நீலம் கடிதங்கள்

அன்புநிறை ஜெ

நீலம் வாசித்து அவ்வப்போது அரைகுறையாக எதையோ எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் உண்மையில் ஆழத்தில் இருக்கிறதெனக் காட்டிக் கண்ணுக்குப் புலனாகாமல் நழுவிக் கொண்டே இருக்கும்  உணர்வொன்றுதான் இத்தனை பிதற்றலுக்கும் காரணம். கூண்டைத் திறக்கும் வழி புலப்படாது கிளியின் சிறகுகள் படபடத்துக் கொண்டே இருக்கின்றன.

பிரக்ஞையால் அறியும் நீலத்தின் வாசிப்பை, ராதையின் பிரேமையின் நிலைகள், கம்சனின் உபாசனை வழி, காளிந்தியெனும் பெருக்கு, ஐம்புலன்களும் ஐம்பூதங்களும் நீலத்தில் வரும் விதம், கதைசொல்லிகள், நீலத்தின் பறவைக்குலங்களும் மலர்களும் என்பது போல பலவிதமாக அறிவால் வகுத்தும் தொகுத்தும் அறிவது ஒரு விதம். இன்னும் யோக, தாந்த்ரீகப் பயிற்சி உடையவர்கள் அறிவார்ந்த தளத்தில் அதைத் திறக்கும் போது வேறு சில வாயில்கள் இருக்கலாம்.

பெரும்பாலும் எப்போதும் வாசிப்பது நீலத்தை ஒரு கவிதையாக, உணர்வுப் பெருக்காக நீலத்தின் பித்துக்கு ஒப்புக் கொடுத்து வாசிக்கும் ஒரு உணர்வுநிலை சார்ந்த வாசிப்பு. இதிலேயே நீலத்தின் படிமங்களும், குறியீடுகளும் ஏற்படுத்தும் தீவிர உளநிலை மற்றும் கனவுகள் சார்ந்த அனுபவங்கள் நிகழ்கின்றன. வெளியேற முடியாத நீலப்பெரும்பித்தாக வாசிப்பு ஆகிவிடுகிறது.

ஆனால் இதற்கப்பால் வேறெங்கோ இருந்துகொண்டு இருளில் விழிமின்னுகிறது நீலம்.

இது வெறும் விழிப்பு நிலையிலிருந்து எழுதப்பட்ட படைப்பல்ல என்று நீலம் மலர்ந்த நாட்களின் அனுபவத்தை வாசித்தாலே உணரலாம். யோகத்தின் வாயிலாக ஆழ்மனதின் ஆழங்களுக்கு செல்லும் பயிற்சி உள்ளவரால் விழிப்புமனமும், ஆழ்மனமும் முயங்கிக் கலந்த வெளியில் எழுதப்பட்டது எனப் புரிந்து கொள்கிறேன். இரண்டடுக்குகளில்

ஸ்வப்னம் மட்டுமல்லாது பிரபஞ்சத்தின் துளியாக தனை உணரும் சுஷுப்தியின் தளத்திலிருந்து எழுந்து வந்த படைப்பு என நீலத்தை உணர்கிறேன். இது எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை இறைத்து விடக் கூடாது எனும்  உணர்வும் இருக்கிறது. என்றாலும் அறிந்து கொள்ளுதலின் பொருட்டுக் கேட்கிறேன். நீலத்தை எழுதுவதன் வாயிலாகத் தாங்கள் அடைந்தவற்றில் சிலவற்றையேனும் ஆழமாக அறியுமாறு மேலும் திறந்து கொள்வதே பெரிய அனுபவமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. அதை எப்படி அறிவது?

மிக்க அன்புடன்,

சுபா

அன்புள்ள ஜெ

நீலம் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். எத்தனை காலமாக இந்த சிறிய சூலை வாசிக்கிறேன் என்றே தெரியாது. இதன் அர்த்தங்களெல்லாம் எனக்கு தெரியாது. இதன் பாவத்துக்காகவே இதை வாசிக்கிறேன். இதை வாசிக்கையில் எனக்கு வரும் கண்ணீர்தான் என்னுடைய அனுபவம். ஏன் என்றே தெரியாமல் ஒரு பெரிய தவிப்பும் நிறைவும் வரும். இந்நாவலை ஆரம்பத்தில் என்னால் வாசிக்க முடியவில்லை என்பதும் உண்மை. உள்ளே போகவே முடியாமலிருந்தது. மெல்லமெல்ல உள்ளே போய் இப்போது வெளியேற முடியாத நிலை

பிற்பாடு பெரியவர்களிடம் பேசும்போது இந்நாவலைப்பற்றி சொன்னேன். அவர்களில் சிலர் படித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. ராதாபாவம் என்பதுதான் வைஷ்ணவ மனநிலை என்று சொன்னார்கள். ராதாவாக இருந்து கண்ணனை அறிந்த முயர்ச்சி என்று நீலத்தைப் பற்றிச் சொன்னார்கள். அந்த பாவனையே அந்த நெகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது என்று தெரிந்தது

லக்ஷ்மி ராஜகோபால்

முந்தைய கட்டுரைகாந்தியும் கறுப்பினத்தவரும்
அடுத்த கட்டுரைகுதிரை மரம்- தேவதாஸ்