இரவின் நாணம்

ஒரு பண்பாட்டுச் சூழலின் சினிமா என்பது அதிலுள்ள எல்லா மக்களின் வாழ்க்கையையும் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும். கடல் படம் வந்தபோது தெரிந்தது ஒன்று உண்டு, நம் மீனவ மக்களின் வாழ்க்கையைப் பற்றி பொதுச் சமூகத்திற்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமில்லை. ஏற்கனவே தெரியாத ஒன்று உடனே நம் பார்வையாளர்களை அன்னியப்படுத்துகிறது.

ஆகவே இங்கே இஸ்லாமிய வாழ்க்கைச் சூழல் சினிமாவில் வந்ததே இல்லை. வருவதற்கான வாய்ப்புகளும் இல்லை. பல காரணங்கள். ஒன்று பொதுச்சமூகம் அதை விரும்புமா என்ற ஐயம். இன்னொன்று, இஸ்லாமியரைப் பற்றி இஸ்லாமியர் விரும்பும் ஒரு சித்திரத்தையே அளிக்க முடியும். மிகமெல்லிய சமூக விமர்சனம் இருந்தால், ஒருசில கதாபாத்திரங்கள் எதிர்மறையானதாக இருந்தால், புண்படுவார்கள். சினிமாவுக்குச் சிக்கல் வரும்.

ஆனால் மலையாளத்தில் ஒரு சினிமா முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் நிகழ்வது பெரும்பாலும் விரும்பப்படுகிறது. அந்தக் களத்திற்கு வெளியே செல்லாமலேயே சினிமாவை எடுத்தால் அது வெற்றிப்படைப்பாகும். பல படங்களின் பெயரே அது எந்த களம் என்று சொல்லிவிடும். ஈற்றா [வேய் மூங்கில்] காட்டில் மூங்கில் வெட்டுபவர்களைப் பற்றியபடம். கரிம்பன பனையேறிகளை பற்றிய படம். ஆறாட்டு திருவிழாவில் வாணவேடிக்கை செய்பவர்களைப் பற்றிய படம். அங்காடி முழுக்கமுழுக்க ஒரு சந்தைக்குள் நிகழும் படம்.

ஆகவே இஸ்லாமியக் கதைக்களம் கொண்ட படங்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் இஸ்லாமியர்களின் வெவ்வேறு துணைப்பண்பாடுகளைப் பற்றிய படங்கள் வந்துள்ளன. ஜேஸி இயக்கிய துறமுகம் கொச்சி துறைமுகத்தை ஒட்டிய மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம். இன்றுபார்த்தால் சுமாரான சினிமாதான். ஆனால் அந்த வாழ்க்கை அதில் இருந்தது. அதில் உள்ள ஓர் இஸ்லாமியக் கதையிலுள்ள பாடல் இது.

பாடலில் உள்ள அரபு சொற்கள்தான் கவனிக்கப்படவேண்டியவை. அம்மக்களின் வாழ்க்கையுடன் இணைந்தவை அவை. பைத் என்றால் உறவு, சொந்தம். கல்ப் என்றால் இதயம், நெஞ்சம். கெஸ்ஸு என்றால் சிறிய இசைப்பாடல். தெம்மாங்கு போல. முஸ்லீம்கள் பாடுவது. அசர்முல்லை என்றால் சிவப்புச்செவ்வந்தி. அசர் என்றா ஈர்ப்பு, நறுமணம் இரண்டு பொருள்.

உறுமால் என்றால் முஸ்லீம் ஆண்கள் தலையிலணியும் தலைப்பாகைத்துணி. தட்டம் என்றால் பெண்கள் தலையில் அணியும் முக்காட்டுத்துணி. அரமணி என்றால் இஸ்லாமியப் பெண்கள் ஆடைக்குமேல் இடையில் அணியும் பொன்னாலான ஆபரணம். மணிகள் கொண்டது. மொஞ்சு என்றால் எழில். மஹர் என்றால் ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடைச் செல்வம்.

ராவினு இந்நொரு பெண்ணின்றே நாணம்
தேன் கடலின்னு பைத்தின்றே ஈணம்
கல்பில் இந்நு ஒரு பூந்தட்டம்
பூதொடுக்குந்ந சேலாணு
ரம்சான் கல போலாணு

திரமால கெட்டிய கெஸ்ஸுகள் கேட்டு
அசர்முல்ல சுண்டிலும்  அரிமுல்ல பூத்து
வளயிட்ட கைகொண்டு முகம் மறச்சு
வலயிட்டது எந்தினு மிழியாலே நீ

துறமுகக் காட்டிலும் அத்தர் தூவி
சினேஹத்தின் நூலுகொண்டு உறுமாலு துன்னி
கிலுகிலே அரமணி கிங்ஙிணியிட்டு
மணவாட்டியாவணது எந்நாணு நீ?

எம்.கே.அர்ஜுன்

பூவச்சல் காதர்

 

இரவுக்கு இன்று ஒரு பெண்ணின் நாணம்
தேன் கடலுக்கு உறவின் ராகம்
நெஞ்சில் ஒரு மெல்லிய தலைமுக்காடு
தொட்டு பூந்தொடுத்த அழகு
ரம்ஸான் பிறையின் எழில்போல

அலைகள் போட்ட மெட்டுகள் கேட்டு
சிவப்புச்செவ்வந்தி இதழ்களில் வெண்முல்லைகள் பூத்தன
வளையிட்ட கண்களால் முகத்தை மூடிக்கொண்டு
கண்களால் ஏன் வலைவிரித்தாய்?

துறைமுகத்தின் காட்டிலும் அத்தர் தெளித்து
அன்பின் நூலால் மேலாடை நெய்து அணிந்து
கிலுகிலுக்கும் இடைமணி நகையணிந்து
மணமகளாக ஆவது எப்போது நீ?

இந்தப்பாட்டில் அடித்தள இஸ்லாமிய வாழ்க்கைச்சூழல் உள்ளது. இஸ்லாமியப் பெண்களின் அக்கால ஆடையணிகள் முகலாயப் பண்பாட்டில் இருந்து வந்தவை. பளபளக்கும் சரிகை ஆடைகள். புர்கா இல்லை. தலையில் தட்டம் என்னும் முக்காடு அணிந்திருக்கிறார்கள். திருமணம் இரவில் நடைபெறுகிறது. மணமகன் மாலை போட்டுக்கொண்டு தெருவில் நடந்து வருகிறான்.

இன்னொரு பாடல் கொச்சு கொச்சொரு கொச்சி. முந்தைய பாட்டில் வரும் ‘கெஸ்ஸு பாட்டு’ இதுதான். பலர் சேர்ந்து கைகளை தட்டிக்கொண்டு பாடுவது. காஸர்கோட்டில் இருக்கையில் நண்பர் அப்துல் ரசாக்கின் இல்லத்திற்குச் சென்று இரவெல்லாம் கெஸ்ஸு பாட்டு பாடியிருக்கிறோம் [ரஸாக் குற்றிக்ககம் என்ற பெயரில் எழுதிய நண்பர் இப்போது உயிருடனில்லை. அவருடைய இரண்டு கதைகளை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். 1985ல் நம்வாழ்வு என்னும் நாகர்கோயில் இதழில் வெளிவந்ததாக நினைவு]

இதில் அழகியான கொச்சியை சுல்தான் வந்து மஹர் கொடுத்து திருமணம் செய்துகொள்கிறார்.

கொச்சு கொச்சு ஒரு கொச்சி
ஓளு நீலக்கடலின்றே மோளு
பண்டு பண்டொரு நாளு
ஓளு பிராயமறியுநோரு காலம்

பச்சக்கொடியும் பறத்தி வந்நெத்தி
வெள்ளித்துருத்து போல் ஒரு கப்பல்
கப்பலில் உள்ள ஒரு ராஜகுமாரன்
பெண்ணினே கண்டு கொதித்து
பெண்ணினு நாணமுதிச்சு

கரையில் ஒரு அஞ்ஞூறு திரவந்நு கூடி
மைலாஞ்சிப்பூ விரிச்சு
துடு துடே மானம் சுவந்நு

பெண்ணினே வேணம் ! ஐசலா பெண்ணு தரில்லா ஏலய்யா!
பொன்னு தராமோ? ஏலஸா மின்னு தராமோ ஏலய்யா!
மஞ்சலில் ஏறி ஐலஸா! இக்கரே வந்நு ஏலய்யா!
ஆரு பறஞ்ஞு ? ஐலசா ஞம்மளு கண்டு! ஏலய்யா!

ஏழு கரயிலும் மொஞ்சத்தியாகும் கொச்சியே நிக்காஹ் செய்யான்
ஆ ராஜகுமாரன் உறச்சு
மஹர் ஆயி ஆயிரம் தளிக பணிஞ்ஞு
மணவாட்டிக்கு அந்நு கொடுத்து
ஆ காசு கொண்டல்லே மச்சுவா பணிஞ்ஞது!
கொச்சு கொச்சொரு கொச்சி! 

[தமிழில் ]

சின்னஞ்சிறிய கொச்சி
அவள் நீலக்கடலின் மகள்
முன்பு முன்பொரு நாள்
அவள் வயதுக்கு வந்த காலம்

பச்சைக்கொடி பறக்க வந்து சேர்ந்தது
வெள்ளித்தீவு போல் ஒரு கப்பல்
கப்பலில் வந்த ராஜகுமாரன்
பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டான்

கரையில் ஒரு ஐநூறு அலைவந்து அறைந்தது
மருதோன்றி மலர்களை விரித்தது
செக்கச்சிவப்பாக வானம் சிவந்தது

பெண்ணை வேண்டும் ஐலசா பெண்ணை தரமாட்டோம் ஏலய்யா
பொன் தருவீர்களா ஐலசா தாலி தருவீர்களா ஏலய்யா
துணிப்பல்லக்கில் ஏறி ஐலசா இக்கரை வந்தார் ஏலய்யா
யார் சொன்னது? ஐலசா நானே கண்டேன் ஏலய்யா

ஏழு கரைகளிலும் பெரிய அழகியான
கொச்சியை நிக்காஹ் செய்ய
அந்த ராஜகுமாரன் உறுதிபூண்டான்
மஹர் ஆக ஆயிரம் தங்கத்தாலங்கள் செய்து
மணவாட்டிக்கு அன்று அளித்தான்
அதைக்கொண்டுதானே அவள் மாளிகை கட்டிக்கொண்டாள்

***

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசகன் அடிமையா?