முதற்கனல் – வேள்விமுகம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வெண்முரசு படிக்க தொடங்கிய நாட்களில் இருந்து அதை பற்றி தோன்றும் போதெல்லாம் குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வேன். உங்களுக்கு அனுப்பும் அளவு சரியானதா என்ற சந்தேகம் உண்டு.ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். இது முதற்கனலின் வேள்வி முகம் பற்றி எழுதியது

முதற்கனல் வேள்விமுகத்துடன் தொடங்குகின்றது. இந்திய வேதமரபின் பின்னனியை மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு கதையாக சொல்கின்றார். புராணக்கதைகளில் கதை சொல்லும் முறையில் இதை பயன்படுத்துவார்கள். மானசாதேவியின் பார்வையில்  துவங்குகின்றது. முதலும் முடிவு மற்ற இருளை சொல்வதில் இருந்து துவங்குகின்றது. அது நாகமாக இருக்கின்றது, அதன் விழைவே பார்வையாக, பார்க்கும் கண்ணாக , சூரியனாக, சந்திரனாக மாறுகின்றது.

ஆசிரியர்  “‘இது நான்’ என சொல்லிக்கொண்டது. ‘இருக்கிறேன்’ என்று அறிந்தது. ‘இனி?’ என்று கேட்டுக்கொண்டது. அந்தச் சொற்கள் அதனுள் அகங்காரமாக மலர்ந்தபோது அதன் தலையில் படம் விரிய ஆரம்பித்தது. “. என சொல்கின்றார். இந்து தத்துவ மரபில் இந்த படிகள் சொல்லப்படும்.

விழைவு ஓளி தரக்கூடியது. ஒளியை காணும் சக்தியை தரக்கூடியது. வெண்முரசு முழுதும் மானுடர் பலரின் விழைவும் அது தரும் பார்வையும், ஒளியும் வந்து கொண்டே இருக்கின்றது.  உத்தரையின் விழைவு பரிட்சத்தாகின்றது, திரௌபதியின் விழைவு அதை பரிட்சத்தினை காக்கும் கருவியை தருகின்றது, பரிட்சத்தின் விழைவு ரிஷியின் பாம்பாகி , ரிஷிபுத்திரனின் சாபமாகி, பரிஷத்தின் முடிவுக்கு காரணமாகின்றது. ஜனமஜேயனின் விழைவு வேள்வியானது. ஆஸ்திகனின் விழைவு உலகினை முக்குணத்தின் சமநிலையை குலைக்கும் செயலை தடுத்தது.

வியாசன் விழைவை உலகின் ஒரு இருப்புகளில் ஒன்றாக காண்கின்றார். ஆசிரியர்  ““நீ இல்லையேல் என் காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. உனது தர்மத்தை நீ செய்வாயாக. உன் குலம் முடிவிலாது பெருகட்டும். இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்வாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என மகாவியாசர் ஆசீர்வதித்தார்.”  என தட்சனை வியாசன் வாழ்த்துகின்றார்.

ஆஸ்திகனின் குரலில் “ஜனமேஜயரே, உங்கள் நகரம் உயிரற்றதைப்போலக் கிடப்பதையே நான் கண்டேன். வீரம் இல்லாத காவலர்கள்… துடிப்பு இல்லாத பெண்கள்… துள்ளிக்குதிக்காத பிள்ளைகள்… இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்”  என ஆசிரியர் முக்குண சமநிலை அழிவினை சொல்கின்றார்.

சமகாலத்தில் கூட வெண்முரசில் ஜெயமோகன் சொல்லும்  ““நான் பிரம்மத்தின் இயல்பான சத்வ குணத்தை இங்கே நிலைநிறுத்த விரும்பினேன் ஆஸ்திகரே’ என்றார் ஜனமேஜயன். “அன்பும் அறமும் நன்மையும் நலமும் மட்டுமே மனுக்குலத்தில் வாழவேண்டுமென விழைந்தேன்” என ஹைப்பராக உலகத்தினை பார்க்கும் தரிசனம் பலருக்கு உண்டு. ஒரு மத்திய வர்க்க மனிதனின் விழைவு.

மாறாக உலகில் உள்ள இச்சையை ஆஸ்திகனின் குரலில்  “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்”  ஜெயமோகன் முன் வைக்கின்றார். துரியோதனனின் சமன்செய்யப்படாத இச்சை அழிவு சக்தியானது மகாபாரதம் காட்டுகின்றது.

முக்குண சமநிலையை பேணுவது தொடர்  செயல். நடந்து முடியும் செயல் அல்ல. நடந்து  கொண்டிருக்கும் வாழ்விலும்,அது எல்லா மானுடருக்கும் அவசியமாகின்றது..
ஏன் மகாபாரதம் சொல்லப்படுகின்றது என்பதையும் வெண்முரசு சொல்கிறது. முதற்கனலின் வேள்வி முகத்தில் அதற்கான பதில் உள்ளது.

உலகம் சத்வ குணத்தால் மட்டும் நிரம்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனமஜேயன் சர்பசத்ரவேள்வி செய்கிறான். வேள்வி செய்யக்கூடியது, அதை செய்யும் வல்லமை உடைய வைசம்பாயனர் இருக்கின்றார். அவர் மன்னருக்கு வேத நெறிகளின் படி வேள்வி செய்விக்கின்றார்.  ஜனமஜேயன் தன்   உலக பார்வை கொண்டு உலகத்தினை நன்மை, தீமை என்ற கருப்பு வெள்ளையாக பார்க்கின்றார்.

அது முழுமையான பார்வை இல்லை, நல்லெண்ணத்தில், நல்ல நோக்கத்தில் இருந்தாலும் அது நன்மை செய்யாது ஒட்டு மொத்த மானுட வாழ்வையும், சமூகத்தினையும், அதன் இயக்கத்தினையும் புரிந்து கொள்ள இந்த பார்வை உதவாது, முழு பார்வை வளர்த்துக் கொள்ள மகாபாரதம் கேட்பது அவசியம்  என வேத வியாசர் மகாபாரதத்தை ஜனமஜேயன் அவையில் சொல்கின்றார்.   ஜனமஜேயன் அதை படிக்கவில்லை, கேட்கின்றார். இது இதிகாச மரபில் முக்கியமானது.

“செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து”   என வள்ளுவர் சொல்லுவார்.

உலகத்தினை உள்ளது உள்ளபடி அதன் உண்மைப் பொருளுடன்  காணும் பார்வையை மகாபாரதம் தரவல்லது என்ற நோக்கில் மகாபாரதம் துவங்குகின்றது

நிர்மல்

முந்தைய கட்டுரைஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2
அடுத்த கட்டுரைஅரூ – அறிவியல் கதைகள்