ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்
இந்தக்குரல்கள்
சட்ட நடவடிக்கை
சட்டநடவடிக்கை பற்றி…
பா.செயப்பிரகாசம் பற்றி
சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…
சாதியமும் புரட்சிகரமும்
அன்புள்ள ஜெயமோகன்
முருகானந்தம் ராமசாமியின் முகநூல் குறிப்பை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு மாறான ஒரு குறிப்பு இது. இதுவும் உங்கள் கவனத்துக்கு வரவேண்டும்
எஸ்.சிவக்குமார்
மனஓசையும் பா.செயப்பிரகாசமும்
சி.சு.செல்லப்பாவுக்கு தமிழ் சிறுபத்திரிகை உலகில் என்ன இடம் இருக்கிறதோ அதே இடம் பா.செயப்பிரகாசத்துக்கும் உண்டு. ‘எழுத்து’ம் ‘மனஓசை’யும் இல்லையெனில் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
மிகைப்படுத்தவில்லை. இன்று காத்திரமான சிறுபத்திரிகை தீவிர இலக்கியவாதிகளாக அறியப்படும் பலர் ‘மனஓசை’யில் எழுதத் தொடங்கியவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு மேடை ஏற்றி அழகுப் பார்த்தது ‘மனஓசை’யே.
இத்தனைக்கும் புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றின் வெகுஜன திரள் சார்பாக வெளிவந்த பத்திரிகையே ‘மனஓசை’. என்றாலும் அப்பத்திரிகையின் ஆசிரியராக பா.செயப்பிரகாசம் இருந்ததாலேயே அரசியல் பண்பாட்டுத் தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே கலைத்தன்மைக்கும் அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது.
உண்மையிலேயே அது பெரிய விஷயம். சாதனை என்றும் சொல்லலாம். ஏனெனில் ‘மனஓசை’க்கு முந்தைய காலம் தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த கொந்தளிப்பான கட்டம்.
நாடு விடுதலை… நிர்மாணம்… மொழிவாரி மாநிலங்கள்… இந்தி எதிர்ப்புப் போராட்டம்… அதைத் தொடர்ந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம்… நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த உழவர் புரட்சியை அடுத்து இந்தியா முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைக்கு எதிராக தொண்டர்கள் மத்தியில் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டம்… மார்க்சிய லெனினிய அமைப்புகளின் தோற்றம்… ஆயுதப் புரட்சியும் அழித்தொழிப்பும் முன் எடுக்கப்பட்ட சூழல்… இதனால் புரட்சிகர அமைப்புகளில் ஏற்பட்ட பின்னடைவு…
இந்தப் படிப்பினையில் இருந்து ஆயுதப் புரட்சிக்கு முன் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கோட்டயம் வேணு முன்வைத்த Mass Line… இதற்கு புரட்சிகர அமைப்புகளில் ஒருசாரார் மத்தியில் கிடைத்த ஆதரவு… இதனை அடுத்து குழு, கூட்டுக்குழு, வெகுஜன திரள் என தமிழக மார்க்சிய லெனினிய அமைப்புகளில் ஏற்பட்ட பிளவு…
வெண்மணியில் எரிக்கப்பட்ட உயிர்கள்… தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், பொன்பரப்பி, அன்றைய ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம்… ஆகிய இடங்களில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் தலைமையில் வேட்டையாடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மா லெ தோழர்கள், அமைப்பினர்…இதனை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவதற்காக உருவான மக்கள் உரிமைக் கழகம்…இப்படி நாடு முழுக்கவும் மாநிலம் நெடுகவும் புறச்சூழல்கள் நிலவி வந்த நேரத்தில் சிறுபத்திரிகைகள் ‘கலை கலைக்காகவே’ கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தன… இதற்கு எதிராக இடதுசாரிகள் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்…
இதற்கு மத்தியில்தான் ‘மனஓசை’ 1980களில் பிறந்தது.உண்மையில் ‘கலை இலக்கியம் யாவும்’ மக்களுக்கே’ என்ற இலக்குடன் ‘மனஓசை’ பயணப்பட்டாலும் கூடவே ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தவர்களையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் பக்கம் இணைத்தது என்பதுதான் முக்கியமான விஷயம்.
இந்த இணைப்பே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் உருவாகவும் வித்திட்டது.பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘மனஓசை’ இப்படி இரு தரப்புக்கும் பாலமாக அமைந்ததால்தான்… எஸ்.வி.ராஜதுரையால் துணிச்சலாக ‘இனி…’ மாதப் பத்திரிகையை கொண்டு வர முடிந்தது.
ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் சார்பாக அனுராதா ரமணனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘சுபமங்களா’ மாத இதகட்ட அமைக்கப்பட்ட சாரம் சர்வநிச்சயமாக ‘மனஓசை’தான்.
மதுரைக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜனுடன் ஏற்பட்ட அறிமுகம்… அவர் வழியாக தனக்குப் படிக்கக் கிடைத்த ‘சரஸ்வதி’, ‘எழுத்து’ பத்திரிகைகள் என வளர்ந்த பா.செயப்பிரகாசம், சேலத்தில் 1971ல் பணியாற்றியபோது ‘வானம்பாடி’ முதல் இதழைப் பார்க்கிறார். ‘வானம்பாடி’ குழுவினருடன் அறிமுகம் ஏற்படுகிறது. என்றாலும் அவர்களது வார்த்தை ஜால கவிதைகளில் அவர் மயங்கவில்லை.
இப்படி இருந்த பா.செயப்பிரகாசத்தை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த இடதுசாரிய கருத்தியல் பக்கம் திருப்பியது தமிழ்நாடன்தான். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாமரை’யில் பா.செயப்பிரகாசத்தின் ‘குற்றம்’ சிறுகதை முதன் முதலில் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை எல்லாமே இன்றும் பா.செயப்பிரகாசத்தின் பெயர் சொல்லும் படைப்புகள்.
எலும்பும் தோலுமாக இருக்கும் ஒருவன் சுடுகாட்டில் கட்டுமஸ்தான வஸ்தாதுவை புரட்டி எடுக்கும் ‘ஜெருசலேம்’ இன்றும் நினைவில் நிற்கும் ஒரு சோறு பதமல்லவா..?
என்ன… ‘மனஓசை’க்கு ஆசிரியரானதும் தன் படைப்புத்தன்மையை குறைத்துக் கொண்டார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளிலும் பிரச்சாரம் தூக்கலாகவே இருந்தன.
என்றாலும் தன் ஆசிரியத்துவத்தில் பல காத்திரமான நல்ல படைப்புகளை வெளியிட்டார். சிறப்பான பல கதைகள் வந்தன. இலக்கிய சிந்தனை போன்ற அமைப்புகளால் அந்த மாதத்துக்கான சிறந்த கதை என தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.
குறிப்பிடத்தகுந்த மொழியாக்கக் கதைகள், மொழியாக்கக் கவிதைகள் பிரசுரமாகின.மாற்று புரட்சிகர அமைப்பில் இயங்கிய கோ. கேசவனை தொடர்ந்து ‘மனஓசை’யில் எழுத வைத்தார். சீரழிவுக் கலாச்சாரம் குறித்தும் சோழர் காலத்தில் நடைபெற்ற கலவரங்கள் பற்றியும் கோசவன் எழுதிய கட்டுரைகள் பெரும் திறப்பை நிகழ்த்தின.
கோவை ஞானி, அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், கலை இலக்கியப் பிரச்னைகள் குறித்து நடத்திய உரையாடல்கள், விவாதங்களும் தொகுக்கப்பட வேண்டியவை. போலவே பெட்ரோல்ட் பிரெக்ட் குறித்த அ.மார்க்ஸின் தொடர். குறிப்பாக தோழர் வசந்தகுமார் திராவிட இயக்க கலாச்சாரம் தொடர்பாக எழுதிய ஆய்வுத் தொடர் அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
பெருமாள் முருகன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், இந்திரன், பாவண்ணன், பழமலை, சுயம்புலிங்கம், சுப்ரபாரதிமணியன்… என பலரது பெயர்களை முதன்முதலில் பார்த்ததும் அவர்களது படைப்புகள் அறிமுகமானதும் ‘மனஓசை’ வழியாகத்தான்.
ஆப்பிரிக்க – மூன்றாம் உலகக் கவிதைகளை இந்திரனும், மலையாளக் கவிதைகளை சுகுமாரனும் தொடர்ந்து ‘மனஓசை’யில் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.
எல்லா மனிதர்கள் மீதும் எல்லாவிதமான விமர்சனங்களும் உண்டு. அதையெல்லாம் மீறி, தன் காலத்தில், தனக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அந்த மனிதன் என்ன செய்தான்… எந்தவிதமான தாக்கத்தை சூழலில் ஏற்படுத்தினான்… என்பதை வைத்துதான் அவனது இருப்பை அளவிட முடியும்.
போலவே அந்தந்த காலகட்டத்தை பொறுத்துதான் அந்தந்த படைப்புகளை மதிப்பிட முடியும். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை அவரது காலத்தை சேர்ந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுடன்தான் உரசிப் பார்க்க வேண்டும்.
வெறும் கால்களுடன் மண் தரையில் ஓடிய வீரனின் வேகத்தை ஷூக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அதை அணிந்து கொண்டு இயந்திரத்தால் சமமாக்கப்பட்ட தரையில் ஓடும் வீரனின் வேகத்துடன் ஒப்பிடுவது தவறல்லவா..?
இலக்கியம் என்பது ரிலே ரேஸ் போன்றது.உலகமயமாக்கலுக்கு பின் பரவலான இணையப் பயன்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டையும், ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாழ்வியலையும் சிந்தாமல் சிதறாமல் இணைத்துக் கொடுத்து இன்று மைதானத்தில் ஓட வைத்துக் கொண்டிருப்பது ‘மனஓசை’தான்… பா.செயப்பிரகாசம்தான்.எனவேதான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக அவர் வாழ்கிறார்.
என்ன… கிளைகளுக்கும் இலைகளுக்கும் வேரின் வியர்வை ஒருபோதும் தெரிவதில்லை… தன்னைத் தாங்கிப் பிடிப்பதே அந்த வேர்தான் என்பதையும் அவை அறிவதில்லை…
ழுக்கு ஆசிரியராக கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்றதும் அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தையே முற்றிலுமாக மாற்ற முடிந்தது.
திறமை இருந்தும் மேடை கிடைக்காமல் அல்லாடிய அப்போது இளைஞனாக இருந்த ஜெயமோகனை… தான் கொண்ட கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலும் திறமைசாலி என மதித்து கோமல் சுவாமிநாதனால் தொடர்ந்து ‘சுபமங்களா’வில் எழுத வைக்கவும் முடிந்தது.
இதற்கான விதை ‘மனஓசை’தான்… அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தை நிர்ணயித்த அதன் ஆசிரியரான பா.செயப்பிரகாசம்தான்.
அரசியல் பண்பாட்டுக் கட்டுரைகளுடன் மக்கள் நலன் சார்ந்த – அதேநேரம் இலக்கியத் தரத்துடன் சிறுகதைகள்… உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் கவிதைகள்… மக்களின் பிரச்னைகளை முதன்மைப்படுத்திய மேற்கத்திய கோட்பாட்டு அறிமுகங்கள்… என இன்றைய இடைநிலை பத்திரிகைகளுக்கான இலக்கணங்களை மிகத்துல்லியமாக வரையறுத்துக் கொடுத்தது சாட்சாத் ‘மனஓசை’தான்.
இந்த சாரத்தைதான் கண்ணன் 1990களின் மத்தியில் எடுத்துக் கொண்டார். தன் தந்தை சுந்தர ராமசாமியால் நடத்தப்பட்ட ‘காலச்சுவடு’ காலாண்டிதழை தன் பொறுப்பில் இரு மாத இதழாக அவர் கொண்டு வர எண்ணியபோது அவர் முன்னால் தமிழகச் சூழலில் சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாவாக – ப்ளு பிரிண்ட் ஆக – இருந்தது ‘மனஓசை’யே.
ஒருவேளை கண்ணன் இதை மறுக்கலாம் அல்லது உண்மையிலேயே தனக்கான ப்ளு ப்ரிண்ட் ஆக வேறு மேற்கத்திய பத்திரிகையை அவர் கொண்டிருக்கலாம்.
ஆனால், ‘மனஓசை’ எப்படிப்பட்ட வரையறைகளுடன் பா.செயப்பிரகாசத்தால் கொண்டு வரப்பட்டதோ… அதே இலக்கணத்துடன்தான், கண்ணன் பொறுப்பேற்றது முதல் ‘காலச்சுவடு’ வருகிறது என்பதை மறுக்கவே முடியாது.
என்ன… ‘மனஓசை’ இடதுசாரி கருத்தியல்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ‘காலச்சுவடு’ வலதுசாரி கருத்தியல்களுடன் அனைத்து தரப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. கட்டடங்கள் வேறு வேறு. ஆனால், கட்டடம்
***
அன்புள்ள சிவக்குமார்
இது போய்க்கொண்டே இருக்கிறது. வாசகர்களுக்கே சலித்திருக்கும்
கே.என் சிவராமன் கொடுத்திருக்கும் இந்தக்கோணம் முக்கியமானதுதான். புனைவெழுத்தாளராக பா.செயப்பிரகாசத்தின் இடம் ஏதுமில்லை. அவருடைய அரசியலைப் பற்றி அவருடைய முன்னாள்தோழர்களின் சொற்களை எடுத்துக்கொண்டாலே அது நேர்மையானதுமல்ல- அது ஒரு சமரசநாடகம், ஒருவகையான பொதுப்பாவலா- பெரும்பாலான வானம்பாடி கவிஞர்களைப்போல வாயுபச்சாரம்.
ஆனால் ஓர் இதழாளராக அவருக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. அதை கே.என்.சிவராமன் கூறியிருப்பதை நான் ஏற்கிறேன்.ஆனால் வழக்கமான முகநூல் குறிப்புகளில் இருப்பதுபோல இது ஒரு மிகைப்பேச்சு, தழுதழுப்பு. அதைக் கழித்துவிட்டு இதைக் கருத்தில்கொள்ளலாம்தான்.
எழுபதுகள் முதல் இடதுசாரி தீவிரப் பிரசுரங்களுக்கு அழகியல்பார்வை என ஏதும் இருந்ததில்லை. சோஷலிச யதார்த்தவாதம் சார்ந்த பார்வைகூட இருந்ததில்லை. அவர்களின் அன்றைய கட்சி அரசியலின் கூச்சல்களே அவற்றில் மிகுந்திருக்கும். இலக்கியம் என்பது ஒருவகையான துண்டுப்பிரசுரம் என்னும் மனநிலை. கட்சிக்குள்ளே இருந்தே எழுத்தாளர்களை தேடும் மனநிலை.
ஏறத்தாழ இதே பார்வைதான் இடதுசாரி கட்சி இதழ்களுக்கும் இருந்தது. அந்தப்பார்வையில் உடைவை உருவாக்கிய முன்னோடி இதழாளர் விஜயபாஸ்கரன். அவருடைய சரஸ்வதி இதழ்தான் தமிழ் இடதுசாரி இதழ்களுக்கெல்லாம் முன்னோடி. ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் ஜி.நாகராஜனும் உருவாகி வந்த களம் அது. இடது அரசியலின் நேரடி நீட்சியாக அன்றி அதை தனியான ஒரு பண்பாட்டுட்டுச் செயல்பாடாகப் பார்க்கும் கோணம் முதலில் தமிழில் விஜயபாஸ்கரனால்தான் தொடங்கிவைக்கப்பட்டது.
சரஸ்வதி கட்சிச்சார்பு இதழ், கட்சி இதழ் அல்ல. அதை கட்டுப்படுத்தும்பொருட்டு கட்சியால் தாமரை இதழ் தொடங்கப்பட்டது.சரஸ்வதி வீழ்ச்சியடைந்தது. ஆனால் தாமரைக்கு ஆசிரியராக தி.க.சிவசங்கரன் வந்தபோது அவர் விஜயபாஸ்கரனின் வழியையே பின்பற்றினார். இலக்கியவிமர்சகர் என்ற வகையில் தி.க.சிவசங்கரனுக்கு எந்த இடமும் இல்லை- ஆனால் கி.ராஜநாராயணன் முதல் பிரபஞ்சன் வரை இரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கு தாமரையில் களம் அமைத்துக்கொடுக்க அவரால் முடிந்தது. அது ஒரு முதன்மைப் பங்களிப்புதான்
தீவிர இடதுசாரி இதழ்களின் பார்வை இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை மறுப்பதாகவும் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை மறுப்பதாகவும் இருந்தது. மனஓசை அதில் ஓர் உடைவு. விஜயபாஸ்கரன், தி.க.சிவசங்கரன் வரிசையில் பா.செயப்பிரகாசம் அந்த உடைவை அங்கே நிகழ்த்தினார்.

அன்று எழுதுவதற்கு சிற்றிதழ்களில் பெரிய தேக்கம் உருவாகியிருந்தது. இடதுசாரிப் பார்வை உடைய, அல்லது ஓரளவு அதற்கு ஒத்துப்போகக்கூடிய படைப்பாளிகளைக் கண்டடையவும் அவர்களுக்குக் களம் அமைத்துக்கொடுக்கவும் பா.செயப்பிரகாசம் என்னும் சூரியதீபனால் இயன்றது.அது அவர் தமிழுக்கு அளித்த பங்களிப்பு. அவ்வகையில் முதல் இருவரின் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்தான்.
அந்த இடத்தை அவருக்கு அளிக்கத்தான் வேண்டும். இன்று சூரியதீபன் என்றபெயரில் அவர் எழுதினார் என்பது அவர்மேல் வைக்கப்படும் அவதூறு என்று அவருடைய வழக்கறிஞர்கள் கூறும்நிலையில் கே.என்.சிவராமன் நீதிமன்றம் வந்து இக்கருத்தை வலியுறுத்துவாரா என்ற சந்தேகம் எனக்கிருந்தாலும்கூட
*

ஆனால் இந்த குறிப்பில் பா.செயப்பிரகாசத்திற்கும் [அதாவது சூரியதீபனுக்கு] மனஓசைக்கும் கே.என்.சிவராமன் அளிக்கும் இடம் மிகையானது. ஒருவருக்காக ஒட்டுமொத்த வரலாற்றையும் திரிப்பது. இது எப்போதும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆகவே மீண்டும் பதிவுசெய்கிறேன்
சி.சு.செல்லப்பாதான் தமிழ்ச் சூழலில் சிற்றிதழ் என்ற கருத்தை முன்வைத்தார்- அதன் வரையறை இதுதான். தன் பிரதிகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே கட்டுப்படுத்திக்கொண்டு, குறைவான செலவில் வெளிவரும், குறிப்பிட்ட நோக்கம் கொண்டு மட்டும் வெளிவரும் இதழே சிற்றிதழ்.
தொடக்க காலத்தில் அச்சு- வினியோகம் குறைவாக இருந்தபோது எல்லா இதழ்களுமே சிறிய இதழ்கள்தான். சிற்றிதழ்வேறு, சிறிய இதழ்வேறு. பேரிதழ்கள் தோன்றியபின் அவற்றுக்கான மாற்று என தோன்றியதே சிற்றிதழ். சிறு அமைப்புக்களின் முகப்பிதழ்கள் குறைவான எண்ணிக்கையில் வரலாம், அவை சிற்றிதழ்கள் அல்ல.

இலக்கியத்தில் சிற்றிதழ் என்பது எழுத்துதான். குறைவாக அச்சிட்டால் அமைப்புபலம் தேவையில்லை.செலவு இல்லை. ஆகவே வாசகரசனையுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டியதில்லை – இதுதான் இந்த சிற்றிதழ் என்னும் கருத்தின் மையம். இது ஓர் அமெரிக்கக் கருத்துரு. அதாவது திட்டமிட்டே தன்னை சிறிதாக நிறுத்திக்கொள்ளும் இதழ்
தமிழில் அதற்கு முன்பு வந்துகொண்டிருந்த சுதேசமித்திரன், மணிக்கொடி ஆகியவை சிற்றிதழ்கள் அல்ல. அவை சிறிய இதழ்கள். சரஸ்வதி, தாமரை ஆகியவையும் சிற்றிதழ்கள் அல்ல. அவை இடைநிலை இதழ்களே.

சிற்றிதழ் இயக்கம் எழுபதுகளில் உச்சம் அடைந்தபோது இடைநிலை இதழ்களுக்கான தேவை உணரப்பட்டது. அதற்கான பலமுயற்சிகள் நிகழ்ந்தன, எவையும் வெற்றிபெறவில்லை. பகீரதன் தொடங்கிய சத்திய கங்கை நா.பார்த்தசாரதியின் தீபம், கஸ்தூரிரங்கனின் கணையாழி ஆகியவை இடைநிலை இதழ்களாகவே முதலீட்டுடன், விளம்பரங்களுடன் தொடங்கப்பட்டன. பின்னர் சிற்றிதழ்களாக மாறின. ஜெயகாந்தன், விந்தன், க.நா.சு என பலரும் பல முயற்சிகள் செய்திருந்தனர்

இடைநிலை இதழுக்கான களம் அமைந்தது தினமணியின் தமிழ்மணி வழியாக. அதற்கு பொறுப்பேற்றவர்கள் அன்றைய ஆசிரியர் ஐராவதம் மகாதேவனும் ராஜமார்த்தாண்டனும்.அதுதான் உண்மையில் ஓர் இடைநிலை இதழுக்கு தேவையான விரிந்த வாசகப்பரப்பை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து அந்த அலையை முன்னெடுத்தது கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா. இவ்விரு இதழ்களுக்கு பெரிய நிறுவனங்களின் அமைப்பு – நிதிப்பின்னணி இருந்தது.

ஐராவதம் மகாதேவனுக்கு முன்னுதாரணமாக இருந்தது பயோனியர் என்னும் இதழின் இலக்கிய இணைப்புப் பக்கம். கோமல் சுவாமிநாதன் பகீரதனின் ஞானகங்கையுடன் நெருக்கமாக இருந்தவர். தீபம் இதழுக்கு பங்களிப்பாற்றியவர். இரண்டுமுறை கலைந்த கனவு மீண்டும் நனவானது என்று அவர் சுபமங்களா பற்றிச் சொல்வார். அவருடைய முன்னுதாரணம் ஆரம்பகட்ட தீபம் இதழ்களே.

அதன்பின் இந்தியா டுடே வந்தது. ஏற்கனவே திசைகள் என்ற இதழ் வழியாக ஒரு மாற்றிதழ் முயற்சியை செய்து தோல்வியடைந்திருந்த மாலன் அதில் புத்திலக்கியத்தை அறிமுகம் செய்தார். அதற்கு வாசந்தி ஆசிரியராக வந்து அந்த இயக்கத்தை முன்னெடுத்தார். குங்குமம் இதழில் உதவிஆசியராக இருந்தபோது தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தை அதில் அறிமுகம் செய்த பாவை சந்திரன் தமிழரசி நடராஜனின் புதியபார்வை இதழ் வழியாக நவீன இலக்கியத்திற்கு இடமளித்தார்

காலச்சுவடு தெளிவாகவே சிற்றிதழாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அது எட்டு இதழ்களுடன் நின்று மீண்டும் தொடங்கியபோதுதான் இடைநிலை இதழ் என்னும் கனவு அதற்கு வந்தது. இடைநிலை இதழ்களாகிய உயிர்மை, அமிர்தா ஆகியவை பின்னர் வெளிவந்தன. குமுதமும் விகடனும் இடைநிலை இதழ்களுக்கான முயற்சியை தொடங்கி நிறுத்திக்கொண்டன. இணையம் வந்ததும் இடைநிலை இதழ்களுக்கான இடம் இல்லாமலாகிவிட்டது. இனி அவை வரலாற்றுப்பக்கங்களிலேயே நீடிக்கும்

இது வரலாறு. இதில் வெவ்வேறு பங்களிப்புகள் உள்ளன. வெவ்வேறு இடங்களில் இருந்து இவர்கள் தங்கள் தூண்டுதல்களைப் பெற்றுள்ளனர். பா.செயப்பிரகாசம் இடதுசாரி இதழ்களில் இலக்கியத்திற்கான இடத்தை உருவாக்கிய மூன்று முன்னோடிகளில் ஒருவர் என்றால் அது வரலாற்று உண்மை. ஆனால் நம்மால் அங்கே நிற்கமுடியாது. மற்ற அத்தனைபேருடைய பங்களிப்பையும் மிதித்து தள்ளி இவரே அனைத்தும்’ என்று சொல்லி கூச்சலிடாமல் நமக்கு ஆறாது. இதுதான் நம்முடைய மாறா நோய்
ஜெ
***