ஒரு வாழ்த்து

அன்பு நிறை ஜெ ,

கார்கில் நோக்கிய பயணம், ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து தொடர்பான ஒருவழக்கில் தீர்ப்பு வெளியான தினமென்பதால் ஸ்ரீநகரின் கடைத் தெருவில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகளை தவிர அனைத்தும் மூட பட்டு இருந்தன. அன்று முன் தினம் முடிவு செய்து  உங்கள் புகைப்படம் கொண்ட ஒரு குறிப்பை கணினியில் தயாரித்து வைத்திருந்தேன், அதை அச்சிட்டு கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அவ்வாறு செய்தேன், வழி துணையாய் நீங்கள் இருப்பது போல் ஒரு உணர்வுக்காகவும்.

கார்கில் செல்லும் முன் அதை ஸ்ரீநகரிலேயே எங்காவது அச்சிட கடை இருக்குமா என்று தேடி அலைந்து கொண்டிருந்தேன், ஒரு வழியாக ஒரு கடையில் பிரிண்டர் இருப்பதை கண்டுபிடித்து என்னிடம் உள்ள அந்த ஆவணத்தை அச்சிட சொல்லி கடைக்காரரிடம் கேட்டேன், கடைக்காரர் முதலில் தயங்கினார். அது ஏதும் துண்டு பிரசுரம் என நினைத்திருப்பார் போல, பின்னர் ஒருவழியாக அதை அச்சு எடுத்து  கொடுத்தார், அதை கசங்காமல் என் வண்டியின் சேணப் பையில் வைப்பதில் தான் நிறைய மெனகிடல்கள்.

மூன்று நாட்கள் கழித்து லேஹ்விலிருந்து கார்த்துங்க லா நோக்கி பயணம், சட்டென்று எஸ்.ரா எழுதிய ஒரு பத்தி நினைவிற்கு வந்தது , “எவெரெஸ்ட்   சிகரத்தை முதலில் அடைந்த எட்மண்ட் ஹிலாரி உடன் சென்ற ஷெர்பா டென்சிங் நோர்கே எவெரெஸ்ட் உச்சியில் புதைத்து வைத்துவிட சில பொருட்களை தன்னுடன் எடுத்து சென்றார். அதில் சில இனிப்புகளும், தன் மகள் கொடுத்தனுப்பிய ஒரு எழுதுகோலும் இருந்தது.. ”

உலகத்தின் எந்த ஒரு தலை சிறந்த செயலையும் செய்ய வைப்பது ஒரு சொல், அந்த சொல்லை என்றும் அழியாததாக்கி, பதித்து வைத்துவிட்டு செல்வது ஒரு அறிஞனின் எழுதுகோல் .. உலகின் உச்சியில் உறங்கி கொண்டிருப்பது ஒரு அணு ஆயுதமோ, ஒரு போர் வாளோ , புதையல் பெட்டியோ அல்ல, அங்கே இருப்பது ஒரு பேனா… இதை மனதில் அசைபோட்டுக் கொண்டே சென்றபோது கடல் மட்டத்திலிருந்து எற தாழ 18,000  அடியை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன்.

அதுவே முதன் முதலில் நான் செல்லும் மிக உயர்ந்த இடம். அங்கே நான் எதாவது எனக்கான ஒரு நினைவை உருவாக்கி வைத்துக்கொள்ள எண்ணினேன், வெறுமென நான் அங்கே நிற்பதுபோல் இருக்கும் புகைப்படம் என்னை என்றுமே திருப்திபடுத்தாது. அது நானில்லை அதிலிருந்து நான் என்றாவது ஒருநாள் மிகவும் விலகி வந்துவிடுவேன் என தோன்றியது.. என்றுமே மாறாத நிலை ஒன்று உண்டெனில் அது என் குருவின் ஆசி மட்டுமே என தோன்றியது, உடனே வாகனத்திற்கான அனுமதி கோப்புகளுடனிருந்த அந்த அச்சு செய்யப்பட்ட தாளை எடுத்து, கையில் ஏந்திக்கொண்டு  வித விதமாய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். அதை என்று பார்த்தாலும், “உலகில் நான் சென்ற உச்சிக்கு என்னை இட்டு சென்றதும், உச்சியில் என்னுடன் இருப்பதும், என்னை அங்கேயே இருக்க செய்வதும் என் குருவின் சொற்கள் மட்டுமே” என தோன்றும்.

நான் இந்த புகைப்படத்தை சட்டமிட்டு உங்களிடம் கொடுக்க வேண்டுமென ஆசை பட்டேன், சில நேரம் இது என்ன அற்ப விஷயம் இதெல்லாம் ஜெ விரும்ப மாட்டார் என நானே சொல்லி கொள்வேன். அனால் இன்று உங்களுக்கு கொடுப்பதற்கு இந்த எளிய  அன்பளிப்பு மட்டுமே என்னிடம் உள்ளது, உங்கள் மாணவனின் ஆசைக்காக  அதை ஏற்று கொள்ளுங்கள்..

திருவண்னாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் கண்ட  ஒரு வரி நினைவிற்கு வருகிறது “அன்னை கூட அழுகின்ற பிள்ளைக்குத்தான் அமுது ஊட்டுவாள், நீயோ அமுதூட்டி அமுதூட்டியே அழவைக்கிறாய்”.

எங்களை அமுதூட்டியே அழவைக்கும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னும் நீண்டநாட்கள் எங்களை உங்கள் கைகளில் ஏந்தி கொண்டு, அமுதும் ஊட்டி, அழவும் வைத்து, நீங்களே கண்களை துடைத்தும் விட்டு, கொஞ்சிக் கொண்டே இருக்க எம் நல்லூழை வேண்டிக்கொள்கிறேன்…

பாதை அறிந்தும் நாங்கள் தொலைந்து செல்வது,
எங்கள் மேய்ப்பாளனாகிய நீர் எம்மை  மீட்டெடுப்பீர்,
என்ற பெருநம்பிக்கையால் மட்டுமே,
நீர் என்றும் அதை செய்ய தவறியதில்லை.

உங்களை அடையும் பாதையான,
எங்கள் அறியாமையை விரும்பியே ஏற்கிறோம்..
செயலற்று, சோம்பித்துயருறும் எம்மை,
செயல் புரிக என்று மட்டும் சொல்லி,
ஒட்டு மொத்த ரட்சிப்பையும் பொழியும் ஆசானே,

அறத்தை அளவில்லாமல் அருளும்,
உந்தன் கரங்களுக்கு அன்பு முத்தங்கள் .. 

என்றும் பணிவன்புடன்,
இளம்பரிதி

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்
அடுத்த கட்டுரைகுரு நித்யா எழுதிய கடிதம்