சங்கசித்திரங்கள் நான் விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுதி. நான் பிரபல ஊடகத்தில் எழுதிய முதல் தொடர். அதன்பின்னர் அச்சு ஊடகத்தில் எழுதிய தொடர்கள் வாழ்விலே ஒரு முறை [தீராநதி], ஆழ்நதியைத்தேடி [உயிர்மை], நத்தையின் பாதை [விகடன் தடம்], இவர்கள் இருந்தார்கள் [மீடியா வாய்ஸ்] தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் [ஜன்னல்] வலசைப்பறவை [சமகாலம்] போன்ற சிலவற்றைச் சொல்லலாம். இவற்றில் இரண்டு தவிர பிற அனைத்தும் நூலாகியிருக்கின்றன.
சங்கசித்திரங்களை முதலில் மலையாளத்தில் மாத்யமம் இதழில்தான் எழுதினேன். அப்போது வீடுகட்டிய கடனில் இருந்தேன். அவர்களே கூப்பிட்டு தொடர் எழுதச் சொல்லி பணம் தந்தனர். அன்று அது பேருதவியாக இருந்தது.
தமிழில் நான் உருவாக்க நினைத்தது ஒரு புதியவாசிப்பை. அதை The life criterionஎன்று நான் அழைப்பேன். இலக்கியவாசிப்புக்கு அடிப்படையாக அமையவேண்டியது இலக்கியத்தை வாழ்க்கையைக் கொண்டு புரிந்துகொள்வதும் அளவிடுவதும்தான். நாம் சமகாலப் படைப்புக்களை வாசிக்கும்போது ஓரளவு நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறோம்.
ஆனால் செவ்வியல் படைப்புக்களை அவ்வாறு நாம் வாசிப்பதில்லை. சொல்லழகு, செய்திகள், பண்பாட்டுச்சித்தரிப்பு, வடிவ அழகு சார்ந்து மட்டுமே வாசிக்கிறோம். அதிலும் வாழ்க்கையையே பார்க்கவேண்டுமென முன்வைக்க எண்ணினேன். அந்தத் தொடர் அவ்வகையில் ஒரு முன்னோடி. அதில் பண்பாட்டைப்பார்க்கும் ஆவணமாக சங்கப்பாடல்கள் அணுகப்படவில்லை. முழுக்கமுழுக்க கவிதையாகவே அணுகப்பட்டன. அவ்வகை வாசிப்புகள் பின்னர் ஏராளமாக வெளிவந்தன.
அத்துடன் சங்கசித்திரங்கள் ஒரு கவிதை ரசனைநூல் மட்டுமல்ல. அதை நாற்பது சிறுகதைகளாகவும் வாசிக்கமுடியும். அவற்றில் இருபது சிறுகதைகளாவது முக்கியமான இலக்கிய ஆக்கங்களாக தனித்தும் நிற்கத்தக்கவை.
ஒரு முன்னோடியான நூல் சங்கசித்திரங்கள். இன்று புதிய பதிப்பாக அதைப்பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
[வடிவமைப்பு : கீதா செந்தில்குமார்]