
அன்புள்ள ஜெ
வெண்முரசின் அமைப்பு பற்றிய விவாதங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். இதை ஏற்கனவே வாசித்த நாவல்களை போல வாசிக்கமுடியாது. இந்த பிரச்சினை இந்நாவல்தொடர் வெளிவந்தபோதே தொடங்கிவிட்டது. ஏனென்றால் இந்தவகையான ஒரு எழுத்து இதற்குமுன் இருந்ததில்லை. இதைப்போல ஒரு விஷயம் பேசப்பட்டதுமில்லை.
அதனால் என்ன நிகழ்ந்தது என்றால் ஒருசாரார் இதை வாசிக்காமலேயே ஒற்றைவரியில் கடந்துசென்றார்கள். இன்னொரு சாரார் வாசித்து என்ன ஏது என்று பிடிகிடைக்காமல் அவர்களின் வழக்கமான விமர்சனங்களை வைத்து கடந்துசென்றார்கள். ஆனால் இந்நாவல் இங்கேதான் உள்ளது. இது தன்னை ஆழமாக நிறுவிக்கொண்டிருக்கிறது. இதன் அளவும் விரிவும் வாசகர்களுக்கு பிரமிப்பூட்டவில்லை
ஏனென்றால் வாசகர்கள் ஏற்கனவே இந்நாவலுக்குரிய ஏற்புநிலையில்தான் இருக்கிறார்கள். இந்நாவல் பேசுவது அவர்களின் வாழ்க்கைசார்ந்ததாகவே உள்ளது. நவீன இலக்கியம் என்று சிலவற்றை வாசித்தவர்களுக்குத்தான் அந்த அளவுகோலுடன் வரும்போது இங்கே வாசல் தடுக்குகிறது
அப்படி வருபவர்கள்கூட கொஞ்சம் கவனம்கொடுக்க தயாராக இருந்தார்கள் என்றால் அவர்களுக்கும் புரியும்வண்ணம்தான் இந்த விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏ.வி. மணிகண்டன் எழுதிய குறிப்பை வாசித்தபோது அடிப்படைகள் எல்லாமே அப்போதே பேசித்தெளிவுபடுத்தப்பட்டுவிட்டன என்பதை அறிந்தேன்
கே.லக்ஷ்மணன்
என்றுமுள்ள இன்றுஎன்றுமுள்ள இன்றைப் படித்த பின்பு இதை எழுதத் தோன்றியது. நீங்கள் குறிப்பிடும் “சூழலும் புனைவும் மற்றும் புனைவின் பொது வெளி” இரண்டும் வெண்முரசில் அமைந்த விதம் பற்றிய என் எண்ணங்கள் இவை. இரண்டிற்கும் ஒவ்வொரு மாதிரியை மட்டுமே குறிப்பிடுகின்றேன். இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம்.