அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
குகை ஒரு கனவு. சொந்தமாக வீடு கட்ட மனிதன் தெரிந்துகொள்ளுமுன் இயற்கை அமைத்துத் தந்த இலவச வீடு அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பற்ற மற்ற விலங்குளுக்குத் தரப்பட்டு மனிதனால் ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டது. அல்லது ஒரு விலங்கை விதை எனப்பெற்று மனிதன் என்று புறம்தந்த புவி அன்னையின் கருப்பை அது. குகையை விட்டு மனிதன் இடம் மாறிய பின் அது அங்கே கள்ளர் குகை ஆகியது இங்கே சித்தர் முனிவர் தவசிகள் இடம் ஆயிற்று. பக்தரின் இதயக் குகையில் வாழும் சிங்கமென இறைவன் வர்ணிக்கப்பட்டான். தன் சொந்த குகையை சுமந்து சென்று உள்ளடங்கும் ஆமை புலன் அடக்கத்திற்கு உவமை காட்டப்பட்டது.
இக்கனவு எனக்கு மட்டும் அல்ல இது வேறு பலருக்கும் பொதுக்கனவு. ஒரு கனவு பலருக்கும் பொது நிகழ்வாக இருக்குமா என்ன? ஏன் இருக்காது? ஒருவர் பாதையில் வர மற்றவர் நிழல் இருள் என மறைந்து விட வேண்டும் – நியதி. வெளியேற வேண்டுமானால் ஒருவர் தானே தன் முடிவில் வெளியேற வேண்டும் ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யக்கூடாது.
ஆழம் தூய்மையாக இருக்கிறது. கிளறபடும் குப்பைகள் எப்போதும் மேற்பரப்பில் இருக்கிறது.உள்ளும் புறமும் ஒன்று. விண்ணும் மண்ணும் ஒன்று. யாவும் இருள் கொண்டு அறியப்படுகிறது.. ஒற்றை இருப்பாய், பேரருளாய். ஒரே சமயத்தில் ஏகமும் அனேகமுமாய். நானும் கூட பேரருளின் நிழல் என சிரித்துக் கொள்வேன், சரி…பேசாமல் இரு என்றும் சொல்லிக்கொள்வேன்.
இருள் பெருங்கருணை விண் என்று பேருருவாய் நின்றபோதும் புத்திசாலிகள் விண் நோக்கி செல்லவில்லை. அவ்வளவு தூரமும் காலமும் தேவையில்லை. மண்ணில் புகுந்து இருள் கண்டார்கள். தூரமும் இல்லை காலமும் இல்லை. இறங்கி இணைந்து கொண்டது விண். நுண்ணறிவு – பேரருள் – பேரிருள்.
விண்ணிலும் கூட ஒரே பேரிருளில் புதைந்துதிருத்து அவ்வப்போது மேலிட்டிப்பார்த்து ஒருமையில் மூழ்குகின்றனவோ விண்மீன்கள்?அருணாசலத்திற்குள் ஒரு பெருநகர் கண்டேன் என்று ஒரு முனிவன் தன் கனவைச் சொலி இருக்கிறான்.
பள்ளமெல்லாம் தோண்டமாட்டேன். போர்வையில் புதைந்து கண்களை மூடுவேன். அப்புறம் ஆகாயம். கனவுக்கு நன்றி.
இருந்தாலும் கதை முடிவு – அவன் கிறுக்கன் என்பதற்கு கதை தரும் புற ஆதரங்களை புறக்கணித்து விடுகிறேன். சித்தன் என்பதற்கு கதை தரும் அக ஆதாரங்களை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். எனவே, செல்ல பழகியபின் அப்படியொன்றும் பறிபோய்விடக் கூடியது அல்ல ஆழம்.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
அன்புள்ள ஜெ,
குகை கதையை இப்போதுதான் மின்னூலாக வாசித்தேன். நான் 1998 வாக்கில் ஒரு சின்ன உளச்சிக்கலுக்கு ஆளானேன். அதை இப்போது பேசவிரும்பவில்லை. ஆனால் அது ஒரு ரகசிய அனுபவம். மண்ணுக்கு அடியிலேயே மண்புழு போல வாழ்ந்ததாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அப்படியே குகை என்ற கதையில் வாசித்தேன். அச்சு அசலாக அது என் அனுபவம். மனக்குகைதான்.
ஆனால் இன்றைக்கு அது ஒரு கொடுங்கனவாக இருந்தாலும்கூட அந்த அனுபவம் வழியாக நான் அடைந்த தெளிவும் சில புதிய புரிதல்களும் முக்கியமானவை. என் இன்றைய வாழ்க்கையை அதுதான் தீர்மானிக்கிறது
அனைவருக்கும் அப்படி ஒரு குகைவாழ்க்கை அனுபவமாகாது. அது நல்லதும் அல்ல. ஆனால் குகை போன்ற கதை வழியாக அதை அறியலாமென நினைக்கிறேன்
சாந்தகுமார்