வெகுநாட்களாக இந்த பெயரை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவர் எந்த துக்கம் இல்லாதவனின் நண்பனாக இருந்தார். இந்த பெயரை வேறு யாரும் உபயோகிப்பதாக கூட தெரியவில்லை. இவருக்கு எப்படி தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா?
நன்றி
வைஜெயந்தி சென்னை
***
அன்புள்ள வைஜயந்தி,
அந்தப்பெயரை ஏன் சூட்டிக்கொண்டார் என்று அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார். அவருடைய நண்பர் ராமநரசுவுடன் இணைந்து இளமையில் அவர் நடித்த ஒரு நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் அசோகமித்திரன். ஒரு துணைவனின் கதாபாத்திரம் என நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் அவருக்குப் பிடித்துப் போனதனால் அந்தப்பெயர்.
மேலும் அதில் இருக்கும் மித்திரன் என்னும் சொல் அவருக்கு ஈர்ப்புடையது. தன்னை ஒரு சேவகனாக எண்ணிக் கொள்ளவே பிடித்திருக்கிறது, தலைவனாக எண்ணிக் கொள்வதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொன்ன பின்னர்தான் துயரற்றவனின் துணைவன் என அப்பெயர் பொருள்கொள்வது தெரிகிறது.
ஜெ