படையல், அறமென்ப- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது கதையை கடைசியாகவே வாசித்தேன். இந்தக்கதைகளின் தொடக்கம் அது என்பதனால் அது பலவகையிலும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அந்தக்கதையில் மனித மனம் இன்னொரு மனித மனத்துடன் கொள்ளும் உறவில் இருக்கும் முடிவில்லாத சிக்கல் ஒன்று உள்ளது. தீர்க்கவே முடியாத விஷயம் அது. நெருங்க முயல்கையில் அகல்வது. விலகிச்செல்ல முடியாமல் பிடித்துக்கொள்வது.

நான் இந்த இருபத்தைந்து கதைகளை வாசிக்கையில் ஓர் எண்ணம் ஏற்பட்டது. நீங்கள் எழுதி எழுதி அடைவதாக இருக்கலாம். ஆனால் ஒரு முன்னகர்வு இக்கதைகளில் உள்ளது. முந்தைய நூறுகதைகளிலும் அற்புதமான தருணங்களும் தரிசனங்களும் இருந்தன. ஆனால் பிரித்தறியவே முடியாத புதிர்க்கணங்கள், விடையே அறியாமல் திகைக்கவைக்கும் இடங்கள் பெரும்பாலும் இல்லை. இந்தக்கதைகள் பலவற்றில் அவைதான் உள்ளன. ஆகவே இந்தக்கதைகளை இன்னொருவகையானவை, ஒருபடி மேலானவை என்றுதான் சொல்வேன்

கந்தர்வன், யட்சன், திரை, படையல், இருளில் போன்ற பல கதைகள் முன்வைக்கும் மெய்மை சார்ந்த புதிர்களுக்கு கதையில் பதில் இல்லை. வாசகன் கண்டடையவேண்டியவை அந்த பதில்கள். அதற்ககவே இந்தக்கதைகளை படித்துக்கொண்டே இருக்கிறேன்

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

இந்த இருபத்தைந்து கதைகளில் படையல் போன்ற கதையில்தான் உங்கள் ஆன்மிகத்தேடல் வெளிப்படுகிறது. பழைய கதைகளில் வந்த முதுநாவல் கதையின் நீட்சி இது. ஆனால் இதுதான் உச்சம் என நினைக்கிறேன். அந்தக்கதையில் ரத்தச்சோறு எதைக்குறிக்கிறது என அறிய இலக்கியஞானம் போதாது.

ஸ்ரீ

அன்புள்ள ஜெ

அறமென்ப கதை நடுத்தர வர்க்கத்தவருக்கு ஒருவகை பதற்றத்தை உருவாக்கும் கதை. அவர்களில் பலர் இரக்கம், பாவபுண்ணியம் பார்த்து நல்லது செய்பவர்கள். நல்லது செய்தால் நல்லது விளையும் என நம்ப பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அப்படி நிகழாது என்று இல்லை. ஆனால் நிகழ்ந்தாகவேண்டும் என்பதில்லை. வாழ்க்கை அந்த விதிகளுக்கு அப்பாற்பட்டது. அது நமது நல்லது – கெட்டதை தீர்மானிக்கவேண்டியதில்லை. தீர்மானித்தால் ‘இந்த உலகமே இப்டித்தான் சார்’ என்ற பிலாக்காணம்தான் மிச்சமாகும்.

ஒருவன் தன் தன்னியல்பால் நல்லது செய்தால் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். நல்லதுசெய்வதிலேயே ஒரு மகிழ்ச்சி நிறைவு உள்ளது. ஒரு நிமிர்வு உள்ளது. அது வந்துசேரும். அந்தக் கணத்தை செல்வா அடைந்துவிட்டான்

சரவணக்குமார்

***

அன்புள்ள திரு ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

அறமென்ப… கதை படித்தேன். மனதை மிகவும் வலித்தது. புண்ணியச் செயல் செய்வது என்பது அத்தனை எளிதல்ல. புண்ணியம் எளிமையாக கிடைத்து விடாது. இது என் அனுபவத்தில் ஒரு முறை உணர்ந்தேன். ஒரு முறை அல்ல பல முறை…

அப்போது ஹைதராபாதில் டாக்டர் ஏஎஸ் ராவ் நகர் உருவாகத் தொடங்கியிருந்த காலம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு வீடுகள் எழுந்தன. எங்கள் வீடு அப்போது முழுமையடைந்து நாங்கள் சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம். எண்பதுகளின் தொடக்கம்.  சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் குழாய் வசதி எதுவும் இன்னும் கொடுக்கப்படவில்லை. எங்கள் கிணற்றிலிருந்து நீர் இறைத்து கொண்டு, மண்ணெண்ணெய் விளக்குகளை வைத்துக்கொண்டு… அது ஒரு காலம்.

அப்போது காய்கறிக் கடைகளும் எங்கள் காலனியில் வந்திருக்கவில்லை. யாராவது  தலையில் கூடை சுமந்து கொண்டு வருவார்கள். மிகவும் அரிதான காட்சியாக இருக்கும். தொலைதூரம் நடந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் வீடுகளில் காய்கறி விற்றுச் செல்வார்கள். பார்க்கவே பாவமாக இருக்கும். நாங்கள் எங்கள் காய்கறிகளை சிகந்திராபாத் சென்று வாரம் ஒருமுறை மோண்டா மார்க்கெட்டிலிருந்து வாங்கி வருவோம். எப்போதாவது வாசலில் கூவி விற்கும் இவர்களை நிறுத்தி கூடையை இறக்கி வாங்குவது வழக்கம். ஏதோ ஒரே ஒரு காய்கறி வாங்கினால் அவர்களுக்கு கோபம் வரும். இவர்களின் கோபத்துக்குப் பயந்து நாங்கள் இரண்டு மூன்று காய்கறிகள் வாங்குவது வழக்கம்.

ஒரு முறை அவ்வாறு மதிய வெயிலில் உணவு நேரத்தில் கூடை சுமந்து வந்த ஒரு பெண்மணியை அழைத்து இறக்கி காய்கறிகள் வாங்கினேன். அப்போது என் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தார். அந்தப் பெண்மணியை பார்த்து இரக்கப்பட்டு, “இரு. உனக்கு சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுச் செல்” என்றேன்.

“நான் கை கழுவ வேண்டும். முகம் கழுவ வேண்டும்” என்றாள்.

“கொல்லையில் கிணறு இருக்கிறது. தண்ணீர் இறைத்து செய்து கொள்” என்றேன்.

அவள் சொன்னாள், “இந்த கூடையை இங்கே வைத்துவிட்டு நான் போக மாட்டேன். நீ போய் ஒரு வாளி தண்ணி எடுத்து வா” என்றாள்.

“நான் பார்த்துகொள்கிறேன். நீ போ” என்றேன்.

“அதெல்லாம் முடியாது” என்றாள்.

அவளுக்காக கிணற்றிலிருந்து  ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன்.

அப்போது என் அம்மா இதே வார்த்தையை சொன்னார்கள்.

“புண்ணியம் சம்பாதிப்பது என்பது எளிதல்ல. நாம் இரக்கப்பட்டு செய்தாலும் அதன் மூலம் நமக்கு புண்ணியம் வந்து சேருகிறது அல்லவா? அது அத்தனை சுலபமாக கிடைத்து விடாது” என்று.

இந்தக் கதையை படித்த போது அந்தச் சிறு சம்பவம் நினைவுக்கு வந்தது.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

ராஜி ரகுநாதன்,

25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]
23 திரை [சிறுகதை]
22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]
முந்தைய கட்டுரைநியூசிலாந்து உரை
அடுத்த கட்டுரைகொரோனா- கடிதங்கள்