கோவை சந்திப்பு நினைவுகள்

கோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.

வாசிப்பு அகச்செயல்பாடு. அது உருவாக்கும் உணர்வெழுச்சி மிக தீவிரமானது. நமது ரசனைகளை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத நிலை சோர்வடைய செய்வது. அந்த உளநிலையை  மாற்றும் பொருட்டு நீங்கள் உங்கள் வாழ்வில் இலக்கிய  வாசகர்களை சந்தித்து கொண்டு இருக்கிறீர்கள். அது உருவாக்கும் தீவிரமான உள்வட்டம் மிகவும் பெரிதாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (20,21 மார்ச் 2021) நடைபெற்ற முதல் வாசகர் சந்திப்பில் நான் பங்குபெற வாய்பளித்தமைக்கு நன்றிகள்.

நீங்கள் கொண்டிருக்கும் செயலூக்கத்தினை காண்பதற்காகவேனும் ரெண்டு நாட்கள் எல்லா வாசகர்களுக்கும் வாய்க்க வேண்டும். 20ஆம் தேதி காலை 9.30 யிலிருந்து 21ஆம் தேதி மாலை 3 மணி வரை நீங்கள் நிகழ்த்திய உரையாடல், இந்த இரு நாட்கள் வந்திருக்கும் அத்தனை வாசகர்களுக்கும் இலக்கிய தளத்தில்  புதிய திறப்புகளையும், முக்கிய அடிப்படைகளையும் அளிக்க வேண்டும் என்கிற தீவிரம் மலைக்க வைத்தது. ஒரு தொடர் செயல்பாடாக இலக்கியத்தில் நிகழும் இந்த அறிவு பகிர்தல் உங்கள் வழி எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

வாசிப்பில் நிகழும் முக்கிய செயலான தவறான தொடர்புறுத்தல் ( Association Fallacy) பற்றி நீங்கள் கூறிய விளக்கம் இனி வாசிப்பின் ஊடாக வரும் கவன சிதறலை தவிர்க்க உதவும். அது உருவாக்கும் பிழை , வாசிப்பில் ஏற்படும், நிகழ்வில் வாழும் அனுபவத்தை (Live in the Situation)இல்லாமலாகிவிடும்.

ஒரு விவாதத்தில் மைய  கருத்தை (Frame of Focus)  பற்றிய உரையாடலில் விவாதம் அதன் மையத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டிய அவசியத்தை தெளிவாக விளக்கினீர்கள். பேசப்படும் கருப்பொருளின் உயர்வான தொடர்பனாலும் ( High Association) மலிவான தொடர்பாக இருந்தாலும் ( low association ) விவாதத்தின் மட்டுறுத்துனரால் மறுக்கப்பட்டு விவாதத்தின் மையத்தோடு இயைந்து செல்வது தான் தெளிவான தீர்வு தரும் விவாதமாக அமையும் என்பதையும் விளக்கினீர்கள்.

ஒரு உரையாடலில் பார்வையாளருக்கு உள்ள முக்கிய தடுமாற்றங்களை தவிர்க்கும் காரணிகளை  இந்திய குருகுல மரபில் எவ்வாறு பழக்கி கொண்டுள்ளார்கள் என கூறினீர்கள். பேச்சாளருக்கு முன் அமர்ந்து உள்ள பார்வையாளன் மூன்று காரணிகளால் சிதறப்படுகிறான் ஆணவம் (Ego), அனுபவம் ( Experience ) உணர்ச்சிகள் (Emotion). ஒரு உரை நம்மை அடையும் போது அதில் கூறப்படும் கருத்துகளால் நாம் உள்ளுக்குள் சீண்டப்பட்டு பேச்சாளரை மனதில் நம் பதில்களால்   மறுத்து கொண்டே இருத்தல் ஆணவ சிதறல் ( Ego Scattering ). உரையில் வெளிப்படும் கருத்துகளில் நம் அனுபவங்களை செலுத்தி அதில் மூழ்கிப் போதல் அனுபவ சிதறல்  ( Experience Scattering ) . உரையோடு  உணர்ச்சிகரமாக நம்மை இணைத்து கொண்டு நெகிழ்வடைதல் உணர்வு சிதறல் (Emotion Scattering ) . இந்த மூன்று காரணிகளையும்  பார்வையாளன் முழுமையாக தவிர்க்கும் போது தான் மனதில் சிந்தனைகள் எழாமல் ஒரு உரையை முழுமையாக உள்வாங்க முடியும். நிச்சயம் இந்த திறப்பு எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

புதிய வாசகர்களின் படைப்புகள் பற்றிய விவாதத்தில், படைப்பின் அமைப்பில் ( Craft Structure ) நிகழும் தவறுகளை விளக்கினீர்கள். படைப்பு அதன் கூறுமுறையை மாற்றி கொண்டே இருப்பது அதன் வடிவ ஒருங்கை சிதைக்கும் மற்றும் வாசகனின் வாசிப்பில் பெரும் சவாலை ஏற்படுத்தும். ஒரு படைப்பில் ஒரு நிகழ்வுக்கும் மற்றொரு நிகழ்வுக்கும் இடையில் உள்ள ஒழுக்கு (Transition ) இளம் படைப்பாளிகளுக்கு பெரும் சவாலாக அமைவது பற்றி கூறினீர்கள்.  Stitching Error (பிணைப்பு பிழை)  என்ற தவறு நிகழாமல் இருக்க படைப்பாளி உரையாடல்  (dialect) என்ற வடிவத்தை கதை மாந்தர்களுக்குள் நிகழ்த்தினாலொழிய ஒரு சிறந்த இலக்கிய படைப்பு உருவாக்க முடியாது என்று தெளிவுபடுத்தினீர்கள்.

ஒரு நல்ல எழுத்தாளராக உருவாக எழுத்து பயிற்சி தேவை  (practice) தினமும் அதற்கென நேரம் ஒதுக்கி செய்து கொண்டே இருப்பது தான் அடிப்படை பயிற்சி என்றும், அதன் பின் அந்த படைப்பை எந்த வகையில் வெளிப்படுத்த (Conceive) போகிறீர்கள் என்பதை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதை விளக்கினீர்கள்.  இறுதியாக படைப்பாளியாக நீங்கள் உருவாக்கும் படைப்பின் நோக்கம் ( Reason for work ) சமகாலத்தை காட்டுவதால் ( Contemporary ) , நேரடியான அனுபவம்  (Personal Experience)   மானுட உணர்ச்சிகளை கூறுவதால் ( HUman Emotions ) ஆகிய  மூன்று நோக்கங்களும் பெரும்பாலும் இளம் படைப்பாளிகள் கொண்டிருப்பார்கள். நிச்சயம் இந்த மூன்று காரணத்திற்காக இலக்கியம் படைக்க படலாகாது என்று கூறினீர்கள்.

படைப்பு உருவாக மூன்று அடிப்படை நோக்கங்கள் எழுப்பப்பட வேண்டும். அவை மானுடத்தை நோக்கிய கேள்வி (Quest) ,மானுடத்தின் உலகளாவிய பிரச்சனை (Problem) , தரிசனம் (Vision) இவையே படைப்பு உருவாவதற்கான ஆதார நோக்கமாக இருக்க வேண்டும் இந்த ஆதார நோக்கங்களை நாம் அறிவதற்கு தத்துவத்தின் மீது தேடலும் முறையான அறிவை கொண்டிருப்பதன் அவசியத்தை கூறினீர்கள்

தத்துவம் தேடலும், இலக்கிய தேடலும்  மானுடத்தின் தீரா கேள்விகளை நோக்கி தான்  கூட்டி செல்கிறது.ஆனால் தத்துவம் நேரடியாக சிந்தனைகளின் (ideas ) வழியாக தர்க்கபூர்வமாக இயங்குகிறது. இலக்கியமோ புனைவின் (Fiction ) வழியாக மொழியில் வனைந்து  படிமங்கள் (Images), குறியீடுகள் (Metaphor), உருவகம் (Allegory ) என பல கருவிகளின் உதவியோடு வெளிப்படுகிறது. இலக்கியம் தத்துவ கேள்விகளை தவிர்த்து வெளிப்படும் போது கலைப்படைப்பாக மட்டும் நிலைக்கிறது , அதுவே தத்துவ கேள்விகளை நோக்கி எழுதப்பட்ட இலக்கியங்கள் அனைத்தும் காலம் கடந்து நிற்கும் செவ்வியல் படைப்புகளாக வரலாற்றில் நிலை பெறுகின்றன என்று கூறினீர்கள்.

எழுத்தாளன் இளமையில் அனுபவித்த பாடுகள் அவனை எழுத்தை நோக்கி செலுத்த அல்லது அந்த அனுபவங்கள் உள விசையை உருவாக்கும் காரணியாக இருப்பது முழுவதும் முக்கியமில்லை என்றும் , வெறும் யதார்த்தவாத படைப்புகளுக்கு அந்த நாட்களின் நினைவுகள்  உதவியாக இருக்கலாம் ஆனால் நாம் வாழ்ந்திராத ஒரு காலகட்டத்தை, மானுட அவலத்தை அதன் தீவிரத்தை எழுதிய பேராசான்கள் பல பேர் கடின வாழ்க்கை   வாழாதவர்கள் தான் என்று கூறினீர்கள்.  பெரும் நிகழ்வுகள் தான் உண்மையில் இலக்கியத்திற்கான கருப்பொருளாக கொள்ள வேண்டும், அது தான் எழுத்தாளன் இந்த சமுகத்திற்கு ஒரு கருவியாக இருந்து கடந்த காலத்தை அதன் மகத்துவத்தை அது வழி வரும் பண்பாடு, மரபு, கலாச்சாரத்தை அளிப்பதாக அமையும். எழுத்தாளனாக நாம் வெறும் குமிழியாக தான் இருக்கிறோம், ஆனால் நம்மால் உருவாக்கப்பட்ட அந்த படைப்பு ஒரு மலையென சமூகத்தில் நிலை பெற்றுவிடும்  என்றீர்கள்.

எழுத்தாளன் தன் சொந்த நிலத்தை சுற்றியே புனைவை உருவாக்குதல் அந்த நிலம் அதை சுற்றியுள்ள இடங்கள் வாழ்வோடும் நினைவுகளோடும் நெருங்கிய தொடர்புடையது. நாளடைவில் அந்த இடங்கள்  குறியீடுகளாக மாறி மனதில் தங்கி விடுவது தான் புனைவு எழுத்தாளனுக்கு உதவியாக இருக்கிறது என்றும்,நாம் அதிக நாட்கள் புழங்காத  வேறு ஒரு நகரத்தை குறியீட்டு அடையாளமாக மாற்ற முடியாது என்றும் கூறினீர்கள்.

கவிதை பற்றிய உரையாடலில், நல்ல மொழிபெயர்ப்பு கவிதை படைக்க, நேரடியான மொழிபெயர்ப்பை முதலில் வடித்து கொண்டு பின் அந்த வடிவத்திலிருந்து வார்த்தைகளை குறைத்து கவித்துவமான வரிகளில் அதிலிருந்து ஒரு கவிதையை படைத்தால் மொழிபெயர்ப்பு செறிவு உள்ளதாக இருக்கும் என்றீர்கள். கவிதை அடுத்த அடுத்த வரிகளில் தாவி தாவி மேலே சென்று கொண்டிருக்க வேண்டும், அதனால் எப்போதும் எளிமையான தளத்திலிருந்து ஒரு பிரம்மாண்ட தளத்தை நோக்கி கவிதையை செலுத்துதல் சரியான வடிவமாக இருக்கும். கவிதை என்றும் வரிகளால் தான் நினைவுகூரப்படுகிறது எனவே கவிதை மொழி எப்போதும் கூர்மையாக இருக்க வேண்டும் என்று கூறினீர்கள்.

இரண்டு நாட்களும் உங்கள் தனிப்பட்ட வாழ்வனுபவங்கள், உங்கள் பயண நாட்கள் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டவை அனைத்தும்  வாசகனாக, எழுத்தாளனாக புதியவர்கள் இலக்கியத்தினை  தீவிரமாக அணுக வேண்டியதன் அவசியத்தை பற்றி தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

இரண்டு நாட்களும் அழகான ஒரு இயற்கை சூழலில் எந்த சமரசமும் இல்லாமல் மிக நேர்த்தியாக  இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்திய அனைவருக்கும்   மனமார்ந்த நன்றிகள். இந்த இலக்கிய சந்திப்பில் நமது ரசனை சார்ந்த ஒரு நட்பு வட்டம் உருவாகிறது.  நிறைவான இரண்டு நாட்களை என்  வாழ்வில் உருவாக்கி தந்த உங்களுக்கு எப்போதும் என் நன்றிகள்.

என்றும் வாசிப்புடன்

சரவணன்

புதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை

புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…

முந்தைய கட்டுரைபொலிவதும் கலைவதும்
அடுத்த கட்டுரைஆலயம், இறுதியாக…