உலோகம்- கடிதங்கள்

உலோகம் வாங்க

அன்புள்ள ஜெ.

உலோகம் நாவல் வெளிவந்தபோது , அது இயக்கங்களை விமர்சிக்கிறது , ஈழ போராட்ட வலியை சரியாக சித்தரிக்கவில்லை என்றெல்லாம் சிலர் பேசினார்கள்

இன்று படிக்கையில் தனக்கான எல்லைகளை தெளிவாக வகுத்துக் கொண்ட , சாகச வகை நாவல் என புரிகிறதுமுழுக்க முழுக்க இந்தியாவில் நடக்கும் கதை. அந்த சூழல் , அந்த பாத்திரங்களின் மனவோட்டம் என சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை தந்தது

கத்திக்கு பயப்படும் மக்கள் துப்பாக்கிக்கு பயப்படும் சாத்தியம் குறைவுதான் என கொலையாளி அலுத்துக் கொள்வது , விமானச்சத்தத்தின் அர்த்தம் இந்தியாவில் வேறு என ஆசுவாசம் அடைதல் போன்ற பல இடங்கள் வெகுவாக ரசிக்க வைத்தன.

ஒரு நாய் எப்போதும் நாய்தான். ஆனால் ஒரு மனிதன் புத்தராக உயரவும் முடியும். விலங்கினும் கீழ்மகனாவதும் சாத்தியம்அதுபோல , மனிதன் வெறும் ஒரு கொலை ஆயுதமாக செயல்படும் சூழல் வரலாம். எந்த கொலை ஆயுதமும் எட்டமுடியாத கீழ்மையையும் அடையலாம்

சித்தரவதையை ரசித்து செய்த தலைவர்கள் பலர் சித்தரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டதை எல்லாம் வரலாறு பதிவ செய்து கொண்டுதான் இருக்கிறதுமனிதனை துப்பாக்கியாக மாற்றி . அந்த துப்பாக்கியை இயக்குபவர்களாக நினைப்பவர்களும்கூட பிறரது துப்பாக்கிகளாக இருக்கும் சாத்தியங்களையும் நாவல் பதிவு செய்துள்ளது

http://www.pichaikaaran.com/2020/04/blog-post_30.html?m=1

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள ஜெ

உலோகம் நாவலை இப்போதுதான் வாசித்தேன். உங்கள் பெருநாவல்கள், தீவிரமான நாவல்களின் வரிசையில் இதை வைக்கமுடியாது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இதை வணிக எழுத்து என உதறமுடியாது என்பது. தமிழில் நீங்கள் எழுதவந்தது ஒரு திருப்புமுனைக்காலகட்டம். சிற்றிதழ்சார்ந்த யதார்த்தவாத எழுத்தே இலக்கியம், மற்றதெல்லாம் நச்சிலக்கியம் என்னும் மூர்க்கமான நிலைபாடு இங்கே இருந்தது. அது பின்நவீனத்துவ காலகட்டத்தில் அழிந்து இலக்கியத்தின் எல்லாவகையான எழுத்துக்களுக்கும் அவற்றுக்கான இடங்கள் உருவாகி வந்தன. எல்லாமே புனைவுதான், யதார்த்தமும்கூட என்ற எண்ணங்கள் வலுப்பட்டன.

கூடவே அன்று வரை இருந்துவந்த இலக்கியம் -வணிக இலக்கியம் என்னும் பிரிவினை இல்லாமலாகியது. ஏனென்றால் காட்சியூடகம் வணிக இலக்கியத்தை அழித்தது. எழுத்து- காட்சியூடகம் என்ற இருமைநிலை உருவானது. எழுத்தின் அடையாளம் ஒன்றாக ஆகியது. நீங்கள் எழுதிய பேய்க்கதைகள், அறிவியல்புனைகதைகள் ஆகியவை இந்த எல்லைகளை கடப்பதற்கான முயற்சிகள். அத்தகைய முயற்சி என்றுதான் உலோகம், கன்னிநிலம் ஆகியவற்றைச் சொல்வேன். அவை திரில்லர் வகைக்குள் வருபவை. கன்னிநிலத்தில் ஒரு மரபான திரில்லருக்குள் இலக்கிய அம்சமாக கூடசேர்ந்திருப்பது மஹுவா அல்லது ஷ்ர்ராய் லில்லி மலர்கள் உருவாக்கும் மகாபாரத அடிக்குறிப்பு.

அதே போல இந்த உலோகம் நாவலில் ஒருவகை இலக்கியக் கூட்டாக இருப்பது இதிலுள்ள துப்பாக்கி என்ற படிமம். கதைநாயகனே குண்டு லோட் செய்யப்பட்ட ஒரு துப்பாக்கி என்பது. அவன் சுட்டேயாகவேண்டும். மனிதனே ஓர் ஆயுதமாக ஆவது. உலோகம் என அவன் குறிப்பிடப்படுகிறான். உலோகம் என்றால் துப்பாக்கியின் குறியீடு

எதிர்காலத்தில் இந்நாவல் இந்தவகை எழுத்தில் ஓர் இலக்கியமுயற்சியாக கருதப்படும் என நினைக்கிறேன்

ராம்குமார் ஜெகதீசன்

மனித ஆயுதம்..  ‘உலோகம்’ . ஒரு பார்வை

ஜெயமோகனின் உலோகம் ஒரு பார்வை

முந்தைய கட்டுரைநாளை வரும் நிலவு
அடுத்த கட்டுரைகதைகளின் உலகம்- கடிதங்கள்