கடிதங்கள்

 அன்பு ஆசிரியர் அவர்களுக்கு,

தந்தையார் கொரோனா தொற்றால் உயிரழந்து விட்டார். ஆசானாக, நண்பனாக, மிக கடுமையாக உழைத்து என் நல்வாழ்வு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்த என் இறைவன் சென்று விட்டார்.

எல்லா கொறோனா மரணம் போலவே, அருகில் செல்ல முடியாத, யாரும் வீட்டுக்கு வரமுடியாத, என் அன்னையை தேற்ற முடியாத பெரும் சோகம்.

எங்களுக்கு இரண்டாவது பிள்ளை பிறக்க ஒரு வாரமே இருந்த நிலையில் தந்தையார் மறைந்தார். மனைவியையும் அருகில் இருந்தது கவனிக்க முடியாமல், ஆனாலும் இறையருளால் என் தந்தை விருப்பம் போலவே பெண் பிள்ளை நேற்று பிறந்தது.

முதல் குழந்தை வயிற்றில் இருந்த தருணம் வெண்முரசு ஆரம்பித்தது. துபாயில் இருந்தோம்.

பதினைந்து வருட வாசகன் ஆகிறேன் தங்களுக்கு இந்த ஜனவரியுடன். நீண்ட பயணம், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் தங்கள் எழுத்துக்களுடன். துபாயில், தன்சானியாவில், இப்பொழுது கோவையில். வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் தங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.

தாங்கமுடியாத இந்த வலியிலும் மனம் நிலைதவரவில்லை. பெரும் துயரம் அழுத்த, ஆனாலும் விலகி நின்று மனதின் ஒரு பகுதி இந்த சூழ்நிலையை கவனிப்பதை அணு அணுவாக உணர்கிறேன். இலக்கிய வாசகனாக, தங்கள் மாணவனாக அடைந்தது என்ன என்று அறிய முடிகிறது. என்றென்றும் நன்றிகள் தங்கள் திருப்பாதத்தில்..

மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது தந்தைக்கு இறுதி காரியம் செய்ய கூடாது என்று குடும்பத்தினர் கூறியதால் அவை செய்ய முடியாமல் போனது மட்டும் மிக பெரிய வலி. அவ்வாறு இல்லை என்று தெரிந்தும் எதுவும் சொல்ல இயலவில்லை. இனி அவருக்கான என் கடமைகளை செய்து முடிக்க வேண்டும்.

தாழ்மையுடன்,

எஸ்

***

அன்புள்ள எஸ்

இந்த நோய்த்தொற்றுக் காலகட்டத்தில் இதைப்போன்ற பல கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அனைவருக்குமே ஓரிரு வரிகள் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். தந்தையின் இழப்பு என்பது ஒரு காலகட்டத்தின் முடிவு. அதன்பின் நாம் இன்னொருவர் ஆக மாறுகிறோம். அந்த நிலைகுலைவு கொஞ்சநாள் இருக்கும். இந்த நாட்களை கடப்பதே முக்கியம். காலம் அதை பின்னுக்கு கொண்டுசென்றுவிடும்.

தந்தையாருக்குச் செய்யவேண்டியவற்றை பற்றிய கவலை வேண்டியதில்லை. அதற்கு நம்மிடையே மாற்றுச்சடங்குகள் உள்ளன. எப்போதேனும் காசி சென்றால் முழுமையாகவே நீத்தார் கடன்களை நிறைவு செய்துவிடலாம்.

ஜெ

***

வணக்கம் சேர்,

நான் இலங்கையிலிருந்து ஹனீஸ்.

அதிகம் எழுதி, எங்களுக்காக எழுதப்போகும் உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,

உங்களின் குரலை கேட்க வேண்டும் என்று என்மனம் என்னிடம் யாசித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்த செய்தி உங்கள் பார்வைக்கு வந்தடையுமா என்று கூட தெரியவில்லை, ஒரு அசட்டு நம்பிக்கையில் வானிலை அறிக்கை செய்தியைப் போல் என் ஆசை உள்ளது.

உங்கள் குரலை வந்தடைய நான் உங்கள் தொடர்பு இலக்கத்தை தயவுகூர்ந்து கேட்கின்றேன்

ஹனீஸ் மருதூர்

***

அன்புள்ள ஹனீஸ்

என் எண்ணை அனுப்பியிருக்கிறேன். நான் பல தளங்களில் ஒரே சமயம் செயல்படுபவன். ஆகவே பொழுது அரிதானது. ஆயினும் இந்த நோய்த்தொற்றுச் சூழலில் தேவையானவர்களிடம் உரையாடுவது முக்கியமென்பதெனால் நூற்றியிருபதுக்கும் மேல் வாசக நண்பர்களுடன் உரையாட நேரம் வகுத்துக்கொண்டேன். நாம் உரையாடலாம். சில தருணங்களில் நாம் கைகோத்துக்கொண்டு கடக்கவேண்டிய பெருவெள்ளங்கள் வந்துவிடுகின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைபுவியரசு 90, நிகழ்வு அழைப்பு
அடுத்த கட்டுரைஒரு மலையாள வாசகர்