ப.சிங்காரம் – பதிப்பாளர் கடிதம்

ப.சிங்காரம்-பதிப்பாளருக்கு வேண்டுகோள்

ப.சிங்காரம் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ,

வரலாற்று அபத்தத்தின் தரிசனம் – ப.சிங்காரம் படைப்புகளுக்கான முன்னுரையை பதிப்பிக்க ஒப்புதல் அளித்தமைக்கு மிகுந்த நன்றிகள். அது இன்றைய புதிய தலைமுறை வாசகர்களிடம் இன்னும் நிறைய கொண்டு சேர்ப்பதில் ஆவலாக உள்ளேன்.

கூடவே, தாங்கள் குறிப்பிட்டதுபோல் தங்களின் முன்னுரை முதலில் பிரசுரமான ஆண்டு, இடம் ஆகியவற்றை நிச்சயம் குறிப்பிடுவோம், தவறமாட்டோம் என உறுதியளிக்கிறேன்.

அதுபோல், பதிப்புத்துறையில் தாங்கள் சொல்வதுபோல் நிறையப் புத்தகங்களின் பதிப்புகளுக்கு இந்த Bibliography பிரச்சினை உண்டு. நானும் ஒரு புத்தகத்தின் பதிப்பில் முன்பொருமுறை இந்தத் தவறு செய்திருக்கிறேன். ஆனால், புதுச்சேரி ஃப்ரெஞ்சு இன்ஸ்ட்டியூட் திரு. கண்ணன், அதைக் குறிப்பிட்டு எனக்குப் போதுமான விளக்கமளித்துத் திருத்தினார். அதற்குப்பின் நீங்கள் குறிப்பிடுகிற பதிப்பு வரலாறு தவறுகள் நேராதவண்ணம் தமிழ்வெளி புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன. அது என்றென்றும் தொடரும்..

மற்றும், நூலக ஆணை பெறுதல் (ஐந்து ஆண்டுகளுக்குள் வரும் மறுபதிப்புகளுக்கு அவை மறுக்கப்படுகின்றன. மேலும் நமது புத்தகங்கள் அதன் பதிப்புகள் பற்றிய போதுமான அறிவும் நூலக அலுவலர்களுக்கும் இல்லை) போன்ற காரணங்களால், பதிப்பு வரலாறுகள் பதிப்பாளர்களால் மறுதளிக்கப்படுகின்றன.

அத்துடன் ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ அடையாளம் பதிப்பகத்திலிருந்து நியூ செஞ்சுரி பதிப்பகத்திற்குக் கைமாறியிருக்கிறது. நீங்கள் சொன்னதுபோல்தான் இம்பிரிண்ட் பக்கம் குறிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நூலாசிரியர்களே இல்லாத பழைய நூல்கள் பதிப்பிக்கப்படும் போது பதிப்பாளர்களே இதற்குப் பொறுப்பாவார்கள்.

குறைந்தது நூலுக்குள் ஒரு பதிப்புரையாகவாவது எல்லா செய்திகளையும் சேர்க்கலாம். அதை நூலகங்களில் வாசிக்கமாட்டார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை, வேதனையான பகடியும் கூட.

ப.சிங்காரத்தின் நாவலை மறுபதிப்பு செய்யும்போது அதன் பதிப்புவரலாறு சுருக்கமாக அளிக்கப்படவேண்டும். அதை முதலில் பதிப்பித்தவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. மிகநீண்ட இடைவெளிக்குப்பின் பதிப்பித்தவர் தமிழினி வசந்தகுமார். இச்செய்திகளும் ப.சிங்காரம் எழுதிய முன்னுரைகளும் முன்போ பின்போ அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நிச்சயம் கவனத்தில் கொண்டு, போதுமான தகவல்களைப் பதிப்பிக்கிறோம்.

மிக்க நன்றி,

கலாபன்

தமிழ்வெளி @ TAMIZHVELI

www.tamizhveli.com

முந்தைய கட்டுரைசில வாசகர்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகனிந்த முதுமை