கேளி, அறமென்ப- கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப கதையை நான் அந்த தலைப்பிலிருந்து வாசித்தேன். அறம் என்ப என்றால் அறமென்று இப்படிச் சொல்கிறார்கள். அந்த என்ப ரொம்ப முக்கியம்.

நாம் அப்படிச் சொல்லித்தான் அறத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல என்று தெரிந்துகொள்ளும் தருணம்தான் நாம் நம்முடைய பார்வையில் அறத்தை கண்டுகொள்ளும் இடம்.

செல்வா தன் அறத்தை கண்டுகொண்டான். ஆகவேதான் புன்னகை செய்கிறான். அந்த அறம் என்ன? அவன் அந்த ஏழைகளை அவர்களின் அந்த பலவீனங்களையும் சிறுமைகளையும் புரிந்து ஏற்றுக்கொண்டு விரும்புகிறான். அதுதான் அவனுடைய அறம்.

கதையில் அது தெளிவாகவே இருக்கிறது. அவன் அந்த இரண்டு லட்சத்தையும் அவர்களுக்கே நேரடியாகக் கொடுத்து விடலாமே என்று யோசிக்கிறான். அந்த கிழவிக்கு அவன் பணம் கொடுக்கும் இடம் உதாரணம்.

நான் 22 ஆண்டுகள் கிராமப்புற சேவையை செய்தவன். செல்வாவின் இந்த மனநிலை இல்லாவிட்டால் கிராமப்புற மக்களிடம் சேவையே செய்ய முடியாது. அவர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவோம்.

அறமென்பது செல்வா கண்டடைந்த பற்றற்ற, எதிர்பார்ப்பே இல்லாத அறம்தான். கசப்பில்லாத நிலைதான்

கணேஷ் குமார்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

அறமென்ப..என்று துவக்கி அப்படியே விட்டீர்களே ஆஹா இது கவிதை… ஒரு சொல் கவிதை… ஒரு சொல் ஒரு எழுத்து ஒரு காற்புள்ளி ஏதாவது ஒன்று கூடி இருந்தால் கூட அது கவிதையாகி இருக்க முடியாது.

பல்லாயிரம் அறநூல்களும் பலநூறு அற சூத்திரங்களும் அறப் பேருரைகளும் சொல்ல முயன்று முயன்று முட்டி தவிப்பதை, காலந்தோறும் எழுந்து வந்த மதங்கள் விளக்க முயன்று விளக்க முயன்று திகைத்துப் திகைத்து மீண்டும் மீண்டும் புதிது புதிதாய் முயன்று பார்க்கின்ற ஒரு விஷயத்தை, ஒரு சிறுகதை எத்தனை சிறப்பாக செய்கிறது என்பதே இலக்கியத்தின் சிறப்பு.

அவரவர்களுடைய இயல்புக்கும் அறிவுத் தகுதிக்கும் குண அமைப்புக்கும் ஆளுமைத் தன்மைக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் மெய்யியல் புரிதலுக்கும் ஏற்ப இந்தக்கதையின் முடிவு பல்வேறு வகையான உணர்ச்சிகளை புரிதல்களை இதைப் படிக்கின்ற பலருக்கு பலவிதமாக தரலாம்.

இனி இவ்வகையில் விபத்தினால் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற ஒருவனை காப்பதற்கான எந்த முயற்சியையும் செய்வதில்லை என ஒருவர் முடிவு செய்யலாம். அல்லது கதையின் நாயகன் செல்வா மிகத் தெளிவாக ஆணித்தரமாக குறிப்பிட்டதைப் போல இதைப்போல ஒரு சூழ்நிலை மீண்டும் வந்தால் இதைப்போலவே அடிபட்டவரை மருத்துவமனையில் கொண்டு வந்து கட்டாயம் சேர்ப்பேன் என்றும் முடிவு செய்யலாம். ஆற்று நீர்வழிப் படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படும் என்று அவரவர் இயல்புக்கு ஏற்றபடி முடிவெடுப்பார்கள் என எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் கதையில் தொட்டுக்காட்டி இருப்பது ஒரு சூழ்நிலைதான். இதுபோல கோடிகோடி சூழ்நிலைகள் கோடிகோடி சந்தர்ப்பங்கள் அவை உருவாக்கும் அறச் சிக்கல்கள் தர்மசங்கடங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. ரயிலிலே கதையில் கூட இதேபோல ஒரு அறச்சிக்கலை சித்திரமாக்கிக் காட்டியிருந்தீர்கள். ஒரு சூழலிலே நாம் எவ்விதமாக முடிவெடுத்து செயல்படுகிறோம் என்பது பல கோடிக்கணக்கான கண்ணிகளை சார்ந்தது. நாம் பிறந்த இடம் சூழ்நிலை காலம் நாம் பிறந்த குடும்பம் அதன் அமைப்பு நாம் பிறந்த சமுதாயம் அதன் போக்கு மற்றும் நாம் வளர்ந்த வளர்க்கப்பட்ட விதம் நாம் படித்த புத்தகங்கள் நாம் தொடர்பு கொண்ட நம்மோடு தொடர்பு கொண்ட மனிதர்கள் என எண்ணிலடங்கா காரணிகள் ஒரு மனிதன் ஒரு சூழ்நிலையில் எடுக்கின்ற முடிவுகளுக்கு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ பெரும் பங்காற்றுகின்றன.

கோடானகோடி வினைகள் கோடான கோடி விளைவுகள் எந்த வினைக்கு எந்த விளைவு என்று எவராலும் சமன்பாடு எழுதிவிட முடியாது கர்மத்தின் போக்கிற்கு. நல்லது செய்தால் நல்லது விளையும் கெட்டது செய்தால் கெட்டது விலையும் என்று சும்மா ஒரு போக்குக்கு வேண்டுமானால் சொல்லிப்போகலாம். அதற்கு மேலாக கர்மவினை கொள்கையை எந்த வகையிலும் அறிவுப்பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் நிரூபித்தல் மிகவும் கடினமே.

நல்லது கெட்டது இல்லை, வினைக்கேற்ற விளைவில்லை, கர்ம வினை செயல்பாடு என ஒன்றில்லை, நியதி என ஒன்று இல்லை,, தர்மம் இல்லை அதர்மம் இல்லை, மறு பிறப்பில்லை சொர்கம் இல்லை நரகம் இல்லை, ஆண்டவன் இல்லை அவன் பரிபாலனம் இல்லை, எந்த ஒரு சிஸ்டமும் எவரையும் கண்காணிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதால் அற வழி நடப்பதால் என்னதான் பயன் என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் விடையாக வருவது ஒன்றே ஒன்றுதான், “என்னால் முடிந்தவரை என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நான் நல்லவனாக வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்கின்ற நிம்மதியும் அது தருகின்ற நிறைவும்“. அப்படி ஒரு நிம்மதி மட்டுமே ஒரு நல்வழி நடக்கிறவன் பெறுகின்ற பேறு. ஆனால் அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த நிம்மதி தருகின்ற சுகம். அவர்கள் மேலும் மேலும் அந்த சுகத்தை நாடுவார்களேதவிர அதை ஒருபோதும் இழக்கத் துணிய மாட்டார்கள்.

அறம் என்பது இன்னதென்றோ அதன் செயல்பாடு இவ்விதமானது என்றோ எவராலும் வரையறுத்துவிட முடியாது. அறத்தை அறுதியாக இறுதியாக உறுதியாக அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது என்பதும் சாத்தியமில்லாதது.

ஒரு குழந்தைக்கு முலையூட்டும் பொழுது கடிக்கிறது என்பதற்காக எந்த அன்னையும் குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்திவிடுவதில்லை. பரிவு என்றாலே அன்னைதான் எவருக்கும் நினைவுக்கு வருவாள். எத்தனை ஆயிரம் முறை தவறு செய்தாலும் அன்னை தன் குழந்தையை முடிந்தவரை மன்னித்து மன்னித்து அவனைத் திருத்த கருணையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்த வண்ணம்தான் இருப்பாள். அந்தப் பேரியற்கையும் அளவிலா கருணைகொண்டு உயிர்களுக்கு மேம்படுவதற்கு எண்ணிறந்த வாய்ப்புகளை பெரும் கருணையோடு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

போலீஸ்காரர்களையும் சட்டத்தையும் நீதித் துறையையும் அரசையும் மட்டும் நம்பி நாம் இங்கு நம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. நாம் நமது சக மனிதனை அவனது அற உணர்வை நமது சமுதாயத்தை அதன் ஒட்டுமொத்த பேரறத்தை நம்புவதால் மட்டுமே இங்கே சற்றேனும் ஆசுவாசமாக வாழ முடியும்.

சக மனிதனின் மீதுள்ள அவன் அற உணர்வின் மீதுள்ள நம்பிக்கையினால் மட்டுமே நாம் நம் பெண் பிள்ளைகளை நம்பி தெருவில் அனுப்ப முடிகிறது. அறவுணர்வு என்பது எவரிடமுமே இல்லை என்றாகிப் போனால் அடுத்தவனின் அற உணர்வின் மீதான நமது நம்பிக்கை முற்றாக இல்லாமல் ஆகிப்போனால் எப்படித்தான் வாழ்வது இந்த மண்ணில்? வீடு நாடு காடு என எவருக்குமே எங்குமே வாழ முடியாமல் போகும் அல்லவா.

ஆம் இங்கே அயோக்கியர்கள் இருக்கிறார்கள், இங்கே ஏழ்மையின் பெயரால் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள், இங்கே பலாத்காரம் செய்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு ஏழைகளின் வயிற்றில் அடித்து கோடிகோடியாய் சுருட்டிக் கொள்ளும் ரத்தம் உறிஞ்சும் கிரிமினல்கள் அவர்களின் வக்கீல்கள் இருக்கிறார்கள், கருணையே இல்லாத அரசு அதிகாரிகள் காவலர்கள் அரசியல் பகா சூரர்கள் இருக்கிறார்கள், கல்வியின் பெயரால் மருத்துவத்தின் பெயரால் வியாபாரத்தின் பெயரால் நீதியின் பெயரால் சேவையின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் இன்னும் ஏதேதோ செயல்களின் பெயரால் திருடி கொழுப்பவர்கள் இருக்கிறார்கள். விழுமியங்களே இல்லாத திட்டம் போட்டு திருடும் கார்ப்பரேட் கம்மனாட்டிகள் இருக்கிறார்கள், எத்தனை கோடி கீழ்மக்கள் இருந்தபோதும் அத்தனைக்கும் பலகோடி மடங்கு மேலாக அறத்தின் மீது நம்பிக்கை கொண்ட சகமனிதனின் அற உணர்வின் மீது விசுவாசம் கொண்ட சகமனிதனின் நல்வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட ஒரு மாபெரும் மனிதத்திறலும் இங்கு இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த அறம்சார்ந்த நல் விழுமியங்கள்சார்ந்த மானுடத்திறலின் பேரறத்தின் ஆனை பலத்தின் முன்பாக ஒட்டுமொத்தக் கீழ்மையின் பலம் ஒரு சிறு தூசு. அதனாலேயே இன்னும் வான் பொழிந்து கொண்டிருக்கிறது, மண் கருணையோடு புல்லாகி மலர்ந்து காய்த்து கனிந்து உயிர்களை இங்கு இன்னும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மானுட பேரறம் திகழும் வரை, பிற உயிர்களின், சக மானுடனின் நலனுக்காக தயை கொண்டு தன்னை வருத்திக் கொண்டு உதவவும் தயங்காத அந்தப் பெருந்தகையாளர்களின் பெருந்திறல் உள்ளவரை, மண் வாழும் வாழ்த்தும் இங்கு உயிர்களை வாழவைக்கும்.

இழப்புக்களை சந்திக்காமல் வலியையும் வேதனையும் பொறுத்துக் கொள்ளாமல் இங்கு ஒரு விழுமியத்தை கூட நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியாது. நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்பத்தை நோக்கி நகர்வதையே தனது இயல்பாக கொண்டிருக்கிறது. உடல் ஒரு செல்களின் தொகுப்பாக எப்பொழுதும் ஒரு கம்போர்ட் ஜோனில் (comfort zone) இருக்கவே எப்போதும் விழைகிறது. தனது இந்தத் தேவையை நோக்கி உடல் மனத்தை இடைவிடாது கவ்வி செயல்பட வைக்க முயல்கிறது. ஆனால் மனமோ உன்னதத்தை நோக்கி விரிந்து தனது பரிணாம வளர்ச்சி பயணத்தை அடி அடியாக வைக்கிறது. அதனாலேயே மனம் எப்பொழுதும் உணர்வு என்றும் அறிவு என்றும் இரண்டாகப் பிரிந்து உள்ளே இடைவிடாமல் விவாதித்துக் கொண்டே இருக்கிறது. மானுட அறம் என்பதும் மனிதனின் அறவிழுமியங்கள் என்பதும் மனம் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சி தானே. அந்த மனதின் உன்னதமாக்கல்தானே இடைவிடாமல் வழிவழியாக வாழையடி வாழையென மனித குலத்தை அதன் ஒட்டுமொத்த தாக்குப் பிடித்தலை, இருப்பை, வாழ்வை, அதன் உச்சகட்ட மானுட அறத்தை சாத்தியப்படுத்தி உள்ளது.

உற்றநோய் நோற்றும் உயிர்க்குறுகண் செய்யாமலும் தனக்குத் துன்பம் வந்த போதும் பிறர் நலம் பேணி இதுவரை மனித குலத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதாரணன் என்கின்ற அந்தப் பெருந்தகையாளர்களாலேயே மானுடம் இன்றுவரை வந்திருக்கிறது. எவ்வகையிலேனும் பிறஉயிர்கள் இனிது வாழ எல்லா வகையிலும் தன்னை ஈந்தும் பிற உயிர்களோடு இசைந்தும் வாழ்ந்தும் தானே மனிதன் இங்கு தன் உயிர் நிலைப்பதற்கான ஊதியத்தை ஈட்டிக் கொள்கிறான். அளவிலாது ஈபவனுக்கு அடுத்த உயிரின் துயர் துடைப்பவனுக்கு எதுவரினும் முடிந்தவரை பிறர் நலன் நாடுபவனுக்கு அகத்தில் ஆனந்தமும் உவகையும் அதுவாகவே பெருகத்தானே செய்யும். Spontaneous emotion என்று வோர்ட்ஸ்வொர்த் இதைத்தானே கூறிச் செல்கிறான்.

இதைத்தானே செல்வா “லைஃப்ல அவ்ளவு சந்தோஷமா இருந்ததே இல்லை”,  “அந்த சந்தோஷம் எனக்கு வேணும்” , “மே பி… தெரியலை. ஆனா அப்டியே நிறைவா, சந்தோஷமா, ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றேன்” என்றெல்லாம் மூச்சுக்குள் சீட்டி அடித்து கொண்டிருந்தான்.

ஒரு உயிரை நம்மால் உருவாக்க முடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில் துன்பப்படும் உயிரின் துன்பத்தை போக்குகின்ற அந்த உயிரை காக்கின்ற ஒரு வரத்தை இயற்கை சில பொழுதேனும் நமக்கு அளித்திருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பும் வரமும் கிடைக்கப்பெற்ற ஒருவன் அதை வீணாக்குவானா?. தனக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என கண்டுகொண்ட ஒருவன் மகிழ்ச்சி தருகின்ற எந்த ஒரு வாய்ப்பையும்

விடுவதில்லைதானே…. மாறாக அந்த வாய்ப்பை தேடித்தேடி அலைவான் அல்லவா?…மொத்தத்தில் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் நாடிய பயணம் தானே… ஆம் அது அப்படித்தான்.

இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு எத்தனை கோடானகோடி தலைமுறைகளாக மானுடம் என்னவெல்லாம் விலைகொடுத்து இருக்கும். அன்று அவர்கள் அந்த விலையைக் கொடுக்காமல் தன்நலமாக வாழ்ந்து இருந்தால் இன்று நாம் ஏது?. நாம் வாழ்கின்ற ஒவ்வொரு கணமும் நம் கோடான கோடி பாட்டனும் முப்பாட்டனும் நமக்கு அளித்த கொடைதானே இதை எப்படி நாம் மறந்துவிட முடியும்?. இந்தக் கொடையை இனி வரும் தலைமுறைகளுக்கு கடத்த வேண்டிய பெரும் பொறுப்பும் நமக்கு உள்ளது தானே.

ஆம் பொறுப்புக்கள் வலி தருவனதான், துன்பம் தருவனதான், நேரத்தை எடுத்துக் கொள்பவைதான், பெரும் செலவு வைப்பவைதான், இருந்துவிட்டுப் போகட்டுமே. இயற்கையும் எதிர்கால சமுதாயமும் இன்னும் பல தலைமுறை இனிதே வாழ இந்த விலையை கூடவா நம்மால் தரமுடியாது. நாம் தருகின்ற இந்த சமூக பொறுப்புணர்ச்சி என்ற விலை நம் முன்னோர்களுக்கு நாம் தருகின்ற வட்டி தானே தவிர அவர்களுக்கு நாம் பட்டிருக்கின்ற கடனை என்நாளும் எவ்வகையிலும் அடைத்துவிட முடியாது.

நாம் சாலையில் அடிப்பட்டால் சாகக் கிடந்தால் நம்மை யாராவது ஒரு நல்லவனாவது மருத்துவமனையில் சேர்ப்பான் என்ற ஒரு நம்பிக்கையில் தான் நாம் ஒவ்வொருவரும் துணிந்து சாலையில் வண்டி ஓட்டிச் செல்கிறோம். அந்த நம்பிக்கை ஒளிதான் என்றும் அணையாத அறத்தின் ஒளி. அதுவே மானுடம் என்ற பெரு நதியின் ஜீவ ஊற்று. அந்த அற உணர்வு என்ற ஊற்றை வற்ற விடாது காப்போம். மானுடப் பேரறம் என்ற ஒளியை என்றென்றும் ஏந்தி நிற்போம்.

தொடர் அற விவாதங்களை உருவாக்கி அற விழுமியங்களை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வளர்ப்பதற்காக நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இந்தக் கதைகளின் நித்திய வேள்வி வாழ்க வளர்க!

உங்கள் அற விவாதங்களுக்கான, அவைகளை உள்ளடக்கிய கதைகளுக்கான அட்சய பாத்திரம் என்றும் குன்றாது இருப்பதாக!

மாநிலமெங்கும் அற விழுமியங்கள் ஓங்கி வளரட்டும்! மண்ணில் மானுடம் என்றென்றும் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழட்டும்!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

இந்த வாசகர் கடிதங்கள் வழியாக கதைக்குள் செல்வது நாம் காணாத பலவற்றை காணவைக்கிறது. கேளி கதையை ஒரு திருவிழாவை மீண்டும் நினைவுகூறும் கதை என்றே நினைத்திருந்தேன். ஆனால் கடிதங்களைப் படிக்கப்படிக்க ஒட்டுமொத்தமாக வாழ்க்கையையே நினைவுகூறும் கதை என்று புரிந்துகொண்டேன். நினைவு என்பதே இப்படி ஒரு சின்ன விரிசல் வழியாகத்தான் வந்துகொண்டிருக்கிறது. தீற்றல் கதைகூட இதைத்தான் பேசுகிறது.

செல்வி மகேந்திரன்

***

அன்புள்ள ஜெ ,

கேளி. இதுபோன்ற கதைகளை கதைக்குள் வரும் உருவங்களை தொடர்புபடுத்தி வாசிக்கும் போதுதான் சரியான வாசிப்பு நிகழ முடியும் என்று தெரிகிறது.

விழித்தெழுந்ததும் உள்ள ஓசையின்மையும் கண்களை குத்தும் ஒளியும் உணர செய்வது வெறுமையை. கதை சொல்வது போல “ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகி செல்கிறது, ஓசை இல்லை என்றால் அது எங்கோ தரைதட்டி நின்றுவிட்டது”

திருவிழாக்கள் முடிவில் எப்பொழுதுமே அந்த வெறுமையை கொண்டிருக்கும். பல நாள் திருவிழா முடிந்த மறுநாள் காலையின் கோயில் திடல் உணர்த்தும் வெறுமை அனைவரும் உணர்ந்தது.

இக்கதையில் வீடுகள், தெரு, ஊர், கோயில் என அனைத்தை பற்றியும் வரும் விரிவான சித்திரம் உணரசெய்வதும் அந்த வெறுமையை தான்.

இக்கதையில் வெறுமையையும் அதை நிறப்பும் உள்ளுரைந்தவைகளும் உருவகங்களாக வந்தபடியுள்ளன. ஆற்றில் வற்றாத மீன்கள், டீ, ஈரமான சிவப்பு ஜட்டி, சோம்பல் முரிப்பது, இசையின் தாளம் என.

கதையின் புறச்சூழல் அப்படி இருக்கிறதே ஒழிய மனிதர்களின் அகம் அப்படி இல்லை. அந்த இசை அவனிடம் மட்டுமல்ல அந்த  கிழவரிடமும் இருக்கிறது. அவரில் இருந்து அவனுக்கு பற்றி கொள்ளுகிறது. பெண்களின் உடலசைவில் அந்த தாளம் இருக்கிறது.

மோகனம் என்பது  மயக்கும் அழகு. ஓர் ஊரே அல்லது மானுடமே திருவிழா மூலம் என்ன செய்கிறது.  இசை மூலம் ஓசையின்மை என்னும் பிரமாண்ட வெறுமையை, அழகு மூலம் அந்த காலமின்மை என்னும் நதியை கடக்கிறார்கள் என்று இக்கதையை வாசிக்கலாமா.  அல்லது  உள்ளே மோகனமாகவே இருந்து வெளியே காணும் அனைதிலும் மோகனத்தையே காண்பது  மாயை அல்ல என்றா.

நன்றி

பிரதீப் கென்னடி
25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை
முந்தைய கட்டுரைவிசை, எச்சம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதை எழுதுவது- கடிதம்