புனைவும் தொன்மமும் மாடத்தியும் – கடிதங்கள்

புனைவில் தொன்மங்கள் தேவையா?

லீனா மணிமேகலை

அன்புள்ள ஜெ 

புனைவில் தொன்மங்கள் தேவையா என்னும் கட்டுரை வாசித்தேன். நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். புனைவில் வரும் தொன்மங்கள்தான் அதை நீண்ட மரபுடனும், வரலாற்றுடனும் இணைக்கின்றன. ஆழ்மன அர்த்தங்களை விரிக்கின்றன.

அத்துடன் இன்னொன்றும் உண்டு. எனக்கு ஒரு கதையை வாசித்ததுமே அதிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றும். வெளியேறி வேறு விரிவுக்குச் சென்று அங்கிருந்து அந்தக்கதையை பார்க்கவேண்டும். அந்தக்கதை அப்போதுதான் விரிவடைகிறது. அதற்கு மிக உதவியாக இருப்பது அக்கதையில் இருக்கும் அந்த தொன்ம அம்சம்தான்.

ராஜகோபால் ஜி

***

அன்புள்ள ஜெ

சமீபத்தில் இரு சினிமாக்கள் வந்தன. ஒன்று கர்ணன், இன்னொன்று மாடத்தி. இரண்டுமே சமூகப்பிரச்சினைகளுக்கு தொன்மங்களை எடுத்தாண்டிருந்தன. நம் இடதுசாரிகள் கர்ணனைக் கொண்டாடினர். மாடத்தியை விமர்சித்தனர். மாடத்தி மனிதப்பிரச்சினையை தொன்மமாக ஆக்கி கீழிறக்குகிறது என்றனர். கர்ணன் அவ்வாறு செய்வதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதற்கு லீனா மணிமேகலைமேல் அவர்களுக்கிருந்த தனிப்பட்ட காழ்ப்புதான் காரணம். ஏனென்றால் இடதுசாரிகளால் கலையை அல்லது கருத்தை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஆளைப்பார்த்தே முடிவுசெய்கிறார்கள்.நம்மவரா இல்லையா என்பதுதான் கேள்வி.

ஆனால் இன்னொன்றும் உண்டு. மாடத்தியில் படிமங்கள் மேலே செல்கின்றன. கற்பனையில் விரிகின்றன. கர்ணனில் அவை திட்டவட்டமான வெறும் அடையாளங்களாகவே உள்ளன. ஆகவே நம்மூர் இரும்புத்தலை ரசிகர்களுக்கு இலக்கணப்படி ரசிக்க முடிவதாக உள்ளது. இந்த வேறுபாடு முக்கியமானது என நினைக்கிறேன்.

ஆனந்த்

***

முந்தைய கட்டுரைஇருட்கனி வரவு
அடுத்த கட்டுரைஅறியப்படாத தீவின் கதை, உஷாதீபன்