பாரதநிலம் -கடிதம்

அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசிப்பதன் அனுபவங்களில் முக்கியமானது அதில் தொன்மையான ஊர்களை அடையாளம் காண்பதும் அந்த இடங்கள் இந்தியாவில் இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதும். வரைபடத்தை வைத்துக்கொண்டு ஊகித்தபடியே இருக்கிறேன். தேவபாலபுரம் சிந்துவின் அழிமுகத்திலுள்ள தீவாகிய டேபல்.மூலஸ்தானநகரி என்றால் முல்தான்… இப்படியே இந்தியாவை கண்டடைவது என்பது வெண்முரசு அளிக்கும் இந்திய தரிசனம். மகாபாரதம் என்பதை இந்த நவீன காலகட்டத்தில் ஓர் மெய்யனுபவமாக உணரவைத்திருக்கிறது இந்நாவல். எத்தனை ஊர்கள். எத்தனை மலைகள். எவ்வளவு ஆறுகள்….

ஜெயராம் கிருஷ்ணா

***

அன்புநிறை ஜெ,

கிராதம் வாருணப்பயணத்தில்,

“அர்ஜுனன் பீதர்களின் கலத்தில் மேற்குப் பாலைநிலத்தின்  முனம்பிலிருந்த அயிலம் என்னும் துறைநகரிலிருந்து கிளம்பி எட்டுமாதங்கள் பயணம் செய்து பாரதவர்ஷத்தை குமரிமுனம்பு வழியாக சுற்றிக்கொண்டு கிழக்கே சென்று புவியில் இந்திரன் வந்திறங்கும் இடமென்று தொல்கதைகளில் சொல்லப்பட்டிருந்த இந்திரகீலம் என்னும் பறக்கும் மலையை சென்றடைந்தான்” என்று வரும். இந்த கிராதப் பயணப் பகுதியை பலமுறை வாசித்திருக்கிறேன்.

இறந்த கடல் பகுதியிலிருந்து ஜோர்டானின் பாலை நிலங்கள் வழியாக ஒரு கடல் முனம்புக்கு வருவதென்றால் இஸ்ரேல்/ஜோர்டான் கரைகளிலிருந்த பண்டைய துறைமுக சாத்தியங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அயிலா என்றழைக்கப்படட எயிலத் என்னும் இன்றைய இஸ்ரேல் துறைமுகம் கண்ணில்பட்டது.

விக்கியிலிருந்து(https://en.m.wikipedia.org/wiki/Eilat)

On the right, an early Israeli map drawn shortly after the founding of modern Eilat.

Historical “Elath” / Ayla is located at Aqaba, in Jordan; the Israeli map includes the words Hebrew: אֵילַת הרומאית‎, lit. ‘Roman Eilat’

Archaeological excavations uncovered impressive prehistoric tombs dating to the 7th millennium BC at the western edge of Eilat, while nearby copper workings and mining operations at Timna Valley are the oldest on earth.[citation needed]

தற்போது நண்பர் ஷாகுல் ஏறக்குறைய இதே வழியில் யான்பு துறைமுகத்திலிருந்து பாரதவர்ஷத்தை குமரிமுனம்பு வழியாக சுற்றிக்கொண்டு கடல்வழிப் பயணத்தில் இருக்கிறார். அந்த யான்பு துறைமுகம் குறித்து தேடி வாசித்துக் கொண்டிருக்கையில் இந்தத் தகவல் எதிர்பாராமல் இணைந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பயணத்தில் வரும் சிறியகண், முள்ளூற்று போன்ற பொருள் தரும் பெயர்களையும் அந்தப் பாலை வழியின் பல இடங்களின் பெயரோடு (அரேபிய/உருது பெயர்களின் பொருள் அல்லது அதன் மரூஉச்சாத்தியங்களோடு) ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் மனதுக்கினிய ஒரு விளையாட்டு.

மிக்க அன்புடன்,
சுபா

***

முந்தைய கட்டுரைமொக்கவிழ்தலின் தொடுகை
அடுத்த கட்டுரைவிகடன் பேட்டி -கடிதம்