இசை திறக்கும் புதிய வாசல்கள்


காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை வாங்க

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சில நூல்கள் தொடர்ந்துவந்த கொரோனா அலை காரணமாக கவனிக்கப்படாமல் போயினவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. பொதுவாக இங்கே புத்தகங்களைப் பற்றி ஆசிரியர்கள்தான் அதிகமாகப்பேசவேண்டியிருக்கிறது. அவற்றை கவனிப்புக்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. அதைக் கடந்து கவனிக்கப்படும் புத்தகங்கள் சிலவே உள்ளன. பொதுவாக வாசிப்புக்கு எளிமையான, சீண்டும்தன்மை கொண்ட புத்தகங்களே அதிகமாக கவனிக்கப்படுகின்றனவா என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது.சில புத்தகங்களைப் பற்றி எழுத நினைப்பேன். ஆனால் உடனே எழுதினால்தான் உண்டு.

சென்ற ஆண்டு பத்துநூல்கள் வெளியீட்டுவிழாவில் நீங்கள் பேசிய உரையில் தமிழுக்கு ஒரு முதன்மையான படைப்பாளியை அறிமுகம் செய்யும் பெருமிதத்துடன் கிரிதரன் ராஜகோபாலனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதைத் தொகுதியை குறிப்பிடுவதாகச் சொன்னீர்கள். அப்போதே அந்தத் தொகுதியை வாங்கினேன். வாசித்து சில குறிப்புகளும் எடுத்தேன். ஆனால் எழுதவில்லை. அதன்பிறகு கொரோனா வந்தது. பல சிக்கல்கள். அப்படியே தட்டித்தட்டிப் போனது. இன்றைக்கு எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தததற்குக் காரணம் சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்புதான்.

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை என்ற தொகுதியில் அந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் இளைஞனாக இருக்கும்போது போனி எம் பாடலான ‘பை த ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ பாட்டை அதன் மெட்டுக்காக கேட்டிருக்கிறேன். ஆனால் பதினேழாண்டுகள் அன்னியப் பனிநிலத்திலே வாழும்போது சிலசமயம் How shall we sing God’s song in a foreign land? If I forget you, O Jerusalem! என்ற வரி நினைவுக்கு வந்தால் மனசு அப்படியே கொந்தளித்துவிடும். அந்த கொந்தளிப்பை அடையவைத்த கதை அது.

நுணுக்கமான இசைத்தகவல்களாலும் வரலாற்றுச்செய்திகளாலும் பின்னப்பட்ட கதை. பிரஞ்சு இசையமைப்பாளர் ஆலிவர் மெஸ்ஸையனின் “க்வார்டட் ஃபார் தி எண்ட் ஆஃப் டைம்” இந்தக்கதையின் மையப்பேசுபொருள்.  1940 ஆம் ஆண்டு ஜெர்மானிய வதைமுகாமில் எழுதப்பட்ட இந்த இசைக்கோவை கைதிகள் முன்னிலையில்  ஆலிவரின்  பியானோவில் அரங்கேற்றம் ஆனது.அந்த நிகழ்வின் கதைவடிவம்.

இசை பெரும்பாலும் துக்கத்தையே பேசுகிறது. இனிய இசை துயருடையது என்கிறார் பாரதி.ஆனால் துக்கத்தின் உச்சத்தில் இசை இன்னொன்றாக மாறிவிடுகிறது. கடவுளுக்கும் விதிக்கும் அறைகூவலாக வெளிப்படுகிறது. அந்த மாயத்தை இந்தக்கதையில் கிரிதரன் எழுதிக்காட்டியிருக்கிறார்.

மேற்கத்திய கிளாஸிக் இசை பற்றி தமிழ் புனைகதை உலகில் அனேகமாக ஒன்றுமே எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்கு அதைப்பற்றி தெரியாது.வெறுமே பெயர்களை எழுதி வைத்திருக்கும் சில உண்டு.மேற்கத்திய கிளாஸிக் இசை பற்றிய அறிவும் வரலாற்றறிவும் கொண்டு எழுதப்பட்ட கதைகள் இந்த தொகுதியில் உள்ளன. கொஞ்சம் விக்கிப்பீடியாவின் உதவிகொண்டு வாசித்தாலேபோதும் மிகப்பெரிய புதிய உலகத்தை திறந்து தருகின்றன. தமிழில் மிகப்புதிய அனுபவமாக அமையும் கதைகள் இவை. இப்படிப்பட்ட கதைகள் தமிழில் இதற்குமுன் எழுதப்பட்டதில்லை. அத்தகைய முற்றிலும் புதிய ஒரு நகர்வு தமிழிலே நடக்கும்போது நாம் அதை உரிய முயற்சியுடன் அங்கீகரிக்கவேண்டும்.

இசையமைப்பாளர் ராபர்ட் ஷூமான் மற்றும் அவரது மனைவி க்ளாரா ஷூமானின் வாழ்க்கையை ஒட்டி அமைந்த இருள்முனகும்பாதை என்னும் கதையும் தமிழில் இசை சார்ந்து எழுதப்பட்ட கதைகளில் ஒரு கிளாஸிக் படைப்பு என்று சொல்லமுடியும். நாம் சங்கீதம் பற்றி எழுதும்போது அதை தூய்மை என்பதுடன் சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். தமிழில் தி.ஜா முதல் எம்.யுவன் வரை எழுதிய அனைவருமே இதே கோணத்தில்தான் எழுதியிருக்கிறார்கள். அது நம் இசை பக்தியுடன் சம்பந்தப்பட்டது என்பதனால்தான். உருக்கமான தூய்மையான ஒன்றுதான் இங்கே இசையுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது.

நாம் இசையை சரித்திரத்துடனும் அடக்குமுறையுடனும் எதிர்ப்புடனும் இருத்தலின் நெருக்கடிகளுடனும் இணைத்து இலக்கியமாக ஆக்கியதில்லை. அது இந்தக் கதைகளில் காணக்கிடைக்கிறது. இருள்முனகும்பாதை இசைமேதையின் வாழ்க்கையின் சித்திரம். ஆனால் அதைவிட இசையை லௌகீக உலகம் மொழிவழியாகச் சென்று தொடும் சந்தர்ப்பங்களின் கதை என நான் நினைத்தேன்

அறிவியல் கதையான பல் கலனும் யாம் அணிவோம் அழகான மொழிநடை கொண்டது. ஒரு எதிர்காலத்தில் மனித இருப்பின் பொருளே மாறிப்போனபின்னர் எழும் தத்தளிப்பைச் சொல்லும் கதை இது. இத்தொகுப்பின் முக்கியமான கதை.

ஆனால் சங்கீதத்தினூடாக ஆழ்ந்த சரித்திர தரிசனங்களை அளிக்கும் இத்தொகுதியிலுள்ள கதைகள் தமிழுக்கு முற்றிலும் புதிய வரவுகள். தமிழிலக்கியத்தில் சமீபகாலத்தில் புதியவாசல் என்று ஏதாவது திறந்திருக்கிறது என்றால் அது இந்தக்கதைகளிலேதான்.

ராஜசேகர்

ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை – நம்பி கிருஷ்ணன்

 

———————————————————

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

 ஸ்ரீனிவாசன்

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

சா.ராம்குமார்

அகதி

 ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

சுசித்ரா

ஒளி

 சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

காளிப்ரசாத்

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

 ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்,அமெரிக்கா- கடிதம்
அடுத்த கட்டுரைஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.