கிரானடா நாவலும் அச்சமும், கடிதங்கள்

கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

கொள்ளு நதீமின் கிரானடா நாவலும் அச்சங்களும் வாசித்ததும் கிரானடாவை வாங்க அனுப்பாணை பிறப்பித்தேன். அவரின் நூலறிமுகம்  ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை அளித்தது. கிரானடா என்று பெயரிட்டிருக்கப்பட்ட அந்த வீடும், கிரானடா என்னும் பெயரும் வசீகரித்தது. அவர் குறிப்பிட்டிருப்பது போல  pomegranate  எனப் பெயரிடப்பட்டிருக்கும்  மாதுளையின் அறிவியல் பெயர் Punica granatum. இந்த  பெயரில் பல மொழிகளின் கலப்பு இருக்கிறது.

லத்தீன மொழியில்  pōmum  என்றால் ஆப்பிள்   grānātum என்றால் விதைகள் செறிந்த என்று பொருள்.  ’’ஆப்பிளை போலவேயான கனி ஆனால் விதைகள் நிறைந்த’’ என்ற பொருளில் பழைய ஃப்ரென்சு சொல்லான pomme-grenade என்பதிலிருந்தே இந்த லத்தீன் சொல் பெறப்பட்டது…ஆங்கிலத்தில்  “apple of Grenada” என்றழைக்கட்ட இக்கனி  லத்தீன -granade என்பதை ஸ்பெயினின் நகரான ‘Granada’ வை தவறாக நினைத்திருக்கலாமென்றும் ஒரு கருத்து இருக்கின்றது.Pomegranate என்பதற்கான ஃப்ரென்ச் சொல்லான grenade, மாதுளம் கனிகள்  கையெறி குண்டுகளின் வடிவத்தை ஒத்திருப்பதால் வைக்கப்பட்டது என்றும் தாவரவியல் குறிப்புக்கள் உள்ளன.

பல பொருள்கள் கொண்ட லத்தீன grānātum  என்பதற்கு அடர் சிவப்பு நிறமென்றும் ஒரு பொருள் இருப்பதால் இது மாதுளங்கனியின் சாற்றின் நிறத்தையும் குறிக்கின்றது..மாதுளையின் நிறத்திற்கென்றே பிரத்யேகமாக  balaustine என்னும் சொல் இருக்கின்றது. ’இறப்பின் கனி’ எனப்படும் மாதுளை குறித்த ரோமானிய, கிரேக்க தொன்மங்களும் வெகு சுவாரஸ்யமானவை.. The Color of Pomegranates என்னும் 1969 ல் வெளியான ஒரு ஆர்மினிய திரைப்படம்  இசைஅரசனனான  18 அம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆர்மீனிய கவி Sayat-Nova வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.மாதுளைகளின் நாடான ஆஃப்கானிஸ்தானின் கந்தகாரின் அம்மண்ணிற்கே உரிய ஜம்போ மாதுளைகளுக்கு சர்வதேச கிராக்கி இருக்கின்றது.

கொள்ளு நதீமின் இந்த கட்டுரை மாதுளையின் பின்னால் என்னை போகச்செய்துவிட்து

கிரானடா வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

கிரானடா பற்றிய குறிப்பை வாசித்தேன். அதிலுள்ள ஒரு பதற்றம் தொந்தரவு செய்தது. அது ஒர் இந்திய இஸ்லாமியருக்கு உருவாகும் சூழல் இன்றிருக்கிறதென்றால் அது நம் குழந்தைகளுக்கு நாமே உருவாக்கும் பேரழிவு என்று தோன்றியது. ஸ்பெயினின் வரலாறு காட்டுவது அதுவே. மூர் என்னும் சொல் அத்தனை நஞ்சு கொண்டது. ஸ்பானிஷ் இன்குவிசிஷன் பற்றியெல்லாம் இன்று பொதுவெளியில் எவரும் பேசுவதில்லை. இஸ்லாமிய வன்முறை என கட்டமைப்பவர்கள் அதை குறிப்பிடுவதில்லை.

ஜே.ஆர். ராஜன்

முந்தைய கட்டுரைஇளம் முகங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது – வாழ்த்துக்கள்