சிறுமையின் ஆதங்கங்கள்
அன்புள்ள ஜெ
சிறுமையின் ஆதங்கங்கள் கட்டுரையை வாசித்தபோது நான் நினைத்ததையே சொல்லியிருப்பதாக உணர்ந்தேன். நான் என் நண்பர்களுடன் இலக்கிய விவாதங்களில் எப்போதுமே சொல்லிவருவது இதுதான். இந்த அரசியல்சார்ந்து எழுதும் கும்பல்களுக்கு ஒரு அசாதாரணமான மனநிலை உள்ளது. அதாவது அவர்கள் மட்டும் ஏதோ விசேஷமான ஒரு அறிவுத்திறனால் அரசியல்நுண்ணறிவை அடைந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அதெல்லாம் கிடையாது. வாசகர்களுக்கு இவர்கள் சொல்லும் அரசியல் எல்லாம் தெரியாது. இவர்கள் அவர்களின் கண்ணைத் திறந்துவிடும் புனிதகடமை கொண்டிருக்கிறார்கள்.
அது அப்படியே நம்மூர் மதப்பிரசங்கிகளின் மனநிலை. சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். தலைதலையாக அடித்துக்கொள்வார்கள். பார்க்கும்போதெல்லாம் முன்பு எரிச்சல் வரும். பிறகு இளக்காரம்தான். நல்ல இலக்கியவாசகன் வாசித்திருக்கும் நூல்களின் அட்டையைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு ஐம்பதுபக்கம் பொறுமையாகப் படிக்கவோ படித்ததைப் புரிந்துகொள்ளவோ அறிவிருக்காது. அறிவில்லாமலிருப்பதே ஒரு தன்னம்பிக்கையை அளித்துவிடுகிறது. ஆகவே எங்கும் எவரிடமும் துணிந்து கருத்துசொல்ல ஆரம்பிக்கிறார்கள். அறிஞர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தங்களுக்கு புரியாதவற்றை பழிக்கிறார்கள். ஏளனம் செய்கிறார்கள். இந்த முட்டாள்கள் நம்மைச்சூழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சத்தங்களை கேட்காமலிருக்கவும் முடியாது. நம் காலகட்டத்தின் மிகப்பெரிய சிக்கலே இந்த சத்தங்களுக்குச் செவிகளை மூடிக்கொண்டு நம் வழியே செல்வதுதான்.
என்.ஆர்.ராஜ்
***
அன்புள்ள ஜெ
அரசியல்நம்பிக்கை மட்டும் போதும் எவரிடமும் எதையும் பேசலாம், எவரையும் ஆலோசனைசொல்லி வழிநடத்த முயலலாம் என்னும் எண்ணம் கொண்ட அறிவிலிகளால் முகநூல் நிறைந்திருக்கிறது. அந்தக்கும்பலுக்குச் செவிசாய்த்தால் நம் நேரம்தான் வீணாகும். அவர்களுக்கு எதுவும் தெரியாது. வாசிக்கமாட்டார்கள். வாசித்தால் புரியாது. ஒன்றும்செய்யமுடியாது. கற்பாறையில் ஏன் தலையை முட்டிக்கொள்ளவேண்டும்?
எம்.ராஜேந்திரன்
***
அன்புள்ள ஜெ,
நலம்தானே? சிறுமை பற்றிய கட்டுரை வாசித்தேன். இந்தக் கும்பலுக்கு இவர்கள் கக்கும் காழ்ப்புக்கும் கசப்புக்கும் இலக்கிய அங்கீகாரம் வேறு தேவைப்படுகிறது. இவர்கள் இலக்கிய வாசகனை என்னதான் நினைத்திருக்கிறார்கள்? இவர்கள் சொல்லும் நாலாந்தர அரசியல் காழ்ப்புகளை அப்படியே வந்து கவ்வி விழுங்குபவர்கள் என்றா? இவர்களைப்போல ஆயிரம் பதர்களைப் பார்த்தபிறகுதான் இலக்கியவாசகன் வாசிக்கவே ஆரம்பிக்கிறான். அவனுடைய வாசிப்பே இந்த தகரடப்பாக்குரல்கள் மேல் உருவாகும் ஒவ்வாமையிலிருந்துதான் தொடங்குகிறது. இலக்கியத்தில் அவன் எதிர்பார்ப்பது அம்மஞ்சல்லி அரசியலையும் காழ்ப்புகளையும் அல்ல. வாழ்க்கைச்சித்திரத்தையும் அதன் நுட்பங்களையும் மொழியின் அழகையும்தான். அதை இந்த கூட்டத்திடம் புரியவைக்கவே முடியாது
சத்யநாராயணன்