ஈழமக்களுக்கு சலுகைகள் – கடிதங்கள்-2

ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
தேசமற்றவர்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

தேசமற்றவர்கள் கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தளத்தில் கண்ணீர்மல்க வாசித்தவுடன் முத்துராமன் அண்ணாவை அழைத்து அரசாங்கம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.ஆசான் குறிப்பிட்டுள்ளதை போல் அரசில் காதில் இது எட்டட்டும் என்றேன்.

முத்துராமன் அண்ணாவை உங்கள் மூலம் அறிந்தபின் அவர் ஏழை மாணவர்களின் கல்விக்காக தனது சொந்தப் பணத்திலும்,நண்பர்களிடம் நிதி பெற்றும் தன்னலமில்லா அவர் செய்யும் பணியை நான் அறிவேன். ஒரு அறகட்டளை யில் ட்ரஸ்டியாக இருந்து சில உதவிகள் செய்து வருவதால் நடைமுறையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் அறிவேன்.நீங்கள் ஒருமுறை சொன்னதுபோல் “உதவி செய்யத்துல டெய்லி ஒருத்தர மன்னிக்கணும் இல்லேன்னா உதவி செய்ய முடியாது”என.

முத்துராமன் ஈழ மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்து கொண்டார்.அவரின் ஈழ அகதிகள் பற்றிய கடிதமும்,அரசின் செவிகளுக்கு இது போய் எட்ட வேண்டும் எனும் உங்கள் பதிலும் இன்று அரசை ஈழ தமிழர்களுக்காக முதல் அடியை எடுக்க வைத்துள்ளது.உங்கள் தளம் மூலமே அரசின் அறிவிப்பை கண்டேன்.தேசமற்றவர்களின் வாழ்வின் இனியாகிலும் ஒளி பிறந்து,அமைதியாய் பாதுகாப்பை வாழ வேண்டுவதோடு.

அரசின் செவிகளுக்கு கொண்டு சேர்த்த உங்களுக்கும்,முத்துராமனுக்கும் நன்றி.

ஷாகுல் ஹமீது .

முத்துராமன்
முத்துராமன்

அன்புள்ள ஜெமோ

நான் உங்கள் அரசியல் கருத்துக்களுடன் கடுமையான முரண்பாடு கொண்டவன். திராவிட இயக்க அரசியலை இந்தியாவின் முக்கியமான எதிர் அரசியல் என நினைக்கிறேன். இன்றைக்கு உலகம் முழுக்க தேவைப்படுவது எதிர் அரசியல்தான். ஏனென்றால் மைய அரசியல் எல்லாமே மக்களை ஒடுக்குவதாகவும் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு மேலும் ஆதிக்கம் அளிப்பதாகவுமே உள்ளது.

அது ஒரு பக்கம். ஆனால் ஈழ மக்களுக்காக நீங்கள் தொடர்ந்து எழுதிவருவதும், உங்கள் நண்பர்களின் அறக்கட்டளை செய்துவரும் உதவிகளும் மிகமுக்கியமானவை என நினைக்கிறேன். இத்தனைபேரை உளப்பூர்வமாக பாதிக்கவும் அவர்களைச் செயலில் ஈடுபடுத்தவும் உங்கள் எழுத்துக்களால் முடிகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். எழுத்தை எவ்வகையிலும் உங்கள் சுயமுன்னேற்றத்துக்குப் பயன்படுத்தாமல் பொதுநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். ஆகவே பொதுநலம் நாடி பணியாற்றும் பலருக்கு ஆதர்சமாக இருக்கிறீர்கள். ஆனால் அவர்களைத்தான் நீங்கள் திரும்பத்திரும்ப முன்னிறுத்துகிறீர்கள். இதெல்லாம் வணக்கத்திற்குரிய செயல்கள்.

ஈழமக்களுக்கான உதவிகளைச் செய்ய தமிழக அரசுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் ஏதாவது செய்யலாம். ஆனால் இங்கே ஈழ அரசியல் பேசுபவர்கள் பொறுப்பில்லாத சிறு கும்பல். அவர்கள் எந்த நல்ல திட்டத்தையும் ஏற்க மாட்டார்கள். கூடவே வேண்டுமென்றே ஒன்றிய அரசுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக எதையாவது சொல்லிவைப்பார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் கிடையாது. அதனால் வடக்கே உள்ளவர்கள் மொத்த தமிழர்களையும் பிரிவினைவாதிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் நினைப்பார்கள். தமிழக ஆட்சிக்குச் சிக்கல் வரும். என்ன இருந்தாலும் ஒன்றிய அரசின் உதவியுடன் நலத்திட்டங்களைச் செய்யவேண்டிய நிலையில்தான் தமிழக அரசு உள்ளது.

இந்தவகையான சிக்கல்களை வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள் இங்குள்ள சிறுகுழுக்கள். ஆகவே அரசுகள் கவனமாக இருக்கின்றன. இந்த அரசு இந்த கொசுக்கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஈழமக்களுக்கு உதவிகளும் நியாயமும் வழங்குவது போற்றற்குரியது.

என்.ஆர்.தியாகராசன்

ஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை

ஈழ மாணவர்களுக்கு உதவி

இலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்

முந்நூறில் ஒருவர்

முந்தைய கட்டுரைகுரோதம்
அடுத்த கட்டுரைஆகாயத்தின் நிறம் – சக்திவேல்