அரசியல், ஆசிரியன் – கடிதங்கள்

ஆசிரியர் வேறு படைப்பு வேறா?

அன்புள்ள ஜெ

ஆசிரியர் வேறு படைப்பு வேறா என்னும் கட்டுரை பல ஐயங்களைத் தீர்த்தது. நான் இதை நம் சூழலில் கண்டுகொண்டே இருக்கிறேன். ஒருவர் ஓர் இலக்கியக்கருத்தைச் சொல்லவேண்டுமென்றால் உடனே டிஸ்கிளெய்மர் செய்தாகவேண்டும். நான் இன்னாரின் படைப்புகளை வாசிக்கிறேன் என்று சொன்னாலே கூடவே அன்னாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்ல வேண்டும். பெரும்பாலானவர்கள் அதைச் சொல்வது நம் முகநூல் சூழலில் ஓயாமல் அரசியல் கூச்சலிடும் கும்பலின் தாக்குதலைப் பயந்துதான். வேறுவழியே இல்லை. நாம் அவர்களின் தாக்குதலை தாக்குப்பிடிப்பதே கஷ்டம். சொல்லி வைத்தால் இழப்பு ஒன்றும் இல்லை.

இவ்வாறு ‘அரசியல் ரீதியாக மாற்றுக்கருத்து இருந்தாலும்’ என்று சொல்பவர்களின் இரண்டு வகைகளையுமே சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். சிறப்பான பதிவு. ஒருவகை சும்மா ஒரு அரசியலடையாளத்துக்காக அப்படிச் சொல்கிறார்கள். இன்னொரு வகையினர் உண்மையாகவே அரசியலில் செயல்படுபவர்கள். அரசியலுக்குமேல் இலக்கியத்தை அணுகத் தெரிந்தவர்கள்.

ஜெகதீஷ்

***

அன்புள்ள ஜெ,

ஆசிரியர் படைப்பு வேறுபாடு கட்டுரை ஒரு தெளிவை அளிப்பதாக இருந்தது. நீங்கள் சொல்வது உண்மை. இன்றைக்கு நடுத்தரவர்க்க வாழ்க்கையில் வாழ்க்கைச்சிக்கல்கள் கொஞ்சம் குறைந்திருப்பதனால் ஒரு சலிப்பும் வெறுமையும் உள்ளது. அதனால்தான் அரசியலில் இத்தனை வெறியுடன் இருக்கிறார்கள். அரசியலை கொள்கையாகவோ செயல்பாடாகவோ கொள்ளாமல் வெறுமே கூச்சலிட்டு கத்தி விளையாடும் சீட்டுவிளையாட்டு போல எண்ணிக்கொள்கிறார்கள். நான் அரசியல்ரீதியாகப் பேசுகிறேன் என்று சொல்லும் பெரும்பாலானவர்களுக்கு சில எளிமையான பற்றுகள் மட்டும்தான் உள்ளன. ஆழமான அரசியல்புரிதல்கள் ஏதும் இல்லை. அவர்களுக்கு எழுத்தாளர்களும் அரசியல் கருத்துக்களை சொல்பவர்களாகவே அறிமுகமாகியிருக்கிறார்கள்.

எம்.ராஜேந்திரன்

***

முந்தைய கட்டுரைநற்றுணை கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி