அஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர்

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் அவர்களை ஈரோடு வி.ஜீவானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த ஒரு சிறு கருத்தரங்கில் 1993ல் சந்தித்தேன். அதன்பின் தொடர்ச்சியாக கடிதப்போக்குவரத்து இருந்தது. அவர் கோரியமைக்காக சில மொழியாக்கங்களும் செய்திருக்கிறேன். பின்னர் அவ்வப்போது மதுரைவட்டாரத்தின் சூழியல் நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். 1999 வாக்கில் ஒருமுறை பத்மநாபபுரத்தில் என் இல்லத்திற்கும் வந்திருக்கிறார்

தமிழகத்தில் சூழியல் விழிப்புணர்வை உருவாக்கிய முன்னோடிகளில் பால் பாஸ்கர் அவர்களுக்கு முதன்மையான பங்குண்டு. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், வி.ஜீவானந்தம் அவர்களுடன் இணைந்தே பால் பாஸ்கரையும் மதிப்பிட வேண்டும். அஞ்சலி

ஜெ 

தமிழ்நாட்டுப் பசுமை வரலாற்று நாயகன்
பாமயன்

தமிழகத்தில் மனித உரிமைக்காவும் சுற்றுச்சூழலுக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்த முன்னோடிகளில் ஒருவரை தமிழகம் இழந்துவிட்டது. பால்பாஸ்கர் என்ற ஆளுமை பல பசுமை ஆளுமைகளுக்கு ஆணி வேராக இருந்தது. அந்த ஆளுமை ஆகஸ்ட் 20ஆம் நாள் வரலாறாக நம்முன் மாறிவிட்டது.

1959 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் நாள், இப்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முள்ளிப்பாடி என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை திண்டுக்கல்லில் முடிந்து லயோலாக் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடிந்ததார். பின்னர் ஆசிரியப் பணியில் இணைந்தார். இதற்கிடையில் முதுகலை, முனைவர் பட்டம் என்று தனது கல்வியியல் தகுதியையும் உயர்த்திக் கொண்டார்.

கல்லூரிக் காலங்களில் ஐகஃப் எனப்படும் அனைத்திந்திய கந்ததோலிக்க பல்கலைக்கழகக் கூட்டமைப்பில் இளம் மாணவராக இணைந்து பணியாற்றினார். பியுசிஎல் எனப்படும் மக்கள் குடியுரிமைக் கழகத்தில் இணைந்து பல மனித உரிமைப் பணிகளில் பணியாற்றினார். குறிப்பாக சோக்கோ பாட்சா, ஹென்றி டிபேன் போன்ற ஆளுமைகளுடன் இணைந்து தொடக்க காலப் பணிகளில் முன்னோடியாகச் செயல்பட்டார்.

மனித உரிமைகளில் ஒன்றான குழந்தைகள் உரிமை என்ற துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். இவர் ஆசிரியர் என்பதால் குழந்தைகள் மீதான அக்கறை கூடுதலாக இருந்தது. இதற்கென்று 1984ஆம் ஆண்டு ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினார். அமைதி அறக்கட்டளை என்ற அந்த அமைப்பு குழந்தைத் தொழிலாளர் குறித்து முதல் முதலில் பேசிய அமைப்புகளில் ஒன்று. குறிப்பாக சிவகாசி பகுதிகளில் அப்போது குழந்தைத் தொழிலாளர் முறை அதிகமாக இருந்தபோது போராடிய திரு. யு.ஜி. நாராயணசாமி என்ற கம்யூனிசத் தலைவரும், திரு. வித்யாசகர் என்ற ஆராய்ச்சி அறிஞரும் இந்தக் கொடுமையை பத்திரிகை மூலமாக உலகிற்கு வெளிக் கொண்டு வந்தார்கள்.

இவர்களுடைய நட்புகள் திரு பால்பாஸ்கரை குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றும் போராட்டத்திற்கு உந்தித் தள்ளியது. அமைதி அறக்கட்டளை திண்டுக்கல் பகுதியில் பணியில் தனது பணியைத் தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ஐநா மன்ற அளவிலும் இதற்காக அரும்பாடுபட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி இவரது நண்பர், அவரை வைத்து நடைபயணங்களை தமிழகம் முழுவதும் நடத்தினார். பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை உருவாக்கிய திரு. நெடுஞ்செழியனின் தொடர்பு 1990 களில் ஏற்பட்டது. அம்னஸ்டி இன்டர்நேசனல் என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக இருந்த நெடுஞ்செழியனுக்கும் இவருக்குமான நட்பு வலுப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மனித உரிமை என்ற தளத்தில் இருந்து நெடுஞ்செழியன் சுற்றுச்சூழல் தளத்திற்கு வந்தார். அப்படியாக பால்பாஸ்கரும் சுற்றுச்சூழல் களச் செயல்பாடுகளுக்கு வந்தார்.

1992ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு பற்றிய ஐ.நா ஏற்பாடு செய்த உலக புவி உச்சி மாநாடு பிரேசில் ரியோடிசெனிரோவில் நடைபெற்றது. இன்றைய பெரும்பாலான சூழலியல் செயல்பாடுகளுக்கான அடித்தளம் அதுவே என்று கூறலாம். அதில் கலந்து கொண்ட உலகளாவிய செயல்பாட்டாளர்களில் ஒருவர் திரு. பால்பாஸ்கர்.

பின்னர் சுற்றுச்சூழலுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மாசுபாடு நெருக்கடிகளைக் கண்டறிவது, அதை ஆவணப்படுத்துவது, அதை அறிக்கையாக மாற்றி செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பவது, முடிந்தவரை வழக்குகளுக்காக மாற்றி தீர்ப்புகள் வாங்குவது என்று மிக அறிவியல்பூர்வமாக செயல்படுவார். அதற்குரிய வல்லுநர்களை மிகத் திறம்பட வேலை வாங்குவார். நான் அவருடன் பணியாற்றியபோது நேரடியாகக் கண்டுள்ளேன். அதே சமயம் உடன் பணியாற்றுபவர்களை மிகச் சுதந்திரமாக பணியாற்ற விடுவார். பணிகளில் அவசியமில்லாமல் தலையிடவே மாட்டார்.

உச்ச நீதி மன்றத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி வந்த பசுமை நீதியரசர் என்ற பெயர் பெற்ற திருமிகு பி.என். பகவதி பெயரில் பகவதி சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி செயல்படுத்தினார். அதில் அப்போது பசுமை வழக்காடல்களில் புகழ் பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சி. மேத்தா அவர்களை அழைத்து வந்து திருச்சியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தார். அதன் மூலம் தமிழகத்தில் பசுமை வழக்கறிஞர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம். அது நடைபெற முடியாமல் போய்விட்டது.

சுந்தர்லால் பகுகுணாவை வைத்து சர்வோதய இயக்கத்துடன் இணைந்து ஒரு மாநாட்டை சென்னையில் நடத்தினார். திண்டுக்கல் வாணியம்பாடி தோலாலை மாசுபாடு, நொய்யல் ஆறு மாசுபாடு, இறால்பண்ணை எதிர்ப்பு, தூத்துக்குடி பவளப் பாறைகள் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு, கடலூர் சிப்காட் மாசுபாடு, கொல்லிமலை சுரக்கத் தொழில் ஆபத்து, கூடங்குளம் அணுவுலை போராட்டப் பங்கேற்பு என்று தமிழகத்தில் ஒவ்வொரு சூழலியல் செயல்பாட்டிலும் அவர் பங்களிப்பு இருக்கும்.

வெறும் குறை கூறுவதும், எதிர்ப்பதும் மட்டுமல்ல அவரது பணி, சூழலை மேம்படுத்துவதிலும் அவரது பணி மகத்தானது. வேடசந்தூர் பகுதிகளில் நீர் மேலாண்மைக்காக மிகப் பெரிய திட்டம் ஒன்றை அரசு, மற்று செர்மானிய நிறுவனம் ஆகியவற்றுடன் செயல்படுத்தி அதற்கான கென்னடி என்ற சூழலியல் அறிவியல் கற்ற வல்லுநர் ஒருவரை அமர்த்தி அந்தப் பணியைச் செய்தார். அதன் மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததோடு, இயற்கை வேளாண்மையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்வி என்ற தமிழகத்தின் முதன்முதல் சூழலியல் இதழ் அவரால் தொடங்கப்பட்டது. முதலில் கல்வி இதழாக இருந்து பின்னர் சூழலியல் இதழாக இருந்தது. அதில் நான் பொறுப்பாசிரியாக இருந்தேன். தலையங்கம் மட்டும் அவர் எழுதி வந்தார். பின்னர் எனது எழுத்தின் சாரத்தை புரிந்து கொண்டு என்னையே எழுதச் சொல்லிவிட்டார்.

தமிழகத்தில் சூழல் பிரச்சனைகள் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகப் பயணித்துள்ளார் என்று சொல்வதைவிட பயணித்துள்ளோம் என்றே சொல்ல வேண்டும். இப்போது மிகச் சிறந்த சூழலியல் ஆளுமைகளான மருத்துவர் ஜீவானந்தம் உட்பட அனைவரும் அவருடைய நெருக்கமான நண்பர்கள்.

அவர் மிகச் சிறந்த நூலாசியரியரும் கூட. அவரது புகழ் மிக்க விசாரணைகள் என்ற நூல் முக்கியமானது. அப்போது சூழலிலல் பற்றிய நூல்களை யாரும் வெளியிடுவது இல்லை. பூவுலகின் நண்பர்கள் மட்டுமே சூழலியல் நூல்களை பொதுவெளியில் வெளியிட்டு வந்தோம். அந்தக் குறையைப் போக்க அவரே ஒரு நூல் வெளியீட்டு நிறுவத்தை உருவாக்கினார். அதிலிருந்து பல சூழலியல் நூல்கள் வந்தன.
மிகச் சிறந்த நூல்நிலையம் ஒன்றை அவர் உருவாக்கினார். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு என்று யாரும் எது பற்றிக் கேட்டாலும் நாம் செய்தி கொடுக்க வேண்டும் என்பார்.

தில்லியில் உள்ள டவுண் டூ எர்ச் என்ற அமைப்பு போல செயல்பட வேண்டும் என்பார். அமைதி அறக்கட்டளையில் இதற்கென்று பெரிய கட்டிடம் ஒன்றைக் கட்டிப் பணியாளர் ஒருவரோடு அதில் நூலகத்தை நிறுவினார். தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்காத சூழலியல் பற்றிய ஆவணங்கள் அந்த நேரத்தில் அங்கு கிடைக்கும். ஆராய்ச்சி மாணவர்கள் பலர் வந்து குறிப்புகள் எடுத்துச் செல்வார்கள். நான் ஏதாவது ஒரு நூல் வேண்டும் என்று கேட்டால் அது எங்கிருந்தாலும் வரவழைத்துத் தந்துவிடுவார். அது மட்டுமல்ல, அவர் சென்று வந்த உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்கள் நான் கூறிய நூல் வாங்க வேண்டுமென்று மெனக்கெட்டு அலைந்து திரிந்து வாங்கி வந்ததுண்டு. பெரும்பாலும் அவர் பயணம் முடிந்து வரும்போது, புத்தகச் சுமையோடுதான் வருவார். புத்தகங்கள் மீது அவருக்கு அவ்வளவு காதல்.

சூழலியல் விழிப்புணர்வுக்கு என்று பாடல் ஒலிநாடா ஒன்றை திரு. க.ப.அறவாணன் அவர்களை வைத்து வெளியிட்டார். அதில் பெரும்பாலான பாடல்களை நான் எழுதினேன். நீங்கள் பாடலும் எழுதுவீர்களா? என்ற நகைச்சுவையாகக் கேட்டது இன்னும் நிழலாடுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பசுமை வானொலி, பசுமை இணைய தொலைக்காட்சி என்று விரிவாகியுள்ளது. பணிகளுக்காக செலவிடுவதில் அஞ்சவே மாட்டார். கடன் வாங்கியாவது குறிப்பிட்ட வேலையை முடித்துவிடுவார்.

அவரது உழைப்பு வியப்புத் தரும். காரில் எப்போதும் ஒரு கணிணியும் பிரிண்டரும் இருக்கும். அந்த இரண்டையும் வைத்துக் கொண்டு ஒரு சிறப்பான அலுவலகத்தை நடத்திவிடுவார். பல நாட்களில் தியாகராய நகர் அறையில் நாங்கள் இரவு ஒரு மணிக்கெல்லாம் வேலை முடித்து அப்படியே தரையில் படுத்துக்கிடப்போம். எங்களுடன் கைலியோடு படுத்துவிடுவார். காலை எங்களுக்கு முன்பே எழுந்து ஐந்தாறு செய்தித் தாள்களோடு அறைக்கு வந்துவிடுவார். நாங்கள் அனைவரும், சூழலியல் செய்திகள் எங்கெல்லாம் செய்தித்தாளில் வந்துள்ளதோ அதைக் கோடிட்டு வெட்டியெடுத்து கோப்பில் போட வேண்டும். இணையம் இல்லாத அந்த நாட்களில் உருவான அந்தப் பசுமைக் கோப்புகள் தமிழகத்தின் பசுமை வரலாற்றைப் பறை சாற்றும். விரித்தால் அதுவே ஒரு நூலாக மாறிவிடும்.

கடைசி வரை குழந்தைகளுக்காவும் சுற்றுச்சூழலுக்காகவும் பாடுபட்ட அந்த மாமனிதரின் மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு, அவரின் வாழ்வு நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முந்தைய கட்டுரைஞானி-17
அடுத்த கட்டுரைதன்மீட்சி, எம்.எஸ்.உதயமூர்த்தி