திரை, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப வாசித்தபோது எனக்குப் பட்டது ஒன்று உண்டு. பொதுவெளியில் இருக்கும் அறமின்மையை நாம் மண்டையில் அடிப்பதுபோல சந்திக்கும் ஒரு தருணம் உண்டு. துரோகம், மீறல், திருட்டு என்று எதையாவது நாம் சந்திப்போம். நம்முள் எல்லாமே ஆடிவிடும்.

பத்தாண்டுகளாக நான் மகனைப்போல வேலைக்கு வைத்திருந்த பையன் திருடினான். போலீஸ் பிடித்ததும் நான் அவனுக்குச் சம்பளமே கொடுக்காமல் அடித்தேன், ஆகவே சாப்பாட்டுக்காக திருடினேன் என்று சொல்லிவிட்டான். அவன் அக்காக்களின் இரு திருமணங்களை நான் நடத்தி வைத்திருக்கிறேன்

அதிலிருந்து வெளியேற நீண்டநாட்கள் ஆகியது. இந்தக்கதை அந்த ஞாபகத்தை கிளறியது. எப்படி செல்வா வெளியேறினான் என்பது கதையில் சொல்லப்படவில்லை

தங்க. ராமநாதன்

***

அறமென்ப..வாசித்தேன்.

தாஸ்தெவஸ்கியின் அசடன் நாவலின் மிஸ்கின் தான் இதுவரை எதிர்பட நேர்ந்த சாமானிய மக்களுள் அறத்தையும் மனசாட்சியையும்  மானுடம் என்னும் கனவுக்கான, மனிதனுள் கிருஸ்து இருக்கிறார் என்பதற்கான  ஆதாரங்களாக சொல்கிறான். அதே போல் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்க்கலோவ்நிக்கோவ் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக, குற்றத்தை எண்ணி உண்மையாக குற்ற உணர்வு அடைவதற்காக மக்களிடம் எங்கேனும் உண்மையும் அறமும் மனசாட்சியும் இருக்கிறதா என்று பிட்டர்பர்க்ஸ் வீதியில் அலைகிறான். அந்த நகரத்தில் ஒருத்தியை மட்டும் தான் அவன் அப்படி சந்திக்கிறான்.

பொதுவாக அறத்தை பற்றி நாம் மெய்சிலிர்க்கும் சம்பவங்கள் கதைகள் அனைத்தும் தனிப்பட்ட அல்லது சமூகத்தில் நிலவும் யூகத்தை முன்முடிவையே காட்டுகின்றன.

என் அனுமானபடி முன்பு சென்ற காலகட்டத்தில் நிலவிய யூகம் என்பது உயர்தட்டில் இருப்பவர்கள் எழைகளுக்கு அறமோ மனசாட்சியோ இருக்காது, தன் நட்பு வட்டத்தில் இருக்கும் பணக்காரர்களே இவ்வளவு சுயநலமாக பணத்தாசை பிடித்தவர்களாக இருக்கும் பொழுது கட்டாயம் ஏழைகள் இன்னும் சுயநலாமானவர்களாக மனசாட்சி அற்றவர்களாக இருப்பார்கள் என்பது அன்று நிலவிய யூகம். சினிமாக்களும் கதைகளும்  அந்த யூகம் தவறு என்று ஆக்கியது.

இன்று பொதுவாக நிகழும் சராசரி சமூக யூகம் அல்லது அபிப்ராயம், எழைகள் அறமும் மனசாட்சியும் கொண்டவர்கள் ஆனால் பணக்காரர்கள் வஞ்சகர்கள் என்பது.

இக்கதை இரண்டு யூகங்கள் அல்லது கற்பனை அபிப்ராயங்களை பற்றி பேசுகிறது. ஒன்று பொருளாதாரத்தில் உயர் தலத்தில் இருக்கும் கதைநாயகன் செல்வத்தின் Romanticised மனசாட்சி மற்றும் ஏழைகள் பற்றியது. இரண்டாவது யூகம்  எழைகள் பணக்காரர்களை ஏமாற்றுக்காரர்கள் என்றும் தங்களுக்குள்ளாக வந்து பேசுவது போல் பேசி திருடும் ஓநாய்கள் நல்லவர்கள் என்னும் அவர்களின் அனுமானம் பற்றியது.

இக்கதையில் வரும் கதாநாயகன் செல்வம் ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறான். நல்லது செய்யபோய் அவன் பொரியில் சிக்க வைக்கபட்டபோது ஒரு தெய்வத்தின் அறத்தின் குறல் வந்து தன்னை காக்கும் என்று நினைத்து கொள்கிறான். எதிரே மனசாட்சியின் குறலாக யாரும் வந்து நீ ஏன் காப்பாத்தல என்று விட்டால் வரும் குற்ற உணர்வின் பயத்தால் தான் செல்வம் அவரை காப்பாற்றினான். ஆனால் எதிரே அப்படி எந்த மனசாட்சியும் இல்லை மானுடர்கள் சந்தர்பங்களால் ஆனவர்கள், வாழ்க்கை நாடகமும் இல்லை என்ற கதையின் முடிவு அவனக்கு விடுதலையை அளிக்கிறது.

இனி யாரும் அடிபட்டு கிடந்தாலும் செல்வா ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பான். ஆனால்  மனிதர்கள்,மனசாட்சி,அறம் பற்றி முன்பிருந்த கற்பனைவாத சுமை அவனுக்கு இருக்காது.

“அறம் அது அவள்டல்ல இருந்துச்சு” என்பது அறம் கதையின் வரி. அது அறம் நிகழ்ந்த கதை. அறமென்ப.. அறம் என்றால் என்ன என்பது பற்றிய கதை. யூகங்கள் அனுமானங்களுக்கு மத்தியில் உள்ள உண்மை பற்றிய கதை.

Human values என்பது கொடுப்பதே, என்று இந்த கதையை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி

பிரதீப் கென்னடி

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

திரை என்பது என்ன? பிரேமை எப்படி திரையாக ஆகும்? அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். திரை அழகானது. பட்டால் ஆனது. அதுவே வாழ்க்கைக்கும்போதும்தான். ஆனால் எங்கோ அதை விலக்கி உள்ளிருப்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறதா? பெருமாளை தங்க அங்கி இல்லாமல் பார்க்கமுடியாது. ஆனால் உள்ளெ இருப்பது கரிய கற்சிலை என தெரிந்திருக்கவும் வேண்டுமா?

எஸ்.

***

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள் – சுவாமி சித்பவானந்தர் உரையுடன், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை பத்துக்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளது. அத்தனையும் சொக்கத்தங்கம்.

ஒரு சாதாரண வாழ்க்கை குறிப்பாக இந்தப் புத்தகங்களில் தாயுமானவர் வரலாறு கூறப்படும். இது அனைவருக்கும் தெரிந்த கதையே எனினும் தங்கள் கைப்பட்டு இந்தக்கதை மிளிர்கிறது. இந்தக் கதையைப் படித்தவுடன் மீனாட்சி ராணியை குறித்த எனது முந்தைய இறுகிய பார்வை கொஞ்சம் கனிவு கொண்டது.

கனிந்த மனம் கொஞ்சம் விம்மி ஒரு கவிதையை சட்டென்று முணுமுணுத்தது…

திரையே திரையாகி திரையை மறைத்தால்…

திரையில் எல்லாமாகி தெரிவதும் திரையே என்றானால்…

இருப்பதெல்லாம் திரையே எனில் திறப்பது எதனை?

திரை கொண்டு மறை மூடினான்…

மறை கொண்டு திரை மூடினான்….

திரைகள் எத்தனை திரைகளடி….

திரையை நீக்க முயலுது மறைகளடி…

திரையே மறையாய், மறையே திரையாய்

மனம் மயங்குதடி…

மனம் மயங்குதடி…

சிறுவயது முதலே என்னை மிகவும் கவர்ந்த ஞானக் கவி தாயுமானவர். அந்தப் பெருந்தகைக்கு இப்படி ஒரு கதை மூலம் புஷ்பாஞ்சலியாய் உங்கள் கதாஞ்சலி.

நான் முதல் முதலில் திருச்சி தாயுமானவசுவாமி சிவன் கோவிலுக்கும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் விருப்பப்பட்டு போனதே தாயுமானவரை படித்த பிறகுதான். அவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டுதான்.

துறவியான பிறகு எனது சுற்றல்களின் பகுதியாக இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிபுரம் தாயுமானவர் கோயிலில் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து தியானித்து இருக்கிறேன். மிக அருமையான இடம்.

அதுவரை ஊர் சுற்றிக் கொண்டு இருந்த என்னை அங்கேதான் யாரென்றே தெரியாத ஒருவர் என்னிடம் வந்து இன்னும் எத்தனை நாளைக்கு சுத்தப் போகிறாய் என்று கேட்டார்… ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார முடியாதோ என நான் சாட்டையடி வாங்கிய திருத்தலம்.

காதலுக்கும் பக்திக்கும் ஒரு நூல் இழை தான் வித்தியாசம். அரசியின் கண்களை இருளாகி மறைத்தது மானுடக் காதல். அடிகளின் கண்களை ஒளியாகி திறந்தது பராபக்தி. கண்களை காதல் மறைத்தால் விடிவே இல்லையா???அதற்கும் விடிவு உண்டு அஞ்சாதே அடுத்த பிறவியுண்டு என்று தாயுமானவ சுவாமிகளின் அமுதவாக்கைக் கொண்டே அன்போடு அருள் கொண்டு அரவணைத்துச் செல்கிறது உங்கள் இலக்கிய கரங்கள் .

பங்காரு ராம நாயக்கன் என்ற ஒரு கற்பனைப் பாத்திரத்தை படைத்து எத்தனை அழகாய் எத்தனை எத்தனை வரலாற்று பாத்திரங்களை இணைத்து நிஜமும் கற்பனையும் ஊடும் பாவும் என ஒரு பெரு நெசவு செய்து படைத்தீர் இந்தக் கதையை….. ஆஹா அருமை அருமை.

பூடகமாய் சைவசித்தாந்தம் காட்டும் ஏழு திரைகளையும் விலக்குகிறீர்களோ எனவும் கூட ஒரு கணம் வியந்தேன். கதைசொல்லியின் வழியாக காட்சிகள் மாறும் தோறும் ஒவ்வொரு திரையாக பல திரைகள் விலகுவதாகவே நான் விரித்துப் பொருள் கொண்டேன். அதற்கேற்ப நீங்கள் அளித்திருந்த ஒவ்வொரு புகைப்படமும் அர்த்தம் பொதிந்தவை.

ராமலிங்க வள்ளல் பெருந்தகையின் பின்வரும் பாடல் நினைவில் தட்டியது.

“கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !”

மாயா சக்தி,கிரியா சக்தி, பரா சக்தி,இச்சா சக்தி,ஞான சக்தி,ஆதி சக்தி,சிற்சக்தி என்ற ஏழு திரைகளால் எல்லா மனிதர்களும் எப்படி எப்படி எல்லாம் ஆசை வயப்பட்டு மாயை திரையினால் ஆட்டி வைக்கப் படுகிறார்கள் என்று ஒவ்வொரு கதைமாந்தரின் மூலமாகவும் ஒவ்வொரு விதமாக காட்டிச் சென்றீர்கள்.

கதையில் வருகின்ற ஒவ்வொருவரும் ஒரு படிநிலையில் அவரவர் நிலைக்கு ஏற்ப சிலபல திரைகளால் கட்டுண்டு.

தாயுமானவ சுவாமி ஒருவர் மட்டுமே ஏழு திரையும் விலக்கி அந்த உன்னதப் பெரு நிலையில்.

“திரையற்ற நீர்போல் தெளிய எனத் தேர்ந்த உரை பற்றி உற்றங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ?” என்று தானே கேட்டு, அடங்கா திரைகளால் சலனமுற்று அலையும் கடல் போன்ற உள்ளத்தை ஒடுக்கி உணர்ந்து அமர்ந்த ஒப்பிலா பெருந்தகை அவர் அல்லவா?.

தூய பனித் திங்களும் சுடுவதென பித்தேற்றும் மாய மடவார் குழர் காட்டில் சிக்குவாரா அவர்? சித்தமெல்லாம் சிவமயமானவருக்கு சிந்தையில் வேறு எதுவும் உதிக்கத்தான் கூடுமோ.

எந்தப் பெரிய கோபுரத்தையும் உண்மையில் தாங்குவது அதன் அடித்தளத்தில் பூமிக்கு அடியில் மறைந்து கிடக்கும் தாங்கு கற்களின் கட்டுமானமே. மாபெரும் இயற்கை வாலறிவும் பேரறமும் எல்லாவற்றையும் இம்மி பிசகாத துல்லியத்துடன் இயக்கிக் கொண்டிருக்கின்ற போது நாம் அகந்தையினால் எண்ணிக் கொள்கிறோம் நாமே எல்லாவற்றையும் இயக்குவதாகவும் கட்டுப்படுத்துவதாகவும். இப்படி எண்ணி வீணாய் போனவர்கள்தானே அன்று இருந்த அத்தனை அரசு அதிகாரிகளும், பாளையக்காரர்களும், நாயக்கர்களும். மராட்டியர்களும், நவாபு களும். தங்களுக்குள் அடித்துக்கொண்டு வெள்ளையனுக்கு விலை போனார்கள்.

பெரியகோயில் கோபுரத்துக்கு அடியில் அத்தனை எடையையும் தாங்கிக்கொண்டு உடல்குறுகி தொப்பை பெருத்து விழிதெறிக்க வரிசையாக அமர்ந்திருக்கும் பாதாள முண்டன்களில் ஒருவன் என்று ஒருவர் எண்ணிக்கொண்டால் அது எத்தனை பெரிய மாயையில் அவர் கட்டுண்டு கிடப்பதை காட்டுகிறது. அத்தனை திரைக்கும் ஆதி காரணமாய் இருப்பது இந்த அகந்தையும் அறியாமையும் தானே.

நீங்கள் ராணி மீனாட்சியையும் அவளது அறையையும் குறித்து வருணித்த விதம் அவற்றை அப்படியே கண்முன் கொண்டு வந்து  நிறுத்திவிட்டது. அப்பப்பா என்ன ஒரு கற்பனை திறன். அதேபோல தாயுமானவர் ஸ்வாமியை பங்காரு ராமநாயக்கன் சந்திக்கின்ற நந்தவனத்தின் வர்ணனைகளும் அந்த நீர்த் துளிகள் விழுந்து மண்ணில்  புழுதியுடன் திரண்டிருந்த  காட்சி அமைப்பும் எங்கோ கொண்டு சென்று விட்டது.

ராணி மங்கம்மாள் துவங்கி ராணி சின்ன முத்தம்மாள் ராணி மீனாட்சி என மூன்று ராணிகளின் வாழ்வில் தான் எத்தனை எத்தனை புயல்கள் எத்தனை எத்தனை துயரங்கள். இந்த விதியின் கைகள் தான் எத்தனை வலிமையானவை யார் யாருடைய வாழ்வில் எப்படி எப்படியெல்லாம் விளையாடிச் செல்கிறது. மாண்டுவிட்ட அரசன், பொறுப்பில் மாட்டிக்கொண்ட ராணி, வந்துவிட்ட அல்லது வரப்போகிற அல்லது வரிந்து கொண்ட மகன், இவைகள் போதாதென்று ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான அன்புக்குரியவர் என நான்கு பகடைகள் உருண்டு உருண்டு விளையாட்டு காட்டுகின்றன உங்கள் இலக்கிய சதுரங்கப் பலகையில். மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டுமா இல்லையா எனத் தெரியாது, ஆனால் மங்கையாய் பிறந்து விட்டால் வாழ்க்கையே ஒரு பெரிய தவம்தான். அதில் மட்டும் எந்தவித ஐயமும் இல்லை. அப்பப்பா எத்தனை எத்தனை நரக வேதனைகள், நம்பிக்கை துரோகங்கள், சூழ்ந்துகொல்லும் நச்சுப்பாம்பு கூட்டங்கள். அபலைப்பெண் என்றாலும் அரசு ஆளும் ராணி என்றாலும் அவர்கள் அடைகின்ற துயரங்கள் மாறுவதே இல்லை.

அவர்கள் கொண்ட அன்பும் காதலும் தாய்மை உணர்வும் சமூகப் பொறுப்பும் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என வியக்க வைத்த கதை.

மாரியை நம்பலை, மாதேவரை நம்பலை, அந்த மகாராசி பெயரைச் சொல்லி பிள்ளைபெத்தோம் என்று எளிய மக்கள் வாழ்த்துவது என்றால் எத்தனை பாரத்தை சுமந்து இருக்க வேண்டும் அந்தப் பெண்ணரசி ராணி மங்கம்மாள். குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உயிர் துறப்பது என்றால் எத்தனை துயர் சுமந்து இருக்க வேண்டும் ராணி சின்ன முத்தம்மாள். பணமும்  பெற்றுக்கொண்டு குர்ஆன் மீது செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி நம்பிக்கை துரோகம் செய்தார்கள், நாட்டையே சூறையாடினார்கள் என்றால் எத்தனை நரக வேதனைப்பட்டு தன்னை மாய்த்துக் கொண்டிருப்பார் ராணி மீனாட்சி. தங்கள் சொந்த வாழ்க்கை பொது வாழ்க்கை என எதிலுமே சுகப்படவில்லை இவர்கள்.

வாசகர்களாகிய எங்களுக்கும் வரலாற்றின் மீதான திரைகள் விலகி, ஆன்மீகத்திலும்  லௌகீகத்திலும் வரலாற்றிலும் எத்தனையோ புதிய திறப்புகள்.

எத்தனை நன்றிகள் உங்களுக்கு உரைத்தாலும் போதுவதில்லை எங்களுக்கு.

நெஞ்சம் நிறை அன்புடனும் நன்றிகளுடனும்

ஆனந்த் சுவாமி

***

25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]
முந்தைய கட்டுரைஇந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்
அடுத்த கட்டுரைபடையல், நகை- கடிதங்கள்