அன்புள்ள ஜெ,
லக்ஷ்மியும் பார்வதியும் கதையின் சிறப்பு என்ன என்று பேசிக்கொண்டிருந்தோம். வரலாற்றின் அடியில் இருக்கும் பெண்களின் வரலாற்றைச் சொல்கிறது, பேசப்படாத கதைகளின் வாய்ப்புகளைச் சொல்கிறது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமனாது வரலாற்றை மயக்கமில்லாமல் யதார்த்தமாகச் சொல்கிறது. ரொமாண்டிக்காக இல்லாமல் சொல்ல ஆரம்பித்தாலே வரலாறு சின்னவிஷயங்களின் விளையாட்டாகவும் அபத்தமான ஆட்டமாகவும் ஆகிவிடுவதை காட்டுகிறது
மகேஷ்குமார்.
***
அன்பு ஜெ,
ஒருவகையில் இந்த இரண்டு கதையும் போழ்வு இணைவு கதை போல வரலாற்றுக் கதையாகப் பார்த்தேன் முதலில். வரலாற்றில் மாவிங்கள் கிருஷ்ணப்பிள்ளை போன்ற விசுவாசமும் தாய்நாட்டுப் பற்றுடையோரும் இருக்கின்றனர் பாப்புராவும் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை போன்ற துரோகிகளும் இருக்கின்றனர். இந்த துரோகிகளை தண்டிக்க இயலாத வண்ணம் அவர்களே தோஷங்கள் என்ற பெயரில் ஓர் பயத்தை கடவுளின் பெயரால் ஏற்படுத்தியும் வைத்திருக்கின்றனர். இவற்றைக் கடக்க வந்த முதலாமனாக பார்வதி பாயைப் பார்க்கிறேன்.
பார்வதி தன்னுடைய திட்டங்களை லட்சுமியிடம் சொல்லும் போது அவள் நிம்மதியும் ஆச்சரியமும் அடைந்தது போல நானும் அடைந்தேன். இளமையும் புதுமையும் திறனும் ஒருங்கே பெற்று சாதிக்கத் துடிக்கும் ஏக்கமும், ராஜதந்திர உத்தியும், முன்னோர் வகுத்து வைத்திருந்த பொருளாதார சமூக கட்டமைப்பிற்கான மாற்று திட்டங்களும், குறுகிய நோக்கங் கொண்டு அந்நியரின் ஆட்சியில் மன்னரை எதிர்த்து வீழ்த்த நினைக்கும் துரோகிகளுக்கான இரக்கமற்ற தண்டனையும் பற்றி சொல்லும் போதே அரசு கரைதேறிவிடும் என்ற ஊக்கம் கிடைத்தது. பின்னும் மலையரசி சிறுகதையில் பார்வதி எப்படியெல்லாம் மன்றோ -வை தெறித்து ஓடவைத்தார் என்று தெரிந்த போது ஒரு சிலிர்ப்பை நான் பெற்றேன்.
இப்படி இன்றைக்கு சமகாலத்தில் இளமையும் புதுமையும் திறமையும் கொண்டு செயல்படும் தலைவராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அவர்களை மிகப் பிடிக்கும் எனக்கு. அவர் முன்னெடுக்கும் திட்டங்களை எப்போதும் நண்பர்களுடன் சிலாகிப்பதுண்டு. இங்ஙனம் பார்வதியைப் போன்ற நல்ல தலைமை எல்லா மட்டத்திலும் இன்று தேவைப்படுகிறது ஜெ.
ஆனால் ராமவர்மாவையும் பார்வதியையும் ஒப்புநோக்கும் போது எனக்கு ஒன்று தோன்றியது ஜெ. பெண்கள் எப்படி தாங்கள் மென்மையானவர்கள் என்ற சமூகக் கருத்துருவினால் சோர்ந்து விட்டார்களோ, ஆண்களும் தாங்கள் வலிமையானவர்கள் என்ற ஆண்மைத்தன்மையை நிறுவி நிறுவி சலித்து விட்டார்கள் எனப்பட்டது. ஏன் ஒரு ஆண் இராமவர்மாவைப் போல் மென்மையான இசையாக இருக்கக்கூடாது. திறனுள்ளவரை தானே ஆட்சி புரியும் ஒரு சமூகக் கட்டமைப்பு இல்லாது பார்வதி வருத்தப்பட்டிருக்கக்கூடும். தனக்குப் பின்னான ஒரு திறமையான தலைவரை உருவாக்கிச் செல்ல வேண்டியது ஒரு தலைவரின் கடமை தான். ஆனால் அது அரச குலத்திலிருந்து தான் வரவேண்டுமென்றில்லாமல் திறமையான வேறொருவரை நிறுவும் போக்குக்கு அந்த அரசு இன்னும் வெகு தொலைவு போகவேண்டுமே. ஒருவகையில் தன் இயலாமை விருப்பமின்மையை வெளிப்படுத்தும் ராமவர்மாவும் முதலாமன்தான்.
இறுதியில் ராமவர்மாவின் மரணம் என்பதை அவனுக்கான விடுதலையாகத்தான் பார்க்கிறேன் ஜெ. அரசனாகவும் தான் நினைத்தபடி செய்ய முடியாது, தனக்குப் பிடித்த இசையிலும் முழுமை காண முடியாது, தான் விரும்பிய காதலியோடும் இணைய முடியாத ஒரு உப்புசப்பற்ற வாழ்வினின்று விடுதலை பெற்றான் என்பதை நினைத்து மகிழ்ந்தேன் .உலகியல் கணக்கில் ஊறியவர்கள், தைரியமானவர்கள், நுண்கலைகளை/கலையை இரசிக்க முடியாதவர்களோடு அணுக்கமாக முடியாத ராமவர்மாவை நினைத்து பரிதாபப்பட்டேன். நானும் உலகியல் கணக்கோடு இயங்கும் நபர்களிடமிருந்து விலகி ஓடியிருக்கிறேன். என் அனுபவத்தில் நாசூக்காக எப்படி விலகுவது என்று மட்டுமே கற்றிருக்கிறேன் ஆனால் அவர்களை எதிர்கொள்ளும் வித்தையை இன்னும் கற்க முடியவில்லை. ஒன்றைப் பற்றிக் கொள்ள முயன்று தோற்றுப்போன ராமவர்வின் மரணமே இயற்கை அவனுக்கு அளித்த விடுதலை. மிக மகிழ்ச்சி எனக்கு. எங்கோ வரலாற்றில் நோக்கம், இலட்சியம் என்று வீரமான தேசப்பற்றுக்கதையாக ஆரம்பித்து இறுதியில் அவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி ஆன்மத் திறப்போடு கதை முடிகிறது. வரலாற்றில் ஆன்மப் புனைவு. அருமை ஜெ.
அன்புடன்,
இரம்யா.
அன்புள்ள ஜெ
நூறுகதைகளிலிருந்து இன்னமும் வெளிவரமுடியவில்லை. பலகதைகள் எனக்கு தாமதமாகவே திறந்துகொள்கின்றன என்றால் சிரிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். கதைகளை வாசிக்கும்போது எனக்கு ஒரு பிரச்சினை. பலருக்கும் அது இருக்கலாம். கதை தொடங்கி ஒரு ஏழு எட்டு பத்திக்குள் இதுதான் கதை என ஒரு முடிவுக்கு வந்துவிடுவேன். அதன்பிறகு அதையே மையமாக ஆக்கி கதையை வாசித்துக்கொண்டே போவேன். கதையை அப்படியே நினைவிலும் வைத்திருப்பேன்.
ஆனால் இந்தத்தொகுதியிலுள்ள பலகதைகளின் சரடுகள் வேறுவேறு. முதலில் சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. அதன்பின் கதை ஆரம்பிக்கிறது. விளையாட்டு கதையில் வந்து முடிகிறது. கைமுக்கு அப்படித்தான். ஆரம்பத்திலிருந்தே சுசீந்திரம் கைமுக்கிலேயே நின்றுவிட்டேன். அது உருவகம் என்று புரிய தாமதமாகியது. கைமுக்கு கதையின் உருவகம் என்றுபுரிந்தபிறகு ஆரம்பம் முதல் கதையை வாசித்தால் மொத்தக்கதையும் வேறு ஒரு கதையாக மாறிவிடுகிறது. மனிதன் தனக்குத்தானே ரகசியமாக ஆடிக்கொள்ளும் நாடகம், தன்னைத்தானே அவன் ஏமாற்றிக்கொள்ளும் அழகுதான் கதை. அதை இப்போது மூன்றாம்வாசிப்பில் புரிந்துகொண்டேன். சரி பெட்டர் லேட் தேன் நெவெர்
கே.அரசன்
***
அன்புள்ள ஜெ
நான் ஒருநாளைக்கு ஒன்றாக இந்த நூறுகதைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகதைகளை புதியவையாக வாசிக்கிறேன். கைமுக்கு போன்றகதைகளை வாசிக்கையில் தேர்ந்த மஜிஷியன் கையால் விளையாடி ஏமாற்றுவதுபோல கதையாடலை வைத்து விளையாடுகிறீர்கள் என்று தோன்றியது.
ஔசேப்பச்சன் கதை சொல்கிறான். அந்தக்கதைக்குள் வெவ்வேறு கதைசொல்லிகள். அந்தக்கதைசொல்லிகள் சொல்வதை ஔசேப்பச்சன் நமக்குச் சொல்கிறான் என்பதை நாம் உணரவேண்டியிருக்கிறது. இந்த கதைவிளையாட்டை புரிந்துகொள்ளாமல் கதையை வாசிக்கமுடியாது. அந்தக்கதையே ஒருவன் தனக்குள் சொல்லிக்கொள்ளும் கதை என்பதுதானா?
இந்தவகையான மெட்டாநெரேஷனைத்தான் தொடர்ச்சியாக முயற்சி செய்தார்கள் நம்முடைய புனைவெழுத்தாளர்கள். ஆனால் இதைப்போல ஈஸியாகச் செய்யவில்லை. செய்வது வெளிப்படையாக தெரிந்தது. கதை, துணைக்கதை, ஊடுருவும்கதை என்றெல்லாம் தலைப்பு போட்டெல்லாம் எழுதியவர்கள் உண்டு. அப்படி கதையை ஊடுருவுவதற்கான காரணங்களையும் அந்தக்கதைகள் கொண்டிருக்கவில்லை.
இங்கே திருடனும் திருடனின் அப்பாவும் போலிஸும் அவர்களை பார்க்கும் கதைசொல்லியும் சொல்லும் கதைகள் இணைந்து ஏமாற்றும் எளிமையுடன் ஒரே கதையாக அமைந்துள்ளன. வாசகன் தனிக்கதைகளாக எடுத்துக்கொண்டு ஒரு கதையின் ஓட்டையை இன்னொரு கதையால் அடைக்கவேண்டியிருக்கிறது. அதுதான் அந்தக்கதையின் வாசிப்பனுபவமாக அமைகிறது
ரவீந்திரநாத்