இரு இலக்கியக்கொள்கை நூல்கள்

இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்

எம்.வேதசகாயகுமார்

கலைக்களஞ்சியம் என்பது எழுத்து வடிவிலான அறிவுத் தொகுப்பு. அது பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கானதாகவோ, நிலம், இனம் குறித்தோ அமையலாம்.

தமிழுக்குப் புதிய முயற்சியாக அமையும் இந்தக் களஞ்சியத்தில் வேதசகாயகுமார், இலக்கியத் திறனாய்வை முன்வைத்துத் தொகுத்திருக்கிறார். இதில் தமிழ் இலக்கிய விமர்சனத்தில் தடம் பதித்த ஆளுமைகள், விமர்சனக் கொள்கைகள், விமர்சன இயக்கங்கள், இலக்கிய வடிவங்கள், விமர்சன வளர்ச்சிக்குக் களம் அமைத்த இதழ்கள், விமர்சனக் கலைச்சொற்கள் என அனைத்து செய்திகளும் அகரவரிசையில் இடம்பெறுகின்றன.

சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான இலக்கியத் திறனாய்வு தொடர்பான அனைத்து செய்திகளையும் தெளிவான நடையில், ஓரிடத்தில் தொகுத்துத் தருவது மூலம் இந்தப் புத்தகம், இலக்கிய மாணவருக்கும் பொதுவான வாசகருக்கும் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் பல்வேறு போக்குகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

இதுவே இலக்கிய விமர்சனம் என்னும் இலக்கியத்தின் மீதான ஆய்வு, மதிப்பீடு, விளக்கம் ஆகியவற்றுக்கான விமர்சனக் கருவிகளை நம்மிடம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது; சமகால இலக்கிய வாசிப்புக்கு நல்லதொரு திறவுகோல்..

வேதசகாயகுமார் கறாரான அழகியல் விமர்சகர் . மூலநூலை விரிவாக,  ஐயமறக் கற்பது அவர் வழி. அது நவீனத் தமிழிலக்கியமானாலும் சரி, மரபிலக்கியமானாலும் சரி, பிரதி சார் விமர்சனம் அவருடைய மரபு. சி.சு.  செல்லப்பாவுக்குப் பின் வேதசகாயகுமார்தான் தமிழின் முக்கியமான, அசல் விமர்சகர்.

இந்தக் குறுங்கலைக்களஞ்சியம் தமிழ் நவீன இலக்கிய விமர்சன மரபைப் பற்றியது. அதிலுள்ள மைய ஆளுமைகளைத் தொகுத்துப்பார்ப்பது. தமிழில் இவ்வகையில் இதுவே முதல் முயற்சி. தமிழ் இலக்கிய விமர்சனத் தளத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு.

-ஜெயமோகன்

பக்கம்: 432
நூலளவு: டெமி
விலை ரூ. 390
தொடர்புக்கு: வாட்ஸ்அப்: +91 944 37 68004

வேதசகாயகுமாரின் இலக்கியவிமர்சனக் குறுங்கலைக்களஞ்சியம்


பொருள்கோள் ஓர் அறிமுகம்

க. பூரணச்சந்திரன்

பொருள்கோள் (ஹெர்மனூடிக்ஸ்) என்பது பொருள் விளக்கத்திற்கான கோட்பாடு, ஆய்வுமுறை. இது இறையியல், ஞான இலக்கியம், தத்துவம் சார்ந்த பிரதிகளைப் பொருள் விளக்குவதற்கான கோட்பாடாக உருவானது.

ஆனால் இன்று வாய்மொழி, தகவல் தொடர்புகள், முன்கணிப்புகள், சட்டம், வரலாறு போன்றவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருள்கோள் முந்தைய பொருள் விளக்கக் கொள்கைகளையும் முறையியலையும்விட மேலானது. அது புரிந்துகொள்ளல், தொடர்பாடல் கலையையும் உள்ளடக்கியிருக்கிறது.

தமிழில் ஒரு முன்னோடியாக அமையும் இந்தப் புத்தகத்தில் க. பூரணச்சந்திரன் தொல்காப்பியத்தை முன்வைத்து நமக்குப் பொருள்கோள் கோட்பாடுகளை அறிமுகம் செய்கிறார்.

பத்து இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் நான்கு இயல்கள் மேற்கத்திய நோக்கில் பொருள்கோள் பற்றி விளக்குகின்றன. ஐந்தாம் இயல் தனித்த போக்கினதாக, தொல்காப்பியப் பாயிரத்தை எவ்விதம் நோக்கலாம் என்பதாக அமைந்துள்ளது. பிற இயல்கள் தொல்காப்பியம் கூறும் பொருள்கோள் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றன.

பொருள்கோள் முறைமையின் பெரும்பகுதி நமது உரைகாரர்களின் முறைகளைக் கொண்டிருக்கிறது. அதனினும் ஆழமாகச் சென்று, ஒரு பிரதியில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணும் துறையாகப் பொருள்கோள் எவ்வாறு அமைந்துள்ளது என விளக்குகிறது இந்த நூல். தொல்காப்பியம் என்னும் நமது செல்வத்தைப் பொருள்கோள் நோக்கில் ‘எவ்விதம் அணுகலாம்’ என்பதோடு நிற்காமல், தொல்காப்பியமே பொருள்கோள் அணுகுமுறைகளை ‘எவ்விதம் தன்னகத்தே கொண்டு இலங்குகிறது’என்பதையும் விளக்குகிறது; இதுவரை தொல்காப்பிய ஆய்வாளர்கள் எவரும் பயன்படுத்திய ‘நோக்கு’களுக்கு அப்பாலும், மேலும் ஆழமாகப் பொருள் காண்பதற்குக் கையாள வேண்டிய நெறிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்த நூல்.

ஒரு தருணத்தில் புரிந்துகொண்டதை மற்றொரு சூழ்நிலையில் விளக்க விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

பக்கம்: 144
நூலளவு: டெமி
விலை ரூ. 140
தொடர்புக்கு: வாட்ஸ்அப்: +91 944 37 68004

முந்தைய கட்டுரைபொன்னுலகம்- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைஇதற்குப் பிறகு கவிதை சாத்தியமா – உக்ரைன் கவிகளின் குரல்கள் -மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை