மணிரத்னம், ஒரு பழைய பேட்டி

மணிரத்னத்தின் ஒரு பழைய பேட்டி. திரையுலகில் நான் மிக அதிகமாக நீண்ட உரையாடல்களில் ஈடுபட்ட ஆளுமை என்றால் அவர்தான். இலக்கியம், அரசியல் என சினிமா தவிர்த்த அனைத்தைப் பற்றியும் நான் பேசுவேன். அவர் சினிமா பற்றிப் பேசுவார்.கும்பகோணத்தில் தஞ்சையில் என வெவ்வேறு இடங்களில் அமர்ந்து பேசியிருந்தாலும் அவருடைய அறைக்குள் அவர் மிக இயல்பாக இருப்பதைக் காணலாம்.

நாம் விரும்பும் நண்பர்களின் இயல்புகளில் சில நம்மை பெரிதும் ஈர்த்துவிடுகின்றன. மணி ரத்னத்திடம் அது அவருடைய மழலை. ஆங்கிலவழிக் கல்வியில் வளர்ந்தவர் என்பதனால் தமிழ்பேசும்போது ஒரு திக்கல் வந்துகொண்டிருக்கும். அவரிடம் புதிய ஒரு கருத்து உருவாகுமென்றால் முன்னரே ஒரு சின்ன திணறல் மொழியில் அமையும்.

சாயல் ஏதும் இல்லாமலேயே ஏறத்தாழ அவரைப்போலவே தோன்றுபவன் யுவன் சந்திரசேகர். அவனுக்கு உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். புத்தம்புதிய கருத்துக்களைக்கூட ஏற்கனவே வரையறை செய்து பலமுறை சொல்லி புத்தகமாகவே வெளியிட்டு உலகமும் அதை முன்னரே ஏற்றுக்கொண்டு உண்மையென்றே ஆகிவிட்டது என்னும் பாவனையில் பேசுவான்.

இருவரும் இப்போது குறுந்தாடி. யுவன் முப்பதாண்டுகளுக்கு முன் குறுந்தாடி இல்லாமலிருந்தபோதிருந்த ஏதோ ஒரு சாயலை மணிரத்னத்தின் இந்தப்பேட்டியிலும் பார்க்கிறேன். முக ஒற்றுமை இல்லை. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது. அவருடைய இப்பேட்டியை அவருடைய மொழிக்காக பார்த்துக்கொண்டே இருந்தேன். அன்றுமுதல் இன்றுவரை கலை என்பதை முழுக்க விளக்கிவிடக்கூடாது என்னும் கவனத்துடனேயே இருக்கிறார்

முந்தைய கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி
அடுத்த கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-7