எம்.ஏ.சுசீலா.
அன்பு ஜெ,எம்.குரு வணக்கம்.
ஏழாம் உலகம் படித்த உடனேயே தங்களுக்கு நான் விரிவான கடிதம் ஒன்றை
உங்களுக்கு எழுதி அனுப்பியிருந்தேன்.( 4 வருடம் முன்பு.அது வலைத்தளங்கள் பரவலாகாத காலம் என்பது என்பது என் துர்ப்பாக்கியம்.)
தவிக்க வைத்த ‘ஏழாம் உலகம்’பற்றி,நான் இலேசாகத் தோழியரிடம்
பேச்செடுத்த மாத்திரத்திலேயே ‘அதைப்படிக்கும் மன தைரியம் என்னிடமில்லை’ எனறு புறங்காட்டி ஓடியே போய் விட்டவர்களின் எண்ணிக்கைதான் மிகுதி. அந்த நாவலைப்படித்துப்பேசும் தளத்தில் யாரும் சிக்காத எனக்கு உங்கள் வலை வாசகர்கள் விருந்து படைக்கிறார்கள்.
கஷ்டங்களை துன்பங்களை ஏறெடுத்துப்பார்க்கக்கூட,அவை பற்றி சற்றே அசைபோடக்கூடத்தயங்கும் மானுடக்கூட்டமே மிகுதியாக உள்ள சூழலில்,உங்கள் படைப்பு இந்த அளவுக்காவது வரவேற்புப்பெறுவது ஆறுதல் அளிக்கிறது.
மதுரை திரைஅரங்குகளில் ஒரு வேடிக்கையான காட்சியை முன்பெல்லாம் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.(இப்பொழுதும் அது நடக்கக்கூடும். அங்கிருந்து வந்து விட்டதால் தெரியவில்லை.)’பம்பாய்’ படம் பார்க்க வரும் கூட்டம் மிகச்சரியாக அரவிந்தசாமிக்குக்குழந்தைகள் பிறந்ததும் எழுந்துபோய்விடும்.அதே போல ‘சேது’ படத்தில் விக்ரமுக்கு மூளைக்கோளாறு வந்ததும் இடத்தைக்காலி செய்து விடும்.தொடர்ந்து வரும் துயர சம்பவங்கள், தங்களைப்பாதிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை.
திரைப்படங்களின் நிலையே அப்படி என்றால்….இலக்கியத்தில்…..?
ஜனரஞ்சக இதழ்கள் கொடிகட்டிப்பறப்பது மக்களின் இந்த உணர்வைப்புரிந்து வைத்திருப்பதனால்தானே? இப்பொழுதும் கூட ‘நான் கடவுள்’தான் பரவலான வாசகர் கூட்டத்தை உங்கள் ஏழாம் உலகம் நோக்கித்திருப்பியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.எப்படியோ…நல்ல இலக்கியங்களின் பக்கம் மக்கள் வருவது நல்லதுதானே?
நன்றி,எம்.ஏ.சுசீலா
—
எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை
8888
அன்புள்ள ஜெயமோகன்,
திடீரென்று ஏழாம் உலகம் பற்றி எல்லாருமே பேசுகிறார்கள். காரணம் பாலாவின் ‘நான் கடவுள்’ படம்தான் என்று நினைக்கிறேன். அது ஒரு நல்ல விஷயம்தான். சினிமாவினால் அப்படி ஒரு நல்ல காரியமானவ்து நடக்கட்டுமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏழாம் உலகத்தில் உள்ள அருமையான உரையாடல்கள்தான் அந்த நாவலின் பலமே. அதில் உள்ள நக்கல் ஆழமான ஆன்மீக விசாரமாக மெல்லமெல்ல மாறுகிறது பல இடங்களில். நான் அப்படி மனம் விட்டு சிரித்து பிறகு நிறைய சிந்தனைசெய்த இடம் என்றால் அது ‘நூறுகோடி ரூபாயாம்..பூ’ என்று அகமது சொல்லுவதுதான். பேப்பரில் சத்யம் ஊழல் ஆயிரம் கோடி பங்குச்சந்தை வீழ்ச்சி ஆயிரம்கோடி என்று வாசிக்கும் நம்மைப்போன்ற நடுத்தவர்க்க கழுதைகள் யோசிக்க வேண்டிய இடம் அது
சுந்தர்