இரவு- ஒரு வாசிப்பு

இரவு வாங்க

அன்புள்ள ஜெ

இரவு நாவலை வாசித்து முடித்தேன். வாசிக்க ஆரம்பிக்கும் போதே இதை இரவில் மட்டும் படிக்க வேண்டும் ெவளிச்சம் எதுவும் இல்லாமல் குறைந்த செல்பேசியின் ஒளி கொண்டே படிக்க வேண்டும் என்று தீர்மானித்துதான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு இரவில் எவ்வளவு படிக்க முடியுமோ படித்து மீண்டும் மறுநாள் இரவில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் அது ஒரு வித்யாசமான அனுபவம் தான். இரண்டாவது நாள் படிக்கும் தீவிரத்தில் மனதில் இரவை ருசிக்க ஆரம்பித்து விட்டேன். இல்லையென்றால் அப்படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

அதில் இரவு வாழ்க்கை வாழக்கூடிய அனைவரும் மிகு புனைவு வாதிகளாக தெரிந்தார்கள். யாராவது இந்த இரவு மோசம் என்று சொல்ல மாட்டார்களா, அப்படி, எப்படி இரவில் சந்தோஷமாக வாழ முடியும், இது பொய் இது வெறும் பிதற்றல் என்று மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தது. எனக்கே வித்யாசமாக இருந்தது. ஏன் இப்படி மனதில் தோன்றிக் கொண்டு இருந்தது என்று தெரியவில்லை.

ஆனால் உள்ளூர ஒரு ருசி உருவாகியிருந்தது இரவின் மேலே. அந்த ருசியை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பல தர்க்கங்களை சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருந்தது.

கடைசியில் மேனன் சரவணை பார்த்து இந்த இரவு வாழ்க்கை வேண்டாம் நீ போய் விடு என்று சொன்ன போது இந்த வார்த்தைக்குத் தான் என் மனம் ஏங்கிக் கொண்டு இருந்திருக்கிறது. அதை அவர் சொன்னபோது பார்தையா அவர் சொல்வது தான் உண்மை, என்று அப்போது வரை நெருடல்களும், ஒரு வகையான ஏக்கமாக இருந்த மனம் சட்டென்று மகிழ்ச்சி அடைந்தது. நானே கொஞ்சம் திடுக்கிட்டேன்.

ஆனால் அதன் பின் மீண்டும் மீண்டும் கற்பனையில் இரவை நானே உருவகித்துக் கொண்டேன்.

சரவணன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு போய் விட்டானோ என்று தான் நினைத்தேன். ஆனால் அவன் வேறொரு நிலைக்கு போய்யிருந்தான். அவன் இரவை கனவாக எண்ணவில்லை. மாபெரும் தேடலுக்கான ஊற்றாக நினைத்திருக்கிறான்.

சாக்த வழிபாடு பற்றி வரும் போது என் மனதில் தேவி சுக்தத்தில் யா தேவி சர்வ பூதேஷி சாயா ரூபேண சமஸ்ஸிதா என்ற வரி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. அவள் எங்கோ ஒளி முன்னே நின்று கொண்டு, அவளுடைய நிழலைத்தான் இரவாக ஆக்குகிறாளோ என்று..

மேலும் அந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திர முகங்களும் துல்லியமாக மனதில் உருவகித்துக் கொண்டேன். ஆனால் சரவணனை மட்டும் நாவலாசிரியராக எண்ணிக் கொண்டேன். எனக்கே அப்பதமாக இருந்தது. ஆனால் மனம் ஒரு முகத்தை உருவகித்துக் கொண்டால் அது சரிதான் என்பதற்கு நியாயங்கள் தான் தேடுகிறதே தவிர மாற்றவில்லை. நானும் சரி இருந்து விட்டு போகட்டுமே, என்று விட்டு விட்டேன்.

இரவு பெண் போல, உக்கிரமும், அழகும், ஆவேசமும், கனவும், என்று எல்லாம் கலந்தும் நிறைந்தும் இருக்கிறது. சில நேரங்களில் “சாயா” வாகவும் தான்…..

முத்துமாணிக்கம்

இரவு- கடிதம்

இரவு – திறனாய்வு

இரவு பற்றி…

இரவு ஒரு கடிதம்

இரவும் கவிதையும்]

இரவு -கடிதம்

இரவு ஒரு கடிதம்

இரவு நாவல் -கடிதம்

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – அனுபவம்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 13