திரை, எரிசிதை- கடிதங்கள்

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த நாயக்கர் கால ஆட்சிமுறையில் மற்ற எந்த ஆட்சிமுறையையும் விட பீரோக்ரசி மிக வலிமையாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. அரசரைப் பார்ப்பதே அவ்வளவு கடின்மாக இருக்கிறது. பற்பல அடுக்குகளாக அதிகாரிகள் உள்ளன. அவர்களின் அதிகாரமும் விரிவாக உள்ளது

ஒருவேளை சோழர் காலமும் இப்படித்தான் இருந்ததா? நமக்கு நாயக்கர் காலத்து அரசமைப்புமுறை நன்றாகத் தெரிகிறதா? சோழர் காலத்தில் அரசர்கள் மக்களுடன் பழகி கலந்திருந்ததுபோல கதைகளில் வாசித்தேன். ஆகவேதான் இந்தச் சந்தேகம்

என். ஜானகிராமன்

***

அன்புள்ள ஜெ.,

எத்தனை கதைகள்? எழுதித் தீராதவை. ஆச்சரியம் எனக்கு என்னவென்றால் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் போடும் பெயர்கள். இடம்,காலம்,சாதி என்று எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நீங்கள் போடும் பெயர்கள் ஒரு கதையில் கூட பொருத்தமில்லாமல் இல்லை, திரும்ப வருவதும் இல்லை. வெண்முரசில் கூட நூறு கௌரவர்கள் பெயர்களும், அவர்கள் மனைவிமார் பெயர்களும் கூடச் சொல்கிறீர்கள். குதிரைகள், புத்தகங்கள், மலைகள், மற்றும் எத்தனை ஆயிரம் உப கதாபாத்திரங்கள்? இத்தனை பெயர்களை எப்படி உண்டாக்குகிறீர்கள்?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

எரிசிதை [சிறுகதை]

எரிசிதை ஒரு ஆழமான கதை. அந்தக்கதையின் அடுக்குகள் ஆச்சரியப்பட வைப்பவை. முத்தம்மாள் ஒரு சிறையில் சாவைக்காத்து இருக்கிறாள். அதை எண்ணி பொறாமைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் கூடவே இருக்கும் மற்ற இளவரசிகள். சிதையேறுவதே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது அவர்களுக்கு.

முத்தம்மாளின் நினைவில் மங்கம்மாளும் இன்னொரு ராணியும் வருகிறார்கள். இருவருமே வலிமையான அரசிகள். அந்த இரண்டு அரசியரால் ஒடுக்கப்பட்ட அரசி இவள்

இந்நாவலில் வரும் பெண்களின் உலகமே விசித்திரமானது. சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தாசிகள். ஆனால் அவர்கள் ஒருவனைக் கட்டி ஒரு வீட்டில் இருக்க ஆசைப்படுகிறார்கள்

எஸ்.ராஜேஷ்குமார்

***

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

எரிசிதை என்கின்ற வார்த்தையே புதுமையாக இருந்தது. சிதையை பெயர்ச்சொல்லாக அர்த்தப் படுத்திக் கொண்டால் எரிசிதை எனஒரு புதிய வினைத்தொகை வார்த்தையையே உருவாக்கிவிட்டீர்கள்.

இறந்த நிகழ் எதிர் என்ற முக்காலங்களையும் கடந்து எல்லா காலங்களிலும் பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு சிதை எரிந்து கொண்டுதான் இருக்கிறது. சிதை எரியாத காலம் என ஒன்று இல்லவே இல்லை. அப்படி ஒரு காலம் தாய்மை என்ற ஒன்று உள்ள வரைபெண்களுக்கு வரப்போவதும் இல்லை. சிலருக்குச் சிதை உள்ளிருந்து எரிக்கிறது சிலருக்கு சிதை வெளியிலிருந்து எரிக்கிறது. சிலருக்கு சிதை உள்ளே வெளியே என இரண்டு பக்கமிருந்தும் எரிக்கிறது.

ராணி மங்கம்மாள் அகத்தின் உள்ளே சிதையில் எரிந்து வெந்து வெளியில் வாழ்ந்து தன் மகனை, தனது ராஜ்ஜியத்தை, தன் மக்களை காத்தாள்.

ராணி சின்ன முத்தம்மாள் கணவனை இழந்த பொழுதும் அவனுடைய உயிர் அவள் மகனாக அவள் வயிற்றிலே வாழ்ந்து கொண்டிருந்தது எனவே அவள் வெளியில் எரிவதை தள்ளிப்போட்டு தன் அகத்தில் நாளும் என எரிந்து தன் உயிரான மகனை வயிற்றில் காத்தாள். அந்த மகனைப் பிரசவித்த உடன் பன்னீரை குடித்து தன் அகத்தீயைத் அணைத்து அதன் மூலம் தன்னை புறத்தில் எரித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.

எந்த ஒரு பெண்ணும் பிறக்கும் பொழுது தாயாகவே பிறக்கிறாள். தனது கருப்பையில் ஒரு மில்லியன் சினைமுட்டை செல்களைக் கொண்டே பிறக்கிறாள். இது இயற்கை பெண்களுக்கு மட்டுமே அளித்துள்ள கொடை. தான் தாயின் கர்ப்பத்தில் வளரும் பொழுதே தன் வயிற்றில் சினைமுட்டைகளை உருவாக்கும் விந்தையை என்னவென்று சொல்வது. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஜெகத் ஜனனியாம் ஆதி படைப்புச் சக்தியின் வாழும் வடிவங்கள் அல்லவா அனைத்துப் பெண்களும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கு ஏற்ப தாயுள்ளம் செயல்படும் விந்தைகளை யாரால் சொல்லிவிட முடியும்.

தாசிப் பெண்ணாக இருந்தாலும் நாகலட்சுமியும். ஒரு தாய் உள்ளம் கொண்ட கருணைமிகு பெண் தானே.ஒரு வேளை அவளும் கர்ப்பம் தரித்திருந்தாளோ என்கின்ற ஐயம் இரண்டு இடத்தில் எழுந்தது. அதற்கான மெல்லிய குறிப்பையும் அளித்துள்ளீர்கள். அதனாலேயே ராணி முத்தம்மாளை அவள் காக்க விழைகிறாள். அதனாலேயே தானும் சிதையில் எரிவது போல கனவும் காண்கிறாள்.

ஆனால் ஒன்று மட்டும் எப்பொழுதும் புரிவதே இல்லை. இந்தப் பெண்கள் ஏன் தங்களுக்குள் இப்படி முட்டி மோதிக் கொள்கிறார்கள். ராணி மங்கம்மாள் சிறப்புக்களை பற்றி நன்கு அறிந்திருந்தும் கூட ராணி முத்தம்மாள் தன் மகன் வந்து அவளை பழிவாங்க வேண்டும் என்கிறாள். ராணி முத்தம்மாள் தன் குழந்தையை காத்து பிரசவிக்க போகிறேன் என்று சொன்னவுடன் தாசி நாகலட்சுமி அவள் மீது வெறுப்பு கொள்கிறாள். இவர்களுடைய இந்த மன ஓட்டங்கள், ஒருவருக்கு ஒருவர் இடையேயான ஊடாட்டங்கள், மன விரிசல்கள் எல்லாம் எப்படித்தான் உங்களுக்கு புரிகிறதோ. வியப்பாக இருக்கிறது எனக்கு.

மற்றொரு விஷயமும் கவனித்தேன்.கருவுற்று இருக்கும் பொழுது பெண்கள் மோசமான மன நிலையில் இருந்தால் அது குழந்தையை மிகவும் பாதிக்கிறது. கடைசி வரை அந்தக் குழந்தைகள் அந்த மன பாதிப்பில் இருந்தும் உடல் பாதிப்பிலிருந்து விடுபட முடிவதில்லை. ஏற்கெனவே கந்தர்வன் மற்றும் யட்சன் கதைகளில் அந்த மங்கம்மாளின் பேரனைப் பற்றி அறிந்திருந்ததால் இணைத்துப் பார்க்க முடிந்தது. நிஜ வாழ்விலும் பல குழந்தைகள் உடல் மற்றும் மன பாதிப்படைவதற்கு அவர்களின் தாயாரின் கர்ப்பகால மனநிலை காரணமாக இருப்பதையும் கண்டுள்ளேன். மோசமான தொலைக்காட்சித் தொடர்களை பார்க்காதீர்கள் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள். கர்ப்ப காலத்தில் தான் விழுந்து விழுந்து அதி மோசமான தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் பார்த்து தள்ளுகிறார்கள்.

பாளையக்காரர்களின் சூழ்ச்சிகள், பலவிதமான அடுப்புகள், தீ, சிதை, எல்லா நிலைகளிலும் இருந்த அக்காலப் பெண்களின் அவல வாழ்வு என ஆழ்ந்து சிந்திக்க வைத்த கதை.

தாய்மையை தூக்கிப்பிடித்த இன்னுமொரு படிமக்கதை.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைசுந்தரன் காதை
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-13