கேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல
ஜெ
33 comments
Skip to comment form ↓
srinarayanan
August 20, 2010 at 10:50 am (UTC 5.5) Link to this comment
“கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது”
-முற்றிலும் நூறு சதம் உண்மை.
அதிலும் ரமணி சந்திரன் நடுத்தர குடும்பத்து பெண்களின் ஒட்டு மொத்த வாசிப்பையும் அழித்து விடுகிறார்.
Marabin Maindan
August 20, 2010 at 11:00 am (UTC 5.5) Link to this comment
பொதுமக்கள் வாசிக்க முடியாத நடையில் எழுதி,வாங்கியவர்கள் புத்தகத்தை வைத்துக் கொண்டு திரு திருவென விழிக்கும் நிலையை ஏற்படுத்தும் சீரியஸ் எழுத்தாளர்கள்,வாசகர்களை வைத்து காமெடி பண்ணுவதால்
அவர்கள்தான் கேளிக்கை எழுத்தாளர்கள்.பால் பொங்குவதோ
பருப்பு தீய்வதோ தெரியாமல் இல்லத்தரசிகள் சீரியஸாகப் படிப்பதாலும்,பஸ்நிறுத்தம் வந்தது கூடத் தெரியாமல் இல்லத்தரசர்கள் பயணங்களில் பாக்கெட் நாவல்களை சீரியஸாகப் படித்த வண்ணம் பயணம் செய்வதால்,அவர்கள்தான் சீரியஸ் எழுத்தாளர்கள்.இப்படி அறிவிக்க வேண்டுமென விரைவில் ஒரு பொதுநல வழக்கு
தக்கலை கோர்ட்டில் தாக்கலாகப் போகிறதாமே…..அப்படியா????
bala
August 20, 2010 at 11:00 am (UTC 5.5) Link to this comment
என்னில் நுகர்வு, பங்கெடுப்பு என இரு மனநிலைகள் உள்ளன.. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாகக் கற்பனை செய்து பார்த்து ஒரு குழந்தைத்தனமான ஆசையில் அவ்வுலகில் உலவுவேன்.. என் வாழ்கையில் பொழுதுபோக்கு தேவைப்படும் கணங்களில் வாசிப்பது.. வெறும் நுகர்வு மட்டுமே..
ஆனால் ஜே ஜே என்னைப் புரட்டிப் போட்ட புத்தகம். இன்று வணிகத்தில் நான் உழைப்பின் உச்சங்களைத் தொடவேண்டும் என்னும் வேட்கையை உருவாக்கியது.. கடல் புரமும், ஆழி சூழ் உலகும் தந்த தரிசனங்கள் வேறு.. அது போன்ற படைப்புக்களை வாசிக்க வாசகனின் விழிப்புணர்வோடு கூடிய பங்களிப்பு தேவை.. அது அவனை வேறு தளத்திற்கு உயர்த்தி செல்கிறது.. ஒரு நல்ல இலக்கியம் மனிதனின் உயர்ந்த பட்சத் தேடலான “நான் யார்” யாத்திரையைத் துவங்கும் வாசல் வரை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது என்பது என் அனுபவமாக இருக்கிறது.. மைக்கல் ஜாக்ஸனுக்கும் விவால்டிக்கும் வித்தியாசம் உண்டு தானே?
pichaikaaran
August 20, 2010 at 11:07 am (UTC 5.5) Link to this comment
ஜெ அவர்களே. .
விஷ்ணுபுரத்தை நான் படித்து முடித்த பின்னும் அதை தூக்கி எறியமாட்டேன் . எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பயன்பட கூடிய நூல் அது. எனவே பாதுகாத்து வைப்பேன் . அடுத்த தலைமுறையையும் படிக்க செய்வேன் .வணிக எழுத்தாளர் நூலை அதிக விலை கொடுத்து யாரும் வாங்கவும் மாட்டார்கள் . பாதுகாக்கவும் மாட்டார்கள் . use and throw. ஆனால் பாலகுமாரன் நாவல்களை பாதுகாப்பவர் அநேகம் . பயன்பெற்றோர் அநேகம் . அவரை ரமணி சந்திரன் , ராஜேஷ் குமார் வரிசையில் வைப்பது பாலகுமாரன் அவர்களுக்கு செய்யப்படும் அநீதி.
ஜெயமோகன்
August 20, 2010 at 11:48 am (UTC 5.5) Link to this comment
முத்தையா, இன்னொரு வகையும் உண்டு. சீரியோ கேளீக்கை என்று அதை சான்றோர் சொல்கிறார்கள்
ஜெ
santhana raj
August 20, 2010 at 11:55 am (UTC 5.5) Link to this comment
ஜெ
கேளிக்கை அல்லது வணிக எழுத்தை ஒரே விசயத்தை அல்லது ஒரே பார்முலாவை – காலம் மற்றும் கதா பத்திரங்களை மட்டும் மாற்றி கூறுவதாக வரையறுத்தால் ராஜேஷ்குமார், பி கே பி, சுபா, ரமணி சந்திரன் ஆகியோரை மட்டுமே வரையறுக்க இயலும்.
இதில் பாலகுமாரன், சுஜாதா நிச்சயமாக தீவிர எழுத்தை தொட்டவர்கள் தான். ஞானி, பாமரன் அரசியல் விமர்சகர்கள் மட்டுமே.
தீவிர இலக்கிய படைப்புகள் என்றால் ஜெ மோ, எஸ் ரா. இது என்னுடைய மன சித்திரமே
நான் நேரிடையாக உங்களை அடையவில்லை. “பிச்சைக்காரன்” சொல்வது போல பள்ளி பருவத்தில் அம்புலிமாமா அதன் பின் ராஜேஷ்குமார், பி கே பி.
20 வயதிற்கு மேல் நூலகங்கள் வாயிலாக புதுமை பித்தன், வண்ண நிலவன், சுந்தர ராமசாமி, ஓஷோ, எஸ் வி ராஜதுரை.
வெகு ஜன பத்திரிகைகள் மூலம் ஞானி, பாமரன். அதில் வந்த விமர்சனங்களின் மூலம் சாரு நீங்கள்.
முப்பது வயதில் நவீன ஊடகமான இணையம் – இணைய இதழ் திண்ணை மற்றும் தங்களது வலை தள பங்களை படித்து பின் உங்கள் புத்தகங்களை தேடி…………தற்போது அதில் மூழ்கி கொண்டிருக்கிறேன்.
இப்போது (வயது 35) தரிசன உச்சத்தில் இருபதாக உணர்கிறேன். உங்கள் வழியாக திருமந்திரம், சைவ சித்தாந்தம், வையாபுரி பிள்ளை, க நா சு…….. இது எனக்கு நிகழ்ந்த பரிணாம மாற்றம்.
// 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.//
நிச்சயமாக கசப்பு இல்லை. அவர்களின் நூல்களை தேடி பிடிக்க தூண்டுதலாக தான் இருந்தது.
ஜெயமோகன்
August 20, 2010 at 12:12 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள சந்தான ராஜ்
ஒரு புதிய அறிதல் எப்போதுமே ஒரு நிலைகுலைவை, அதிர்ச்சியை உருவாக்குகிறது. நாம் ஏற்கனவே நின்றிருக்கும் நிலம் இல்லாமலாவதுபோன்ற ஒரு பதற்றத்தை அடைகிறோம். நடைமுறையில்கூட முதலில் கடல் காண்பது முதலில் யானையை பார்ப்பது எல்லாம் அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும் அளிப்பதை கவனித்திருக்கலாம். [இதற்கு பௌத்தம் அந்தகரண விருத்தி என்று பெயர் சொல்லும்] அறிவுத்தளத்தில் இது இன்னமும் அதிகம். நாம் நின்றிருக்கும் கருத்து -ரசனை தளத்தை எது சீண்டினாலும் நாம் கோபம் பதற்றம் கொள்கிறோம். அது இயல்பானது. அதற்கு எதிராக ஒரு மனத்த்யாரிப்பு இருந்தால் அது நிகழ்வதில்லை. புதியவை எவையும் நம்மை சீண்டும் என்றும் நமக்கு கற்பிக்கும் எவரும் நம்மை அறைவார்கள் அல்லது அசைப்பார்கள் என்றும் புரிந்துகொண்டல் பிரச்சினை இல்லை. அந்த மனத்தயாரிப்பு நமக்கு உதவும். அந்த மனத்தயாரிப்புக்கு ஏற்கனவே புதியவற்றுக்கான தேடல் இருக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு புதிய எதுவுமே எதிர்விளைவுகளையே உருவாக்குகின்றன. 20 வருடங்களாக இதை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். புதியவற்றை பற்றி அறியும்போது அதன்மேல் எரிச்சல் கொள்ளாமல் சொன்னவன் மேல் காழ்ப்பு கொள்ளாமல் அதை நோக்கி கொஞ்சமேனும் மனம் திறப்பவர்கள் இருபதுக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே உள்ளனர்.
ஜெ
கோவை அரன்
August 20, 2010 at 12:29 pm (UTC 5.5) Link to this comment
படிக்கும் பழக்கம் சுஜாதா அல்லது பாலகுமாரன் வழியாக வருகிறதுதான் , ஆனால் அங்கே குவியும் கவனம் அடுத்த கட்டத்தை நோக்கி போகவிடாமல் செய்கிறது , பலர் பாலகுமாரன் மாதநாவல்களில் ஆன்மீக கதைகளாக எழுத துவங்கியபின் படிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டனர் ,
ஆக பாலகுமாரன் படித்ததால் தீவிர இலக்கியம் பக்கம் வந்தேன் என்பது தவறு , இணையமும் , வணிக இதழ்களில் இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் கவனமுமே இப்போது நிறையபேரை இலக்கியத்திற்க்கு கொண்டுவந்துள்ளதாக தோன்றுகிறது ,
(ஜூனியர் விகடனில் மீனவர்களின் பிரச்சனைக்கு “ஆழி சூழ் உலகு” எழுதியதால் ஜேடி.குரூஸின் பேட்டியை வெளியிடுகிறார்கள் )
இணையம் வழியாக ஜெவை படித்து , அப்புறம் அவரது நூல்களை வாங்கி படித்து பின்பு மற்ற இலக்கியங்களை தேடும் நிறைய இளம் வாசகர்களை அறிவேன்,
jekay2ab
August 20, 2010 at 12:29 pm (UTC 5.5) Link to this comment
திரு சந்தானராஜ் சொன்னது போலவே நானும் சுபமங்களா பேட்டிகளைப் படித்துதான் பல்வேறு இலக்கியவாதிகள் பற்றி அறிந்து கொண்டேன். என் கல்லூரிப் பருவத்தில் என் ஆங்கிலப் பேராசிரியர் சுபமங்களா இதழ்களை என்னிடம் தந்தார். அதற்கு முன் பாலகுமாரனின் தீவிர வாசகனாக இருந்தேன். ஒரே மாதிரி ஃபார்முலா வைத்துக்கொண்டு அவர் போன்றவர்கள் எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெரிய வந்தது. சுஜாதா எழுதியவை எல்லாம் இலக்கியமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் மூலம் பல வாசகர்கள் நல்ல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அடைந்தார்கள். சீரிய வாசகர்கள் புதிய வாசகர்களை அடைந்தார்கள் என்பதே உண்மை.
இப்போது அந்தப்பணியை நீங்கள் இணையத்தில் செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி.
ramji_yahoo
August 20, 2010 at 1:18 pm (UTC 5.5) Link to this comment
எனக்கு தெரிந்து பல வாசகர்கள் (நான் உட்பட) சுஜாதா பாலகுமாரன் புஷ்பா தங்கதுரை யும் படிக்கிறோம், நகுலன் வண்ண நிலவன், சு ர, கோபி கண்ணன், பஷீர், ஜெயமோகன், கோணங்கி, அம்பை யும் படிக்கிறோம்.
மாலை முரசும் படிக்கிறோம், கார்டியனும் படிக்கிறோம்.
சகலகலா வல்லவன், சிங்கார வேலனும் பார்க்கிறோம், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதியும் பார்க்கிறோம்.
பால குமாரன் என்றுமே தனது எழுத்து மட்டுமே படியுங்கள். கி ரா, வண்ணதாசன் பக்கம் போகாதீர்கள் என்று சொன்னதே இல்லை.
jekay2ab
August 20, 2010 at 1:50 pm (UTC 5.5) Link to this comment
ஒரு எழுத்தாளர் படைக்கும் அனைத்தும் சீரிய இலக்கியமாக இருத்தல் அவசியமா? பாலகுமாரன் ஆரம்பகாலத்தில் எழுதிய சில நாவல்கள் (மெர்க்குரிப் பூக்கள், இரும்புக்குதிரைகள் போன்றவை) மேலும் கணையாழியில் வெளியான அவரது சில கவிதைகள் (குதிரைகள் பற்றிய அவர் கவிதைகள்) இலக்கியத்தரமுள்ளவை என்றே நினைக்கிறேன். அவர் வணிக எழுத்தாளர் என்பதாலேயே தமிழிலக்கிய சூழலில் அவற்றுக்குரிய இடம் மறுக்கப்படுவதாகத் தோன்றுகிறது.
ஜெகதீஷ் குமார்.
http://www.jekay2ab.blogspot.com.
samyuappa
August 20, 2010 at 2:33 pm (UTC 5.5) Link to this comment
முன்னாடிஎல்லாம் ” எல்லாத்து மாதிரியும் இதுவும் கதை தானே’ – இதுல இன்னா இலக்கியம் வாழுது? இதிகாசமே கதைதானே” -அப்பிடீன்னு சொன்னேன். கொஞ்சம் ஆன்மீகமும், கொஞ்சம் தத்துவமும் படிச்சிட்டு வந்தாதான் தெரியுது… வித்தியாசம், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று.
prabha
August 20, 2010 at 2:36 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன் சார்,
எனக்கான முக்கியமான கேள்வி தீவிர இலக்கியம் ஒருவருக்கு என்ன செய்கிறது என்பது தான் ? எனக்குத் தெரிந்து தீவிர இல்க்கியம் வாசிக்கிறவர்கள் வெற்றி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். வசதியற்றவர்களாக வறுமையில் உழல்பவர்களாக .தன் உடலை ,தன் வாழ்க்கையை , தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். எந்த இலக்கியப் பரிச்சயமும் இல்லாத என் மனைவி, வாழ்க்கைப் பற்றிய எந்தக் குழப்பமும் இல்லாமல் தீர்க்கமாக இருக்கிறாள். வாழ்க்கையை உற்சாகமாக அனுகுகிறாள். இலக்கியப் பரிட்சயம் இல்லாத குழந்தைகளும் அப்படியே இருக்கிறார்கள்.இன்னொரு பக்கம் இலக்கியம் படைக்கிற பலர் தந்திரம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களை இலக்காரமாக நினைக்கும் திமிர் நிறைந்தவர்களாக இருக்கிறர்கள், நெஞ்சாரப் பொய் சொல்கிறார்கள்,வன்மம் கொண்டு தன்னினும் இளையோரின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள்? இதில் இலக்கியம் எங்கே யாருக்கு நன்மை செய்கிறது?
tamilsabari
August 20, 2010 at 3:00 pm (UTC 5.5) Link to this comment
/இணையமும் , வணிக இதழ்களில் இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் கவனமுமே இப்போது நிறையபேரை இலக்கியத்திற்க்கு கொண்டுவந்துள்ளதாக தோன்றுகிறது//
ஒப்பு கொள்ள வேண்டியது தான். என்னுடைய 25 வயது வரை நான் வெகுஜன எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே அதிகம் வாசித்து வந்திருக்கிறேன். இணையம் என் வாசிப்பு நிலையை பண் மடங்கு உயர்த்தி இருப்பது நன்றாக இருக்கிறது.
//வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை.//
ஆனால் இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு வழக்கம் நாம் தீவிரமாக ஆராய வேண்டியது.
என் 8 வயது அக்கா மகன் இன்னும் பாட புத்தகத்தை தவிர வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை. இவ்வயதில் நான் காமிக்ஸ், அம்புலிமாமா போன்றவற்றை படித்து கொண்டு இருந்தேன்.
ரமணிச்சந்திரன், பாலகுமாரன், சுஜாதா, கல்கி போன்ற வெகு ஜன எழுத்தாளர்கள் தான் குறைந்த பட்ச வாசிப்பு பழக்கத்தையாவது தமிழகத்தில் உயிரோடு வைத்து இருப்பது என நினைக்கிறேன். இது முதல் படி நிலை மட்டுமே.
வாசிப்பு பழக்கம் பழகினால் தான் இலக்கியம் பற்றிய சிந்தணையே பின்னால் வரும் என்பது என் கருத்து.
ரமணிச்சந்திரன், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கநாசு போன்றவர்களின் படைப்புகளை படிக்க குறைந்த பட்ச வாசிப்பு திறன் தேவைப்படுகிறது. அது காமிக்ஸ் அம்புலி மாமாவில் ஆரம்பிப்பதாகவும் தோன்றுகிறது. மேற்கண்ட படிநிலைகளிலும் இருக்கலாம்.
ஜெயமோகன்
August 20, 2010 at 4:12 pm (UTC 5.5) Link to this comment
http://www.jeyamohan.in/?p=2476 சுவையறிதல்
http://www.jeyamohan.in/?p=7815 சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
http://www.jeyamohan.in/?p=758 ஒரு மலரிதழை முளைக்கவைத்தல்
http://www.jeyamohan.in/?p=387 மரபிலக்கியம் இரு ஐயங்கள்
http://www.jeyamohan.in/?p=46 கலையிலக்கியம் எதற்காக?
http://www.jeyamohan.in/?p=31 எதற்காக வாசிப்பது?
அன்புள்ள பிரபா மேலே கண்ட சுட்டிகளில் நீங்கள் கேட்ட கேள்விகளை விவாதித்த கட்டுரைகள் உள்ளன, உங்களுக்காக தேடி எடுத்தது, நினைவில் இருந்து
எளிமையான பதிலையே சொல்லலாம். நேர்மையானவர்கள் பலர் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள், அயோக்கியர்கள் எளிதாக வெற்றிபெறுவதையும் பார்க்கிறோம். அப்படியானால் நேர்மை எதற்காக? அதை மானுடகுலம் தவறவிட்டுவிடலாமா? உங்கள் கேள்வி இதன் இன்னொரு வடிவமே
நுண்மையான நீதி உணர்வுள்ளவர்கள் அழகுணர்வுள்ளவர்கள் இன்றைய லௌகீக வாழ்க்கையில் தோல்வியடையலாம். ஆனால் அவர்களே நம் வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கிறார்கள். அவர்களே நாமும் பிறரும் வாழும் வாழ்க்கையை உருவாக்கி அளிக்கிறார்கள். நேர்மையற்றவர்கள் வெல்லலாம். ஆனால் நாம் வாழும் இந்த உலகம் நேர்மையாலேயே உருவாகியிருக்கிறது. நேர்மை கொஞ்சம் இழக்கப்பட்டாலும் நாம் எவரும் சாலையில் நடமாட முடியாது.
வென்றவர்களை விட தோற்றவர்களே இந்த உலகை நிர்மாணிப்பதில் பங்களிப்பாற்றுகிறார்கள். கருணாநிதி ஓர் அரசியல் வெற்றி. காந்தி ஒர் அரசியல் தோல்வி
ஒரு சாமானியமனம் வெற்றியை தேர்வுசெய்யலாம், ஆனால் அந்த தோல்வியே மகத்தானது என்றே நுண்ணுணர்வுள்ளவன் சொல்வான்
ஜெ
சாணக்கியன்
August 20, 2010 at 4:26 pm (UTC 5.5) Link to this comment
பலரும் சொல்லியுள்ளதுதான்.
நானும், அம்புலிமாமா, சிறுவர்மலர், கோகுலம்-இல் ஆரம்பித்து நூலகம் சென்று சிறுவர் நாவல், தெனாலிராமன் பீர்பால் கதைகள் என படித்து பின்னர் ராஜேஷ்குமார், சுபா என நகர்ந்து பதின்மவயதில் பாலகுமாரனைப் படிக்கத்தொடங்கினேன். பின்னர் ஆனந்தவிகடனின் மூலமாகவே உங்கள் மற்றும் எஸ்.ரா.வின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் நீங்கள் குறிப்பிட்டதனால் சுந்தரராமசாமி, எஸ்.ரா.வினால் பிரமிள் என வாசிப்பு தொடங்கியது. அதன் பின்னரே இணையத்தின் மூலமாக கிடைத்த பல அறிமுகங்களால் புத்தகக் கண்காட்சிக்கு சென்று இலக்கிய வாசிப்பை மேலெடுக்க முடிந்தது. சக பதிவர்கள் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்களும் சேர்ந்துகொண்டனர். பக்குவப்பட பக்குவப்பட மேலே உள்ள தளத்திற்கு நகரும் பயணம் இது. இதில் ராஜேஷ்குமாருடனே நின்றுவிடுபவர் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.. 10 ஆம் வகுப்புடனே படிப்பை பாதியில் விட்டவர்களைப்போல…
குடும்ப நாவல்களை எழுதும் பெண் எழுத்தாளர்கள்… அவர்களுடயவை தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப்போல… அடுத்தவீட்டிற்கு நிகழும் நிகழ்ச்சிகளை காட்டி ’காசிப்’ பேசும் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு வேறு ஒன்றும் இல்லை…
சுஜாதாவினுடையது வணிக எழுத்துதான் என்றாலும் அது அடுத்த நிலை. கொஞ்சமேனும் அறிவுப்பூர்வமான விசயங்களை வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தது…
பாலகுமாரன் இன்னும் அடுத்த நிலை என்றே சொல்வேன். அதற்கு காரணம் வாழ்வியல் செய்திகளைக் கொண்டிருந்தது அவரது நாவல்கள். அவற்றில் எப்போது கதாபாத்திரத்தின் வசனங்களோடு அதை எதனால், எதற்காக எப்படி பேசியது அந்தப் பாத்திரம் என்ற உளவியல் அணுகுமுறை இருந்தது. இதனால் பயன்பெற்று அக்கருத்துகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தவர்கள் பலர் என்பதனால் அது ‘நுகர்வு’ எழுத்து அல்ல என்பது என் கருத்து. பின்னர் அவர் முழுவதும் ஆன்மீகமாக எழுத ஆரம்பித்தபோது அவர் தன் எழுதும் திறமையை ‘பயன்படுத்த’ தொடங்கிவிட்டார்.
/* சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். */
நல்ல உதாரணம். இம்மலிவு ரசனைகளால் மேலேறி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பது உண்மை.
இளைஞர்கள் பலர் தமிழ் வாசிப்பதே இல்லை. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் மெல்சன் பூன், சிட்னி செல்டன் இதையே வாசிக்கின்றனர். கல்லூரிப் பருவத்தில் சிட்னி செல்டனின் நாவல் ஒன்றை முதல்முறை வாசிக்கத் தொடங்கினேன். 10 பக்கங்களிலேயே அவர் வழக்கமான வணிக எழுத்தாளர் எனப்புரிந்து வெளியே வந்துவிட்டேன்.
சாணக்கியன்
August 20, 2010 at 4:37 pm (UTC 5.5) Link to this comment
ஒரு பயணத்தின் போது கல்கியின் விசிறியான நண்பருடன் நீண்ட விவாதம் செய்ய நேரிட்டது. ‘என்ன உங்க சிவகாமி அம்மா சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா’ என்று அதீத கற்பனை வாசிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் கிண்டலடிக்கும் வசனம் ஜெ.ஜெ. சில குறிப்புகளில் உண்டு. அதிலிருந்து துவங்கியது விவாதம். அது வாசிப்பின் ஒரு நிலை என்றும் அதிலிருந்து மேலே இலக்கிய வாசிப்புக்கு வரவேண்டும் என்றும் நான் சொன்னேன். அவனோ அது தாழ்வானது என்றும் மேலேறி இலக்கியத்துக்கு வரவேண்டும் என்று சொல்வதை ஏற்கமுடியாது என்றும் வாதிட்டான். அது வேறு genre என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் என்றான்… எனினும் ஒரு நாள் நான் சொன்னதை உணர்வான் என்றே நம்புகிறேன்… இணையத்தில் உங்கள் பதிவுகள் பலவும் காடு நாவலும் அவனுக்கும் பிடித்திருக்கின்றன… அந்த வகையில் அவனை வாசிப்பில் வைத்திருப்பதற்கு வணிக எழுத்துகள் பயன்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது…
ramasamy
August 20, 2010 at 4:51 pm (UTC 5.5) Link to this comment
நரேந்திர மோடி ஒரு அரசியல் வெற்றி: காந்தி ஒரு அரசியல் தோல்வி என்றும் சொல்லலாமா?
ஆனால் இந்த நீதி நேர்மை என்னும் ஒழுக்கக் கூறுகளே மத்யமர்களின் மூட நம்பிக்கை போல் தோன்றுகிறது..
jasdiaz
August 20, 2010 at 6:33 pm (UTC 5.5) Link to this comment
/வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை./
At least in my own experience it is not true.
The first novel I read was “thillana Moganambal” which was published in Vikatan in 60s. I was about 10 yrs old and my father used to shout at me “are you going to become a dancer?’ From this novel, I went to read other novels, finished all Tamil fiction books in the school library, then village library. Since there was no Tamil fiction left, I went to read Tamil science & Russian novels published by Soviet Union, then to history, literature, religion, philosophy, then to english books in that order. Today I do not read or relish reading light novels but even for relaxation only serious books. But what I am today started with “Thillana M…” the first step to a great and long journey.
jas
pichaikaaran
August 20, 2010 at 7:10 pm (UTC 5.5) Link to this comment
இதயத்திற்கு இனிய ஜெ மோ . . .
பாலகுமாரன் அவர்களை இலக்கியவாதிகள் வரிசையில் வைக்காதது வருத்தமாக இருந்தது . ஆனால் உங்களை போன்ற சிலரை தவிர , பெரும்பாலாலான இலக்கியவாதிகளை பார்க்கும்போது , பாலகுமாரன் போன்ற உன்னத மனிதரை இலக்கியவாதி வரிசையில் வைப்பது அவரை இழிவு செய்வது போன்றது என்றே உணர்கிறேன் . உங்களையும் கூட இலக்கியவாதியாக பார்க்கவில்லை. சிந்தனையாளராகவே பார்க்கிறேன் .
ஜெயமோகன்
August 20, 2010 at 7:59 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜாஸ், நானும்கூடத்தான் கல்கி சாண்டில்யன் அகிலன் வழியாக வந்தேன். தமிழ் வணிகக் கேளிக்கை எழுத்தில் நான் படிக்காத நூல்கள் மிகமிகக் குறைவாகவே இருக்கும். என்ன சிக்கல் என்றால் படித்த எல்லாமே என் நினைவிலும் வேரு இருக்கின்றன))
ஆனால் இந்தவ்ழியாக வராதவர்கள் மேலும் எளிதாக உள்ளே வந்தார்கள் என்பதை கண்டிருக்கிறேன். நான் என்னை ஒரு ‘கல்வியழித்தலுக்கு’ ஆளாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு பலர் வழிகாட்டினார்கள். நேராக இலக்கியத்துக்கு வந்தவர்களுக்கு அந்தச் சிக்கலே இருக்கவில்லை
இது என் குழந்தைகள் விஷயத்தில் இப்போது நான் பார்ப்பது. இருவருமே மகத்தான வாசகர்கள். என்னைவிட சிறந்த வாசகர் என அஜிதனைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் கொஞ்சம்கூட வணிக கேளிக்கை எழுத்தை வாசித்தது இல்லை. அது அவர்களை நேராக உச்சியில் இருந்த்ே தொடங்கச் செய்கிறது.
ஜெயமோகன்
August 20, 2010 at 8:02 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள பிச்சைக்காரன்
பாலகுமாரன் மீதான உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறேன். ஒர் எழுத்தாளன் மீது கொண்டுள்ள பிரியம் என்பது தன்னளவிலேயே மகத்தானதே. அவரை உங்கள் ஞானாசிரியனாக ஆக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால் அவரில் இருந்து மேலே செல்லும் வாசல்களையும் திறந்தே வையுங்கள். அது உங்களுக்கு உதவும். அந்த நிலை உங்களிடம் இருப்பதை காண்கிறேன், மகிழ்ச்சி
ஜெ
droana
August 20, 2010 at 8:30 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெ,
புதுமைப்பித்தனை இலக்கியத்தின் உச்சமாகவும் சுஜாதாவினை இலக்கியத்தின் ஆரம்ப நிலையாகவும் தாங்கள் தெரிவிப்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. “கல்கி”யின் திணிக்கப்பட்ட நகைச்சுவையை போல் அல்லாது, புபி மற்றும் சுஜாதாவின் எழுத்துக்களில் அங்கதம் இயல்பாகவே இடம்பெறும்.”அங்கதம், இலக்கியத்தின் இன்றியமையாத தன்மைகளுள் ஒன்று” என நீங்கள் ஒருமுறை சொன்னதாய் நினைவு.இருவருமே-புபி,சுஜாதா- நகைச்சுவயினை மிகையில்லாது தமது எழுத்துக்களில் பதிவுசெய்தனர்.
இருவரின் படைப்புகளுமே கண் முன்னே நடக்கும் சம்பவங்கள்,அதன் சமூக பின்ணணி,அதில் கதாபாத்திரங்களின் பங்களிப்பு எனும் ரீதியிலேயே பயணிக்கின்றன.மனிதனின் ஆழ்மன உணர்ச்சிகளை இருவருமே தமது எழுத்துகளில் வெளிக்கொணர்ந்ததாய் தெரியவில்லை. உணர்ச்சிகளை மேலோட்டமாக கூறிவிட்டு காட்சியமைப்புகளிலேயே தமது திறனை அவர்கள் வெளிக்காட்டுகின்றனர்.கோபம்,தன்னிரக்கம்,கன்ணீர் போன்ற உணர்ச்சிகளின் உக்கிரங்களை தவிர்த்துவிட்டு சமூகத்தின் தினசரிகளின் மீதே தனது கவனத்தினை அவர்கள் செலுத்துகின்றனர்.ஆனால் நிகழ்வுகளின் ஆழம்வரை பயணித்து ,எழுத்தினில் சுவாரசியம் கூட்டியதன் மூலம் அவர்கள் அனைத்து தரப்பு மக்கள்களையும் கவர்ந்தனர்.புபி-தனது காலத்திற்கு பின்னர், சுஜாதா-தனது காலத்தின் போதே…
சுஜாதாவினது எழுத்தினில் இருந்த உற்சாகம் புபியினிடம் இல்லாததற்கான காரணம் அவரது வறுமையாகவும் இருக்கலாம்.இருவருமே இலக்கியத்தினை நன்கு அறிந்தவர்கள்,ஆனால் தவிர்த்திருக்கிறார்கள் என்பது என் கருத்து. இவ்வாறு இருவரது எழுத்தின் அடிநாதமும் ஒன்றாக இருக்க…எதனை மையமாக கொண்டு இவர்களை வேறுபடுத்துகிறீகள்…? காலத்தினை கணக்கீடாக கொள்ள இயலாது,ஏனெனில் காலத்தின் வசம் சிக்கும் படைப்பினை எப்படி இலக்கியமாக கருதமுடியும்?
அன்புடன்: துரோணா
காஸ்மிக் தூசி
August 20, 2010 at 9:43 pm (UTC 5.5) Link to this comment
விவாதங்களைப் பற்றி, பொதுவாக:
அடுத்தவர் சொல்லும் கருத்தில் ’ஒருவேளை உண்மை இருக்கலாமோ?’ -என்று ஒரு சிலராவது, சற்றேனும், எண்ணத்துணிந்தது -ஒருவகையில், மனித குலத்தின் பெரும் அதிர்ஷ்டமே. ட்யூப் லைட்டுக்குக் கீழே உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டும் வடை சாப்பிட்டுக்கொண்டும் இணையத்தில் இலக்கிய விவாதம் செய்ய முடிகிறது நம்மால். நல்லவேளை!
இல்லையென்றால், சிக்கி முக்கி கல்லைத் தட்டிக் கொண்டு இன்னமும் குகைக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருந்திருப்போம்,
RV
August 20, 2010 at 10:34 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன்,
கேளிக்கை vs “இலக்கியம்” விவாதங்கள் இத்தனை தூரம் வளரும் என்று எதிர்பார்த்தீர்களோ என்னவோ. :-)
கேளிக்கை எழுத்திலும் இலக்கியம் உண்டு என்றும் அது இலக்கியத்தின் இன்னொரு genre என்றும் கல்கி vs புதுமைப்பித்தன் பதிவில் நான் கேட்ட போது சொல்லி இருந்தீர்கள்.
கேளிக்கை எழுத்திலிருந்து மற்ற இலக்கியத்துக்கு வருவது, இல்லை நேரடியாக வருவது, இல்லை அந்த genre-ஏ போதும் என்று இருப்பது எல்லாம் அவரவரின் தனிப்பட்ட பயணம் இல்லையா? இதை பொதுப்படுத்த முடியுமா? உங்களுக்கு நீங்கள் படித்த கேளிக்கை எழுத்தை எல்லாம் “அழித்து” மீள்பிறவி எடுக்க வேண்டி இருக்கிறது. எனக்கு அப்படி இல்லை. அஜிதன் நேரடியாக வந்துவிட்டார். என் நண்பர்கள் சிலர் சாதாரணமாக கேளிக்கை எழுத்தை படிப்பார்கள், அபூர்வமாகத்தான் “இலக்கியத்தை” படிக்கிறார்கள், அவர்களுக்கும் அதை ரசிக்க முடியத்தான் செய்கிறது. சிலர் வணிக எழுத்து மூலம் வருகிறார்கள், பலர் வணிக எழுத்திலேயே தங்கி விடுகிறார்கள் (வணிக எழுத்தின் nature அப்படி – அகதா க்ரிச்டிதான் உலகின் மிக பிரபலமான எழுத்தாளர் என்று எங்கோ படித்தேன்.) சிலருக்கு வணிக எழுத்தை தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்று தெரிவதில்லை (எனக்கு தமிழில் அப்படி ஒரு உலகம் இருக்கிறது என்று ஒரு இருபது இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால்தான் தெரியும், ஆங்கிலத்தில்தான் அது வரை இலக்கியத்தை தேடிக் கொண்டிருந்தேன்.) // இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. // என்று எழுதுவது உங்கள் அனுபவத்தை பொதுப்படுத்துகிரீர்களோ என்று தோன்றுகிறது. நான் எம்ஜிஆர், ரஜினி, அமிதாப் படம் பார்த்து பழகியவன். எனக்கு அப்ராஜிதொவும் ராஷோமானும் முதல் முறை பார்த்த பார்த்த போதே நான் பார்த்த பத்து சிறந்த படங்களில் இவை இருக்கின்றன என்று தெரிந்தது. நம்மூரில் மசாலா படம் மட்டும் பார்த்து பழகிய பலர் இங்கே வந்து முதல் முறை நல்ல ஜப்பானிய, இரானிய, ஆங்கில, வங்காள டிவிடிகளை பார்த்து புல்லரித்துப் போவதை நான் பல முறை கண்டிருக்கிறேன்.
சரி என் அனுபவத்தை பொதுப்படையாக்குகிறேன் :-) – தெரியாத குறையே “இலக்கியத்துக்கு” வரும் பயணம் தடைப்பட காரணம் என்று எனக்கு தோன்றுகிறது. எது படிக்க வேண்டிய புத்தகம், எது பார்க்க வேண்டிய சினிமா என்று பிறக்கும்போதே ஞானோதயத்தோடா பிறக்கிறோம்? யாரவாது சொன்னால்தானே தெரிகிறது? அலை ஓசைக்கும் சித்திரப்பாவைக்கும் சமுதாய வீதிக்கும் சாகித்ய அகாடமி அவார்ட் கொடுக்கப்பட்டால் அதுதான் இந்த மொழியின் உச்ச இலக்கியம் என்றுதானே நினைப்போம்? சரி சித்திரப்பாவையில் எதோ கொஞ்சமாவது விஷயம் இருக்கிறது, குறிஞ்சி மலரின் லட்சியவாதம் ஓரளவு பரவாயில்லாமல் வந்திருக்கிறது, பெர்னார்ட் ஷா, பெர்டோல்ட் பிரெக்ட் அளவு வர நாளாகும் என்று நகர்ந்துவிடத்தானே தோன்றும்? ஆங்கிலத்தில் இந்த பிரச்சினை இல்லை – கேளிக்கை “இலக்கியம்”, மற்ற “இலக்கியம்” என்பவற்றின் உச்சம் ஒரு பாடப்புத்தகத்தில் கூட தெளிவாக சொல்லப்படுகிறது. போகிற போக்கில் “History of English Literature” என்கிற மாதிரி தலைப்பு உள்ள ஒரு புத்தகத்தை புரட்டினால் ஓரளவு நல்ல ஐடியா கிடைத்துவிடும். அப்படி தேடித் பிடித்து படிக்கும்போது எனக்கு காஃப்கா ஒத்து வராது என்று மெடமார்ஃபாசிஸ் புத்தகம் படிக்கும்போதே தெளிவாக தெரிந்தது. மோபி டிக் எனக்கு சரிப்படும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அப்படி தமிழில் நான் தேடிக்கொண்டிருந்த போது இந்த மாதிரி புத்தகங்கள் பொதுவாக தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் பற்றி பேசினவே ஒழிய இருபதாம் நூற்றாண்டு புனைகதைகளை பற்றி பேசவே இல்லை.எனக்கு இருபது வயது ஆன பிறகுதான் கணையாழி என்று ஒரு பத்திரிகை இருப்பதே எனக்கு தெரியும். க.நா.சு.வின் “படித்திருக்கிறீர்களா” என்ற புத்தகத்தை படிக்கும் வரை கல்கி, சாண்டில்யன், சுஜாதா தாண்டி தமிழ் புனைகதைகள் மிக அபூர்வம் என்றே நினைத்தேன் (எனக்கு அப்போது தெரிந்த தமிழ் “இலக்கியம்” ஜெயகாந்தன், சாயாவனம், தலைமுறைகள் அவ்வளவுதான்) அவர் சொன்ன புத்தகங்களில் பல இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லை என்பது வேறு ஒரு சோகம். நீங்கள் ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறீர்கள், ப. சிங்காரம் என்று ஒரு எழுத்தாளரைப் பற்றி பலரும் கேள்விப்பட்டோம். இல்லாவிட்டால் யாருக்கு தெரியும்? இப்படி இதை படியுங்கள், அதை படியுங்கள் என்று தீவிரமாக சொல்பவர்கள், பதிப்பவர்கள் இல்லாததே தமிழின் “அடுத்த கட்ட இலக்கியங்கள்” வரைக்கும் கேளிக்கை எழுத்தைப் படிப்பவர்கள் வர முடியாததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.
இலக்கியத்தின் வரையறை என்பதே கொஞ்சம் கஷ்டமான விஷயம். “அடுத்த கட்ட இலக்கியம்” என்பதே அவரவரை பொறுத்தது. எனக்கு காஃபகா சரிப்படவில்லை என்றால் அவர் எழுதியது மற்றவருக்கு இலக்கியம் ஆக இருக்காதா என்ன? நான் படித்த எல்லா புத்தகங்களிலும் எனக்கு மிகுந்த மன எழுச்சியை கொடுத்த புத்தகம் “டு கில் எ மாக்கிங்க்பர்ட்” டால்ஸ்டாயை விடவும், மார்க்வேசை விடவும், பின் தொடரும் நிழலின் குரலை விடவும், புதுமைப்பித்தனை விடவும் அது எனக்கு உயர்ந்த புத்தகம். அப்படி நினைப்பவர்கள் மிக அபூர்வம்! அதனால் என்ன? அதைப் போலவே ரமணி சந்திரனே யாருக்காவது இலக்கியமாக இருக்கலாம். அவர் டால்ஸ்டாயையும் படித்துவிட்டு அந்த முடிவுக்கு வந்திருந்தாள் அவரது ரசனை, வரையறை என்று விட்டுவிட வேண்டியதுதான். ஆனால் அவருக்கு டால்ஸ்டாய் இலக்கியத்தின் உச்சம் என்று கருதப்படுகிறார் என்பது தெரிந்தால்தானே அவர் படிப்பார்?
அப்படி புத்தகங்களை பற்றி க.நா.சு.வும், சுஜாதாவும், இப்போது நீங்களும்தான் எஸ்.ரா.வும்தான் எழுதுகிறீர்கள். உங்கள் கருத்துகள், ரசனை எப்போதும் எனக்கு ஒத்து வருவது இல்லை. குறிப்பாக நீங்கள் கேளிக்கை எழுத்தில் முக்கியமானது என்று கருதுவது பல எனக்கு குப்பையாக இருக்கிறது. ஆனால் எதை முயற்சி செய்யலாம் என்று தெரிகிறது.
அப்புறம் பொன்னியின் செல்வன் ரொமான்ஸ் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் பாலகுமாரனின் சில கதைகள் – பந்தயப்புறா மட்டுமே இப்போது நினைவு வருகிறது – “அடுத்த கட்ட இலக்கியம்தான்” என்று நினைக்கிறேன். அவர் எழுதிய சில சிறுகதைகள் – தன் குழந்தை இறக்கும்போது பணம் வரும் என்று யோசிக்கும் வேலை இழந்த ஒரு தகப்பன், கதை பேர் நினைவில்லை – நல்ல இலக்கியமே.
Muthu
August 20, 2010 at 11:15 pm (UTC 5.5) Link to this comment
கல்கியோ, பாலகுமாரனோ தீவிர இலக்கியவாதிகள் அல்ல எனும்போது, அவர்கள் முற்றிலுமாக மறுக்கப்படுகிறார்கள் என்று புரிந்துகொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன்.
அவர்களது பங்களிப்பு மறுக்கப்படுவதில்லை, அவர்களது இடம் என்ன என்பதுதான் சுட்டிக்காட்டப்படுகிறது என்பதை புரிந்துகொண்டால் இந்த பதற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை.
ஒருவகையில் இது நல்லதே. ஊதிப்பெருக்கப்பட்டு பின்னர் அவர்களது பிம்பம் உடையும்போது ஏற்படும் வருத்தத்தைவிட ‘அவர்கள் இன்னார், அவர்களது பங்களிப்பு இன்னது, அவர்களது இடம் இது, அதற்கான காரணங்கள் இவை’ என்பது தெளிவான விவாதங்கள், விமர்சனங்கள் வழியே முன்வைக்கப்படும்போதே யோசித்து புரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும்.
மிக்க நன்றி ஜெ.
அன்புடன்
முத்து
எம்.ஏ.சுசீலா
August 21, 2010 at 12:41 am (UTC 5.5) Link to this comment
திரு ஜாஸ் அவர்களுக்கு,
நானும் கூடக்கல்கி,அகிலன்,நா.பா.,கொத்தமங்கலம் சுப்பு வழி வாசிப்புக்குள் வந்தவள்தான்.
உங்கள் கடிதத்துக்கான பதிலாக ஜெ,எம்மும் அதையேதான் சொல்லியிருக்கிறார் .
அவ்வகை வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆளைக் கொண்டு வந்தது மாயை என்றுதான் ஜெ,எம் சொல்கிறாரே தவிர அது வாசிப்புக்கு ஆளைக் கொண்டு வந்தது என்பதை அவர் மறுக்கவில்லை.
வணிக கேளிக்கைப் படைப்புக்களை இலக்கியம் என்ற சொல்லால் அவர் எங்குமே குறிப்பிடவில்லை.மாறாக அவற்றை எழுத்துக்கள் என்றுமட்டுமே அவர் குறிப்பிடுகிறார்.
எழுதப்படும் எல்லா எழுத்துக்களுமே இலக்கியமாகி விடுவதில்லை.
‘மரத்தை மறைக்கும் மாமத யானைகள் ‘ போல் தடைக் கற்களாக நின்றபடி இலக்கியத்துக்கு சென்று சேரும் வழியை அவை அடைத்து விடுகின்றன அல்லது தாமதப் படுத்தி விடுகின்றன என்று அவர் சொல்வதாகவே நான் அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் இக்கால இலக்கிய வரலாறுகளிலும்,திறனாய்வுகளிலும் தமிழ்ப்புனைகதைப் பரப்பை அகலப்படுத்தியவர் கல்கி,ஆழப்படுத்தியவர் புதுமைப் பித்தன் என்று எழுதப்பட்டிருப்பதையே கிளிப் பிள்ளைகள் போல ஆசிரியர்களும், மாணவர்களும் சொல்லிக் கொண்டிருந்ததுண்டு.
அத்தகைய பிரமைகளைத் தகர்த்தாக வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டால் போதுமானது.
brinjal
August 21, 2010 at 5:11 pm (UTC 5.5) Link to this comment
ஒரு வீட்டில் ஐந்து பெண்களுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எல்லோரும் முக ஜாடை பார்க்காமல் பையனின் உறுப்பையே பார்த்து மகிழ்ந்தார்கள். அது போல ஒரு காலத்தில் வார இதழ்களில் ”ரோமான்டிக்” கதைக்காக காத்திருப்பவர்கள் ‘படத்தை’ பார்த்தே மகிழ்வார்கள். ஆங்கிலத்தில் கூட ”பேப்பர் பேக் ட்ராஷ்” படிப்பவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் தாண்டியது கூட தெரியாமல் ரயிலில் சென்றவர்கள் கூட்டம் கணக்கில் அடங்காததே!
varasiththan
August 21, 2010 at 11:16 pm (UTC 5.5) Link to this comment
இன்றைக்கு இருக்கும் வாசிப்புக்கான சூழலில் இப்படிச் சொல்லலாம். வாசிப்பதை மூச்சாகக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கானது (மூச்சுக்காற்று சரியான கறார் விகிதத்தில் இருக்கவேண்டும்-) அதாவது வாசிப்பதே வாழ்வு என்கிறவர்களுக்கானதுதான் இலக்கியம். வாசிப்புப்பசி, ..பசியெடுக்கும்போது படிப்பவர்கள், தாகமெடுக்கும்போது படிப்பவர்கள் என அவரவர் தேவைக்கேற்றாற்போல எழுத்துக்கள் இருக்கின்றன.அதைத்தீர்மானிப்பது அவரவருடைய வாசிப்புப்பழக்கமே.நல்ல வாசிப்புப்பழக்கம் சிலருக்குத்தான் கிடைக்கிறது.எனவே வாசகர்களை முற்றிலுமாக குறைகூறமுடியாது.
வாசிப்பை ஒரு மனப்பழக்கமாக்கக்கூடிய கல்வி முறை இல்லை.
சிலர்தான் வாசிப்பை தங்கள் பழக்கமாகக்கொள்கிறார்கள்.அதில் சிலருக்குத்தான் வாசிப்பு என்பது மூச்சுப்போலாகிறது.
அனேகருக்கு தேவை கதைகள். கதை கேட்பதில் எல்லாருக்கும் இன்பம் இருக்கிறது.
முன்பு கதைகளை சொல்லக்கேட்டோம். பத்திரிகைகள் வெளிவந்தபோது கதைகேட்கும் இன்பம் கதை படிக்கும் இன்பமாகிவிட்டது.
அவை எழுத்தில் கதை சொல்லத்தொடங்கின.எழுத்தில் கதை சொன்னவர்கள் எழுத்தாளார்கள்.மிக எளிமையாக சிக்கலில்லாமல் கதை சொல்பவர்கள்தான் வணிக எழுத்தாளர்கள்.அனேகர் கதைக்காக படிக்கிறார்கள் அவ்வளவுதான்.
அனேகருடைய வாசிப்புப்பழக்கம் என்பது இந்தக்கதை படிக்கும் ஆவலால் வளர்ந்தது. அனேகர் வாசிப்புப்பழக்கத்தை அம்புலிமாமாவில் தொடங்கி ஆனந்த விகடன் படித்து வளர்ந்திருக்கிறார்கள்.
வணிக எழுத்துக்களின் இலக்கு வாசிப்புப்பழக்கமில்லாதவர்களை நோக்கியது.அவர்களை கவர்ந்திழுத்து கதை சொல்வது. அதனால்தான் கதைசொல்லும் காட்சி ஊடகங்களின் முன் அது தளர்ந்துபோகிறது.
.
சில எழுத்துக்கள் ஒரு அனுபவத்தை ஒரு வயதுக்குரிய ஒரு பருவத்துக்குரிய சாயலைக்கொண்டிருக்கின்றன. அந்தப்பருவத்துக்கு அவை தேவையாயிருக்கின்றன. காலங்கடந்தபின் அவற்றை நாங்கள் மீண்டும் படிப்பதில்லை.
நல்ல இலக்கியங்கள் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு வயதில் படிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவத்தைத்தரும்.
தொலைக்காட்சியில் போரும் சமாதானமும் என்ற நூலை வாசித்த அனுபவத்தை பற்றிய உரையாடலில். ஒரு பெண் சொன்னார் இளம் வயதில் படித்தபோது அதன் காதல் பாத்திரங்களின் தாக்கம் தன்னை ஆட்கொண்டதென்றார். பிறகு மீண்டும் சிலகாலம் கழித்துப்படித்த போது அது வேறொரு அனுபவத்தை வேறோரு பாத்திரம் மூலமாகத்தந்ததென்றார்.
இப்படி அனுபவத்தை வாசிப்பினூடாகப்பெறவேண்டு மென்றால் வாசிப்பினூடாக கற்பனையுலகம் விரியவேண்டும்.சிறுவயதில் ஏற்படும் வாசிப்புப்பழக்கம் இப்படி இயல்பாக உருவாகிவிடுகிறது.
குழந்தைகளுக்கு வாசிப்புப்பழக்கத்தை உருவாக்கவேண்டும்.வாசிப்பு என்பதை இயல்பாக்கவேண்டும்.எதையுமே வாசிப்பினூடாக விளங்கிக்கொள்கிற ஆற்றலை வளர்க்கவேண்டும். அதற்கு ஜெ இன் இலக்கியமோ எஸ்ராவின் இலக்கியமோ தேவையில்லை.
மொழி மாநாடுகளுக்கு செலவழிக்கப்பட்ட கோடிகள் போதும்.
நல்ல ஓவியங்களோடு பல படிமுறைகளில் தமிழில் சிறுவர் குழந்தைகளுக்கான நூல்கள் அச்சிடப்படவேண்டும்.தினமும் அவர்கள் ஒரு புத்தகத்தையாவது வாசிக்கவேண்டும்.வாசிப்புப்பழக்கம் அவர்களின் இயல்பாகவேண்டும். என்ன நடக்கும்?…..மேலோட்டமான வாசிப்புப்பழக்கமற்றுப்போகும்.கதையை மட்டும் பார்க்கும் கதைகேட்கும் மனப்பாங்கு போய் வாசிக்கும் மனப்பாங்கு வந்துவிடும்.ஒரு காட்சியைப்பார்த்தால் அட இதை ஓவியமாக்கினால் எப்படியிருக்கும் என்று ஓவியப்பழக்கமுள்ளவர்கள் வண்ணமயமாக யோசிப்பதுபோல வாசிப்புப்பழக்கமுள்ளவர்கள் அதை வார்த்தையில் பார்க்க ஆசைப்படுவார்கள்.
இந்த ஆசையுள்ளவர்கள் இன்று குறைவு.
பின்னூட்டங்களைப்படிக்கும்போது இன்றைய வாசிப்பு முறையில் ஒருவர் இலக்கியத்தை அடைய நடுத்தர வயதாகிவிடுகிறது. என்பது . தெரிகிறது.
கல்வி முறையில் வாசிப்பு என்பது ஒரு உப பாடமாக இருக்கும் வரையில் வணிக எழுத்துக்கள் ஈர்க்கும் கொக்கி மாட்டியிருக்கத்தான் வேண்டியிருக்கும்.அந்தக்கொக்கியில்தான் வாசிப்புப்பழக்கம் தொங்கிக்கொண்டிருக்கிறது.
அதற்கான மாற்றுமருந்து சிறுவர் இலக்கியம். வாசிப்புப்பழக்கத்தை சிறுவயதில் ஏற்படுத்துவதுதான்.நீதிக்கதைகளை சொல்லி நல்வழிப்படுத்துவது மட்டுமல்ல அது.
ஒரு பத்து வயது வரை குழந்தை மனம் magical realistic சிந்தனை முறையைக்கொண்டிருக்கும். வாசிப்புப்பழக்கம் எழுத்தோடு கற்பனையைத்தொடுக்கும். எழுத்துகளினூடான மாய உலகம் திறக்கும் கதவின் சாவி அந்தக்காலத்துக்குள்தான் இருக்கிறது.கற்பனையத்தூண்டி சிருஷ்டிக்கும் ஆற்றலைத்தூண்டும். சிறுவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாசிப்புச்சூழலை வீட்டிலும் பள்ளியிலும் தமிழில் கல்வி முறையினூடாக ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
எங்களுக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வாசிக்கும் சூழல் கிடைப்பதில்லை/கிடைத்ததில்லை. கிடைத்ததைப்படித்து வளருகிறோம்.
அப்படித்தேறியவர்களில் வாசிப்பவர்கள் /தீவிரமாகவாசிப்பவர்கள் எனச்சிலரே எஞ்சுகின்றனர். அந்தச்சிலருக்குள்தான் இந்த உரையாடல் நடக்கிறது.
இந்தச்சிலருக்கு கிடைத்த சூழலைக்கொண்டு அவர்கள் வாசிப்புலகத்துக்குள் வந்து இலக்கியத்துக்குள் காலடி வைக்கக்கூடியதாயிருந்தது.
இலக்கியம் கிடைத்திருந்தால் இலக்கியத்தைப்படித்து தொடங்கியிருப்பார்கள்.
நன்கு வாசிப்பு பயிற்றுவிக்கப்பட்ட சிறுபிள்ளை கிடைத்தால் இலக்கியத்தை மிகவிரைவிலேயே படிக்கத்தொடங்கிவிடும். ஏனென்றால் அது வாசிப்பதற்காக வாசிக்கும் மனத்தைக்கொண்டிருக்கும்.
அப்படி ஆழமானவாசிப்புப்பழக்கமுள்ள தலைமுறை உருவாகிவிட்டால் அங்குதான் நான் இலக்கியம் படிப்பதில்லை பொழுதுபோக்குக்கு கதைகள் படிக்கிறேன் என்பார்கள் இலக்கியத்தை தெரிந்துகொண்டு.
இலக்கியம் மட்டுமல்ல உலகின் பல விடயங்களை விளங்கிக்கொள்வதற்கு ஆழமான வாசிப்பும் அதையொட்டிய சிந்தனையும் தேவை.வாசிப்பு பழக்கத்தை வளர்த்து விளங்காததையும் படித்தறியும் ஆற்றலையும் உருவாக்கியிராத/ உருவாக்கமுடியாத இன்றைய சூழலில்,
எழுத்துக்களை தரம்பிரித்து இது நல்ல இலக்கியம் இது வணிக எழுத்து என்று குரல் கொடுத்துக்கொண்டிருப்பது வாங்கும் ஆட்கள் ஆருமற்ற சந்தையில் இந்தப்பொருள் நல்ல பொருள் என்று கூவிக்கொண்டிருப்பதாக பலருக்குத்தோன்றுவதில் ஆச்சரியமில்லை!
.
rameshkalyan
August 22, 2010 at 9:48 pm (UTC 5.5) Link to this comment
நானும் பாலகுமாரனைப் படித்தவன்தான். இரும்பு குதிரைக்கு ‘க்’ இருந்திருக்கலாம் என்று கோபம் கொண்டது உண்டு. அவர் ஒரு தளம். அவரை அடைந்து தாண்டிச் செல்ல முடிந்தவர்கள் செல்லலாம். அவருடைய வெற்றி சூத்திரத்தை அவர் அதிகமாக கையாண்டிருந்ததல் அவர் இப்படி தோற்றமளிக்க கூடும். பொதுவாகவே நாவல்கள் கதைகள் அதன் ஆசிரியர்கள் என்று மதிப்பீடுகள் செய்யும் போது.. வாசகர்களும் மதிப்பீடு ஆகிறார்கள். வெற்றிகளும் உன்னதங்களும் எல்லா சமயத்திலும் கைகோர்த்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. அவரவர் இடம் அவரவர்க்கு.
RV
August 23, 2010 at 1:03 am (UTC 5.5) Link to this comment
ஒரு விஷயம் சரியாக பிடிபடாமல் யோசித்துக் கொண்டிருந்தேன், இப்போதுதான் தெளிவாக வருகிறது. “வணிக” எழுத்து இலக்கியத்துக்கு ஆள் கொண்டு வந்து சேர்க்கும் என்பது மாயை என்று எழுதி இருந்தீர்கள்; (எனக்கு இசைவில்லாத ஒரு வாதம்). பாலகுமாரனை படிப்பவர்களுக்கு தி.ஜா.வுக்கு, கு.ப.ரா.வுக்கு நகர்வது கஷ்டமா என்ன?
ஜெயமோகன்
August 23, 2010 at 1:14 am (UTC 5.5) Link to this comment
ஆர்வி
ஆமாம். பாலகுமாரன் வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வெளியே நகர்வதில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் -அனேகமாக முதிரா இளமையில்- அவரை மட்டும் வாசித்து வாழ்க்கையை புரிந்துகொண்டதாக எண்ணிவிட்டு நின்றுவிடுகிறார்கள். அந்த நினைவில் மிச்சநாளெல்லாம் விவாதிக்கிறார்கள். அவரில் இருப்பது வணிக எழுத்து அளிக்கும் ஒரு போலித்தெளிவு. அவரது ஆன்மீகமும் போலி ஆன்மீகம். இதுவே என் என்ணம். அதில் பழகியவர்களுக்கு பின்னர் இலக்கியம் உருவாக்கும் உண்மையான சிக்கல்களும் தீவிரங்களும் மனத்தடையை உருவாக்குகின்றன. அவர்கள் பலர் அசோகமித்திரன் சப்பையாக எழுதுகிறார், தி ஜானகிராமன் வளர்த்துகிறார் என்றெல்லாம் சொல்லி உதறுவதை கண்டிருக்கிறேன். சுசீலா போன்ற ஆர்வமுடைய கல்லூரி ஆசிரியர்கள் அறிவார்கள் அவர்களை இலக்கியம் வாசிக்கச் செய்வது எத்தனை கடினம் என்று. அவ்வாறு வாசித்து பழகாத வாசகர்களை எளிதாக இலக்கியம் பக்கம் கோண்டு வர முடியும். இது என் நேரடி அனுபவம்
இந்த ஒட்டுமொத்த விவாதத்தையே கவனியுங்கள். முன்பு நடந்தவற்றிலும் கூட. எத்தனை பாலகுமாரன் வாசகர்கள் ஜானகிராமனை குபராவை அல்லது ஏதாவது மேலைநாட்டுஎ ழுத்தாளனை ஒப்பிட்டு விவாதித்திருக்கிறார்கள்?
pichaikaaran
August 23, 2010 at 8:40 pm (UTC 5.5) Link to this comment
Dear jm dont expect us to compare balakumaran with other writers . Comparing itself is insult to him . He is not a writer . He is The Writter