புதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்

அன்பின் ஜெ

வணக்கம் நான் உங்களை கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து வாசித்து வந்தாலும் இதுவரை நீங்கள் நடத்திய எந்த ஒரு நிகழ்வுக்கும் வந்ததில்லை கூச்சம் காரணமாகவே தவிர்த்து வந்தேன் .அதுமட்டுமல்லாமல் நான் இதுவரை இலக்கியம் தெரிந்த ஒரு நபரை கூட நேரில் பார்த்து உரையாடியது இல்லை. அது மனக்குறையாகவே எனக்குள் இருந்தது.அதனால் இந்த முறை தளத்தில் அறிவிப்பை பார்த்தவுடனேயே பதிவு செய்துவிட்டேன் .எனக்கு வருகை உடனடியாக உறுதி செய்யப்பட்டு மின்னஞ்சல் வந்தது உங்கள் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பு தரத்தைப் பற்றி பல கடிதங்களில் வாசித்து இருந்தாலும் அதை இந்த முறை நேரில் பார்த்து பிரமித்துப் போனேன்.

கதிர் அண்ணா மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து அனைவரையும் நிகழ்விடத்திற்கு சரியான நேரத்தில் வரச் செய்தார்கள் கூகுள் மேப் உதவியுடன் நாங்கள் வந்த கார் நிகழ்வு இடத்தைத் தாண்டி அடுத்த சாலையில் இறங்கியது உள்ளே சென்றவுடன் மூன்று மான்கள் எங்களை வரவேற்றna, ஆனால் கொஞ்ச தூரம் சென்ற பின்னர் அது தவறான பாதை என்று தெரிந்தது, பின்னர் பாலு அண்ணாவிடம் வழி கேட்டு திரும்பி சரியாக வந்து சேர்ந்தோம்.பண்ணை வீட்டின் வாசலிலேயே கதிர் அண்ணா எங்களை வரவேற்றார்,நான் வந்த பொழுதே பல நண்பர்கள் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாலு அண்ணா என்னை உள்ளே சென்று குளித்து விட்டு வருமாறு கூறினார்.

நான் உள்ளே செல்லும்போது சார் உள்ளேதான் இருக்கிறார் என்று சொன்னார், நான் எவ்வளவு முறை கற்பனை செய்து பார்த்த தருணம் இது. சட்டென்று கதவை திறந்து நீங்கள் வெளியே வந்தவுடன் என்னைப் பார்த்து புன்னகை செய்து பின்பு என் ஊர் பெயர் பற்றி விசாரித்தீர்கள்.

நான் குளித்துவிட்டு வரும்பொழுதே உரையாடல் தொடங்கியிருந்தது முதலில் நீங்கள் வாசிப்பில் விவாதத்தில் செய்ய படும் தவறுகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தீர்கள், அதை உங்களுக்கே உரிய பாணியில் பல வகையக பிரித்து கூறினீர்கள், இதையெல்லாம் நான் உங்கள் தளத்தில் ஏற்கனவே படித்திருந்தாலும் அதை நீங்கள் கூறி நேரில் கேட்கும் போது தெளிவாக தொகுத்துக்கொள்ள முடிந்தது அதன்பின் மதிய உணவிற்கு பிறகு புதிய வாசகர்களின் படைப்புகளை விவாதித்து அதன் நிறை குறைகளையொட்டி விவாதம் சென்றது.

பின் உங்கள் நிகழ்வுகளின் சிறப்பம்சமாகிய மாலை நடை கிளம்பினோம் மாலை நடை செல்லும் பொழுது பல நண்பர்களுடன் சுற்றி இலக்கியம் பற்றி உரையாடிக் கொண்டே வந்தேன் அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, நீண்ட நடைக்குப் பின் ஒரு குன்றின்மீது அமைந்திருக்கும் பெருமாளை தரிசித்து விட்டு மலை விளிம்பில் நின்று சமவெளியை அந்த அந்தி நேரத்தில் பார்த்தது இந்த நாளின் மற்றும் ஒரு அழகிய தருணம்.

இருளில் திரும்பி பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.  வந்து சேர்ந்தவுடன் மீண்டும் உரையாடல் ஆரம்பித்தது இந்த இரவு உரையாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத உரையாடலாக அமைந்தது. நீங்கள் கூறிய அனைத்தையும் சிரித்துக்கொண்டே கண்களில் நீர் வழிய கேட்டுக் கொண்டிருந்தோம். பின் இரவு உணவு முடிந்து மீண்டும் உரையாடல், முடிக்க மனமில்லாமல் 12 மணிக்கு எழுந்து உறங்கச் சென்றோம். அதன்பின்னும் நீங்களும் உங்கள் நண்பர்களும் வெளியில் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கேட்க முடிந்தது. உங்களின் சிரிப்பு சத்தம் காதில் கேட்டுக் கொண்டிருக்கவே அப்படியே தூங்கிப்போனேன்.

காலை ஆறு மணிக்கு எழுந்து சில நண்பர்களுடன் இலக்கியம் பேசியபடி காலை நடை சென்று வந்தோம், நாங்கள் திரும்பி வரும் பொழுது நீங்கள் எழுந்து உரையாடலை துவக்கி இருந்தீர்கள், உங்கள் உரையாடலில் நீங்கள் முக்கியமாக குறிப்பிட்டது தமிழில் எழுத அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன அதைவிடுத்து எளிய அன்றாட எதார்த்தங்களை எழுதாமல் பெரிய கனவுகளுடன் பெரிய நிகழ்வுகளைப் பற்றி எழுத வேண்டுமென்று அழுத்தமாக குறிப்பிட்டிர்கள்.

நீங்கள் உரையாடலுக்கு இடையில் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் பல நண்பர்கள் குறிப்பெடுத்து நாங்கள் சென்ற பின் அதை எங்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்கள். மதியம் ஒரு மணிக்கு நிகழ்வு முடியும் தருவாய் நெருங்கியது அப்பொழுது ஒரு நண்பர் சிற்பங்களையும் வரலாறையும் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டார் சொல்ல நேரம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதன்பின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுப்படமும் பின் ஒவ்வொருவராக உங்களிடம் தனியே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.  என்னைப் போலவே பல நண்பர்கள் புத்தகத்தில் உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள், அதன் பின் உணவு உண்டுவிட்டு ஒவ்வொருவராக உங்களிடம் பேசி விடைபெற்றோம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் வாசகர்கள் வந்து கைகுலுக்கி செல்லும் பொழுது உங்கள் முகத்தில் சட்டென்று வந்து குடிகொள்ளும் கனிவை பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

உங்கள் நண்பர் ஈரோடு கிருஷ்ணனை நீங்கள் நிறைய எழுதி எழுதி அவரும் உங்கள் புனைவின் ஒரு கதாபாத்திரமாகவே ஆகிவிட்டார் அவரை நேரில் பார்க்கும் பொழுது உங்கள் புனைவின் ஒரு கதாபாத்திரத்தை நேரில் பார்க்கும் அனுபவமாகவே இருந்தது குட்டப்பனை போல கிரிதரனை போல புத்தகத்தில் இருந்து இறங்கி வந்தவரைப் போல் இருந்தார்.

நிகழ்விடம் உணவு அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது அதற்கு உதவிய பாலு அண்ணா மற்றும் கதிர் அண்ணா அவர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் நன்றிகள் பல. எந்தவிதச் சச்சரவுகளுமன்றி 30 நபர்கள் கூடி தீவிரமாக இலக்கியம் வரலாறு தத்துவம் மட்டும் இரண்டு நாட்கள் பேசினோம் என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை (யாரிடமும் சொல்லப் போவதுமில்லை).

ரயிலில் செல்லும் பொழுது தொண்டையை அடைக்கும் அளவிற்கு ஏக்கமாக இருந்தது என் வாழ்நாளில் அருமணி போல் நான் பாதுகாக்க போகும் இரண்டு நாட்கள் அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது இனி இவ்வாறு வரும் ஒரு நிகழ்வையும் தவற விடப் போவதில்லை.

தினேஷ் ரவி

திருச்சி

அன்புள்ள தினேஷ்

புதியவாசகர் சந்திப்பு என்பது நீங்கள் சொல்லும் அந்தத் தயக்கங்களை களைவதற்காகத்தான். அறிவியக்கம் என்பது தனித்தனியாக உள்ளங்களில் நிகழ்ந்தாலும் ஒட்டுமொத்தமாக அது ஒரு பெரும்பெருக்கு என்று உணர்வதற்காக. நாம் தனியாக இல்லை. நாம் எளியவர்களும் அல்ல. நாம் சேர்ந்து இக்காலகட்டத்தின் அடித்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வே செயல்பட ஊக்கமளிப்பது

ஜெ

முந்தைய கட்டுரைஉலகவரலாறு- ஒருவரைபடம்
அடுத்த கட்டுரைகொதி, அறமென்ப- கடிதங்கள்