இருத்தலியல் நாவல்கள், கடிதங்கள்

இருத்தலியல் ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ

இருத்தலியல் நாவல்களை வரையறை செய்வதைப் பற்றிய அறிமுகக்கட்டுரை கூர்மையான ஒரு வரையறையை முன்வைக்கிறது. இருத்தலியலில் இருப்பு பற்றிய ஆங்ஸ்ட் இருக்கிறதே ஒழிய இருத்தலுக்கான விடையோ கண்டடைதலோ இருக்கக்கூடாது என்னும் முக்கியமான ஒரு புரிதலை அடைந்தேன். என் மனதில் நான் வாசித்த நூல்களை ஓட்டிப்பார்த்தேன். ஆழமான ஒரு தெளிவு ஏற்பட்டது. அப்படிப்பார்த்தால் தமிழில் துல்லியமான இருத்தலியல்நாவல் என எதையுமே சொல்லமுடியாது என்ற எண்ணமும் ஏற்பட்டது.

ஆர்.நாகராஜ்

***

அன்புள்ள ஜெ

இருத்தலியல்நாவல்கள் பற்றிய குறிப்பை வாசித்தேன். ஆன்மிகமான உள்ளடக்கமோ தரிசனமோ கொண்ட நாவல்கள் இருத்தலியல் நாவல்களாக இருக்கமுடியாது. ஆன்மிகத்திலும் விடையற்ற வினாக்கள் இருக்கலாம். விஷ்ணுபுரத்தில் பெரும்பாலான கேள்விகள் விடையற்றவைதான்.

வெண்முரசில் பீஷ்மர் கதாபாத்திரம்தான் இருத்தலியல்நாயகனாக தெரிகிறார். மூலத்தில் அவர் அறத்தில் நிலைகொண்ட ஒரு பிதாமகர். இதில் ஆழ்ந்த இருத்தலியல் சிக்கல்கொண்டவர். ஆனால் அதை வெல்ல சில ஆசாரங்களை இறுக்கமாகப்பிடித்துக்கொள்கிறார். அதை நம்பி வாழமுயல்கிறார்.

கர்ணன் இருத்தலியல்நாயகனாக இனி நான் உறங்கலாமா, பர்வம் போன்ற நாவல்களில் வருகிறான். ஆனால் அவனுடைய கேள்விகள் இருத்தல் சார்ந்தவை அல்ல. குலம். குடி, அடையாளம் சார்ந்தவை. வெண்முரசின் பீஷ்மருக்குத்தான் அவருடைய வாழ்க்கையே நோக்கமில்லாததாக, எந்த வகையிலும் வரையறை செய்ய முடியாததாக இருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட மிகப்பெரிய இருத்தலியல் நாயகன் வெண்முரசின் பீஷ்மர்தான்

எஸ்.ஆனந்த்

***

முந்தைய கட்டுரைநாம் சுதந்திரமானவர்களா?
அடுத்த கட்டுரைபிரதமன், கடிதங்கள்