கதைசொல்லிகள்-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ,

தமிழ் சிறுகதைகள் இப்போது யூ-டூபில் பரவலாக கேட்க கிடைக்கின்றன. ஒலி வடிவ கதைகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அனுகூலம் – வேறு வேலை செய்து கொண்டே கேட்கலாம் – பயணத்தில், காலை மாலை நடைகளில், சமையல் செய்து கொண்டே…

1) பவா செல்லதுரை மிகவும் பிரபலம். இவர் கதை படிப்பதில்லை – படித்ததை தான் உள்வாங்கியவாறு சொல்கிறார். பெரும்பாலும் கதையில் இருந்து விலகுவதில்லை – ஆனால் எல்லா கதைகளிலும் இடது சாரி பார்வையை (கதாசிரியர் சொல்லாததையும்) கலந்து சொல்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக சொல்லப்படுகிறது.

2)”இலக்கிய ஒலி” சே.சிவகுமார் – இவர் ஒரு கலவை. சில நேரங்களில் கதை படிப்பார், சில நேரங்களில் கதை சொல்லுவார். சில நேரங்களில் கதை பற்றிய தன் கருத்துக்களை மட்டும் சொல்வார்.

3) இப்படிப்பட்ட ஒரு சூழலில், தீபிகா அருண் என்பவர்  “கதை ஓசை” மூலம் தமிழுக்கு ஒரு தொழில் முறை (professional ) கதை சொல்லி-யாக வந்திருக்கிறார். தெளிவான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய  உச்சரிப்பு, கதாபாத்திரங்களுக்கும், கதை சூழ்நிலைக்கும் ஏற்ப குரல் நடிப்பு என்று மிக சிறப்பாக கதைகளை பதிவு செய்கிறார். உங்கள் வலை பக்கத்தில் இவரை பற்றி ஒரு பதிவு வந்தால் இன்னும் பலருக்கும் சென்று சேர்வார். உங்கள் பதிப்பு உரிமைகளில் ஏதும் தடை இல்லை என்றால், அறம் கதை தொகுதியை ஒலி வடிவில் தீபிகா மூலமாக வெளியிடலாம் – இந்த கதைகள் 10 மடங்கு பேருக்கு சென்று சேரும்.

நன்றி
ஸ்ரீராம்.

அன்புள்ள ஸ்ரீராம்

பொதுவாக என் கதைகளுக்கு ஒலிவடிவம் சார்ந்த கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஒலிநூல்களுக்கான ஒப்பந்தங்களை சிலர் கேட்கையில் நான் தயங்குவது ஒன்றினால்தான். அந்த ஒப்பந்தங்களைக்கொண்டு அந்த கதைகளை அவர்கள் முடக்கிவிடுகிறார்கள். அவர்கள் வெளியிடும் ஒலிநூல்களை மிகச்சிலர் கேட்கிறார்கள். அவர்கள் அளிக்கும் காப்புரிமை நகைப்புக்கிடமாகுமளவுக்குச் சிறியது. அச்சிறிய தொகைக்காக கதைகள் பரவுவதை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசின் குந்தி
அடுத்த கட்டுரைவிக்கி- கடிதங்கள் 2