பொலிவதும் கலைவதும்

இத்தொகுதியில் உள்ள கதைகளின் பொதுத்தன்மை என்பது இதன்தலைப்புக்கதையின் பெயராக உள்ளது. பொலிவதும் கலைவதும். வாழ்க்கையை, ஓர் அகவை வரை வந்து திரும்பிப்பார்க்கையில் தோன்றும் வரி அது. ஒரு மந்திரம் போலச் சொல்லிக்கொள்ளலாம். பொலிவதும் கலைவதுமென அனைத்தும் திகழும் ஒரு காலச்சரடின் பெயரே வாழ்க்கை. இக்கதைகள் வெவ்வேறு பொலிதல்களை கலைதல்களை முன்வைக்கின்றன.

சிறுகதை என்னும் வடிவம் ‘துளிகளில் முழுமையை கண்டடையும் பொருட்டு’ உருவாக்கப்பட்டது என்பார்கள். சிறுகதைகளின் முன்னோடிகள் அவ்வண்ணம் அழகிய முத்துக்களை உருவாக்கியிருக்கிறார்கள். நான் சிறுகதையை அழுத்திச் செறிவாக்கி எடைமிக்க ரசத்துளியாக மாற்றப்பட்ட நாவல்கள் போலவும் எழுதியிருக்கிறேன். துளியில் பொலிந்தெழுவதாகவும் எழுதியிருக்கிறேன். ஆட்டக்கதை முதல்வகையானது. முதல் ஆறு இரண்டாம் வகையானது.

இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு,பிரிவு,கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை.

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]

இந்நூலை என் பிரியத்திற்குரிய சுசித்ரா ராமச்சந்திரனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

பொலிவதும் கலைவதும் வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை
முந்தைய கட்டுரை‘குருதிச்சாரல்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைகோவை சந்திப்பு நினைவுகள்