விழிநிறைக்கும் கலை
அன்புள்ள ஜெ
விழிநிறைக்கும் கலை கட்டுரை ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது. பொதுவாகவே நமக்கு கலை என்பது சிறுபான்மையினருக்கு உரியது என்னும் எண்ணம் உள்ளது. அது உண்மையும்கூட. சிறுபான்மையினருக்கான கலை சிறிய பட்ஜெட்டில்தான் இருக்கும். ஆகவே கலைப்படம் என்றால் சிறியபடம் என்று புரிந்துகொண்டிருக்கிறோம்.
அத்துடன் நாம் கலையை ஒரு கலைஞனின் ஆன்மவெளிப்பாடாக நினைக்கிறோம். அது கூட்டுக்கலை என்றால் நமக்கு அது கலை அல்ல ஒரு ஏற்பாடுதான் என்று நினைக்கிறோம். ஆகவே பெரிய படங்கள்மேல் நமக்கெல்லாம் ஓர் ஒவ்வாமை உள்ளது
நாம் பெரிய படங்களில் இயக்குநரின் ஆன்ம உண்மையை தேடுகிறோம். பெரும்பாலும் அது அங்கே இருப்பதில்லை. அங்கே பொதுவாக திரண்டுவந்த உண்மையே உள்ளது. ஆனால் இந்த நூறாண்டுகளில் இந்த பெரிய படங்கள் உருவாக்கிய வரலாற்றுச்சித்திரம் என்ன என்பது மிகமிக முக்கியமான ஒன்று. எந்த கலைப்பட இயக்கத்தைவிடவும் இது முக்கியமானது.
ஜி.கணேஷ்
அன்புள்ள ஜெ,
விழிநிறைக்கும் கலையை ஆச்சரியத்துடன் படித்தேன். படித்தபின் தலைகீழாக யோசித்தேன். சோழர்கால புடைப்புச்சிற்பம் முதல் இன்றைய சினிமா வரை. நானே அஜந்தா ஓவியங்களில் திருவிழா, ஊர்வலம் ஆகியவற்றைப் பற்றி ஒரு குறிப்பை எழுதியபோது அது 70 எம்எம் படம் போல இருக்கிறது என்று எழுதியிருந்தேன்.
இந்த விழிநிறைக்கும் கலை என்பது குகையோவியங்களில் இருந்தே தொடங்குகிறது என நினைக்கிறேன்.
எம்.சரவணன்