ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய உடல் விடியற்காலையில் அவருடைய சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு கொண்டுவரப்படும் என்று கவிஞர் நரன் சொன்னார்.

நேரில் செல்லவேண்டும் என முடிவுசெய்தேன். எப்போதும் அந்த முடிவையே உடனே எடுப்பேன். ஏனென்றால் இலக்கியவாதி மறைந்தால் சொல்லஞ்சலிகள் நிறைய வரும். நேரில் மிகக்குறைவான கூட்டமே வரும். ’ஊரில் இருந்தீர்களே, ஏன் செல்லவில்லை?’ என்று கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு அந்த எண்ணமே வந்திருக்காது என்பதை காணமுடியும். சிலர் சில்லறை காரணங்களால் கடைசியில் தயங்கிவிடுவார்கள். “அங்க நான் போய் எதுக்கு?” என்று சொல்பவர்கள் உண்டு. இதனால்தான் எழுத்தாளர்களின் இறுதிநிகழ்வுகள் பெரும்பாலும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றன.

இலக்கியவாதிகளின் இறுதிநாளை கௌரவிக்க ஆள்திரட்டிவர அமைப்புகள் இருப்பதில்லை. குழுவாக எவரும் கிளம்பி வருவதுமில்லை. பிறதுறைகளின் ஆளுமைகள் மேல் அவர்களின் ரசிகர்களுக்கு இருப்பதுபோன்ற பற்று பெரும்பாலும் இலக்கிய வாசகர்களிடம் இருப்பதில்லை. இசை, கலைத்துறை ஆளுமைகள் மேல் பற்று கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை முன்வைக்காதவர்கள். அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இலக்கியவாசகர்களுக்கு உண்மையில் தாங்கள்தான் முக்கியம், இலக்கியவாதி இரண்டாம்பட்சம்தான். இலக்கியமே கூட அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல. அரிதான விதிவிலக்குகள் சிலரே.

பெரும்பற்று கொண்டவர்களே இலக்கியத்திலும் உண்மையில் சாதனையாளர்களாகிறார்கள். வாசகர்கள் என்னும் நிலையில் இலக்கியத்தை ஆழமாக பெற்றுக்கொள்பவர்கள் பற்று கொண்டவர்களே. பிரான்ஸிஸ் கூட அத்தகையவர்தான். அவரை நான் எங்கெல்லாம் பார்த்திருக்கிறேன் என எண்ணும்போது பல இறுதிநாட்களும் அஞ்சலிகளும் நினைவுக்கு வருகின்றன. பாலகுமாரன் மறைந்தபோது எங்கிருந்தோ நெடுந்தூரம் நடந்து வந்தவர் போல வியர்த்து களைத்து ஓரமாக நின்றிருந்தார். நான் அவர் தோளை மட்டும் தட்டிவிட்டு வெளியே நடந்தேன்.

ஜெயகாந்தன் பொதுவான சமூக ஆளுமை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு தானாகவே இறுதிநாள் அஞ்சலிக்கு இலக்கியவாசகர்கள் பெருமளவுக்குத் திரண்டது என்றால் கடைசியாக சுந்தர ராமசாமிக்குத்தான். எவ்வகையிலோ இலக்கிய வாசகனின் ஆணவத்தை கடந்து எழுந்து நிற்பதாக அவருடைய ஆளுமை இருந்தது. வேறெந்த எழுத்தாளருக்கும் பெருமளவில் வாசகர்கள் இறுதிநாள் செலவுக்கு திரண்டதில்லை. எனக்கு எப்போதும் உருவாகும் அச்சம் என்பது படைப்பாளியின் இறுதிநாள் நிகழ்வுக்கு இலக்கிய வாசகர்கள் என ஒருவர்கூட வரவில்லை என்னும் நிலை அமைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே தொலைபேசியில் அழைத்து அருகிலிருப்பவர்களிடமெல்லாம் செல்லும்படி மன்றாடுவதுண்டு. கூடுமானவரை நான் சென்றுவிடுவேன்.

வாசகர்களிடம் சொல்ல விரும்புவது இதுதான், ஒரு படைப்பாளியின் இறுதிநாளுக்குச் செல்வதென்பது வாசகனின் கடமைகளில் ஒன்று. ஒருவேளை அவன் அவருக்குத் திருப்பிச் செய்யக்கூடுவதும் அது ஒன்றுதான். படைப்பாளியை ஊராரும் வீட்டாரும் கொண்டாடாமல் போகக்கூடும். வாசகனும் அவனை புறக்கணித்தான் என்றால் அது அப்பண்பாட்டுக்குப் பெரும்பழி. அது ஒருபோதும் நிகழலாகாது. சென்னையில் ஞானக்கூத்தன் மறைந்தபோது நான் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுச் சொல்லியும்கூட என் சென்னை நண்பர்களில் பலர் செல்லவில்லை. அவர்கள்மேல் அந்த மனத்தாங்கல் இன்றும்கூட எனக்கு தீரவே இல்லை.

பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதிநாள் அஞ்சலிக்கு நல்லவேளையாக சென்னையில் இருந்து சாம்ராஜ் போன்று பிரான்ஸிஸின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். நெல்லையிலும் நாகர்கோயிலிலும் பிரான்ஸிஸை அறிந்த இலக்கிய நண்பர்கள்  பத்துப்பதினைந்துபேர் இருந்தனர். மற்றபடி அரசியல்சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, அவற்றின் உறுப்பினர்களோ கண்ணில் படவில்லை. வாசகர்கள் என்றும் எவருமில்லை. ஆனால் இந்தச் சிறுதிரளே நிறைவளித்தது.

நான் காலையில் தொலைபேசியில் அழைத்து நான் இறுதிநாள் நிகழ்வுக்குச் செல்வதாகவும், வரவிரும்புவோரைச் சேர்த்துகொள்வதாகவும் நண்பர்களிடம் சொன்னேன். நட்புக் குழுமங்களிலும் தெரிவித்திருந்தேன். ஆனந்த்குமார் திருவனந்தபுரத்தில் இருந்தார். சுஷீல்குமாருக்கு காய்ச்சல். லக்ஷ்மி மணிவண்ணனின் மாமியார் ஆஸ்பத்திரியில் இருந்தார். போகன் மட்டும் வருவதாகச் சொன்னார்

கிளம்பும்போது மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு லக்ஷ்மி மணிவண்ணன் வந்துவிட்டார். லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர். அவர்களுக்கிடையே இருந்த நட்பு இனிமையும் சித்திரவதைகளும் நிறைந்த ஒன்று. லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவை கூடுமானவரை தாங்கிக் கொண்டவர்களில் ஒருவர்.

மதியம் கிளம்பி வள்ளியூர் சென்றபோது சிறில் அலெக்ஸ் அழைத்தார். அவர் வடக்கன்குளத்தில் அவருடைய அன்னையைப் பார்க்க வந்திருந்தார். அவரும் வருவதாகவும், பேருந்தில் வரும் ஜெயராம், அருள் இருவரையும் சேர்த்துக்கொள்ள காத்திருப்பதாகவும் சொன்னார். வள்ளியூரில் அவர்களை இணைத்துக்கொண்டு பத்தினிப்பாறைக்குச் சென்றோம்.

பிரான்ஸிஸ் கொண்டு வரப்பட்டிருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற மலர்வளையத்தையும் மலர்மாலையையும் அவருக்கு வைத்து அஞ்சலி செலுத்தினோம். அவருடைய நண்பர்களான கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் அருகே நின்று அவர் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மாதாகோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பத்தினிப்பாறை சின்னஞ்சிறு ஊர். எழுபது வீடுகள்தான். ஏரிப்பாசனம் இருந்தாலும் ஒரு பாலைவனத்தன்மை தோன்றிய நிலம். 1930ல் கோஸ்தா குடும்பம் என்னும் நிலவுடைமையாளர்களால் கட்டப்பட்ட சிறிய மாதாகோயில் பழைய பாணியில் அமைந்தது. சுதையாலான வளைவுகளுக்குமேல் ஓட்டுக்கூரை. வட்டமான ஓளிச்சாளரங்கள்.

ஐம்பதுபேர் அமரக்கூடிய அளவுள்ளது அக்கோயில்.புனித ஜார்ஜியார் ஆலயம் என நினைக்கிறேன். பெஞ்சுகள் இல்லை, தரையில் அமரவேண்டும். அழகிய ஆல்டர். பிரான்ஸிஸின் உடல் அங்கே வைக்கப்பட்டது. அங்கே அரங்கு நிறைய அமர்ந்து கொண்டோம். அங்கும் கவிஞர்கள் பிரான்ஸிஸின் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். ஒருவேளை பிரான்ஸிஸின் கவிதைகள் அவர் மண்ணில் ஒலிப்பது அதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் “பிரான்ஸிஸ் துன்பப்பட்ட ஆத்மா. துன்பப்படுபவர்கள் கிறிஸ்துவுக்கு அணுக்கமானவர்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. பிரான்ஸிஸ் இன்னும் கிறிஸ்துவுக்கு அணுக்கமாகிவிட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி” என்று நான்கு சொற்றொடர்கள் சொன்னேன். லக்ஷ்மி மணிவண்ணனும் சில சொற்கள் சொன்னார். சிறில் அலெக்ஸ் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசித்தார்.

பாதிரியார் பிரார்த்தனையையும் ஜெபத்தையும் நிகழ்த்தினார். தரையில் அமர்ந்து அந்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வழக்கமாக அனல்கொளுத்தும் நிலம். அன்று மழைத்துளிகளுடன் குளிர்காற்று எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பீரிட்டுக்கொண்டிருந்தது. வானம் இருண்டு முகில்படர்ந்திருந்தது. அந்தவேளையில் அச்சொற்கள் ஒரு நிறைவை அளித்தன. நிறைவுதான், வழக்கமாக இறப்புகளில் மெல்ல மெல்ல துயர் விலகும்போது அந்நிறைவு வரும். பிரான்ஸிஸ் ஏற்கனவே எல்லா துயரையும் பிறருக்கு அளித்துவிட்டவர்.

எல்லா மதங்களிலும் சாவுச்சடங்குகளின் சொற்றொடர்கள் ஏறத்தாழ ஒன்றே. சாவு என்பது அழிவு அல்ல, அது அழிவற்ற ஒன்றுடன் இணைதல். அழிவின்மை கொள்ளுதல். சாவு என்பது முறிந்துபோதல் அல்ல, அது ஒரு முழுமை. திரும்பத் திரும்ப மானுடம் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. சாவு என்பது என்ன என அறியவே முடியாது. இந்த சொற்கள் அந்த அறியமுடியாமைமேல் நாம் அமைத்துக்கொள்பவை. அவற்றின் அர்த்தம் நாம் இங்கு வாழ்ந்து திரட்டிக்கொள்வது.

கிறிஸ்தவ இடுகாடு சற்று தொலைவில் இருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் வழியாக நடக்கவேண்டும். மழை பெய்யுமென தோன்றியதென்றாலும் அந்நிலத்தில் மழை அவ்வாறு எளிதில் பெய்துவிடுவதில்லை. முள்மண்டிய இடுகாட்டில் இந்த ஓராண்டுக்குள் புதைக்கப்பட்டு, இன்னும் கல்லறை எழுப்பப்படாத பல புதைமேடுகள் தென்பட்டன.

பிரான்ஸிஸுக்காக தோண்டப்பட்ட குழி அவ்வளவு ஆழமில்லை. செம்மண் பாறைபோல இறுகிய தரை. குழியெடுப்பது எளிதல்ல என்று தோன்றுகிறது. பாதிரியார் ஜெபித்தபின் பிரான்ஸிஸின் பெட்டி கயிறுகளில் பெட்டி கட்டப்பட்டு மண்ணுக்குள் இறக்கப்பட்டது. மூன்றுமுறை மண் அள்ளிப்போட்டு விடைகொடுத்தேன்.

இந்த நிகழ்வின் நிறைவுக்குக் காரணம் பாதிரியார் ஜோ. இலக்கியம் அறிந்தவர். தன் உரையிலேயே புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டார். நெல்லையில் வழக்கறிஞர் வேலைபார்ப்பவர் இங்கே பாதிரியார் இல்லாததனால் பகுதிநேரப்பணியாக வந்திருந்தார். ஆழ்ந்த குரலில் பாடி பிரார்த்தனை செய்தார். அவருக்கு எங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்துவிட்டு திரும்பி நடந்தோம்.

கிறிஸ்டியேன் என்னும் நண்பர் கூட நடந்தபடி பேசிக்கொண்டு வந்தார். பிரான்சிஸ் ஒரு கவிஞர் என அந்தச் சிற்றூரில் அறிந்தவர் அவரே. பிரான்ஸிஸ் விருதுபெற்ற போது அந்த விழாநிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊரே மணப்பாடு ஊரைச்சேர்ந்த மீனவர் குடியினரான நிலச்சுவான்தார்களான கோஸ்தா குடும்பத்துக்கு சொந்தமானது. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர். ஊரில அனைவரும் அவர்களின் வேலைக்காரர்கள் என்றார்.

சுதந்திரத்துக்குப்பின்  நிலச்சீர்திருத்தத்தின்போது அக்குடும்பத்தின் நிலம் கைப்பற்றப்பட்டு உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஸ்தா குடும்பம் நீதிமன்றம் சென்றது. வழக்கு நடக்கும்போதே நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டது. இன்று நிலத்தின் பட்டா நிலத்தை வாங்கியவரிடமும் நிலஉரிமை ஊராரிடமும் உள்ளது. ஆகவே இடுகாட்டுக்கு வழியை அடைய முடியவில்லை. பிரான்ஸிஸ் கூட சில சாவுகளின்போது அதைப்பற்றி பேசியிருக்கிறார் என்றார்.

ஊர் நடுவே கோஸ்தா குடும்பத்தின் நூறாண்டுப் பழமையான மாளிகை உள்ளது. அது கைமாறி இன்று ஒரு பண்ணை விடுதியாக இருக்கிறது. பெரிய சுற்றுவேலியுடன், காவலுடன் வேறொரு உலகமாக ஊர் நடுவே நின்றிருக்கிறது. அதற்குள் சென்று பார்த்ததே இல்லை என்றார் கிறிஸ்தியோன். பிரான்ஸிஸும் அதைப் பார்த்ததில்லை. அவர்கள் அணுகமுடியாத ஒரு மிதக்கும் கலம் போல அது.

அந்தி சாயத் தொடங்கியபோது விடைபெற்று திரும்பி வந்தோம். ஒரு கவிஞனின் இறுதிநாள். அவனுடைய எளிய ஊர். அவன் உறவினர்கள் முன் ஒலித்த அவர்கள் அறிந்தே இராத அவனுடைய கவிதையின் சொற்கள். அந்த மாதாகோயிலில் அவனுக்காக ஒலித்த புனித வேதாகமத்தின் அழிவற்ற சொற்கள்.

[புகைப்படங்கள் இணையத்திலிருந்து]

முந்தைய கட்டுரைகௌதம நீலாம்பரன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவளர்பவர்கள்