வாசகனிடம் அணுக்கம்

இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?

அன்புள்ள ஜெ

சென்ற வாரம் முன்பதிவு செய்திருந்த இருட்கனியின் செம்பதிப்பை என் பெயரெழுதி உங்கள் கையெழுத்திட்டு கிடைக்க பெற்றேன். நிறைவான தருணம்.

இப்போது இன்று தீயின் எடை முன்பதிவு செய்துள்ளேன். வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனல், திசைதேர்வெள்ளம், கார்க்கடல், இருட்கனி ஆகியவை மட்டுமே புத்தகங்களாக என் கையில் உள்ளவை. இவற்றில் நான் வாங்கியவை முதற்கனலும் திசைதேர் வெள்ளமும் மட்டும் தான். கார்கடலை செந்தில் குமார் அவர்கள் வாங்கி தந்தார். இருட்கனி, இப்போது முன்பதிவு செய்த தீயின் எடை ஆகியவை இந்த ஆண்டு தமிழ் வருடப்பிறப்பின் போது செல்வா அண்ணா பரிசளித்த தொகையில் வாங்குபவை. இதற்காக நண்பர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.

நேற்று காளி அண்ணாவிடமிருந்து வாங்கிய குருதிச்சாரலில் நீங்கள் அவரது பெயரை காளிக்கு என்று எழுதி கையெழுத்திட்டிருந்தீர்கள். எனது நூலில் சக்திவேல் அவர்களுக்கு என்று எழுதி இருந்தீர்கள். எனக்கு ஒரு ஆசை அடுத்த முறை தீயின் எடையில் சக்திவேலுக்கு என்று அழைக்க முடியுமா என ஒரு ஆசை.

நீங்கள் அறிந்தது தான், ஆசிரியரை நேசிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே தன்னை பெயர் சொல்லி அழைப்பதும் குறிப்பிடுவதும் மேலும் டேய், வாடா, போடா என்பதெல்லாம் பெரும் உவகை தரும் விஷயங்கள். என் உளம் நின்ற நேசத்திற்குரிய முதன்மை ஆசிரியர் நீங்கள்.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

நலம்தானே?

முன்பதிவு நூல்களில் கையெழுத்திடும்போது உடனே அவர் எவர் என நினைவு வரவேண்டும். தவறுதலாக இன்னொரு சக்திவேலுக்கு கையெழுத்திட்டு அவர் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து சீறி எழுந்தால் சிக்கலாகிவிடும்.

பொதுவாக எவரை ஒருமையில், அண்மையில் அழைப்பதென்பது சிக்கல்தான். நான் அரங்காவையோ சென்னை வழக்கறிஞர் செந்திலையோ மனதில்  ஒருமையில்தான் நினைப்பது. பெரும்பாலானவர்களை மகன் இடத்தில்தான் வைத்திருக்கிறேன். ஆனால் அரங்கா தொழிலதிபர். செந்தில் உயரீதிமன்ற வழக்கறிஞர். ஒருமையில் அழைப்பது சரியல்ல. இங்குள்ள மரியாதை வரிசைகள் மிகக்குழப்பமானவை

ஜெ

முந்தைய கட்டுரைபெண்களின் பயணம்,கடிதம்
அடுத்த கட்டுரைவரவிருக்கும் எழுத்து- கடிதங்கள்