ஈரோடு ஜெயபாரதி – மாற்றுக்கல்விக்கென ஒரு வாழ்க்கை

கூட்டுறவு மக்கள் மருத்துவமனைகளின் தந்தையென கருதப்படுகிற சேவைமருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் அவர்களின் தங்கை ஜெயபாரதி. ஈரோடு சித்தார்த்தா பள்ளியின் தாளாளர். 34 வருடகால கல்வியப்பயணம் இவருடையது. சூழலியப் போராட்டத்தின் முன்மாதிரி வடிவமென, இவருடைய பள்ளிக்கூடத்துக் குழந்தைகளை ஈரோட்டிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணமாகச் செல்லவைத்தது; வெவ்வேறு சூழலியப் போராட்டங்களை குழந்தைகளை உரியவாறு ஈடுபடவைத்தது என பல்வேறு முன்னெடுப்புகள் இவரால் செயல்படுத்தப்பட்டன. முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்தியளவில் முன்முயற்சியாக இத்தகைய குழந்தைகள்சார் முன்னெடுப்புகளை ஜெயபாரதி அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார் என்பது வியக்கவைக்கிறது.

இந்தியாவின் மிக முக்கிய சூழலிய வெற்றிப்போராட்டமான விஸ்கோஸ் ஆலையை மூடவைத்ததில் இவருடைய பள்ளிக்குழந்தைகளின் களப்பயண போராட்டமும், ஊரூராகச் சென்று நிகழ்த்திய நாடகங்களும் முதன்மையானவை. இவை எல்லாவற்றையும் தாண்டி, இவருடைய  உறவுகளின் பின்னணி என்பது பெரும் அர்ப்பணிப்பும் தியாகமும் கொண்ட வரலாறுடையது.

ஒரு பெண் குழந்தைக்கு பால்யத்தில் அவளின் பெற்றோர் அளிக்கிற சுதந்திரமும் நம்பிக்கையும் நல்லெண்ணங்களும் அவளை என்னவாக மாற்றுகிறது என்பதற்கு பேருதாரணம் ஜெயபாரதி அவர்கள். காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இறுகப்பிடித்து வாழ்ந்துமறைந்த தன் தந்தையின் சொல் இவரை இவ்வாறாக வார்த்தது என்பதும் உண்மை.

கல்வியாளர் ஜெயபாரதி அவர்கள் ‘சுயகல்வியைத் தேடி’ ஆவணப் பயணத்திற்காக ஆற்றிய உரையாடல் இது. இரு பகுதிகளாக அமைந்துள்ள காணொளிப்பதிவின் முதற்பகுதியாக இது வெளிவருகிறது. நிறைய இடங்களில் உணர்ச்சிவசமடைந்து கண்களை கலங்கச்செய்கிற இந்த ஆவணப்பதிவு நம் அகநம்பிக்கைகான பெருங்குறியீடு. பாரதி கோபால், அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், மதுமஞ்சரி, சிவகுருநாதன் இவர்களின் கூட்டுழைப்பில் எழுந்துநிற்கிறது இக்காணொளி.

‘நம் ஆன்மாவைப் பற்றியிருக்கும் ஆணவ அழுக்கை நீக்குவதுதான் கல்வியின் வேலை’ என்றொரு வரியை இலங்கை ஜெயராஜ் அய்யா அடிக்கடி உரைப்பதுண்டு. அவ்வகையில், சிலருடைய வாழ்வைப்பற்றி நாம் அறிவதுகூட நமக்கான ஆணவ-அழிப்புக் கல்வியாகத் திறவுகொள்ள முடியும். அத்தகைய ஆசிரியமனதைச் சுமந்து அமைதியில் மலர்கிற பேருள்ளம் கல்வியாளர் ஜெயபாரதி அவர்கள்.

எத்தகைய நற்கூறுகளைச் சொல்லி தங்களது குழந்தையை வளர்க்க வேண்டும் என அகம்விழைகிற ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயம் காணவேண்டிய காணொளி இது.

ஸ்டாலின்

கருப்பட்டிக் கடலைமிட்டாய்

[email protected]

முந்தைய கட்டுரைவெண்முரசு கேட்க…
அடுத்த கட்டுரைசினிமாவில் எழுத்தாளன்