நன்கொடை அளிப்பது பற்றி…

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

அய்யா, தங்களுடைய மகாபாரத படைப்புகளை கணினி வாயிலாக இலவசமாக படித்தேன்.படைப்பாளிக்கு உரிய மரியாதையை செலுத்தாமல் இலவசமாக படித்தது என் மனதை உறுத்துகிறது.

எனவே குரு தட்சணையாக தங்கள் வங்கி கணக்கிற்கு  Rs. 10,000- RTGS செய்ய விரும்புகிறேன்.தங்களின் தொலைப்பேசி எண்  எனக்கு அறியவில்லை. மின்னஞ்சல் முகவரியும் – சரியானதா என அறியமுடியவில்லை.

Demand draft (or) RTGS எது செய்தால் தங்களுக்கு உகந்தது எனும் அய்யாவின் விருப்பத்திற்கு இணங்க செய்கிறேன்.தயவு கூர்ந்து அனுமதிக்கவும்.

உயர்திரு. நாஞ்சில் நாடன் அய்யா அவர்களுக்கும் இதைப்போன்றே உரிய மரியாதை செலுத்த விரும்பி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

தங்கள் உண்மையுள்ள

கமலக்கண்ணன்

***

அன்புள்ள கமலக்கண்ணன்,

உங்கள் உணர்வுகள் நிறைவளிக்கின்றன. என் இணையதளமும் எழுத்துக்களும் இலவசமாக இருப்பதற்கான காரணம் இலக்கியம் பரவலாகச் சென்று சேரவேண்டும் என்றும் நோக்கமே. இங்கே இலக்கியத்துக்கு வாசகர்கள் மிகமிகக் குறைவானவர்கள். அவர்களுக்கும் இலக்கியம் தற்செயலாகவே அறிமுகமாகிறது. அவர்கள் தயங்கித்தயங்கித்தான் வாசிக்க வருகிறார்கள். தொடக்கத்தில் அவர்களுக்கு இலக்கியம் பிடிகிடைப்பதுமில்லை. வாசிப்பவை மிரட்சியையே உருவாக்குகின்றன. சிலசமயம் எரிச்சலை அளிக்கின்றன. தொடர்ந்து வாசித்தார்கள் என்றால் ஏதோ ஒரு புள்ளியில் அவர்களுக்கு ஆர்வம் உருவாகிறது. மெல்ல இலக்கியம் வசமாகிறது.

என் தளம் என்னுடைய எழுத்துக்களாலானது மட்டுமல்ல. அது இலக்கிய அறிமுகத்துக்கான மையம். இலக்கியப்படைப்புக்கள், இலக்கிய எழுத்தாளர்கள், இலக்கியக் கொள்கைகள், இலக்கிய நிகழ்வுகள் என அதில் விரிவான அறிமுகம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இலக்கியம் பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் தளம் இதுவே. எந்நூலைத் தேடினாலும், எந்த ஆசிரியரைத் தேடினாலும் கூகிள் இங்கே அனுப்புகிறது. அவ்வாறு இலக்கியத்திற்கு வரும் இளைய வாசகர்கள் ஏராளமானவர்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்பது ஓர் இலக்கிய இயக்கம். அதன் முகப்பு இந்த இணையதளம்.

ஆகவே இதை கட்டணம் கொண்டதாக ஆக்கமுடியாது. கட்டணம் அறிமுக வாசகர்களை வெளியேதள்ளிவிடும். ஏனென்றால் இதற்குள் என்ன உள்ளது என அவர்களுக்குத் தெரியாது. அவற்றை வாசிக்க அவர்கள் பழகவுமில்லை. ஆகவே இலவசத்தளமாக நடத்துகிறோம். இதற்கு ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் செலவாகிறது. அதை நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு ஆண்டுக்கு இரண்டு விருதுகளை அளிக்கிறது. விழாக்களை நடத்துகிறது. சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறது. மேலதிகமாக இலக்கியவாதிகளில் தேவைகொண்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்குகிறது. முழுக்கவே நண்பர்களின் நன்கொடைதான். இதுவரை நிறுவனங்களிலிருந்து நன்கொடைகள் பெறவில்லை. பெருவாரியான வாசகர்களின் பங்கேற்புடன் ஓர் இலக்கிய இயக்கம் நிகழவதே நல்லது என்னும் எண்ணமே காரணம்.

விஷ்ணுபுர கணக்கு எண் மற்றும் தகவல்களை அளித்திருக்கிறேன். நன்கொடையை அதில் செலுத்தலாம். இந்த நிதி நடைமுறையில் இலக்கியம் வாசித்து தேர்ந்தவர்கள் வாசிக்கவிருப்பவர்களுக்கு அளிப்பதாகவே பொருள்கொள்ளும். உங்களைப்போல நன்கொடை அளிப்பவர்கள் மிகமிக இன்றியமையாதவர்கள். இப்பெரும்பணியில் நீங்களும் பங்குகொள்வதில் நிறைவடைகிறேன். என் மனமார்ந்த நன்றி.

ஜெயமோகன்

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch: ICICI Bank, Ramnagar Branch, Coimbatore
Account Name: VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
Current Account No: 615205041358
IFSC Code: ICIC0006152

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

[email protected]

நன்கொடை அளித்தவர்கள் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரையானை, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅரசமரத்தின் நிமிர்வு