கைவிடு பசுங்கழை
கைவிடு பசுங்கழை -2
பூவிடைப்படுதல்-1
பூவிடைப்படுதல் 2
பூவிடைப்படுதல் 3
பூவிடைப்படுதல் 4
பூவிடைப்படுதல் 5
அன்புள்ள ஜெ,
வணக்கம். நலந்தானே?
பி. எல். சாமி அவர்கள் எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், புள்ளின விளக்கம் முதலிய நூல்களின் தகவல்களை கவிதை வாசிப்புக்காக எந்த அளவுக்கு நம்பலாம்? உதாரணமாக காந்தள் பற்றிக் கூறுகையில், வேலிகளில் படரும் காந்தள் கொடியினை பிற தாவரங்களிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அரிது ஆனாலும் கார்காலத்தில் பூக்கும்போது தனித்துத் தெரியும் என்கிறார். (பேராசிரியர் கு. சீனிவாசன் இத்தகவலை சங்க இலக்கியத்தில் தாவரங்கள் என்னும் நூலில் குறிப்பிடவில்லை.) சாமி சொல்வதிலிருந்து பூக்கும்வரை வெளித்தெரியாதது, மழைக்காலத்தில் பூக்கும் நெருப்பு, மழைக்காலத்தில் பூக்கும் குருதிமலர் என்றெல்லாம் காந்தள் என்னும் படிமத்தை வாசித்தால் மிகைவாசிப்பாகிவிடுமா?
சங்க இலக்கியத்தின் இயற்கை சார்ந்த முழுமையான புரிதலுக்காக, ஒரு கவிதை வாசகனாக யார்யாரை வாசிக்கலாம்?
அன்புடன்
யஸோ

அன்புள்ள யசோ,
பி.எல்சாமி இந்திய அரசுப்பணியில் இருந்த அதிகாரி. தாவரவியலாளர் அல்ல. அவர் சங்க இலக்கியம் மற்றும் பழந்தமிழ்ப்பண்பாடு பற்றி எழுதிய நூல்கள் ஐம்பதாண்டு பழமை கொண்டவை. அவர் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வில் முன்னோடி. அவருக்கு அந்த இடம் உண்டு.
ஆனால் அவருடைய ஆய்வில் தொல்லியல், இயற்கை சார்ந்த பிழைகளும் போதாமைகளும் உண்டு. அவருடைய ஆய்வுகள் முக்கியமானவை, ஆனால் இன்று அறுதியாக எடுத்துக்கொள்ளவேண்டியவை அல்ல.
பேராசிரியர் கு.சீனிவாசன் தாவரவியலாளர். ஆகவே அவருடைய ஆய்வுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்போதுகூட இன்றைய தாவரவியலாளர் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
சங்க இலக்கியம் நூற்றாண்டுகள் தொன்மையான ஒரு பண்பாட்டுவெளி. அதை ’முழுமையாக’ ஒருவரைக்கொண்டே கற்க முடியாது. ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு அறிஞர்களையே நாடவேண்டும். அவர்களில் வெற்று ஆராய்ச்சியாளர் பலர் உள்ளனர். பண்பாட்டுப்பெருமையை போலியாக நிறுவும்பொருட்டு, அரசியல்நோக்குடன் வாசிப்பவர்கள். அவர்களை தவிர்க்கவேண்டும். அறிஞர்களை மட்டுமே கருத்தில்கொள்ளவேண்டும். இன்னும்கூட ஆய்வுகள் போதுமான அளவு நிகழவில்லை.
காந்தள் மலர் பற்றிய உங்கள் வாசிப்புக்கு பி.எல்.சாமியின் கருத்து அவசியமானது அல்ல. காந்தள் புதர்களோடு புதராக படர்ந்திருந்தாலும் எளிதாக கண்டடையத்தக்கதே. ஆனால் நீங்கள் சொல்வதுபோல மழைக்காலத்தில் எழும் நெருப்பு என்பது ஒரு நல்ல வாசிப்பே. அதை குருதிப்பூ என்றுதான் கபிலர் சொல்கிறார்
ஜெ