அன்பு ஜெயமோகன்,
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ராஜ் கெளதமனின் தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் ஆய்வுநூலை மறுவாசிப்பு செய்தேன். தமிழில் வெளியாகி இருக்கும் தலைசிறந்த அபுனைவு நூலாகவே இன்றைக்கும் தோன்றுகிறது. அந்நூலை அழகுறப் பதிப்பித்த விடியல் சிவாவுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது பண்பாகாது. அறம் தொடர்பான சமூகக்கருத்தோட்டங்களை தமிழிலக்கியங்கள் வழி அணுக விரும்பும் வாசகர்கள் நிச்சயம் அந்நூலை வாசிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
திருக்குறளை ஒரு அறநூலாக மட்டுமே வாசித்திருந்த எனக்கு ராஜ் கெளதமன் உச்சபட்ச அதிர்ச்சியை அளித்தார். அதிகாரத்தின் மாயக்கரமாக அறம் செயல்படுத்தப்பட்டிருப்பதைத் குறட்பாச் சான்றுகளோடு அவர் முன்வைத்திருந்த விதம் ’அரசியல் இலாப’ நோக்கமற்றது. எனினும், அதை வாசிப்பவர்கள் திருக்குறள் அதிகாரத்தைக் காக்கும் பொருட்டுத்தான் எழுதப்பட்டதோ எனும் ’அரசியல் நிலைபாடுக்குள்’ சிக்கி அவதியுறவும் செய்துவிடும். அதனால், வாசகர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன். தவறாமல், அந்நூலின் முடிவுரையைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ராஜ் கெளதமன் அவர்களின் நோக்கம் விரிவாய்த் துலக்கமாகும்.
வன்முறையே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வள்ளுவர் ஒரு அரசன் தன்னைக் காத்துக் கொள்வதற்காகப் போரிடலாம் என்பன போன்ற கருத்துக்களைச் சொல்வதைக் குறிப்பிட்டு திருக்குறள் பற்றி நாம் கொண்டிருக்கும் ‘ஒற்றை வாசிப்பு’ முறையைப் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் ரா.கெள. ’ஒற்றை வாசிப்பு’ முறையால் உருவாக்கி அளிக்கப்பட்டிருக்கும் ‘பொது வரலாற்றுச் சித்திரத்தையும்’ மறுபார்வைக்குள்ளாக்குகிறார். அச்சு முதலாளியத்தின் வழி நமக்களிக்கப்படிருக்கும் வரலாற்றுத் தகவல்களை இலக்கியச் சான்றுகள் துணைகொண்டு மறுவிசாரணைக்கு ஆயத்தப்படுத்துகிறார்.
பொதுவாகவே, அறநூல்களின் தோற்றம் பற்றி விரிவான சான்றுகளோடு பேசும் ராஜ் கெளதமன் அறத்தை அதிகாரத்தின் உறுப்பாகவே நமக்குக் காட்டுகிறார். இது ஒருவகையான ஆய்வுக்கோணம். இதுவே ’முடிந்த முடிபு’ என்பதான அழுத்தம் இல்லை. ஆக வாசகர்கள் வெகுகவனமாக இருக்க வேண்டும். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஜல்லி அடிக்காமல் சிக்மண்ட் ஃப்ராய்டு, ஃபூகோ, நீட்ஷே, கிராம்சி போன்ற நவீனச் சிந்தனையாளர்களின் பங்களிப்புகள் வழியாகவும் தனது ’சிந்தனைப்புலத்தை’ வலுப்படுத்தி உள்ளார்.
வள்ளுவரின் காமத்துப்பால் எவ்வாறு ஆண்மையச் சமூகத்தின் ‘காப்பாக’ இருக்கிறது என்பது பற்றிய அவரின் விரிவான விளக்கங்கள் ‘பாலியல் அறங்கள்’ பற்றிய மீள்விசாரணையை முடுக்கி விடுகின்றன. பக்தி x சித்தி என்பதான சமயத்தளத்தின் கருத்தாடலை பெண்ணின் அலங்கார ரூபம் x ஆபாச ரூபம் என்பதான கோணத்தில் அவர் வியாக்கியானம் செய்த அத்தியாயங்களில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நூலின் மிக முக்கியமான பகுதிகள் அவை. நூலை மூடிவைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே தொடர முடிந்தது.
பக்தியின் பெண்மை பெண்ணின் அலங்கார ரூபத்தை வியந்தோதி இருக்க, சித்தியின் நாயகர்கள்(சித்தர்கள்) பெண்களின் ஆபாச ரூபத்தைப் பகிரங்கப்படுத்தி இருப்பார்கள். சான்றுகளுக்கு, சைவ வைணவ பக்திப்பாடல்களையும் சித்தர்பாடல்களையும் ராஜ்கெளதமன் நூலில் அளித்திருக்கிறார். சித்தர் பாடலுக்குச் சான்றாக எத்தனை பேர் தொட்ட முலை / எத்தனை பேர் நட்ட குழி எனும் பட்டினத்தாரின் வரியைச் சொல்கிறேன்.
நவீனக் கோட்பாட்டாளர்கள் பொருளியல், பிராமணிய, சாதிய அதிகாரக் கருத்தியல்களாலே சமூகம் சீரழிந்து விட்டதாகக் கூப்பாடு போட்டு ‘போராடிக்’ கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆண்மையம் எனும் யோசனையை நோக்கி முன்நகரும் ராஜ் கெளதமன் நம்மை ’சிந்தனை முறைமையை’ உலுக்கி விடுகிறார்.
இன்னும் சொல்லப்போனால், சமூகம் என்பதை ஆணின் கோணத்தில் இருந்தே அணுகும் இலட்சியவாதங்களின் அபத்தப்போக்கைத் தோலுரித்திருக்கிறார். பொருளியல் மையம் பேசிய மார்க்சியமோ, பிராமணிய மையம் பேசிய பெரியாரியமோ, தாழ்த்தப்பட்டோர் மையம் பேசிய அம்பேத்கரியமோ, கிராம மையம் பேசிய காந்தியமோ ஆண்மையத்திலிருந்து அவற்றை யோசித்ததா எனும் திறப்பை ராஜ்கெளதமன் வைத்துச் செல்கிறார். மூலக்கோட்பாடுகளில் அவை பேசப்பட்டிருந்தாலும், அவ்வமைப்புகளின் நடைமுறை வடிவமான ’அரசியல் செயல்பாடுகளில்’ அவை எதிரொலித்திருக்கின்றனவா எனும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறார். எவ்விதக் கோட்பாடுகளையும் அவர் வீண் என்று உதறிச் செல்லவில்லை. அவற்றின் ‘அரசியல் வடிவங்களை’ மறுபரிசீலனைக்கு உட்படுத்தவே மன்றாடுகிறார். ஒரு தேர்ந்த சிந்தனையாளரால் அப்படியான மன்றாட்டை நிகழ்த்த இயலும்.
சமூகம் ஒருபோதும் ‘நிலையான’ வடிவத்தில் இருப்பதில்லை; இருக்கப்போவதுமில்லை. இயங்கியல் புரிந்தவர்களுக்கு இது தெளிவாகவே புரியும். இன்றைய வரலாற்றுப்பரப்பில் இருக்கும் நவீனச் சமூக வடிவை முந்தைய வரலாற்றுகாலச் சமூக வடிவங்களோடு ஒப்பிட வேண்டியதன் தேவையை இப்போது வரை சமகால ’அரசியல் அறிவுஜீவிகள்’ ஒப்புக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, வரலாறு என்பது கிழித்த நேர்கோடு போன்றது. அதனால்தான் கோட்பாட்டாளர்கள் ’அரசியல் வடிவங்களின்’ வழி ’சமூக மாற்றத்தை’ உருவாக்கி விடலாம் எனத் உறுதியாக நம்புகின்றனர். அரசியல் வடிவம் அவசியம்தான். அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு முக்கியம்.
அரசியல் அறிவுஜீவிகளைப் பொறுத்தவரை சமூகம் எப்போதும் இரு தரப்புகளை மட்டுமே உள்ளடக்கியது. ஒன்று ஒடுக்குகிற தரப்பு; மற்றது ஒடுக்கப்படுகின்ற தரப்பு. ஒடுக்கப்படுகின்ற தரப்பை எழுச்சி பெறச் செய்து ஒடுக்குகிற தரப்பைக் காலி செய்து விட வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் வடிவம். அதன்பொருட்டே கட்சிகள், தொண்டர்கள், ஆர்ப்பாட்டங்கள், முழக்கங்கள், போராட்டங்கள். உண்மையில், இவ்வகையான செயல்பாடுகள் பகுத்தறிவுக்கே முரணானவை.
சமூகத்தை ஒரு புறவய இயந்திரத்தைப் போன்று பார்ப்பதே, கோட்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் பலவீனம். சமூகத்தை நவீன மனிதர்களின் கோணத்தில் இருந்து மட்டுமே அணுகுவது, மற்றுமொரு பிழை. சமூகத்தைப் பிரபஞ்சத்தின்(இயற்கை) எல்லைக்குள் இருக்கும் மனிதக்குழுவாழ்வு(செயற்கை) என்பதாக என்றைக்காவது நாம் பேசி இருக்கிறோமா? மார்க்சியம் ஓரளவு அதைக் கண்டுணர்ந்திருக்கிறது. அதனால்தான் சமூக வடிவங்களை வேட்டை, மேய்ச்சல், வேளாண், உற்பத்தி மற்றும் நவீனம் என அடையாளம் காட்டி இருக்கிறது. அதுபற்றிய புரிதல் கொண்ட மார்க்சியர்கள் இன்று வெகுசிலரே இருக்கின்றனர். பெரும்பாலான கட்சி மார்க்சியர்களுக்கோ மார்க்சிய அடிப்படையே தெரியாது; அதன் இயங்கியலும் விளங்காது. அப்படித்தான் சமகாலத்தலைமுறை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், வலைதள வம்புகள் வேறு.
வேட்டை > மேய்ச்சல் > வேளாண் > உற்பத்தி > நவீனம் என்பது கூட புரிந்து கொள்வதற்கான சங்கிலியே தவிர, உறுதியாக இப்படித்தான் சமூக வடிவங்கள் பரிணமித்திருக்கின்றன எனும் ’அறிவியல் நிரூபணம்’ கிடையாது. அது அவசியமும் இல்லை. இங்கு வேட்டைச்சமூகத்தில் மனிதன் இயற்கையை அதிகம் நம்ப வேண்டி இருந்தது. மேய்ச்சல் மற்றும் வேளாண் சமூகங்களில் இயற்கையுடனான தொடர்பிலிருந்து விலகத் துவங்கினான். உற்பத்தி மற்றும் நவீனச் சமூகங்களில் முழுக்கவே இயற்கைக்கு அந்நியமாகிப் போனான் அல்லது இயற்கையை அறியாது ‘தானே’ பிரபஞ்ச மையம் என்பதான எக்களிப்பில் மிதக்கிறான். அம்மிதப்பே சமூகம் என்பதை மாந்தசமூகம்(மனிதச்சமூகம்) என்பதாக மட்டுமே புரிந்து கொள்ள வைக்கிறது. அங்கிருந்தே சமூக மேம்பாட்டைக் குறித்து ‘சிந்திக்க’வும் வைக்கிறது. அவன் சிந்தனையில் எப்போதும் இருப்பது ‘மனிதர்களே’. இன்னும் சொல்வதானால், அவன் சார்ந்திருக்கும் கோட்பாடு முன்வைக்கும் ‘ஒடுக்கப்பட்டவர்களே’.
இயற்கைக்கு நெருக்கமாக இருந்தவன் வேட்டை மனிதன்; இயற்கையையே (அதிகம்) அறியாதவன் நவீன மனிதன். இக்கருத்தைக் கொண்டு நவீன மனிதன் மோசமானவன் என்றும், வேட்டை மனிதன் புனிதமானவன் என்பதான கற்பிதங்களை உருவாக்கி மடத்தனம் புரிபவர்களும் இருக்கிறார்கள். அப்படியும் ஆகிவிடக்கூடாது. வேட்டை மனிதனுக்கு நவீன மனிதன் புரியாமல் போகலாம். ஆனால், நவீன மனிதனால் அவனுக்குள்ளிருக்கும் வேட்டை மனிதனைக் கண்டுகொள்ள முடியும்தானே?
தான் யார் எனச் சிந்திப்பதன் வழியாக வேட்டை மனிதனைக்கண்டு கொள்ளும் நவீன மனிதன், இன்னும் பயணித்தால் தன்னை இயற்கையின் சிறுதுளியாக உணரும் வாய்ப்பைப் பெறலாம். அவ்வாறு உணரும் நவீன மனிதன் என்ன செய்வான் என நாம் பொதுவாகச் சொல்லி விட இயலாது. ஒன்று மட்டும் உறுதி. சமகால நடைமுறைக் கோளாறுகளுக்குக் காரணம் ’நவீனச் சமூகத்தின் அறிவுக்குறுக்கமே’ எனும் புள்ளியை நிச்சயம் வந்தடைவான். இப்போதைக்கு அது முக்கியம் என்பது என் தரப்பு.
சமயத்தின் வழி சமூகவாழ்வை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும். வேட்டை மனிதனின் வாழ்வியல் நிகழ்வுகள் மேய்ச்சல் மனிதனின் காலத்தில் பண்பாட்டுச் சடங்குகளாகின்றன. அவை வேளாண் மற்றும் உற்பத்தி மனிதன் காலத்தில் ஆன்மீகச் சமயமாகிறது. அதுவே நவீன மனிதனின் காலத்தில் தத்துவ நிறுவன மதமாகிறது. நிறுவன மதத்தின் உள்ளடக்கமாக ஆன்மீகம், சடங்குகள் போன்றவை இன்றைக்கும் இருக்கின்றன. ஆனால், அவை நிறுவன மதத்தின் அதிகாரச் சார்பால் திரிபுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்திரிபுகளும் நவீன காலத்தில் மட்டுமே உருகொள்ளவில்லை. அதன் வேர்கள், மேய்ச்சல் சமூகச் சடங்குகளுக்கு முன்பு இருந்தே கூட ஆரம்பித்து இருக்கலாம். கனகச்சிதமாக சமூக வரலாற்றை நாம் எழுதிவிட முடியாது.
இங்குதான் மார்க்சியம் நமக்கு கைகொடுக்கிறது. இயற்கையை பொதுவுடைமையாகக் கொண்டிருந்த வேட்டை காலச்சமூகத்தில் அதிகாரம் எனும் வார்த்தைக்குப் பொருளில்லை. தனியுடைமை உருவான மேய்ச்சல் சமூகக் காலகட்டத்தில் அதிகாரம் துலங்கத் துவங்கி இருக்கலாம். மெல்ல மெல்ல நவீனச் சமூகத்தில் அது எதேச்சதிகாரமாக வளர்ந்து நிற்கிறது. இவ்வாறாக அதிகாரத்தை விளங்கிக் கொள்வது முக்கியம். மேலும், அதிகாரம் எனும் கருத்தாக்கம் குறிப்பிட்ட மனிதக்குழுவுக்குச் சொந்தமானதும் அல்ல. மனிதக்குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த முரணியக்கங்களைப் புரிந்துகொள்ள உருவாக்கிக் கொண்ட சொல்லே அதிகாரம்.
வேட்டைச் சமூக மக்கள் முற்றிலும் அழிந்து, மேய்ச்சல் சமூக மக்கள் உருவாகவில்லை. உணவுக்குத் தானியத்தைப் பயன்படுத்தத் துவங்கும் பலர் விலங்குகளை வேட்டையாடுவதைக் குறைத்துக் கொள்கிறான்(சிலர் தொடர்ந்து வேட்டையாடுகின்றனர்). கூட, வேட்டையைக் குறைத்துக் கொள்பவர்கள் மேய்ச்சல் நாடோடிகளாக வாழ்வை மேற்கொள்கின்றனர். மேய்ச்சல் வாழ்விலிருந்து முரணியக்கம் கொள்ளும் குழுவினரால் வேளாண் சமூக வடிவம் உருவாகிறது. தொடர்ந்து, ஓரிடத்தில் நிலைத்த குடிகளாக வாழும் வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகக் கால கட்டத்தில் வேளாண்மையும் வேளாண் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளும் ‘தொழிலாக’ மாறுகிறது. நவீனச் சமூகத்தில் அதன் நீட்சியாக உற்பத்தி பொருட்கள் ‘வணிகமாகி’ இலாபத்தை முதன்மையாகக் கொள்கிறது.
நாம் இன்றைக்கு நவீனச் சமூகத்தில் வசிக்கிறோம். என்றாலும், நவீனச்சமூகத்தில் வேளாண், உற்பத்தி, மேய்ச்சல் மற்றும் வேட்டைச்சமூக மக்கள் உள்ளடங்கி இருப்பதைக் கவனிக்க வேண்டும். இன்றைக்கும் எங்கள் பகுதியில் வேட்டையை மட்டுமே நம்பி இனக்குழுவாக வாழும் நரிக்குறவர்களும், மேய்ச்சலை மட்டுமே நம்பி வாழ்வோரும், விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்போரும், இயந்திரத்தொழிற்சாலை அமைத்து தொழில் செய்வோரும், தரகு வணிகம் மேற்கொள்ளும் நவீனவணிகர்களும் இணைந்தே இருக்கின்றனர்.
கெடா வெட்டுதல், கூறுபோடுதல், அலகு குத்துதல்(வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகப் பண்புகள்), முளைப்பாலிகை எடுத்தல், தீர்த்தக்குடம், வேண்டுதல், தேர் இழுத்தல், டிராக்டரில் சாமி நகர்வலம் வருதல்(வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகப்பண்புகள்), கோவில் கடைகள், அறங்காவலர் அல்லது அரசு நிர்வாகம்(நவீனச் சமூகப்பண்புகள்) எனச் சமூகப்பரிமாணத்தின் உள்ளுறையைக் கோவில் நிகழ்வுகளில் நேரடியாகக் காணலாம்.
நவீனப்பண்பாடு என்பது வேட்டைக்கு முன் துவங்கி நவீனத்தில் முழுமை பெறுவது. வெறுமனே நவீனம் மட்டும் அன்று. அப்புரிதலே இதுகாறும் நமக்கு வாய்க்கவில்லை அல்லது வாய்ப்பதற்கு அரசியல் குழுக்கள் விட்டதில்லை. அரசியல் குழுக்களின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றல் என்றாகும்போது அவர்களால் திரிபுகளையே சிந்தனைகளாகச் சமூகத்துக்கு அளிக்க முடியும். அதுவே கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்கத்தைக் கடும் சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கொஞ்சம் எளிமையாக்க முயற்சிக்கிறேன். இன்றைக்கு இருக்கும் வாழ்வை நவீனம் என்றும், அதற்கு முந்தைய சமூகப் பண்பாடுகளை மரபு என்றும் கொள்வோம். மரபுக்குள்ளான முரணியக்கமே நவீனமாகி இருக்கிறது. மரபு அழிந்து நவீனம் உருவாகவில்லை. இதுவே புரிந்து கொள்ள வேண்டியது. விதை அழிந்து வேர் உருவாகவில்லை. வேரில் விதை சூட்சுமமாய் இருக்கிறது. கனியிலும் அது இருந்தே தீரும். நமக்கோ மரபு அறிவீனம் என்றும், நவீனமே அறிவு என்பதாகவும் கோட்பாடுகள் வழி பயிற்றுவிக்கப்படுகிறது. அதனாலேயே நவீனம் எதிர் மரபு என்பதான இருமையை உருவாக்கி அதில் நவீனம் பக்கம் நம்மை இருத்திக்கொண்டு மரபுக்கு எதிராக அல்லது அதை முற்றொழிப்பதையே முற்போக்கு என முடிவு செய்கிறோம். எப்பேர்ப்பட்ட அபத்தம் இது?
பன்மைகளை இருமையாக்கி அதன் வழி உலகை ஒற்றை அதிகாரத்தின் வழி கொண்டுவிட வேண்டும் எனும்படியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது உலகம் தழுவித் தீவிரமாக நடைபெறுகிறது; நாடு, மாநிலம், நகரம், கிராமம் எனும் சிறிய அலகுகளிலும் அதன் தாக்கம் ஊடுருவி இருக்கிறது.
மரபுச்சமூகங்களில் முரணியக்கம் நிகழ்ந்தது போன்று நவீனச்சமூகங்களிலும் முரணியக்கம் நிகழும். முரணியக்கங்களை விளங்கிக் கொள்வதே மெய்யறிதல்(திரும்பவும் சொல்கிறேன். முரணியக்கங்களை எதிரிடைகளாகப் புரிந்து கொண்டு விடாதீர்கள்). அந்நிகழ்வின் வழியாக நாம் விரும்பும் கனவுச்சமூகத்தை உருவாக்க இயலுமா எனத்தெரியவில்லை. ஆனால், கனவுச்சமூகம் பற்றிய கற்பனை அவசியம். கற்பனைகளே மனிதனின் தனித்துவம். அவையே அவனைச் சமகாலத்தில் உற்சாகம் குன்றாமல் செயல்படத் வைக்கின்றன.
நவீனச்சமூகம் அடுத்து என்னவாக இருக்கும் என்பதை இப்போது ஊகமாகக் கூடச் சொல்லிவிட முடியாது. அறிவியல்பூர்வமாகச் சொல்லிவிட முடியும் என மார்தட்டுபவர்கள் அறிவியல் அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு நம்முடைய தேவை, சமூக வடிவங்களின் பன்மைகளைக் குறித்து மேலதிகத் துலக்கத்திற்குத் தயாராக இருப்பதே.
ஐரோப்பிய அறிவொளி கால அறிவு நமக்கு அளித்திருக்கும் ’சிந்தனை முறைமை’ முழுக்கத் தவறானதன்று. ஆனால், அதையே ’முழுமுதல் உண்மை’ என்பதாக ஒப்புக்கொள்ளும் போக்கே ‘அறிவீனம்’ ஆகும். அதனாலேயே, பெரியாரால் சமூக உளவியலில் சிறிதளவு மாற்றத்தைக் கூடச் செய்ய முடியாமல் ஆனது. சமூக வடிவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அது சமூக உளவியலில் எதிரொலித்திருக்கிறதா? நவீனச் சமூகத்தின் வடிவம்தான் நவீனமே தவிர அதன் உள்ளடக்கம் மரபைச் சூட்சும்மாகக் கொண்டிருக்கிறது. சமூகத்தைப் புறமாக மட்டுமே பெரியார் போன்றோர் கருதினர். அதனாலேயே புறமாற்றங்களே சமூக மாற்றங்கள் என நம்பவும் தலைப்பட்டனர். உண்மையில் சமூக மாற்றங்கள் அதன் உள்ளடக்கத்தையும், சமகால வடிவையும் கருத்தில் கொண்டோரால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
நவீனமே மேம்பாடு, மரபு குப்பை என்பதைப் போன்ற பெரியாரின் பார்வையே மிகக்குறுகலானது என்பது மட்டுமன்றி.. அது பகுத்தறிவும் ஆகாது. அவர் நவீன அறிவைப் பகுத்தறிவு எனச் சொன்னார். உண்மையில், பகுத்தறிவு என்பது நவீனத்தைப் பகுத்து அதில் மரபின் தேவை என்ன என்பதை விளங்கிக் கொள்வதும் அதை நவீனத்தின் வழி மேற்கொண்டு செல்வதும்தான். அங்கு பெரியார் பெரும்பிழை செய்துவிட்டதாகவே கருதுகிறேன்.
பெரியாரின் பார்வையில் சமூகப்பன்மைகள், பிராமணர் எதிர் பிராமணர் அல்லாதோர் என இருமைகளாகக் குறுக்கப்படுகிறது. மேலும், பிராமணர் அல்லாதோர் பக்கம் நின்று அவர்களுக்கு எதிரிகளாக பிராமணர்களைக் கட்டமைக்கும் வேலையைச் செய்வதைத் திராவிடர் கழகத்தின் அரசியல் வடிவமாக்குகிறார். அவ்வடிவத்துக்குச் செல்லும் ஒருவர் சமூகத்தைப் பிராமணியம் கடந்து யோசித்து விடவே முடியாது. அப்படியானால், ஆதிக்க பிராமணியம் சரியானதா? அப்படி இல்லை. ஆதிக்க பிராமணியமும் ஒரு காரணம். அதுமட்டுமே காரணம் என்பதான முழுமுதல் தத்துவம்தான் பேராபத்து.
இந்துமத அரசியலுக்கு வருகிறேன். இந்துத்துவர்கள் இந்துக்கள் எதிர் இந்துக்கள் அல்லாதோர் எனும் இருமைகளைக் கட்டி அதில் இந்துக்களுக்கு எதிரிகளாக இந்துக்கள் அல்லாதவர்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, இஸ்லாமியச் சகோதரர்களை கொடும் எதிரிகளாகச் சித்தரிக்கின்றனர் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களை எதிரிகளாக முன்வைப்பது போல). இந்துக்கள் மட்டுமே இந்து ராஷ்டிரத்தில் இருக்க வேண்டும் என முழக்கமும் எழுப்புகின்றனர்.
பெரியாருடைய சிந்தனை முறைமையைக் கொஞ்சம் சீர்படுத்தினால், அது சமூகத்துக்குப் பயனுள்ளதாகும். அவ்வகையில் அவரின் நோக்கம் மானுடத்துக்கானது. அதனால்தான் கடவுளை மற மனிதனை நினை என உறுதிபடச் சொன்னார். ஆனால், இந்து அடிப்படைவாதிகளின் சிந்தனை முறைமையோ முழுக்கத் திரிபானது. அதனால் இந்தியாவுக்குக் கேடு விளையுமே தவிர நன்மை ஒருபோதும் சாத்தியமில்லை.
இன்றைய சூழலில், சமூகத்தின் பன்மைத்தளங்களை விளங்கிக் கொள்வதற்கான மேலதிகத் திறப்புகளை நிகழ்த்தும் கோட்பாடுகளும், ஆய்வுகளும் அவசியமாகின்றன. வலைதளச் சூழலில் வம்பரசியல் பேசும் சமகாலத் தலைமுறையினரை வலுக்கட்டாயமாக வாசிப்புக்குக் கொண்டு வர இயலாது. அது தேவையுமில்லை. கோட்பாடுகள், கலை இலக்கியங்கள் குறித்த உளப்பூர்வத் தேடலில் இருக்கும் ஒருவர் முதலில் திரிபுகளைக் கண்டறிய வேண்டும். ஏனென்றால், நவீனச்சூழலில் பண்பாட்டுத்திரிபுகளே கோட்பாடுகளாகவும், அரசியல் வடிவங்களாகவும் இருக்கின்றன.
நவீனச்சமூகத்தின் கோட்பாட்டுத்திரிபுகளை ஓரளவு கண்டுகொள்வதற்கு ராஜ் கெளதமன் போன்ற ஆய்வாளர்களே நமக்கு உதவக்கூடும். ராஜ் கெளதமன் வரிசையில் சோதிப்பிரகாசம்(மார்க்சிய அறிஞர்), கோ.கேசவன்(மண்ணும் மனித உறவுகளும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், தோழர் தியாகு(கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலின் ஆசிரியர்), ந.முத்துமோகன்(மார்க்சியம் பயில்வோம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), ஸ்டாலின் ராஜாங்கம், டி.தருமராஜ்(நான் ஏன் தலித்தும் அல்ல உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), கோவை ஞானி, இராமானுஜம்(சந்நியாசமும் தீண்டாமையும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்), தமிழவன்(திராவிடம் தமிழ்த்தேசம் கதையாடல் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்) போன்றோரையும் வைக்கிறேன். அப்படியான ஆய்வாளர்களைக் கண்டு கொள்வதும், வாசித்துத் தெளிவதுமே இப்போது அதிமுக்கியம்.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.