியை உருவாக்காமல் இருந்ததால் அந்த நிறம் அவர்களின் தலைமுறைகளுக்கு இல்லை என்பதைத்தான்.

ஆனால் இதில் விமர்சிக்க வேண்டிய பகுதி வேறு இருக்கிறது. பிராமணர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம். அவர்களுக்கான பாதுகாப்பு. இந்து மதம் மட்டுமன்றி இஸ்லாமியர்களும் அவர்களின் ஆசிர்வாதத்தை கோருவது.

ஆனால் அதற்காக இது புறக்கணிக்கப்பட வேண்டிய கதையாக நான் சொல்லமாட்டேன். இது கெட்ட விசயமாக இருக்கலாம். ஆனால் இப்படித்தானே இருக்கிறது. அதை மறுக்க முடியாதே…என்னை பொறுத்த வரை நல்ல வாசிப்பனுபவம்தான்.

கதிரவன் ரத்னவேல்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307


விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு
அடுத்த கட்டுரைஅறத்தின் எதிர்த்தரப்பு எது? -கடிதம்