பிரயாகை

பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையின் ஐந்தாவது நாவல். பிரயாகை முக்கோண வடிவிலான நாவல். முதல் கோணம்: மகாபாரதத்தின் மையப் பாத்திரங்களின் பிரச்சனைகள், மன ஒருக்கங்கள் புலப்பட தொடங்கியிருப்பது. இரண்டாவது கோணம்: போர் என்பது கெளரவர்கள் – பாண்டவர்களின் அரசுரிமை பற்றியது மட்டுமல்ல, அது புதிதாக குலங்கள் மேல் எழுந்து அதிகாரத்தை நோக்கி செல்வதன் சமூக-அரசியலின் கூட்டு நிகழ்வு. மூன்றாவது கோணம்: திரெளபதி-இன் வருகை மற்றும் அவளின் சுயம்வரம்.

நாவலின் தொடக்க அத்தியாயங்கள் துருவனைப் பற்றியது. துருவன் எவ்வாறு துருவநட்சத்திரமாக மாறி நிலைபெற்றான் என்பதைக் கூறுவது. வடதிசையில் அசையாது நிலையாக இருக்கும் நட்சத்திரம் துருவ நட்சத்திரம். நிலைபெற்றக் காரணத்தினாலேயே கடலோடிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த நட்சத்திரம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற சீசர் பாத்திரம் தான் நிலையானவன் என்பதைக் குறிப்பதற்காக, வடதிசை துருவ நட்சத்திரத்துடன் தன்னை ஒப்பிடும் காட்சி ஜூலியஸ் சீசர் நாடகத்தில் உள்ளது. மனிதர்களால் அடையமுடியாதத் தன்மையான நிலைபெறுதலை துருவன் அடைந்த அத்தியாங்களே இந்நாவலின் தொடக்கம். உலகில் காலத்தால், இடத்தால் மாறாமல் அது நிலைபெறுகிறதோ அதுவே அறம். அதுவே “பெருநிலை”. நாவல் பிற அத்யாயங்கள் அனைத்திலும் துருவன்-இன் பாத்திரம் மீள மீள வந்து கொண்டே இருக்கிறது.

மகாபாரதத்தில் மிகுகற்பனைக் கதைகள் என சொல்லப்படும் புராணக் கதைகள் இல்லாமல் வாசித்தால், அது அரசர்களுக்குள் நடக்கும் வெறும் உரிமைப் போர் என்ற அளவில் ஒரு யதார்தவாதப் படைப்பாகவே எஞ்சும். புராணக்கதைகளே இதை ஒரு செவ்வியல் படைப்பாக மாற்றுகிறது. புராணக் கதைகளில் இருந்து பெற்றுக் கொண்ட ஒன்றை, மகாபாரதத்தின் பிற கதாபாத்திரங்கள் மீது ஏற்றி வைத்து பார்த்தால் – அவர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம். தருமன் – துருவன் மிகச் சிறந்த உதாரணம். வாழ்நாள் எல்லாம் துருவனாக நிலைபெறத் துடிப்பவன் தர்மன்.

பாரதம் முழுவதும் சமநிலையில் இல்லைமால், எந்நேரமும் எது சரி, எது தவறு என்பதை யோசித்து கொண்டே இருப்பவர் தர்மர். தர்மன்-இன் குழப்பங்கள் அதனால் அவன் எழுப்பும் வினாக்கள் என நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் வேகம் கொள்கிறது. துரோணருக்காக துருபதன்-உடன் கெளரவர்களும் பாண்டவர்களும் போர் புரியும் அந்த உச்ச நேரமே தர்மனின் வினாக்களுக்கு பதிலாகவும், அவனுள் புதிய வினாக்களுக்கான விதையாகவும் அமைகிறது. தர்மனுக்கும் துருவனுக்கும் இடையே உள்ள தொடர்பும், போர்களத்திலேயே தெளிவு பெறுகிறது. ‘மழைப்பாடல்’ நாவலில் பீமனைப் பற்றி கூறும் போது “நிலைபெற்ற பாறை பீமன்” என்றே சொல்லப்படுகிறது. தன்னிலை விளிக்கத்தை களத்தில் நின்று தர்மனுக்கு சொல்லும் போதே மகாபாரதம் முழுவதும், அலைக்கழிப்பில்லாமல் நிலைபெற்ற ஒருவனாக பீமன் இருக்கப் போகிறார் என்றே தோன்றுகிறது.

இந்திரன் மைந்தனான அர்ஜுனன் வாழ்நாள் முழுவதும் பெண்களை வெறுப்பவன் என்பதை அடுத்தடுத்த அத்யாயங்கள் நிறுவுகின்றன. பல பெண்களை தேடிச் சென்றாலும் அவனுள் எஞ்சுவது யாவரும் அறியாத சலிப்பே. திரெளவது சுயம்வர நிகழ்விலும் அது புலப்படும். அவமதிக்கப்பட்ட துருபதன் – நெருப்பில் இருந்து பெற்ற மகள் திரெளபதி. அவள் பேரரசியாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளே துருபதனின் வாழ்க்கை முழுவதும் அவனை கொண்டு செல்கிறது. அதில் இருந்து மாறாமல் தன்னை தக்கவைத்துக் கொள்வதே அவனின் ஒரே அறைகூவல்.

யுதிஷ்டிரன் – இளவரசரனாக அறிவிக்கப்பட்ட பின் அஸ்தினாபுரியில் இருந்து விலகும் சகுனி, வயதான நடக்க முடியாத பெரும்பசி கொண்ட ஓநாயுடன் உரையாடுகிறார். அந்த உரையாடலுக்குப் பின் தான், நாம் பாரதம் வழியாக அறிந்த சூழ்ச்சி நிறைந்த சகுனி பிறக்கிறார். அவரே பாண்டவர்களுக்கு எரிமாளிகை கட்ட விழைகிறார். அவமதிக்கப்பட்ட துரியோதனன் அதற்கு தன் மௌன சம்மதத்தை கொடுத்துவிடுகிறார்.

எரிமாளிகை நிகழ்வில் தப்பித்த பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் சென்று, பீமன் இடும்பியை மணந்து, கடோத்கஜன் பிறக்கும் அத்யாயங்கள் நாவலில் அழுத்தம் குறைந்த இனிமையான பகுதிகள். குரங்குகளுடான உரையாடல் மெல்லிய நகைச்சுவை கொண்டவை.

நாவலில் புகை மூட்டமாக அங்கேயும் இங்கேயும் கொஞ்சமாக வருபவர் இளைய யாதவரான கிருஷ்ணன். நீலம் – நாவல் முழுவதும் வியாபித்திருந்தாலும், பிரயாகை அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

என்னை மிகவும் கவர்ந்தது அத்தியாயங்களின் பெயர்கள். அனைத்தும் கவித்துவமானது. பெருநிலை, சொற்கனல், இருகூர்வாழ், மீள்பிறப்பு, இனியன், குருதிகொள் கொற்றவை, வேட்டை வழிகள் போன்ற தலைப்புகள் எனக்கு பிடித்தவை

நன்றி

பலராம கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகேளி [சிறுகதை]
அடுத்த கட்டுரைகந்தர்வன் யட்சன் – கடிதங்கள்