சார்ல்ஸ் ஷூல்ஸ் [Charles M. Schulz] வரைந்த பீனட்ஸ் [நிலக்கடலைகள்] என்னும் காமிக்ஸ் பட்டை இந்து நாளிதழில் முன்பு வெளியாகிக்கொண்டிருந்தது. தமிழ்ச்சூழலில் அதன் நுணுக்கமான பகடிகளைப் புரிந்துகொள்வது கடினம், அமெரிக்க வாழ்க்கை சார்ந்தவை அவை. ஆனால் நீண்ட காலம் கழித்தும் அவற்றின் பல வரிகள் நினைவில் நிற்பதை பிற்பாடு உணர்ந்தேன்.
பகடி என்றால் கேலி அல்ல. மெல்லிய தன்னுரைத்தல்கள். சிறிய இடக்குகள். கொஞ்சம் உளச்சோர்வும் தனிமையிரக்கமும் கொண்டவனாகிய சார்லி பிரவுன் அதன் நாயகன். அவனுடைய நாய் ஸ்னூப்பி ஓர் அறிவுஜீவி. ஒருமுறை அது வானைப்பார்த்தபடி சிந்தனைத் தெறிப்பொன்றை அடைகிறது. “முற்றிலும் அர்த்தமில்லாதவனாக உணரும்போது என் இருப்பு நியாயப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்” நான் அடிக்கடி புன்னகையுடன் நினைவுகூரும் வரி அது.