முதுமை, கடிதங்கள்

கனிந்த முதுமை

அன்புள்ள ஆசிரியருக்கு

வணக்கம்

தங்கள் “கனிந்த முதுமை” கட்டுரைக்கு மிக்க நன்றி.

இன்றைய இளவட்டங்கள் தங்கள் பெற்றோரிடம்  உள்ள எதிர்பார்ப்புக்கும்  உங்கள் கட்டுரையில் முதியவர் பற்றி  வர்ணித்துள்ள விவரணைகள் ஒத்துப்போகின்றன, ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் தங்கள் பெற்றோரிடம் கடன் வாங்கியாவது அவள் கல்யாணத்தை மிக விமர்சையாக நடத்த வேண்டி கேட்டு கொண்டாள் , இதை வைத்து பார்த்தால் நீங்கள் சொன்ன நுகர்வு கலாச்சாரம் முற்றிலும் உண்மையே, “பூத்து, காய்த்து, கனிந்து, விதையாக விரும்பாமல் வெறும் கிளையாக இருக்க விரும்பி மனம் குறுகி இருகுகிறது. அவர்கள் வளரவேஇல்லை.

மீண்டும் நன்றி

அன்புடன்
வெங்கடேஷ்

அன்புள்ள ஜெ

கனிந்த முதுமை வாசித்தேன். உண்மையில் நானே அடிக்கடி நினைத்துக்கொள்வதுதான் இது. ‘நான் என்னை வயசானவனா நினைக்கலை’ ‘நான் இன்னும் மனசுக்குள்ள இளமைதான்’ என்றெல்லாம் பேசுவது எத்தனை காலமாக இங்கே ஆரம்பித்தது? நம் அப்பாக்கள் அப்படிச் சொல்வதில்லை. நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். நாம் முதுமையை வெறுக்கிறோம். ஆகவே முதியோரை வெறுக்கிறோம். முன்பு நமக்கு முதுமை என்றால் மதிப்பு இருந்தது. அவர்களின் சொற்கள் மேல் மதிப்பு இருந்தது. இன்று முதியோரை தூக்கி அப்பால் சாத்திவிட்டு வாழ்கிறோம்.நமக்கு முதுமைவராது என நினைக்கிறோம். ஒருவர் உடலால் முதுமை அடைந்தபின் இளமையாக நடிப்பதுபோல ஆபாசமன விஷயம் வேறு கிடையாது

ஜான் சுந்தர்ராஜ்

முந்தைய கட்டுரைகல்குருத்தும் கருப்பட்டியும்
அடுத்த கட்டுரைவிந்தைகளுக்கு அப்பால்