இலக்கியம் என்னும் குமிழி

அன்புள்ள ஜெ,

சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு இலக்கிய உலக சர்ச்சையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் நினைத்தோம். இந்த இலக்கிய விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான் சினிமாவும் அரசியல் சர்ச்சைகளும் மாபெரும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கின்றன.

இணையத்தில் ஒரு சின்ன குமிழியில் ‘சிலர்’ இந்த இலக்கியம் முக்கியமானதாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அதே இணையத்தில் மாபெரும் அலைகளாக சினிமாவும் அரசியலும் ட்ரென்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இப்போது டி 23 ஆட்கொல்லி புலி பற்றிய செய்தி வந்திருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நீலகிரிப் பகுதியில் மட்டும் மூன்று புலிகள் இதே மனிதர்களைத் தாக்கிய காரணத்துக்குக்கான சட்டப்படி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் புலி கொல்லப்படாமல் உயிரோடு பிடிக்கப்பட்டது பற்றி இன்று பொதுவெளியில் மகிழ்ச்சி தெரிகிறது.

அதே சமயம் புலி, சிங்கம் யானைகளை கொன்றால் வீரம் என்ற நிலையில் இருந்து சமூகம் இப்படி மாறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி. புலிகளைக் கொல்லும் புலிமுருகன் மாஸ் வெற்றிகரமான என்ற சினிமா கூட சமீபத்தில் தான் வந்திருந்தது. அந்த நிலையில் இருந்து பொதுச்சமூகம் மாறுவது ஆச்சர்யமளிப்பது.

சில வருடங்களுக்கு முன் நம் விஷ்ணுபுர விழாவில் வெளியிட்ட, ஜேனிஸ் பரியட் அவர்களிடன் சிறுகதைத் தொகுப்பான  “நிலத்தில் படகுகள்”  புத்தகத்தில் ஒரு கதை “ஆகாய சமாதிகள்”, இதைப் போன்ற ஆட்கொல்லி புலியைப் பற்றியது. அந்தக் கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்திருந்தது. காட்டோடு இயைந்த வாழ்வில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு ஆட்கொல்லி புலி கொல்லப்படுவதின் துயரம் அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

வெண்முரசில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படும்போது வரும் ஒரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கின்றது. கர்ணன் பல சிங்களோடு சண்டையிட்டு அவரது வீரம் நிறுவப்படும் காட்சியில் ஒரு சிங்கம் கூட கொல்லப்படுவதில்லை. சிங்கத்தோடு சண்டையிடுகிறான், வெல்கிறான் ஆனால் அதை அவன் கொல்லமாட்டான் என்பதில் வீரமும் அதே சமயம் பொறுப்புணர்வும் தெரிகின்றது.

சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.

அன்புடன்
சுரேஷ் பாபு

**

நிலத்தில் படகுகள்

https://www.vikatan.com/living-things/animals/tiger-t-23-captured-alive-in-the-nilgiris-after-21-day-hunt

ஆகாய சமாதிகள்

ஜெனிஸ் பரியத்

இறுதிச்சடங்குகளின்போது பொதுவாகக் கதைகள் சொல்லப்படும். ‘இயங்க் இயாப் பிரு’ எனப்படும் மூன்று இரவுகள் நடக்கும் அச்சடங்கில் இறந்தவர் வீட்டின் கதவு, ஜன்னல்கள் திறந்து வைத்திருக்கப்பட்டிருக்கும். இந்த இரவுகளில் சில சமயம் இருக்கை ஒன்று சாய்ந்து விழும், மரக்கதவுகள் படபடவென அடித்துக்கொள்ளும் அல்லது ஒரு கோப்பை தரையில் விழும். இதெல்லாம் இறந்தவரின் ஆவி அங்கு வருவதின் அடையாளங்கள், இவற்றை இறந்தவர் தான் விட்டுச்செல்லும் இந்த உலகுடன் சமாதானமடைவதின் அறிகுறிகள் என சிலர் நம்புவதுண்டு. இந்த இரவுகளில் சீட்டு அல்லது கேரம் விளையாடி பலர் நேரத்தை கடத்துவர்; பெண்கள் அடுப்படியில் பாக்கு மற்றும் புகையிலையை மறுநாள் வருபவர்களுக்காக தயார் செய்துகொண்டே, உற்றவரையிழந்து தேற்றமுடியாமல் வாடுபவர்களைப் பற்றி மெதுவாகப் பேசிக்கொண்டிருப்பர். இன்னொரு அறையில் ஒரு இருண்ட மூலையில், ஆண்கள் கும்பலாக ஒரு சூலாவைச்(ஒரு வகை கரியடுப்பு) சுற்றி ஒருவருகொருவர் இறுக்கமாக ஒட்டியபடி   ஒரு பழக்கமான பெண்ணின் அணைப்பில் கிடைப்பது போன்ற இதமான வெதுவெதுப்பு கிடைக்க அமர்ந்திருப்பர். அப்போது குடிபோதையில் காலியான தேவாலயங்களுக்குள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத‌ கல்லாலான புனிதர்களிட‌ம் பேசிக்கொண்டிருந்த குடிகாரர்கள் குறித்த வேடிக்கை கதைகள், விலங்குக ளை வேட்டையாடச் சென்று வெற்றிகரமாக  முடிந்த, சில சமயம் பெரும் தோல்வியில் முடிந்த நிகழ்வுகள், முன்பின் தெரியாத ஆனால் கதைகளில் மீண்டும் மீண்டும் சொல்லி கிட்டத்தட்ட உண்மையாகி நெருக்கமாகிவிட்ட பாத்திரங்கள் என பல விஷயங்கள் பேசப்படும். திருவிழாக்களிலும், மகிழ்ச்சியான  நிகழ்ச்சிகளிலும்கூட கதைகள் சொல்லபடுவதுண்டுதான், ஆனால் மரணச்சடங்குகளில் சொல்லப்படும் கதைகள் தனித்துவமானவை.  ஏனென்றால் இவை கேட்பவர் மற்றும் சொல்பவரின் இருப்பை அர்த்தமாக்குகின்றன. சமயங்களில் இந்நினைவுகள் இறந்தகாலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து இறந்தவர்களை  மீண்டும் வாழச்செய்துவிடுகின்றன.

பாஹ் ஹெம் சாதாரணமாகக் கதைகள் சொல்வதில்லை. அவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தனியாக அமர்ந்திருப்பார், அவரது கண்கள் ஒளிரும் கரியின் மீது நிலைகொண்டிருக்கும். இருப்பினும் அமைதியான மெல்லிய குளிர் பரவும் இரவுகளில் அவரை கதை சொல்லவைத்துவிட முடியும். அரிசியில் தயாரித்த பீர் அல்லது  கியாட் பானத்தை அவர் அருந்தியிருக்கும்போது அவரிடம் அன்பைப் பற்றிக் கதை கேட்டால், அவர் பறவைகள் சென்று இறக்கும் இடத்தில் இருந்து வந்தவனைப் பற்றிச் சொல்ல ஆரம்பிப்பார்.  அப்போது, பொதுவாகக் கதைகள் ஆரம்பிக்கும்போது நிகழ்வதுபோல, அந்த அறை வார்தைகளால் புதிதாக உருமாற ஆரம்பிக்கும்.”ஒரு செப்டம்பர் மாதத்தின் கடைசியில் அவன் வந்தான்” எனத் தொடக்குவார்.  ”பருவமழையின் நினைவுகள் இலையுதிர்காலத்தின் மெல்லிய ஒளிக்கீற்றுகளால் மறைய ஆரம்பித்த நேரத்தில் எனது பட்டறைக்குள் மெதுவாக அவன் வந்தான், ஒரு அமைதியான வேட்டைக்காரனைப் போல.”

அப் புதியவனுக்கு அங்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இது வெளியுலகவாசனை இல்லாத மிகவும் தனிமையான பகுதி.  கறாரான உள்ளூர் சட்டங்களும், பக்திசிரத்தையாக தேவாலயங்களுக்குப் போவாரும் இருக்கும் இந்த இடம் கண்டிப்பாக அன்னியர்களுக்கானதல்ல.

“நான் ஜாடிங்காவிலிருந்து வருகிறேன்” அன்னியமான மெல்லிய அவனது குரல் இந்த மலைகளைச் சேர்ந்தவர்களுடையதல்ல. “ஓஹோ.. நீ அவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்தாயா?” அந்தப்  பட்டறையின் உதவியாளரான பாஹ் க்ராவ், அவர் கையிலிருந்த உப்புக்காகிதம் போன்ற கடுகடுத்த குரலில் கேட்டார். அவர் கிட்டத்தட்ட இந்த பட்டறையின் துவக்கத்திலிருந்து பதிமூன்று வருடங்களாக  இங்கிருப்பதால், இங்கு யாருக்கு மரியாதை கொடுப்பது என்பது தனது  முடிவுதான் என்ற எண்ணம் அவருக்குண்டு. புதிதாக வந்த உயரமான  சமவெளி மக்களின் சற்று கரிய தோற்றமுடைய அந்த இளையவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்காது, ஆனால் கூர்மையான அவனது கண்கள் அவனை முதிர்ந்தவனாகக் காட்டின. அவன் கையில் நல்ல திடமான 10 கேஜ் இரட்டைக் குழல் துப்பாக்கி இருந்தது, வெகுவாக பயன்பட்டிருந்த அது மெருகேற்றப்பட  வேண்டிய நிலையில் இருந்தது.

“அது ஏனென்றால் பாஹ் ஹெம் தான் இங்கு சிறந்தவர், துப்பாக்கியை கையாள்வதில் முதன்மையானவர்”  மூலையில் இருந்த ஒரு கனவானிடமிருந்து குரல் வந்தது; காக்கைக் கூட்டம் போல கும்பலாக, ஒரு ராயல் டஸ்க் விஸ்கியைச் சுற்றி, புகையிலையை விரல்களில் கசக்கியபடி அவர்கள் அமர்ந்திருந்தனர்.

“குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்” இன்னொருவன் சொன்னான், “ஒரே துளையில் நான்கு…”, அவன் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியைக் குறிப்பிட்டான். அதில் பாஹ் ஹாம் ஒரே துளையில் நான்கு தோட்டாக்களை சுட்டு வென்றிருந்தார். அந்த கேடயம் பணிமனையின் அலமாரியில், பழைய தூசி படிந்த மற்ற கேடயங்களின் நீண்ட வரிசையில் சேர்ந்திருந்தது. அவற்றில்  மிகப் பழையவை அதிக தூசிபடிந்து கருமையடைந்திருந்தன.

“ஒரே துளையில் நான்கு” பாட்டிலை தூக்கிக்காட்டி கும்பலாக உற்சாகக் குரலெழுப்பினர்.

பாஹ் ஹெம் வந்தவனை கவனிக்காமல் ஒரு மேசையில் அமர்ந்து, எழுதிக்கொண்டிருந்தார். அவரது விரல்களுக்கிடையில் ஒரு சிகரெட் இருந்தது. கடைசியாக அந்த புதியவனைக் கவனித்தார்.

“இது உனக்கு எங்கே கிடைத்தது.”

”என் அப்பா ஹாஃப்லாங்கில் இருந்து வாங்கிவந்தார்.”

பாஹ் ஹாம் அமைதியாக அந்த ஆயுதத்தை வாங்கி ஆராய்ந்தார். துப்பாக்கியின் குழலில் தன் விரல்களை ஓட்டிப்பார்த்தார், சட்டென சில அசைவுகளால் தோட்டாக்களை அதிலிருந்து வெளியே எடுத்துவிட்டு, அங்கிருந்த ஒரே ஜன்னல் வழியாக வெளியே குறிபார்த்தார். ”வியூ ஃபைண்டரில் பிரச்சனை.”

“அதைத்தான் என் அப்பாவும் சொன்னார்” அந்த இளைஞன் குறுக்கிட்டு சொன்னான்.

“ஓஹோ,  யாரவர்,   ஜாடிங்காவின் பெரிய துப்பாக்கி நிபுணரோ..” பாஹ் க்ராவ் உலோகத்தை அழுத்திப்பிடிக்கும் எந்திரத்தில் உலோகத் தகடை வைத்துக் குனிந்து அமுக்கியபடி கேட்டார்.  பக்கத்திலிருந்தவர்களெல்லாம் நகைத்தனர்.

அதைக்கேட்டு அந்தப் புதிய இளைஞன் முகம் சிவந்தாலும் பதிலேதும் சொல்லாமலிருந்தான். அவனது கண்களில் கோபம் குளிர்கால கரியெடுப்புபோல கனன்றது.

“அவனை கண்டுகொள்ளாதே, இந்த க்ராவின் நடத்தை பன்றியைப் போல” என்றபடி பாஹ் ஹெம் தனது சிகரெட்டை மேசை மீது நசுக்கினார்.

அவரது உதவியாள் கோபமாய் பார்த்தான்.

“சில சமயம் அவனது முகமும் அப்படித்தான்”

சுற்றியிருந்தவர் வெடித்துச் சிரித்தனர். அவர்களை இந்த பட்டறையில் சுதந்தரமாக சுற்றித்திரிவதற்கு அவர் அனுமதிப்பதற்கு நன்றியாக அவர் என்ன சொன்னாலும் அதை நகைச்சுவையாகக் கண்டார்கள். பாஹ் ஹெம் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். புதியவனும் பின் தொடர்ந்தான்.பக்கத்திலிருந்த பல் டாக்டரின் மருத்துவமனையிலிருந்து  வந்த துளையிடும் கருவியின் சத்தம் அக் காலையின் அமைதியைக் குலைத்துக்கொண்டிருந்தது. அந்த பிரதான சாலை வெளிறி காலியாக அவர்களுக்கு முன் இருந்தது.

“உனக்கு இந்தத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது?”

அந்தப் பையன் கீழ்நோக்கியபடி வெகுநேரம் அமைதியாக இருந்தான். “என் தாத்தா கேசர் மாவட்டதில் ஒரு டக் பங்களாவில் (ஆங்கிலேய அதிகாரிகள் தங்கும் விடுதி) காவலாளியாக இருந்தார். ஒருதடவை கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பிலாடி அதிகாரி (ஆங்கிலேய அதிகாரி) அங்கு தங்க வந்தார். ஆனால் அங்கு அவர் ஒரு வாரம் கூட உயிர்தாங்கவில்லை. என் தாத்தா வேறெதையும் எடுத்துக்கொள்ளவில்லை, இதை மட்டும் தான்” என்று அவனது கையை அந்த துப்பாக்கியில் வைத்தான்.

துளையிடும் கருவி, சின்ன சத்தத்துடன் நின்றது. பாஹ் ஹெம் சிகரெட்டை பற்ற வைத்தார்.

”எப்படி கண்டுபிடித்தீர்கள்” அந்த இளைஞன் கேட்டான்.

”ஹாஃப்லாங்கில் பெரிய ஆயுதச் சந்தையெல்லாம் எப்போதுமிருந்ததில்லை, எல்லாம் வங்கதேசத்தில் இருந்துதான் வருகிறது” பாஹ் ஹெம் அந்த துப்பாகியின் கைப்பிடியில் பொறிக்கப்படிருந்த பெயரைப் (G.D. ப்ராட்பரி) பற்றி சொல்லவில்லை, அப்பையனும் அவனது குடும்பத்தினரும் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை.

“என் தாத்தா எப்போதும் வேறெதையும் எடுத்ததில்லை”

“நிறைய எடுத்த பலரை எனக்குத் தெரியும், இருந்தாலும் அவர்களையெல்லாம் திருடர்களெனச் சொல்ல முடியாது”

துப்பாக்கி இன்னும் நாலைந்து நாட்களில் கிடைக்கும் என பாஹ் ஹெம் சொன்னார்.

பையன் கிளம்பினான். அவன் உடனே கிளம்ப வேண்டிருந்தது, இல்லையெனில் வழியெங்கும் இருக்கும் ராணுவ சோதனைகளைக் கடந்து அவன் நள்ளிரவுக்கு முன் வீடு செல்ல முடியாது.

ஒரு வாரம் கழித்து அவன் திரும்பவந்தான். இந்தமுறை பாஹ் க்ராவ் மற்றும் அங்கிருந்த கும்பல் அவனைக் கண்டுகொள்ளவில்லை.  இப்போது மூன்றுபேர் மட்டும் ஓரத்தில் சீட்டாடிக்கொண்டிருந்தனர்.

வழக்கமாக தேனீர் கொண்டுவரும் பெண் வந்ததும், பாஹ் ஹாம் அவனை “ஏதாவது சாப்பிடு” என உபசரித்தார். ஒரு கூடையில் மென்மையான ஜிங் பாம் (jing bam), ஒட்டிக்கொள்ளும் ’புதாரோ (putharo), தங்கநிற புக்லியன் மற்றும் தேன்சேர்த்த கெட்டியான புசியெப் என அவள் கொண்டுவந்தவற்றை ஒரு கவனமான விலங்குபோல ஆர்வமாக அவன் சாப்பிட்டான்.

“உனது துப்பாக்கி தயார்” தனது மேசைக்கு பின்னால் வரிசையாக மின்னிக்கொண்டிருந்த ஆயுதங்களைக் காட்டி பாஹ் ஹெம் சொன்னார்.

“எவ்வளவு ஆனது?”

பாஹ் ஹெம் சொன்னதும், அந்தப் பையன் தனது இடுப்பில் கட்டியிருந்த துணிப்பையை எடுத்து ஒரு ஆதிமதச்சடங்கு போல மிகக் கவனமாக பணத்தை எண்ணினான்.

“நாம் நாள்முழுவதும் இங்கே இருக்கவேண்டியதுதான்” என்று பாஹ் க்ராவ் ஒரு உலோகச் சுருளை எடுத்துக்கொண்டே முணுமுணுத்தார்.

அவன் பணத்தைக்கொடுத்துவிட்டு வெளியேறினான்.

“இதுதான் இவனைக் கடைசியாக பார்ப்பது என நம்புகிறேன்” என்றார் பாஹ் கிராவ்.

அப்போது ஓரத்திலிருந்து ஒரு கூச்சல் கவனத்தை ஈர்த்தது.

“லா.. போஹ்…”

நூற்றைம்பது ரூபாய்க்கான அந்த சீட்டாட்டதில் யாரோ வென்றிருந்தார்கள், அந்தப்பையன் அதோடு மறக்கப்பட்டான்.

ஆனால் அன்று இரவு அமைதியான வீட்டில் படுக்கையில் படுத்திருக்கும்போது, பாஹ் ஹெம் நாதேனியேலைப் பற்றி நினைத்தார்.  அவரது மூத்தமகன். இரண்டு கோடைகளுக்கு முன் மரணமடைந்திருந்தான். அப்போது அவனுக்கு பத்தொன்பது வயது, அவர்களுக்குத் தெரியாத அந்த இனம்புரியாத நோயினால் அவன் இறந்திருந்தான். குமட்டலும் அசதியுமாகத்தான் அது ஆரம்பித்தது, குறைவாக இருந்தாலும் இடைவிடாத காய்ச்சலால் அவனது புருவங்கள் எரிச்சலைத் தந்தது, தொண்டைப்புண் மிகவும் வலியெடுத்தது. வழக்கமான பருவநிலை மாற்றத்தால் வருவது என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த அந்தக் காய்ச்சல் சில மாதங்களாகியும் சரியாகவில்லை. கவலைக்கிடமான அளவில் மிக அதிகமாக எடையிழந்தான். அவரும் அவர் மனைவியும் நாதேனியலை தென்னிந்தியாவில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிக அன்பாக நடந்துகொண்ட, அவர்களுக்குப் புரியாத வகையில் பேசும் அந்த மருத்துவரிடம் அவர்கள் நம்பிக்கை கொண்டு  வந்திருந்தனர். அவர் அந்த நோயின் பெயரைச் சென்னார். அது மிக நீளமாக, பயமுறுத்தும்படி, சொல்லும்போதே தொண்டையில் பாம்பு ஊர்வதுபோல இருந்தது.

வெள்ளை அணுக்கள் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாகப்  பல்கிப்பெருகுகின்றன என மருத்துவர் விளக்க முயற்சித்தார். அவனது உடலால் தேவையான அளவு ஆரோக்யமான அணுக்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. அவனது நிலை மிகவும் கவலைக்கிடம், எனவே உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என அவர் சொன்னதை புரிந்து கொண்டார்கள். இன்று வந்த இளைஞன் கதிர்வீச்சு சிகிச்சைக்கு முன் இருந்த நாதேனியேலை பாஹ் ஹெம்முக்கு நினைவுப்படுத்தினான். அந்த இயந்திரங்கள், அந்த கொடும் உலோகங்கள் அவனது மகனிடமிருந்த எல்லா உயிர்த்தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்துவிட்டன. ”ஏன் இவனைப் பார்த்தால் அவனைப் போல தோன்றுகிறது? இவனது கண்களா? தாடையின் வடிவமா? அதேபோன்ற முகரேகையிருப்பதா? அல்லது அவனது கவனமான அமைதியா?” பாஹ் ஹெமுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவனை திரும்பவும் சந்திக்க ஏதாவது வழி கண்டுபிடிக்கவேண்டுமென நினைத்துக்கொண்டார்.

அப்போது வெகுநேரமாகிவிட்டிருந்தது, பல்டாக்டரின் மருத்துவமனை மூடியிருந்தது, மூலைமுடுக்கெலாம் குளிர்நிறைந்து அக்கம்பக்கமெல்லாம் காலியாக இருந்தது. அந்த அமைதியான மாலையில், பாஹ் ஹெம் தனது பட்டறையில், ஒரு கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டு தனியாக அமர்ந்திருந்தார். இதுபோன்ற வேலைகளை அவரே செய்ய விரும்பினார். இவை அழகான ஆயுதங்கள். சிக்கலான உலோக வேலைப்பாடுகளில் பட்டுத்தெறிக்கும் ஒளியும், துப்பாக்கிக்குழலை தனது உள்ளங்கையில் வைதுக் கொள்ளும்  அந்த உணர்வையும் அவர் விரும்பினார். அவரைச்சுற்றி எண்ணைப்பிசுக்கடைந்த அந்தப் பட்டறை ஒழுங்கற்றிருந்தது. நகர சிறைச்சாலை மாற்றப்பட்ட நேரத்தில் அங்கிருந்து அவர் மீட்டுக்கொண்டுவந்த பெரிய மேசை அவரிருந்த மேசைக்குமுன் இருந்தது. பலவருடங்கள்  மதிக்கத்தக்க உபகரணங்களும் உதிரிப்பாகங்களும் சேர்ந்து உலோகம், புகை மற்றும் தூசியாலான தனிப்பரப்பை உருவாக்கியிருந்தன. எந்திர எண்ணையின் மணம் காற்றில் கலந்திருந்தது. அவர் அந்த கைத்துப்பாக்கியை கடைசியாக ஒருமுறை கவனமாக மெருகேற்றும்போது, கதவை யாரோ அவசரமாகத் தட்டுவது கேட்டது. வெளியிலிருந்து கேட்ட காலடித் தடங்களைக் கொண்டு அந்த அன்னிய இளைஞன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை அறிந்தார்.

“தயவுசெய்து எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்”

பாஹ் ஹெம் வெளியே வந்து அவனை உள்ளே அனுமதித்தார்.

“அதிகம் அவகாசமில்லை…”

“நீ குளிர்ந்திருக்கிறாய்” பாஹ் ஹெம் அமைதியாகச் சொன்னார், “உள்ளே வா, உன் உடல்நலத்தை கெடுத்துக்கொண்டு நிலமையை மேலும் மோசமாக்குவதில் எந்த பலனுமில்லை”

அவனது தோள்கள் தளர்ந்தன, அவன் ஆமோதித்தான். பாஹ் ஹெம் மேசைக்கு அடியில் தேடி அரை பாட்டில் அளவில் இருந்த ஓல்ட் மாங்க் ஒன்றை எடுத்தார். ஒரு பெரிய அளவு ஊற்றி அவனுக்குக் கொடுத்தார். ’சூலாவில்’ அதிக கரியைப்போட்டு அதை அருகில் இழுத்துக்கொண்டார்.

”என்ன நடந்தது”

“நீங்கள் எங்களுக்காக வந்து சுட வேண்டும்… ஒரு மிருகத்தை”

“என்ன மிருகம்”

அந்தப் பையன் கீழே பார்த்தான். “ஒரு புலி”

“அது ஆள்கொல்லியா?”

கொஞ்சம் தயங்கினான். “அது ஆபத்தானது என நினைக்கிறோம், அதை உணவு வைத்து வரவைத்து வேட்டையாட முயற்சி செய்து தோல்வியடைந்தோம். எல்லோரும் நீங்கள்…”

பாஹ் ஹெம் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டார், மங்கிய விளொக்கொளியில் அது மின்னியது.

“உன் பெயரென்ன?”

”காசா”

“காசா, நீ உண்மைச் சொன்னால் மட்டும்தான் நான் உனக்கு உதவுவேன்”

பையன் ரம்மை ஒரே மடக்கில் குடித்து முகம் சுளித்தான். முகம் கொஞ்சம் தெளிவடைத்திருந்தாலும் பிரச்சனை முகத்தில் தெரிந்தது.

“அந்தப் பகுதியிலிருக்கும் ராணுவத்தினர் அதை காயப்படுத்திவிட்டனர், அது கொஞ்சநாட்களில் மனிதர்களைத் தாக்க ஆரம்பித்துவிடும். என் அப்பா..” கொஞ்சம் இடைவெளிவிட்டு. “அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் இல்லையென்றால் இதை அவரே பார்த்துக்கொள்வார். அவர்… மிகச் சிறப்பாக குறிபார்த்து சுடுபவர். நீங்களும் அப்படித்தான் என எல்லொரும் சொல்கிறார்கள்…”

பாஹ் ஹெம் சிகரெட்டை முடித்தபின் பேசினார். “சரி, நான் உன்னோடு வருகிறேன்..”

தன் கையைத்தூக்கி காசா மேலும் பேசுவதை தடுத்து “ஆனால் நாளை காலை கிளம்புவோம். இன்றிரவு நீ ஷில்லாங்கில் தங்கிக்கொள்” என்றார்.

காசாவுக்கு அந்த ஊரில் இந்த உதவியைக் கேட்குமளவுக்கு யாரையும் தெரியாது அதுமட்டுமல்லாமல் ஒரு தகார் (வெளியாள்) தனியாக அங்கு ஹோட்டலில் தங்குவதும் பாதுகாப்பானதல்ல. எனவே, பாஹ் ஹெம் தனது வீட்டுக்கு அவனை அழைத்தார். அவரும் அவரது குடும்பமும் உம்சொஹ்சுன் என்ற இடத்தில் வசித்தனர். அது பெரிய நீரோட்டத்துக்குமேல் அமைந்த பாலத்துக்கு அருகிலிருந்தது. மலைச்சரிவிலிருந்த அந்த சுண்ணாம்பு பூசிய வீட்டுக்கு, செதுக்கப்பட்ட கற்களை வரிசையாக அடுக்கி வழியமைக்கப்பட்டிருந்தது. அதில் அந்த நிலவொளியில் அவர்கள் ஏறும்போது, தானும் நாதேனியலும் இப்படி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என அவர் நினைத்துக்கொண்டார். பாஹ் ஹெமின் மனைவி எஸ்தர், ஆச்சர்யமாக எந்தவொரு கேள்விகளுமின்றி விருந்தினனுக்கு தரைத்தளத்தில் ஒரு கட்டிலில் படுக்கையை தயார் செய்தாள். பொதுவாக மற்ற ஷில்லாங் மக்களைப் போலவே அவளும், விசித்திரமான மொழியும் பழக்கவழக்கங்களும் கொண்டவர்கள் என்று தாங்கள் நினைக்கும் வெளியாட்கள் மீது மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இருப்பாள். அவரின் மற்ற குழந்தைகள், ஒரு மகனும், இரு மகள்களும் காசாவை, தங்கள் அப்பா உள்ளூர் சந்தையில் இருந்து கொண்டுவந்து மிகப் பிரியமாக கவனித்துக்கொள்ளும் ஒன்றைப்போல ஆர்வத்துடன் கவனித்தனர்.

”குட்டை காற்சட்டை” (Patlun lyngkot), காசாவின் காற்சட்டையைப் பார்த்து ஒரு குழந்தை பரிகாசம் செய்தது.

எஸ்தர் அவர்களை ஒழுங்காக நடந்துகொள்ளும்படி கண்டித்தாள், குறிப்பாக சாப்பாட்டு மேசையில். விருந்தினனின்  தட்டில் அதிக கறியை அள்ளி வைத்தாள்.

அந்த அமைதியான வீட்டில் இரவு வெகுநேரத்துக்குப்பின் எஸ்தர் தன் கணவனிடம் சொன்னாள் ”அவனுக்கு நதானியேலின் கண்கள்”.

பாஹ் ஹெம் தானும் அப்படி நினைத்ததாகச் சொன்னார்.

நதானியேல் விழித்திருக்கக்கூட முடியாத அளவு பலவீனமடைந்து படுக்கையியே பெரும்பாலான நாட்கள் இருந்தான், நீரிழப்பும், முடியுதிர்வும் அவனை வாட்டின.  அந்த நேரத்தில் அவன் சாப்பிட்ட அனைத்தையுமே வாந்தியெடுத்தான். எல்லாமே அவனை குமட்டச்செய்தன. காய்ச்சல் போய் தலைவலி வந்திருந்தது. எங்கென்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் ஒரு நிரந்தரமான வலி தலைமுழுவதும் துடிதுடித்துக் கொண்டிருந்தது. “குணமடைவது போல தெரியவில்லையே” எஸ்தர் தன் கணவனின் கையைப் பற்றிக்கொண்டு கிசுகிசுப்பாள். மருத்துவரிடம் கேட்டபோது, இதற்குமேல் எதுவும் செய்வதற்கில்லை என அவர் சொல்லிவிட்டார். அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டிருந்தது. சில நாட்கள் எஸ்தர் ஹோட்டல் அறையில் ஓய்வெடுக்கும்போது, பாஹ் ஹெம் நதானியேலின் அறையில் அமர்ந்து கதை சொல்வார்.  சின்ன வயதில் சொன்ன குழந்தைக்கதைகள் அல்ல அவை, அவன் வளர்ந்ததும் என்னவெல்லாம் செய்வேண்டும் என்ற எதிர்காலத்தைப் பற்றிய கதைகள். அதில் அவர் அவனை பொரோலிக்கு பறக்கும் மீன் பிடிக்க அழைத்துச் செல்வார், காரோ மலைகளில் வேட்டைக்கு கூட்டிச் செல்வார்,  நதானியேல் எப்போதும் விரும்பும் டிரம்ஸ் கிட் கூட வாங்குவார்கள். அவர் மனைவியோடுகூட கடந்தகாலத்தைப்பற்றி அல்லது எதிர்காலத்தைபற்றி மட்டுமே பேசினார். அதற்கிடையில் எதுவுமில்லை. நிகழ்காலம் என்று ஒன்றிருக்கவில்லை. அது அவர்கள் நின்றிருந்த கருந்துளை. அவர் எப்போதும் மருத்துவமனைகளை வெறுப்பார், இந்த மலட்டு வெள்ளைத்தன்மை நதானியேலின் முகத்திலிருந்த நிறமனைத்தையும் எடுத்துவிட்டது.  இதை எப்படி நீக்குவது? ஏன் இது தனது மகனுக்கு நடக்கிறது? என்ற கேள்விகளுக்கு, நதானியேலின் வெறுமையான, இப்போது ஒட்டிப்போயிருந்த கன்னத்தில் விழுந்த சூரிய கீற்று, வதங்கிப்போயிருந்த செடியிருந்த ஜாடி, அவனின் இதயத்தை எந்திரத்தனமாக கவனிக்கும் எந்திரங்கள் இவற்றைத் தவிர பதிலேதும் அங்கில்லை.

அடுத்தநாள் அதிகாலையிலேயே, ஷில்லாங்கின் பனிபடர்ந்த மலைகளை சூரியக்கதிர்கள் தீண்டும் முன்னரே, முதல் பேருந்தில் கிளம்பிவிட்டனர்.

பாஹ் ஹெம் ஜீப் ஓட்டிப் போகலாம் என விரும்பினார். ஆனால் அவன் கூட்டத்துடன் செல்வதே பாதுகாப்பு என சொன்னான்.

“அனைத்துப் பயணிகளையும் ராணுவம் சோதிக்க நேரமாகும், இருந்தாலும் தனியாகச் சென்று தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்வதைவிட இது மோசமில்லை”

மதியநேரத்தில் அவர்கள் தூசிநிரம்பிய சாலையில் சென்று கொண்டிருந்தனர், மண் நிறத்திலிருந்த நெல்வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்தன. சீக்கிரமாகவே செழிப்பான வட கேச்சார் மலைகள் வந்துவிடும். இங்கிருக்கும் பிரிவினைவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த இரண்டு வருடங்களுக்குமுன் மத்திய அரசால் இராணுவம் அனுப்பட்டது என அவன் சொன்னான். இந்தப் பகுதியில் இராணுவ எண்ணிக்கை குறைவுதான். அசாமிலேயே அதிக பாதிப்புடைய லாகிம்பூர் மற்றும் சிப்சாகர் பகுதிகளில் இராணுவ எண்ணிக்கை இன்னும் அதிகம். அவைதான் சுதந்திரத்துக்காகவும் இறையாண்மைக்காகவும் போராடுவதாக சொல்லிக்கொள்ளும் உல்பா-வின் (United Liberation Front of Assam) வலுவான கோட்டை எனச் சொல்லப்படும் பகுதிகள்.

“இதில் எது மோசமென எனக்குத் தெரியவில்லை” என்றான் காசா.

“உல்பாவா அல்லது எங்களை தொந்தரவு செய்து தீவிரவாதநாய்கள் எனச் சொல்லும் ராணுவமா?”

போகும்வழியில் ஏழு சோதனைச்சாவடி நிறுத்தங்களிருந்தன.  ஒவ்வொருமுறையும் அவர்களனைவரும் கீழே இறங்கச் செய்யப்பட்டனர். பேருந்தின் உட்புறமும், சுமையேறும் பகுதியும் சோதனை செய்யப்பட்டன. இரவுப்பயணங்களில் எப்படி மக்கள் கொள்ளைடிக்கப்படுவர் என பாஹ் ஹெம் கேள்விப்பட்டிருந்தார்.  அவரது பக்கத்துவீட்டுக்கார மிசோரத்துக்காரரின் மருமகன் பணத்தை பேருந்தின் ஜன்னல் திரைப்பிடியில், அது தான் அவர்கள் தேடாத பகுதியென மறைத்துவைத்து எடுத்து வந்திருந்தான். இவர்களது துப்பாக்கிகள் காசாவின் சீட்டுக்கடியில் வைத்திருந்த அவர்களது கேன்வாஸ் பையின் அடிப்பகுதியில் மறைத்து கட்டிவைக்கப்படிருந்தன, அவை அந்தச் சோதனைகளில் கவனிக்கப்படவில்லை.

அவர்கள் அந்தப் பையனின் கிராமத்தின் வெளிப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர், அங்கிருந்து கொஞ்சம் நடக்கவேண்டியிருந்தது.  வழியோரமெங்கும் குல்மொஹர் செடிகள் இருந்த அந்த சாலையில்  மாட்டுமந்தையை ஓட்டிச்செல்லும் ஒரு சிறுவனைத்தவிர யாருமில்லாமல் காலியாக இருந்தது. அங்கு ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. சீக்கிரமே, மலையுச்சியின் ஓரத்தில், சுற்றியிருந்த சரிவான மலைகளுக்கிடையில், ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் மஞ்சள்நிற மண் நடைபாதைகளோடு, குடியிருப்பு தென்பட ஆரம்பித்தது.  அது பின்மதியம், மேற்கிலிருந்து வெளிச்சத்தை சூரியன் எடுத்துச்சென்றுகொண்டிருந்தது, தரைக்குமேல் தடிமனான பனியாலான மூட்டம் ஒரு போர்வைபோல மூடியிருந்தது. அவர்கள் அந்தவரிசையில் இருப்பவற்றிலேயே பெரிதாக இருந்த ஒரு கூரைவேய்ந்த வீட்டின்முன் நின்றனர். ஜன்னல்வழியாகவும் கதவுவழியாகவும், பல முகங்கள் தெரிந்து மறைந்தாலும், யாரும் அவர்களிடம் வரவில்லை. பத்துவயது மிகாத ஒரு பையன் வெட்கத்துடன் அங்கு நின்று அவனது பெரிய கரும் கண்களால் அவர்களை கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். இரவின் நிறத்தில் ஒருபூனை அவனது கணுக்காலைச் சுற்றியபடியிருந்தது.

“நோரு, மைனாவை டீ தயாரிக்கச் சொல்”

பையனும் அந்த விலங்கும் மறைந்தனர்.

தோட்டத்துக் குழாயில் கைகால் கழுவியபின், காசா பாஹ் ஹெம்மை அடுப்படிக்கு கூட்டிச்சென்றான். அங்கு பதினேழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொதிகலனை விறகடுப்பில் வைத்துக்கொண்டிருந்தாள்.

“எனது தங்கை” என காசா சொன்னான்.

மைனா அவர்களது விருந்தினரைப் பார்த்து தலையசைத்தாள், அவளது நீண்ட கூந்தல் அவளது தோள்களில் விழுந்திருந்தது. அவள் கடுகு நிறத்தில் பருத்தியிலான மெக்லா அணிந்திருந்தாள். அது அவளை இன்னும் மூத்தவளாகக் காட்டியது, அவள் இன்னொருவரின் உடையை அணிந்திருப்பவளைப் போல, இன்னொருவரின் பாத்திரத்தை ஏற்றிருப்பவளைப் போலத் தோன்றினாள். அவர்களது அம்மாவிற்கு என்ன ஆயிற்று, அவர் ஏன் இங்கில்லை என பாஹ் ஹெம் நினைத்தார். மைனா தேனீர் கோப்பைகளையும் சாமன்களையும் கையாளும்போது, ஒரு கூட்டிலடைபட்ட பறவைபோல அமைதியற்று படபடப்புடன் இருப்பதை கவனித்தார். நோரு, ஒரு ஓரமாக பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும், அனைவரையும் கவனமாகப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

காசாவும், பாஹ் ஹெமும் உயரம் குறைவான ஒரு மேசையில் அமர்ந்தனர், ஒரு வயதானவர்  ஆவியைப் போல கதவின் வழியாக மெதுவாக வந்தார். அவரது வயதை யூகிப்பது இயலாததாக இருந்தது, அறுபதிலிருந்து நூறு வரை இருக்கலாம். மிகமெல்லிய ஒரு வெளிறிய முக்காடு அவரை மூடியிருந்தது. ஆனால் மிகக் கூர்மையான, ஒளிபொருந்திய, ஒரு யுவனுடையதைப் போன்ற அவரது கண்களில் ஞானமும் எச்சரிக்கையுணர்வும் பளிச்சிட்டன.

அவர் தன்னை காசாவின் தாத்தா என அறிமுகப்படுத்திக் கொண்டார். “நன்றி” தனது உலர்ந்த தடித்த இலைபோன்ற குரலில் சொன்னார். “உங்கள் உதவிக்கு மிக்க நன்றியுடன்இருப்போம்”

“நான் புலியை கொல்வதுவரை நீங்கள் நன்றி சொல்ல காத்திருக்கலாம்” என பாஹ் ஹெம் சொன்னார், அதற்குப் பதிலாகக் கிடைத்த ஆழமான அமைதி அவரை ஆச்சயப்படுத்தியது.

தாத்தாவும் அவர்களோடு மேசையில் அமர்ந்தார். மைனா அவர்களுக்கு தேனீரும், ஒரு தட்டில், தேங்காயில் செய்த இனிப்பும் கொடுத்தாள்.

“உன் அப்பா எப்படியிருக்கிறார்?”

காசாவும் மைனாவும் பார்வைகளை பறிமாறிக் கொண்டனர்.

தாத்தா பதிலளித்தார் “மிக மோசமாகத்தான் இருக்கிறார். நல்லது நடக்குமென நம்புகிறோம்.

அருகிலிருக்கும் மருத்துவமனை இங்கிருந்து ஒருமணிநேர பயணத்தில் ஹாஃப்லாங்கில் இருக்கிறது எனச் சொன்னார். அங்கிருந்துதான் மருந்து கொண்டுவர வேண்டியிருக்கிறது, இருந்தாலும் அது பலனுள்ளது போலில்லை.

“எப்போது வேட்டையை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறீர்கள்?” என காசா கேட்டான்.

நான்கு ஜோடிக்கண்கள் தன்னை துளையிடுவதைப் போல பாஹ் ஹெம் உணார்ந்தார், அந்தப்பூனை கூட அவரது பதிலுக்காகக் காத்திருப்பதுபோல இருந்தது.

“உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும்”

“விருந்தாளி இன்று இரவு கண் விழிக்கத் தேவையில்லை” தாத்தா இடைமறித்துச் சொன்னார். “நீண்ட பயணம் செய்திருக்கிறார், அவர் ஓய்வெடுக்கட்டும்”

அந்த இரவு பாஹ் ஹெம் கவனிப்புடன் இருந்தார். சீரற்ற காட்டுத்தரைகள், தரமில்லாத விடுதிகளின் படுக்கைகள், குறுகலான புகைவண்டிப் படுக்கைகள் என எந்த நிலைமையிலும் ஆழ்ந்து உறங்கும் பழக்கமுள்ள அவர் இங்கு ஏதோ வழக்கத்துக்கு மாறாக இருக்கும் உணர்வால் தூக்கமில்லாமலிருந்தார். அவரது அறை வெறுமையாக இருந்தாலும், வசதியாகவே இருந்தது.  அங்கு அவர் இருளை வெறித்தபடி, கனத்த நெஞ்சோடு படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் வித்தியாசமான ஓசைகள் வீட்டின் இன்னொரு பகுதியிருந்து வந்தன. வலியினாலான முனகல்கள் மற்றும் பெரும் துயரத்தின் அழுகை என மாறிமாறி சத்தங்கள் வந்துகொண்டிருந்தன. அது காசாவின் அப்பாவாக இருக்கவேண்டும் என நினைத்தார். சில சமயங்களைத் தவிர அது மனிதகுரல்போலவே இல்லை. கடைசியாக பொறுமையிழந்து முழுவதும் விழித்த பாஹ் ஹெம், அது என்னவென்று பார்ப்பதற்காக தனது அறையை விட்டு வெளிவந்தார். ஒருஜோடி பச்சைக் கண்கள் அவரை கூடத்தில் கவனித்தன, அது பூனை. நோரு தூங்கியிருக்கவில்லை என்றால் பின்தொடர்ந்து வந்துவிடுவான். குறுகிய கூடத்தின் முடிவில் நோயுற்றிருந்தவரின் அறைக்கதவு அவர் மங்கலான லாந்தர் வெளிச்சத்தைப் பார்க்குமளவுக்கு லேசாகத்  திறந்திருந்தது. ஒரு மெல்லிய மெத்தையின் ஓரத்தையும் அதனருகில் அமர்திருந்த மைனாவையும் தாத்தாவையும் பார்க்கமுடிந்தது. அவள் மெல்ல அழுதுகொண்டிருந்தாள். முதியவர் கையையசைத்து முணுமுணுப்பாக பேசிக்கொண்டிருந்தார். பாஹ் ஹெம் நோயுற்றிருந்தவரைப் பார்க்கமுடியவில்லை, ஆனால் அவரது குரலைக் கேட்க முடிந்தது. அழுகை அச்சமூட்டும்படி கிறீச்சிட்டு ஒலித்தபோது, அவரது முழங்கையில் ஒரு தொடுதலை உண்ர்ந்தார்.

குனிந்து நோருவைப் பார்த்தார்.  பூனையை கையில் ஏந்தி நின்றிருந்தான்.

“அப்பா காயம்பட்டிருக்கிறார்” அந்தப் பையனின் குரலை அப்போதுதான் முதன்முறையாக அவர் கேட்டார். யார் காயப்படுத்தினார்கள் என பாஹ் ஹெம் கேட்பதற்குமுன், நோரு, அணைந்துவிடுவதுபோல, மங்கலாக விறகு எரிந்து கொண்டிருந்த அடுப்படிக்குள் சென்றுவிட்டான்.

அடுத்தநாள் காலையில், சில மணிநேர உறக்கத்துக்குப்பின் பாஹ் ஹெம் களைப்பாகவும் அமைதியில்லாமலும் எழுந்தார். வெதுவெதுப்பான சூரியவெளிச்சம் அந்த சிறிய கிராமத்தை ஒளியால் குளிக்கச்செய்ததையும், கீழிருந்த நெற்கதிர்களை அணைத்துக்கொண்டதையும் பார்த்தபின்னரும் கூட அவரால் அமைதிகொள்ளமுடியவில்லை. சீக்கிரம் இங்கிருந்து கிளம்பவேண்டும் என காலையுணவான சிறிய உப்பலான பூரியையும் காரமான உருளைக்கிழங்கையும் உண்ணும்போதே நினைத்துக்கொண்டார். உணவுக்குப்பின் அவரது பணியை செய்துமுடித்துவிடுவது என முடிவுகொண்டிருந்தார். அவருக்கு கிராமத்தையும், புலி தென்பட்ட வெளிப்புறப் பகுதிகளையும் காட்டுமாறு கேட்டுக்கொண்டார். குடியிருப்புப் பகுதியை அவர்கள் நடந்துகடக்க வெகுநேரமாகவில்லை. பெண்கள் அவர்களது வீட்டுக்கு வெளியே அமர்ந்து அரிசியை சுத்தம் செய்துகொண்டும், சிவப்பு மிளகாயை வெயிலில் காயவைத்துக் கொண்டுமிருந்தனர். சிறுவர்கள் ஓடி வந்து சற்று தூரத்துலேயே நின்று ஆர்வத்துடன் பார்த்தனர். பாஹ் ஹெம்மை சுட்டிக்காட்டி அவர்களுக்குள் கிசிகிசுத்துக் கொண்டனர். அந்த மலையின் அடிவாரத்தில், இன்னொரு பக்கத்தில், அடர்த்தியான காடு துவங்கியது – “இங்கு தான் ராணுவ முகாம் இருக்கிறது…” காசா சுட்டிக்காட்டினான். கிராமத்துமக்கள் அவர்களிடருந்து விலகியிருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் காட்டு வழியாக பக்கத்து சந்தை இருக்கும் கிராமமான மலங்பாவிற்கு செல்லும் பாதையானதால் அப்படியிருக்க முடியவில்லை. “நாங்கள் அந்த சாலையை பயன்படுத்தாமல் இருக்கமுடியாது.. சந்தை இல்லாமல் எப்படி நாங்கள் உயிர்வாழ முடியும்?” என்று காசா சொன்னான். ”அவர்கள் மிக இழிவான பிராணிகள். எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, என் தங்கை…” அவன் ஆரம்பித்து அப்படியே நிறுத்திவிட்டான். மக்கள் ஏன் அவரிடமிருந்து ஒரு எச்சரிக்கையான தூரத்தில் விலகியேயிருக்கிறார்கள் என அவருக்கு இப்போது புரிந்தது. அயலவர்களைப் பற்றிய நம்பிக்கையின்மை இங்கு ராணுவம் வந்ததிலிருந்து அவர்களுக்கு அதிகரித்திருக்கிறது. புலி எங்கெங்கு காணப்பட்டது என்பதையும் காசா அவருக்குக் காட்டினான் – நெல் வயல்களுக்கு அருகில் அது தண்ணீர் குடித்த குளம், கிராமத்துக்கு அருகில் இருந்த மூங்கில் புதர், மற்றும் அது நடமாடிய காட்டின் எல்லை.

”இன்று மாலை ஏழரை மணியிலிருந்து கவனிப்போம்” என பாஹ் ஹெம் சொன்னார்.

காசா ஒப்புக்கொண்டான் “ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன், அந்த நேரத்தில் மூடுபனியில் பார்ப்பது மிகக் கடினம்”

இதைவிட கடினமான நிலைமைகளிலெல்லாம் எல்லாம் தான் குறிபார்த்து சுட்டு இருப்பதாக பாஹ் ஹெம் சொன்னார்.

“அது சரி தான்., ஆனால் உங்களுக்கு ஜாடிங்காவின் மூடுபனியைப் பற்றித் தெரியாது. இந்தப் பனியில் பறவைகள் கூட நிலைதவறிவிடும். அவை எங்கள் தீப்பந்தத்துக்குள் பறந்துவந்து இறந்துவிடும். சிலசமயம் தரையில் விழுந்து நம்மால் கொல்லப்படுவதற்குக் காத்திருக்கும்”

“ஏன்”

”நாங்கள் அதை கருணை என நம்புகிறோம்”

“நீங்கள் ஏன் அவை பறந்துசெல்லட்டும் என விட்டுவிடக்கூடாது?”

“அதை அவை விரும்புவதில்லை”

அங்கு அமைதி நிலவியது. காசா தனது துப்பாக்கியை துணியை வைத்து மெருகேற்றினான், பாஹ் ஹெம் நடந்துகொண்டே ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.

அன்று மாலை, அவசரமான கடும் கருந்தேனீருக்குப் பிறகு, பாஹ் ஹெமும் காசாவும் தங்கள் துப்பாக்கிகளை  தோளில் தொங்கப்போட்டபடி வெளிவெந்தனர். மேகத்தில் மறைந்த நிலவின் அந்த பாதிவெளிச்சத்தில் பார்க்கும்போது, காசா, அவரது மூத்தமகனை முன்னெப்போதையும் விட அதிகமாக நினைவுபடுத்தினான். அவனது தாடையின் வடிவம், அவனது வாய் இருக்கும் விதம், அவனது கண்களின் தோற்றம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நாதேனியேல் ஒரு கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு முன்போ அல்லது மீன்பிடிக்கச் சென்று ஒரு மீனைப் பிடித்தவுடன் இருப்பதைப் போன்றோ அவன் இப்போது இருப்பதாகத் தோன்றியது . பாஹ் ஹெம் அவன் நோயுற்றிருக்கும்போது சொன்ன கதைகளை நினைவுகூர்ந்தார்.  அவர் எதேச்சையாகத் தொட்டுவிட்ட ஜர தெங்கா முள்ளைவிட ஆழமாக ஏதோ ஒன்று அவரைத் தைத்தது.

“நீ சொன்ன அந்த பறவைகள்…” பாஹ் ஹெம் கேட்டார் “அவை எப்போது ஜாடிங்காவிற்கு வருகின்றன?”

“இந்த மாதங்களில் தான்” என அவன் சொன்னான், “நவம்பர் வரை”

“ஒவ்வொரு வருடமும் வருகின்றனவா?”

காசா தலையத்தான் “என் தாத்தாவுக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்து, ஒவ்வொரு வருடமும்”

பாஹ் ஹெம் கொஞ்சம் தயங்கி ”நீ அவற்றில் எதையாவது கொன்றிருக்கிறாயா”

“ஆம், பலவற்றை. நான் சொன்னேனே” பையன் நின்று தன்னைவிட மூத்த அவரைப் பார்த்தான் “அது ஒரு கருணை”

கிட்டத்த குடியிருப்பின் எல்லையை அவர்கள் அடைந்துவிட்டிருந்தனர்.  பனி தடிமனாக அகலமாக ஒரு கடலைப் போல அவர்களுக்குமுன், கிராமத்து விளக்குகளின் ஒளியை மங்கலாக்கியபடி படர்ந்திருந்தது.

“நீ இங்கேயே இரு” பாஹ் ஹெம் அங்கிருந்த  செம்பருத்திப்  புதர்களைக் காட்டி சொன்னார். “நான் இறக்கத்தில்  இறங்குகிறேன், காட்டுக்கு இன்னும் அருகில்”

பாஹ் ஹெம் கீழே தன்னை புதர்களுக்கிடையில் மறைத்துக்கொண்டார், வெகுநேரம் காத்திருக்க நேரலாம். அந்த மாலையின் அமைதியை நாய்களின் மோசமான ஊளையும், விட்டில்களின் கிரீச்சிப்பும்தான் கலைத்துக்கொண்டிருந்தன. அவர் கையில் ஊர்ந்த ஒரு சிலந்தியை தள்ளிவிட்டார். எங்கோ, அவர் இலைகளின்  சலசலப்பைக் கேட்டார், சிறகுகளா அவை? அதைச்  சொல்ல முடியாது – கீழே விழுந்து கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும் பறவைகளைப் பற்றி நினைத்துக்கொண்டார்.

நாதேனியேல் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன் ஒரு மதியம் நடந்தது நினைவுக்கு  வந்தது.  அன்று அவரது மகன் மிக மோசமான ஒரு  இரவைக் கடந்திருந்தான்.  ஆறு வாரங்களுக்கு முன் ஷில்லாங்கில் இருந்து வந்த பத்தொன்பது வயது பையனா அவன் எனக் கண்டுபிடிக்கமுடியாதபடி  இருந்தான்.மருத்துவர் அவரால் முடிந்த அளவு மென்மையாக அந்தச் செய்தியை அவர்களுக்குச் சொன்னார்- இனி நம்பிக்கையில்லை கதிர்வீச்சு சிகிச்சை பலனளிக்கவில்லை, நோய் வேகமாக நரம்புமண்டலத்தைத் தாக்கிப் பரவுகிறது, அதன் பின்… “அவனை வீட்டுக்கு அழைத்துச்செல்வதே நல்லது” என மருத்துவர்  பரிந்துரைத்தார் “அவனை மிக வசதியாக வைத்துக்கொள்ளுங்கள்”.  பாஹ் ஹெம் கடுமையாக மறுத்தார், அவரது மகன் குணமடைவதுவரை அங்கேயே அவர் தங்கியிருப்பார். வேறு பேசசுக்கே இடமில்லை.

அன்று மதியம், ஜன்னலுக்கு பக்கதில் நின்றுகொண்டு, தனது மகன் தூங்குவதைப் பார்த்துக்கொண்டு, மருத்துவர் சொன்னதை தனது எண்ணத்திலிருந்து அழிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது நாதேனியேல் விழித்தான்,”அப்பா” என அமைதியாகக் கூப்பிட்டான். பாஹ் ஹெம் அவனிடம் ஓடிச் சென்றார். அவனுக்கு ஏதாவது வேண்டுமா? வசதியாக இருக்கிறதா ? நர்சைக் கூப்பிடவேண்டுமா?

இல்லை என மகன் தலையாட்டினான். சிறியதும் பெரியதுமான பல தொற்றுக்கள் அவனது உடலை சிதைத்திருந்தன. “நான் ஒரு கனவுகண்டேன் அப்பா.  இதன் பிறகு நான் எங்கு செல்வேன் என..”

“அதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது”

நாதேனியேல் கைகளை உயர்த்த முயற்சித்தான் “ என்னால் உணரமுடிகிறது, இந்த மகத்தான வெம்மையையும் ஒளியையும். ஆனால் ஏதோ ஒன்று என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.”

அவ்வளவு பேசியதில் களைப்படைந்து  அப்படியே அவன் தூக்கத்திலாழ்ந்தான். அடுத்தநாளே  பாஹ் ஹெம் அவனை வீட்டுக்குக் கொண்டு செல்லலாமா  என மருத்துவரிடம் கேட்டார். காசா சொன்னது போல, அது ஒரு கருணைச் செயல் என அவர் நம்பினார்.

கொஞ்சம் தூரத்திலிருந்து யாரோ குடித்துவிட்டு கூச்சலிடும் சத்தம் வந்தது. ராணுவ வீரர்களின் ஒரு குழுவினர் தள்ளாடியபடி முகாமுக்குச்  சென்றனர். பாஹ் ஹெமின் கண்கள் சிரமத்தால் எரிச்சலடைய ஆரம்பித்தன. பனியில் ஊடுருவிப் பார்ப்பது கடினமாக இருந்தது. தோள்பட்டைகள் துப்பாக்கியின் கனத்தால் வலியெடுத்தன. அவர்கள் இரண்டுமணிநேரமாகக்  காத்திருந்தனர். புலி இன்றிரவு வராவிட்டால், அவர் இங்கு தங்க நேரிடும். களைப்பாகவும்  சோர்வாகவும் உணர்ந்தார். இது சரியில்லை, இது வேட்டையாடுவதற்கான சரியான மனநிலை இல்லை.

அப்போது காசாவிடமிருந்து வந்த ஒரு சிறிய கூர்மையான சீற்றொலியைக் கேட்டதும், அவரது எண்ணங்கள் தெளிவடைந்தன.  அவரது வலி மறைந்தது. அந்த விலங்கு தென்பட்டுவிட்டது. பாஹ் ஹெம் தானிருந்த நிலையை மாற்றியமைத்துக் கொண்டார், அவரது கண்களை காட்டை நோக்கி நிலைநிறுத்தினார். வெறும் நிழல் தான், பனியில் தெரிந்த ஒரு கரும் உருவம். ஆனால் அது மெதுவாக அடியெடுத்து நகர்ந்தது.  அதன் நடையின் நயம் ஒரு கடுமையான நொண்டலால் கலைந்திருந்தது. தலை தொங்கியபடி, நிலவொளிக்கு உள்ளேயும் வெளியேயும் அது  அமைதியற்று நடந்துகொண்டிருந்தது. தெளிவான குறி வேண்டுமெனில் இன்னும் அருகில் செல்லவேண்டியிருக்கும். காசா அவருக்குப் பின்னால் வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.  அவனது கண்கள் விசித்திரமான ஒளியில் மின்னின. அவர்கள் அந்த விலங்கை பார்வையில் இருந்து தப்பவிடாமல், இறக்கத்தில் தவழ்ந்து இறங்கினர். புலி அப்போது தனது காயம்பட்ட பாதத்தை நக்கியபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.  மேல்நோக்கி மெலிதாக உறுமியது. கடைசியாக பாஹ் ஹெம் குறிபார்க்கத் தயாராகிவிட்டார்.

துப்பாக்கியின் பாதுகாப்புத் தாழை எடுத்துவிட்டார், ஒரு மூச்சுவிடும்நேரம் காத்திருந்து, விசையை இழுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மிருகம், வலியால் உறுமியபடி தரையில் விழுந்தது.

“முடிந்தது” சொன்னபடி  அவனை பாஹ் ஹெம் பார்த்தார்.

காசாவின் முகம் கண்ணீரால் நனைந்திருந்தது.

”எங்கள் மக்கள் காலையில் இதை எடுத்துவிடுவார்கள்” – அது இறந்துவிட்டதா என்பதை மட்டும் உறுதிசெய்து கொண்டு, அந்தமிருகத்தை அங்கேயே விட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து  அகன்றனர். பார்வையற்று, மனிதனுக்குரிய கூர்மையிருந்த அந்தக் கண்களில் மரணத்துக்குப் பின்னும் வலி மறைந்திருக்கவில்லை.

குடிசைக்கு திரும்ப வரும்வரை அவர்களேதும் பேசிக் கொள்ளவில்லை. பாஹ் ஹெம் மிகவும் களைத்திருந்தார். அது அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல வேட்டையில்லை. வழக்கமாக வேட்டையில் ஒன்றைக் கொல்லும்போது கிடைக்கும் அந்த கிளர்ச்சி இதில் அவருக்கு கிடைக்கவில்லை.

வீட்டுக்கு திரும்பியபோது, தாத்தா வெளியில் கதவுக்கருகில் நின்றிருந்தார்.

காசா ஒரே வார்த்தை தான் கேட்டான் “அப்பா?”

முதியவர் ஆமென்று தலையசைத்தார்.

காசா வீட்டுக்குள்ளே இருளுக்குள் சென்று மறைந்தான்.

பாஹ் ஹெம் துப்பாக்கியை ஓரமாக வைத்துவிட்டு அடுப்படி நெருப்பில் குளிர்காய்ந்தார்.

மைனாவும் நோருவும் கண்ணில்படவில்லை. அந்த வெம்மையும் களைப்பும் அவரை ஆட்கொண்டன, அவர் அப்படியே தூங்கியிருக்கவேண்டும்.

அது ஆச்சர்யமாக கனவேயில்லாத தூக்கம், அவர் மனம் உலகத்தில் இருந்து மூடிக்கொண்டது.

அவர் கண்களை திறந்தபோது தாத்தா அருகில் முக்காட்டுடன், தனது நீண்ட நிழல் சுவற்றில் படும்படி அமர்ந்திருந்தார்.

“காசா எங்கே” பாஹ் ஹெம் கேட்டார்.

“அவன் ஓய்வெடுக்கிறான்”

“உங்கள் மகனுக்கு நேர்ந்தது பற்றி எனது ஆழ்ந்த வருத்தங்கள்”

நெருப்பு அணையும் தருவாயிலிருந்தது, ஆனால் இருவருமே அதை மீட்க முயற்சிசெய்யவில்லை.

தாத்தா தாழ்வான மிக மெதுவான தொனியில் சொல்ல ஆரம்பித்தார் “ஐந்து நாட்களுக்குமுன் ஒரு மாலைநேரம் மைனா மலங்பாவிலிருந்து காட்டுவழியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ராணுவத்தில் ஒரு கும்பல் அவளை தொந்தரவு செய்தனர். இதேபோல முன்னரும் நடந்திருக்கிறது, ஆனால் இப்போது அதிகமானவர்கள் இருந்தனர், அவளை கேலி செய்து பயமுறுத்தினர்.

அப்போது திடீரென எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் தோன்றிய  புலி அவர்கள் மீது பாய்ந்தது. அது அவள் அங்கிருந்து ஓடி தப்பிக்க நேரம் கொடுத்தது என அவள் சொன்னாள், ஓடிவரும்போது துப்பாக்கி சத்தங்களை அவள் கேட்டாள், இருப்பினும் திரும்பிப்பார்க்கவில்லை. அதே மாலையில் எனது மகனும் நோயில் விழுந்தான்”. கொஞ்சம் நேரம் இடைவெளிவிட்டு “இது உனக்கு விசித்திரமாகத் தோன்றுகிறதா” எனக் கேட்டார்.

பதிலை எதிர்பார்க்காமல் அவர் தொடர்ந்து “இந்தப் பகுதியில், சொஹ்ரா, ஜிராங்கிலி மற்றும் தொலைதூரங்களிலும் கூட ஒன்று சொல்வார்கள், வடிவம் மாற்றிக் கொள்பவர்கள் என்று, அதாவது எந்த மனிதனின் ஆன்மா விலங்குகளுக்குள் செல்லுமோ அவர்களை….”

”நீங்கள் சொல்வது உண்மையென்றால், இன்று உங்கள் மகனை நான் கொன்றேன்”

முதியவர் இல்லையென தலையாட்டினார் “இல்லை, நீ கொல்லவில்லை, அந்த உயிர் காயம்பட்டிருந்தது, நீ அதை உண்மையில் விடுதலை செய்திருக்கிறாய்”

திடீரென  இனம்புரியாத ஒரு காரணத்தால் பாஹ் ஹெம்முக்கு தனது துயரத்தை மறைத்து உரக்க சிரிக்க வேண்டுமெனத் தோன்றியது,

“மனிதர்கள் எப்படி மிருகமாக மாறமுடியும்? ஏதாவது மந்திரம் சொல்வார்களா?  அல்லது, வாலும் ரோமமும் முளைக்க ஏதாவது மாய பானம் குடிப்பார்களா..? இல்லையென்றால் இது பரம்பரையாக வருவதா? குடும்ப இரகசியம் அப்பாவிடம் இருந்து மகனுக்கு என்று வருகிறதா” வெறிபிடித்தவர் போலக் கேட்டார்.

முதியவர் அவரை பரிதாபத்துடன் பார்த்தார் ”அதை அன்பினால் மட்டுமே செய்யமுடியும்”

அவர் அந்த அறையிலிருந்து சென்றபின்னரும், பாஹ் ஹெம் விறகு நெருப்புக்கருகிலேயே இருந்தார். அது தீர்க்கமாக ஒளிர்வதையும், மந்தமான நெருப்பு அதன் மையப்பகுதியில் கழல்வதையும், அந்த மரத்துண்டுகள் பூமி குறித்த தங்களது இதமான நினைவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

(Translated by Suresh Babu)

முந்தைய கட்டுரைவேதாந்தம் பயில…
அடுத்த கட்டுரைவெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள்